in ,

விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 15) – முகில் தினகரன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8    பகுதி 9    பகுதி 10    பகுதி 11    பகுதி 12    பகுதி 13    பகுதி 14

நிகழ்வுகளின் தாக்கம் சிறிதும் இல்லாமல் தன் வழியே தடையின்றி ஓடிக் கொண்டிருப்பது காலம் மட்டுமே. பத்து தினங்களுக்குள் எத்தனை மாற்றங்கள்?

வண்ணத்துப்பூச்சியாய் சிறகடித்துக் கொண்டிருந்த வித்யா வெள்ளை புடவையில் வெற்று நெற்றியுடன் விதவைக் கோலம் பூண்டது, காலத்தின் கோலமா, இல்லை வித்யாவின் விதியா?.

மாலையிடப்பட்ட சுந்தரின் போட்டோவிற்குக் கீழ், தரையில் படுத்துக் கிடந்த வித்யாவை தொட்டெழுப்பினாள் பத்மாவதி.

“வித்யா… எழுந்திரும்மா! இப்படியே சாப்பிடாம எத்தனை நாளைக்கு தான் பட்டினி கிடப்பே? நீ இப்படி பட்டினி கிடந்து உன்னை மட்டும் வதைச்சுக்கலைம்மா… எங்களையும் சேர்த்துத்தான் வதைக்கிறே. ஏற்கனவே உன்னை விதவைக் கோலத்தில் பார்த்துப் பார்த்து ரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் நாங்கள்….”

விதவைக்கோலம் என்ற வார்த்தையை கேட்டதும் சடாரென்று தலையைத் தூக்கி பார்த்தாள் வித்யா. எதிரே நிற்கும் அம்மாவின் வறண்ட கோலம் அவள் நெஞ்சை அறுத்தது.

‘என்னோட அம்மாவை இந்த கோலத்தில் பார்க்க நான் ஆசைப்பட்டதுக்கு தண்டனையா… இன்னிக்கு எனக்கும் அதே கோலம் கிடைச்சிருச்சு!… அதுவும் என் கையாலேயே!” வாய் விட்டு அழுதாள்.

ஆசையாய் பொத்திப் பொத்தி வளர்த்த மகள் அறுத்து போட்டுக் கொண்டு அழுவதை கண்டு மனம் தாளாத பத்மாவதி அவளை இறுகக் கட்டிக் கொண்டு கதறினாள்.

“ஆண்டவா… என்னோட தாலியைத்தான் வெடுக்குன்னு பறிச்சே… என் செல்ல மகள் என்ன பாவம் பண்ணினா? அவ தாலியைக் கூட விட்டு வைக்காமல் பறிச்சிட்டியே!… இந்த குடும்பத்துக்கு ஒரு அமங்கலி போதாதுன்னு, துணைக்கு இன்னொருத்தியைக் கொடுத்துட்டியா?”

கட்டிப் பிடித்திருந்த தாயிடமிருந்து வேக வேகமாய்த் தன்னை விடுவித்துக் கொண்ட வித்யா, கண்ணீர்க் குளத்தில் மிதக்கும் அவள் விழிகளை வறட்சியாய்ப் பார்த்தாள்.

‘என் மேல இவ்வளவு அன்பு வச்சிருக்கற அம்மாவுக்கு நான் செஞ்ச கொடுமையைச் சொல்லியே தீரணும்… அப்பத்தான் என்னோட நெஞ்சு பாரம் குறையும்’

]அழுகையை நிறுத்தியவள்,  “அம்மா” என்றாள் கம்மிய குரலில்.

“என்னம்மா…?”

“உன் தாலியைப் பறித்து… உன்னை விதவையாக்கியது… அந்த ஆண்டவன் இல்லைம்மா…. இந்தப் பாவிம்மா. நீ பெத்து உயிருக்கு உயிராய் வளர்த்த இந்தப் பாவி மகள்தான்மா” பத்மாவதியின் தோள்களைப் பற்றி உலுக்கியபடி உணர்ச்சி பொங்க கூறினாள் வித்யா.

பத்மாவதி முகத்தில் எந்தவித சலனமும் இல்லை.

“அடிப்பாவி… நீ எல்லாம் ஒரு மகளா?” ன்னு கத்தித் தன் தலை மயிரைக் கொத்தாகப் பற்றி அறைவாள்… என்று எதிர்பார்த்த வித்யா அதிர்ந்தாள்.

‘என்னது? நான் எப்பேர்பட்ட உண்மையைச் சொல்லி இருக்கேன்… இவள் அமைதியாக இருக்காளே?… ஒருவேளை நான் சொன்னதை நம்பலையோ?’

“அம்மா… அப்பாவை மாடியிலிருந்து தள்ளி விட்டுக் கொன்னது… இதோ இந்த கைகள் தான்ம்மா…” இரு கைகளையும் தாயின் முகத்துக்கெதிரே நீட்டினாள் வித்யா.

தன் இரு கைகளால் மகளுடைய இரண்டு கைகளையும் பற்றித் தன் இரண்டு கண்களிலும் ஒற்றிக் கொண்டாள் பத்மாவதி.

“அம்மா நான் சொல்றது நிஜம்மா.. சத்தியம்மா… என்னை நம்பும்மா” கெஞ்சினாள்.

மெலிதாய்ச் சிரித்த பத்மாவதி, “வித்யா இந்த விஷயம் எனக்கு ஏற்கனவே தெரியும்” என்றாள் மிகவும் பவ்யமாய்.

 “என்னது… உனக்கு ஏற்கனவே தெரியுமா?”. உறைந்து போய் நின்றாள் வித்யா.

 “சரி… வாம்மா சாப்பிடலாம்” என்றாள்ல் பத்மாவதி வெகு இயல்பாய்.

 “அம்மா… உனக்கு எப்படி இந்த விஷயம்?”

“உன் கல்யாணத்தன்று… நீயும் அந்த கோமதியும்.. அரைக்குள்ளார போய் தனியா  பேசிட்டு இருந்ததை நான் கேட்டுட்டேன்மா!… பரவாயில்லை என் மகள்தானேனு விட்டுட்டேன்மா!” என்றவள் சூழ்நிலையை மாற்றும் விதமாய்,  “சரி… வாம்மா சாப்பிடப் போகலாம்” என்றாள் பத்மாவதி.

“அம்மா அது தெரிஞ்சுமா என்னை இவ்வளவு சீரும் சிறப்புமாக கல்யாணம் பண்ணிக் கொடுத்தே?” கண்களில் நீர் மல்கக் கேட்டாள் வித்யா.

புன்னகைத்தாள் பத்மாவதி.   “உன் மனசிலே அந்த விகார எண்ணங்கள் தோன்றும் போது நீ என்ன செய்கிறாய் என்பது உனக்கே தெரியாதுன்னு சொல்லி நீ கதறினதை பார்க்க எனக்குப் பரிதாபமாய் இருந்துச்சு வித்யா, அதான் உன் மேல் துளிக் கூட கோபமே வரலை. ஏன்னா… நான் உன்னைப் பெத்தவம்மா. கோழி மிதிச்சு குஞ்சு முடமாகாது!… அதே மாதிரி குஞ்சு மிதிச்சு கோழியும் முடமாகது!”

“நீ முடமாகிட்டியேம்மா!…” தாயின் வெற்றுக் கழுத்தைப் பார்த்து வித்யா சொல்ல,

“இது முடமில்லைம்மா…. வரம்!… நான் வாங்கி வந்த வரம்!… சரி பேசிட்டே இருந்தா எப்படி?.. வா சாப்பிடப் போகலாம்!… நீ பசி தாங்க மாட்டே வித்யா”

சடாரென்று பத்மாவதியின் கால்களில் விழுந்து கண்ணீரால் அவள் பாதங்களை நனைத்தாள் வித்யா.

“அய்யய்ய… என்ன இது?…எழுந்திரு… எழுந்திரு” குனிந்து அவளைத் தொட்டுத் தூக்கி, கண்ணீரைத் துடைத்த பத்மாவதி,  “நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்!… இனி நடப்பவையாவது நல்லவையாய் இருக்கட்டும்!.. சரி வா… வா” கையைப் பிடித்து இழுத்து அவளை வலுக்கட்டாயமாய் டைனிங் ஹாலுக்கு தள்ளிச் சென்றாள் அந்த விதவைத் தாய்.

ஒவ்வொரு வாய் சாப்பாட்டை விழுங்கும் போதும்,  ‘பழைய வித்யா செத்துட்டா… இனி புது வித்யாவா மாறணும்… எல்லோரையும் போல் நல்லவளா வாழணும்’ என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டே சாப்பிட்டாள் வித்யா.

அந்த உறுதி அவள் உள்ளம் முழுவதும் நிறைந்து வழிந்த போது, அவள் அடிமனதிற்குள் ஒளிந்து  கொண்டிருந்த அந்தச்  சாத்தான்  மௌனமாய்  கெக்கலித்தது.

விருந்தும் மருந்தும் சில நாள் தான், ஊரும் உறவும் கொஞ்ச நாள் தான், என்பது போல் சுந்தரின் இறப்புக்காய் வந்திருந்து, நாள் கணக்கில் தங்கி இருந்து, காரியங்கள் முடிந்ததும் அவரவர் திசையை நோக்கி பறந்தது உறவுக் கூட்டம்.

பத்மாவதியும் கிளம்ப ஆயத்தமானாள்.  “சம்மந்தியம்மா கூட மத்தவங்க மாதிரி இவ்வளவு அவசரமாய்க் கிளம்பணுமா? இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போகலாமே? மகளுக்கும் அம்மா கூட இருந்தா தனி ஆறுதலாய் இருக்கும் தானே?” சுந்தரின் தந்தை ராமச்சந்திரன் சொல்ல

“அய்யா…. அவளைப் பார்க்கப் பார்க்க எனக்கும், என்னைப் பார்க்கப் பார்க்க அவளுக்கும் வேதனை அதிகம்தான் ஆகுதே தவிர… ஆறுதல் எங்கே வருது?.” என்றாள் பத்மாவதி.

 “சரி நீங்க இப்படிச் சொல்லும் போது எனக்கும் உங்களை வற்புறுத்த சங்கடமாய் இருக்கு”

ஒரு சிறிய அமைதிக்குப் பின், ”சரிங்கய்யா நான் புறப்படுறேன்!… சம்பந்தி அம்மா வரேன்மா” பத்மாவதி வாசலை நோக்கி நடந்தாள்.

அம்மா சென்றதும் வீட்டிற்குள் ஒரு அவஸ்தையான வெறிச்சோடல் தெரிந்தது வித்யாவுக்கு. மெல்ல எழுந்து மொட்டைமாடிக்குச் சென்று தூரத்து வானில் மேகங்களுக்கு நடுவில் சுந்தரை தேடினாள். குற்ற மனசு குறுகுறுத்தது.

“ச்சே… என்னால ரணப்பட்டவங்க எத்தனை பேர்?…. அடுத்தவங்க வேதனையைப் பார்த்து ஆனந்தப்படும் குணம் எனக்கு மட்டும் ஏன் வந்தது?… நான் செஞ்ச பாவங்களுக்கு பரிகாரம் என் புருஷன் உயிரா?”

அவளையும் அறியாமல் அவள் மனசுக்குள் கல்லூரி கராத்தே வீரன் மாதவனும், ஆணழகன் சிவாவும், மாடியில் இருந்து விழுந்து கிடந்த கிருஷ்ணனும், மஞ்சத்தில் மரணத்தை முத்தமிட்ட சுந்தரும், வந்து போயினர். கண்களின் ஓரத்தில் பூத்து நின்ற கண்ணீர் பூக்களால் காற்றிடம் தான் மன்னிப்பு கேட்க முடிந்தது.

அப்போதுதான் அவள் பார்வையில் அந்த காட்சி விழுந்தது.  கீழே அந்தப் பக்கத்து வீட்டுக் குழந்தை மெல்ல மெல்ல தவழ்ந்து, மூடி திறந்து வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியை நெருங்கிக் கொண்டிருந்தது.

“பகீர்”ரென்றானது வித்யாவுக்கு.  “கடவுளே!.. என்ன ஒரு கேர்லஸ்?… குழந்தை இருக்கிற வீட்ல இப்படியா தண்ணீர்த் தொட்டியைத் திறந்து போடுவாங்க?” வேகமாய்க் கீழே இறங்கிச் சென்று, அந்தக் குழந்தையை காப்பாற்றி விடும் எண்ணத்தில் சடாரெனத் திரும்பினாள் வித்யா.

உள்ளிருந்து ஒலித்த அந்தக் குரல் அவளைத் தடுத்தது.  “ஏய்… எங்கே போறே?… அந்த குழந்தை தொட்டியில் விழுந்து சாவதையும்… அதன் தாய் தவிப்பதையும்… துடிப்பதையும் பார்த்து ரசிக்க வேண்டாமா நீ?…”

நின்றாள்.

அவளுக்குள் ஒரு அமிலக் குடுவை உடைந்து, மனதின் சுவரெங்கும் விகாரம் ஒட்டிக் கொண்டது.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பேய்! (சிறுகதை) – சாய்ரேணு சங்கர்

    ரெக்கார்டு டான்ஸ் (குறுநாவல் – இறுதி பகுதி) – நாமக்கல் எம்.வேலு