in ,

விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 17) – முகில் தினகரன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8    பகுதி 9    பகுதி 10    பகுதி 11    பகுதி 12    பகுதி 13    பகுதி 14    பகுதி 15       பகுதி 16

“இந்த விஷயத்தை உங்களுக்கு சந்தோஷமா… கன்கிராஜுலேசன்ஸ்னு சொல்லவா?… இல்லை… ஸாரி என்று ஆரம்பித்துச் சொல்வதானு எனக்கே புரியலை” தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்தார் அந்த டாக்டர்.

“எதுவானாலும் தயங்காமச் சொல்லுங்க டாக்டர்… நாங்க வாழ்க்கைல சந்திக்கக் கூடாத சோகங்களையெல்லாம் சர்வ சாதாரணமா சந்திச்சிட்டு வந்திட்டோம்… எங்களால எதையும் தாங்கிக்க முடியும் டாக்டர்” என்றாள் பத்மாவதி.

“வந்து… உங்க பொண்ணு கன்ஸீவா இருக்கா” என்றார்.

பத்மாவதியும், வித்யாவும் ஒருவரையொருவர் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டனரே தவிர அவர்களால் எந்த வித ரீயாக்‌ஷனையும் காட்ட முடியவில்லை.

அவர்களுடைய மனநிலையைப் புரிந்து கொண்ட டாக்டர், “அம்மா… நான் ஒண்ணு சொல்வேன்… நீங்க ரெண்டு பேருமே தப்பா நினைக்கக் கூடாது…” என்று பீடிகை போட,

“சொல்லுங்க டாக்டர்” என்றாள் பத்மாவதி.

“என்னோட கணிப்பு உங்க பொண்ணுக்கு வயசு… இருபத்தி நாலோ… இருபத்தி அஞ்சோ…தான் இருக்கும்… யாம் ஐ கரெக்ட்?”

“இருபத்தி நாலு…” என்றாள் வித்யா.

“உங்க பொண்ணோட எதிர்காலத்தைப் பத்தி நீங்க என்ன முடிவு செஞ்சிருக்கீங்க?…”

 “புரியலை டாக்டர்” என்றாள் பத்மாவதி.

“ஐ மீன்… இப்படியே அவள் காலம் பூராவும் தனியாகவே வாழ்ந்திட்டுப் போகட்டும்!னு நினைக்கறீங்களா… இல்லை… அவளுக்கு மறுமணம் செய்து வைத்து புதிய வாழ்க்கையை அமைச்சுக் குடுக்கலாம்!னு நினைக்கறீங்களா?” டாக்டர் கேட்க

“அதைப் பத்தியெல்லாம் நாங்க யோசிக்கலை டாக்டர்!… உண்மையைச் சொல்லப் போனா நாங்க இன்னும் அவ புருஷன் இறந்து போன துயரத்திலிருந்தே மீண்டு வரலை டாக்டர்” என்றாள் பத்மாவதி.

“நான் எதுக்கு இதைக் கேட்டேன்னா… ஒருவேளை நீங்க உங்க பெண்ணுக்கு மறுமணம் செய்து வைக்க ஆசைப்பட்டீங்கன்னா… இப்பவே இந்தக் கருவை கலைச்சிடுங்க!… இல்லை குழந்தையைப் பெத்துக்கலாம்… அப்புறம் மறுமணம் பத்தி யோசிக்கலாம்னு நினைச்சிங்கன்னா… அது சரிப்பட்டு வராது!… குழந்தை பெற்றவளுக்கு மறுமணம் என்பது கண்ணைத் திறந்துக்கிட்டே போய் பாழும் கிணற்றில் விழுவதற்குச் சமம்”

“டாக்டர்… இது விஷயமா முடிவெடுக்க எங்களுக்கு எந்த வித உரிமையுமில்லை!… இதைப் பற்றி நாங்க இவளோட மாமியார் மாமனார்கிட்டத்தான் பேசணும்!… ஒருவேளை அவ வயித்துல வளர்றது எங்க மகனோட வாரிசு… அவன் எங்களுக்கு வேணும்!னு உரிமை கொண்டாடினாங்கன்னா… எங்களால ஒண்ணும் செய்ய முடியாது” என்றாள் பத்மாவதி.

அப்போது திடுமென இடையில் புகுந்த வித்யா, “யார் சொன்னது… இந்தக் குழந்தையை பெத்துக்கறதா?… வேண்டாமா? என்கிற முடிவை எடுக்கும் முழு உரிமையும் எனக்குத்தான் இருக்கு!… இதில் யாரும் குறுக்கே வர முடியாது” என்றாள் சற்றுக் கடினமான தொணியில்.

“நீ… நீ… என்னம்மா சொல்றே?” டாக்டர் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கேட்க,

“நான் நாளைக்கு வந்து பதில் சொல்றேன்” சொல்லியபடி வேகமாக எழுந்து வித்யா வெளியேற, பத்மாவதியும் அவள் பின்னே நடக்க, விழிகளைச் சுருக்கிக் கொண்டு அவர்களைப் பார்த்தார் அந்த லேடி டாக்டர்.

ஆஸ்பத்திரியிலிருந்து வீடு திரும்பியதும் முதல் வேலையாக சுந்தரின் தாயார்க்கு கால் செய்ய மொபைலைக் கையிலெடுத்தாள் பத்மாவதி.

 “அம்மா… யாருக்கு கால் பண்றே?” வித்யா கேட்க,

“சம்மந்தியம்மாவுக்குத்தான்…”

“எதுக்கு?”

“என்னடி எதுக்குன்னு கேட்கறே?… உன் வயித்துல அவங்களோட பேரனோ… பேத்தியோ வளர்ற விஷயத்தை அவங்களுக்குச் சொல்ல வேண்டாமா?” கோபமாய்க் கேட்டாள் பத்மாவதி.

“வேண்டாம்… அவசியமில்லை!” ‘வெடுக்’கென்று பதில் சொன்னாள் வித்யா.

“தப்பும்மா…. இந்த விஷயத்தை அவங்ககிட்டேயிருந்து மறைக்கறது மாபெரும் தப்பு”

“இங்க பாரு… நான் ஆஸ்பத்திரியிலிருக்கும் போது என்ன சொன்னேனோ?… அதையேதான் இங்கேயும் சொல்றேன்!… என் வயித்துல வளர்ற குழந்தையை வெச்சுக்கலாமா?… கலைச்சிடலாமா?ங்கற முடிவை எடுக்கும் உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கு… அதில் யாரும் தலையிடக் கூடாது!… அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன்” என்றாள் வித்யா தீர்மானமாய்.

“முட்டாள்தனமா பேசாதடி!… அந்தக் குழந்தையை உனக்குத் தந்தவர் அவங்களோட மகன்… அதை ஞாபகம் வெச்சுக்க…”

“உண்மை… ஒத்துக்கறேன்!… அவர் உயிரோட இருந்திருந்தா… எங்க ரெண்டு பேருக்கு மட்டும்தான் அந்த உரிமை!… இப்பத்தான் அவர் இல்லையே… அப்ப அந்த உரிமை எனக்கு மட்டும்தான் இப்ப இருக்கு!…”

தலையைப் பிடித்துக் கொண்ட பத்மாவதி…, “சரி… உன்னோட முடிவுதான் என்ன?… குழந்தையைப் பெத்துக்கப் போறியா?… இல்லை கலைச்சிடப் போறியா?” கோபமாய்க் கேட்டாள் பத்மாவதி.

“அந்த முடிவைச் சொல்ல ஒரு நாள் டைம் வேணும்!… நாளைக்கு காலைல சொல்றேன்” சொல்லி விட்டு விடு…விடு…வென்று தன் அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்.

அன்று இரவு முழுவதும் உறங்காமல் புரண்டு புரண்டு படுத்துக் கிடந்த வித்யா, பதினோரு மணி வாக்கில் தன் தோழன் விஜயசந்திரனுக்கு கால் செய்தாள்.

“என்ன வித்யா… இந்த நேரத்துல?” கரகரத்த குரலில் அவன் கேட்டான்.

“ஏன்?… பண்ணக் கூடாதா?” எதிர்க்கேள்வி கேட்டாள் வித்யா.

“அய்யய்ய…. அப்படிச் சொல்லலை…. இதுவரைக்கும் இந்த மாதிரி அன் டைம்ல கால் பண்ணியதில்லையே… அதான் கேட்டேன்” என்றான் விஜயசந்திரன்.

“ஆமாம்… என் புருஷன் இறந்தப்ப வந்தே… அதுக்குப் பின்னாடி இந்த வித்யா என்ன ஆனாள்?… எப்படி இருக்காள்?…ன்னு நினைக்கக் கூட நேரமில்லையா உனக்கு?” கோபமாய்க் கேட்டாள்.

“நிறைய இருந்திச்சு வித்யா… பட்… நீ இன்னமும் அந்தச் சோகத்திலிருந்து விடுபட்டிருக்க மாட்டே.… அந்தச் சூழ்நிலைல உன்னை வந்து பார்த்துப் பேசி… உன்னோட சோகங்களை இன்னமும் அதிகப்படுத்த வேண்டாமே!ன்னுதான் நான் வரலை!… ஆனா தினமும் உன்னை நினைப்பேன் வித்யா… உனக்கு ஏற்பட்ட துயரங்களுக்காக அந்த ஆண்டவனை திட்டித் தீர்ப்பேன் தெரியுமா?”

“சரி… ஒரு முக்கியமான விஷயம் உன் கிட்டப் பேசணும்… எப்ப வர்றே விட்டுக்கு?”

“ம்… நாளை?”

“ஓ.கே… நீ அன்னிக்கு அவரோட விசிட்டிங் கார்ட்ல இருந்த அவரோட வீட்டு அட்ரஸுக்குத்தானே வந்தே?… இப்ப நான் என் அம்மா வீட்டுல இருக்கேன்…” என்றாள்.

 “ஓ… இதே ஊரில் தானே?”

 “யெஸ்!… நான் லொக்கேஷன் அனுப்பறேன்… அதைப் பார்த்து நாளைக்கு காலைல வா”

இணைப்பிலிருந்து வெளியேறும் முன், “ஆமாம்… அப்படியென்ன முக்கியமான விஷயம்னு தெரிஞ்சுக்கலாமா?” விஜயசந்திரன் கேட்க,

“எதிர்காலத்தைப் பற்றி….”

“யாரோட எதிர்காலத்தைப் பற்றி?”

“ம்ம்ம். உன்னோட எதிர்காலத்தைப் பற்றி” சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்த வித்யா, அடுத்தாய் கோமதிக்கு கால் செய்தாள்.

லைனுக்கு வந்த கோமதி, எடுத்த எடுப்பிலேயே பதட்டமாய், “என்னடி… என்னாச்சு?… என்னாச்சு?” கேட்டாள்.

“ஒண்ணுமில்லை…. நாளைக்குக் காலைல ஒரு பதினோரு மணிக்கு என் வீட்டுக்கு வர்றியா?” வித்யா கேட்க,

“எதுக்குடி…?”

“நேர்ல வா சொல்றேன்”

“இங்க பாரு உனக்கே தெரியும்… எனக்கு எதிலும் சஸ்பென்ஸ் வெச்சா பிடிக்காதுன்னு… அதனால இப்பவே சொல்லிடு… இல்லேன்னா இன்னிக்கு ராத்திரி எனக்கு சிவராத்திரியாயிடும்”

“ஓ.கே….ஒரு ஹிண்ட் மட்டும் குடுக்கறேன்… நாளைக்கு எங்க வீட்டுக்கு நம்ம கூட காலேஜ் படிச்ச ஒருத்தர் வர்றார்… அவர் யாருன்னு சொல்ல மாட்டேன்… அவ்வளவுதான்”

 “ம்ம்ம்… ஓ.கே… வந்திடறேன்” சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்தாள் அந்த கோமதி.

****

மறுநாள் காலை தனது இரு சக்கர வாகனத்தில் வந்திறங்கிய விஜயசந்திரனை சமையல் அறை ஜன்னல் வழியே வினோதமாய்ப் பார்த்தாள் பத்மாவதி.  அவள் மனதில் இனம் புரியாதவொரு அச்சம் திடீரென்று பரவியது.

“யார் இவன்?… எதுக்கு இங்க வந்திருக்கான்?”

ஏற்கனவே வித்யாவிற்கு கால் செய்து, “நெருங்கி விட்டேன்… இன்னும் இரண்டே நிமிடத்தில் அங்கிருப்பேன்” என்று விஜயசந்திரன் தகவல் கொடுத்திருந்ததால், வாசலிலேயே காத்திருந்தாள் வித்யா.

இருவரும் உள்ளே வந்ததும், “அம்மா… அம்மா” என்று சமையலறையைப் பார்த்துக் கத்தினாள் வித்யா.

கைகளைத் துடைத்துக் கொண்டு வந்த பத்மாவதி விஜயசந்திரனைப் பார்க்க, அவன் எழுந்து நின்று “வணக்கம்மா” என்றான்.

கண்களைச் சுருக்கிக் கொண்டே அவனுக்கு வணக்கம் சொன்ன பத்மாவதி முகத்தில் கேள்விக்குறியோடு வித்யாவைப் பார்க்க,

“என்னம்மா…. யார்னு தெரியலையா?” கேட்டாள்.

இடவலமாய்த் தலையாட்டினாள் பத்மாவதி.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சந்திப்பு (சிறுகதை) – கவிஞர் இரஜகை நிலவன், மும்பை

    அபூர்வ சகோதரிகள் 💗 (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்