in ,

விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 4) – முகில் தினகரன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3

“எப்படி போகப் போறே?”

“வழக்கம் போல் பஸ்லதான்” என்றாள்.

“வொய் டோண்ட் யூ கம் வித் மீ?” என்றான் பைக்கைக் காட்டி.

“வித் ப்ளஷர்” அவள் எதிர்பார்த்தது அதுதானே, ஓடி வந்து தாவி ஏறினாள்.

வண்டியில் போகும் போது வேண்டுமென்றே சில சூட்சுமங்களைப் பயன்படுத்தி அவனை மகுடி முன் மயங்கிய பாம்பாக்கினாள்.

ஒரு சில நாட்களிலேயே… அவன் மொத்தமாய் விழுந்து விட்டான் என்பதை தெளிவாக உணர்ந்ததும்,  தன் எண்ணத்தைச் செயல்படுத்த ஆரம்பித்தாள் வித்யா.

அவன் காதருகே சென்று, ஹஸ்கி வாய்ஸில்,  “மாதவ்…” என்றாள் வித்யா.

அவள் மேனியிலிருந்து வீசிய வாசனை அவனைச் சொர்கத்தின் நுழை வாசல் வரை அழைத்துச் சென்று விட, “ம்… சொல்லு வித்யா” என்றான்.

“ஒரு விஷயத்தை நினைச்சாத் தான் ரொம்ப பயமா இருக்கு” என்றாள் போலியான சோகத்துடன்.

“பயமா?… நான் இருக்கும் போது நீ பயப்படலாமா?”

“பயப்பட வைக்கிறானே அவன்” என்றாள்.

“யாரு… யாரு?” அவன் குரல் உயர்ந்தது.

“அந்த சிவா” என்றாள்.

“யாரு செகண்ட் இயர் சிவா…வா?”

“ஆமாம்” என்றாள் சோகமாய்.

“என்ன பண்ணினான்?” கோபமாய்க் கேட்டான் மாதவன்.

“வேணும்னே பைக்ல உரசிட்டு போறான்!… போக வர கமெண்ட் வேற அடிக்கிறான்!…. அவன் பணத்தை பார்த்து நான் மயங்கி அவனை காதலிச்சிடுவேன்!னு நினைக்கிறேன்!… என் மனசுல யாரு இருக்காங்கன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்” வேண்டுமென்றே அவனை இடித்துச் சொன்னாள்.

அவன் கிறங்கிப் போனான். அவள் ஒருத்திக்காக மொத்த உலகத்தையும் எதிர்க்கும் துணிவு அவனுக்குள் வந்தது.

“நீ கவலைப்படாத வித்யா!… அவனை நான் ஹேண்டில் பண்ணிக்கறேன்”

“அய்யோ வேண்டாங்க!… நீங்க பாட்டுக்கு கோபத்தில் அடிதடின்னு இறங்கிடாதீங்க!…அவன் உங்களை விட பலசாலியாக தெரியறான்!..”

ஒரு உண்மையான கராத்தே வீரனிடம்,  அவனை விட இன்னொருத்தன் பலசாலி!… என்று சொல்லும் போது… அதுவும் ஒரு பெண் வாயால் சொல்லும் போது, அந்த இன்னொருத்தனை துவம்சம் செய்து தன் பலத்தை நிரூபிக்க வேண்டும், என்கிற உத்வேகம் அவனுக்குள் தானாக எழும்!…. என்கிற சைக்காலஜி அவளுக்கு தெரியும்.

“காட்டறேன்!… நான் யார்?… என்னோட பலம் என்ன?…ங்கிறதை காட்டுறேன்!” பற்களை  நற…நறவென்று கடித்தான் மாதவன்.

அவளுக்குள் ஒரு குரூர சந்தோஷம் நிதானமாய்ப் பரவியது. “மோதிக்கங்கடா… ரெண்டு பேரும் நல்லா மோதிக்கிட்டு சாவுங்கடா” மனசுக்குள் கறுவினாள்.

மறுநாள் காலை 11 மணி, கல்லூரி கேண்டீன் கலகலத்துக் கொண்டிருந்தது.

கேண்டீனுக்கு வெளியே, சற்றுத் தள்ளி, மரத்துக்கு அடியில் தன் பைக்கை நிறுத்தி, அதன் மேல் அமர்ந்து கொண்டிருந்த சிவாவின் கையில் 555 புகைந்து கொண்டிருந்தது..

தோழிகளுடன் கேண்டீனுக்குள்ளிருந்து வெளியே வந்த வித்யா, தனியே நின்று கொண்டிருந்த  சிவாவை  பார்த்தாள். அவளுக்குள் அந்த அமிலக் குடுவை உடைந்து, மனதின் சுவரெங்கும் விகாரம் ஒட்டிக் கொண்டது.

“ஏய்… நீங்க முன்னாடி போங்கடி!… நான் அப்புறமா வரேன்” என்று சொல்லி, கூட வந்த தோழிகளை கழற்றி  விட்டு விட்டு சிவாவை நோக்கி நடந்தாள்.

அதைத் திரும்பித் திரும்பி பார்த்தவாறே சென்ற தோழிகளில் ஒருத்தி, “ஏற்கனவே ஏகப்பட்ட பொண்ணுங்க அவன் முன்னாடி லைன்ல நின்னுட்டிருக்காங்க… இப்ப இவளும் அந்த லைன்ல நிக்கப் போறா போலிருக்கு… பாவம்” என்றாள்.

சிகரெட்டை கீழே போட்டு விட்டு, பைக்கை ஸ்டார்ட் செய்த சிவா, வண்டி லேசாக குலுங்குவதை உணர்ந்து  திரும்பிப் பார்த்தான்.  பில்லியனில் வித்யா அமர்ந்திருந்தாள்.

சட்டென்று வண்டியை ஆஃப் செய்தான்.

“ஏன் ஆஃப் பண்றீங்க?… வண்டியை எடுங்க” என்றாள் கொஞ்சலாய். பதிலேதும் பேசாமல் ஸ்டார்ட் செய்து மெதுவாக ஊர்ந்தான்.

“ஐஸ்கிரீம் பார்லருக்கு போலாமே?” என்றாள் அவன் இடுப்பை அணைத்து பிடித்தபடி. அவன் ஐஸ்கிரீமாய் உருகிப் போனான்.

பைக் கல்லூரி கேட்டை தாண்டி, மெயின் ரோட்டைத் தொட்டு, சிறிது தூரம் ஓடி அந்த ஐஸ்கிரீம் பார்லரில் நின்றது உள்ளே போய் மேஜையில் அமர்ந்ததும், எதுவும் பேசாமல் அமைதியாய் தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தவனை சீண்டினாள்.

“என்ன சிவா?… நீ தான் இந்தக் காலேஜ் ஹீரோ…. பெரிய காதல் மன்னன்…. அது இதுன்னு சொன்னாங்க!… நீ என்னடா ஒரு பெண் வலிய வந்து… உன் பில்லியனில் உட்கார்ந்திட்டு வந்ததுக்கே… இப்படி பேஸ்தடிச்சுப் போயிட்டியே?” இதழோரம் ஒரு இளக்காரப் புன்னகையுடன் அவள் கேட்க,

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை” வழிந்தான்.

“ஓகே கூல் டிரிங்க்ஸ் நீ ஆர்டர் பண்றியா?… இல்லை… நான் பண்ணட்டுமா?” தலையைக் கவர்ச்சியாய்ச் சாய்த்துக் கொண்டு கேட்டாள் வித்யா.

“நானே பண்றேன்” என்று சொல்லி பேரரை அருகில் அழைத்து, ஆர்டர் செய்து விட்டு அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு அமர்ந்தான்.

“என்ன பார்க்கறே?…  “என்னடா இவ… வாலண்ட்ரியா வந்து பேசுறா…. பழகுறா… என்ன மாதிரியான ஆள் இவள்ன்னு குழப்பமா இருக்கா?… டோண்ட் வொரி முதல் பார்வையிலேயே காதலைச் சொல்லும் அளவுக்கு நான் வெகுளியல்ல!… அதுக்காக காதலைச் சொல்லாமல் இருந்து விட நான் ஒண்ணும் ஏமாளியல்ல!”

அவன் தலையை மட்டும் மேலும், கீழும் ஆட்ட, “யெஸ்!…  நான் எதிலுமே வெரி போல்டு!.. எனக்கு உன்னைப் பிடிச்சது… பேசணும்னு ஆசையா இருந்திச்சு!… அதான் வந்தேன்… பேசினேன்…  தப்பில்லையே?”  ‘பட….பட’வென்று பேசினாள்.

“தப்பில்லை!… பட்…. புரியல!… ஏன்னா… நான் பார்த்த மத்த பொண்ணுங்கள்ல யாருமே இந்த மாதிரியில்லை!” என்றான் கன்னத்து தாடியைத் தேய்த்தவாறே.

“டியூப்லைட்… டியூப்லைட்!… ஒரு பொண்ணு வலிய வந்து பேசுறா… பிடிக்குதுன்னு சொல்றான்னா… அதுக்கு என்ன அர்த்தம்ன்னு எல்கேஜி பையன் கூடச் சொல்லுவான்” சிரித்தாள்.

அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்து, “யூ… மீன்… லவ்”

“யெஸ்” சற்றும் தயங்காமல் அவள் சொல்ல,

லேசாய் அதிர்ந்தவன், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மென்மையாய்ப் புன்னகைத்தான். இதுவரை பல மாணவிகள் அவனை அப்ரோச் பண்ணி தங்கள் காதல் அப்ளிகேஷன் கொடுத்த போதெல்லாம் அதை வெகு அலட்சியமாகத் தட்டிக் கழித்தவன், இன்று ஏனோ அப்படிச் செய்யவில்லை.  செய்ய அவனால் முடியவில்லை.

தொடர்ந்து அவள் பேசிய கவர்ச்சிப் பேச்சுக்களும், வசீகர வீழி வீச்சுக்களும், அவனை அவள் முன்னால் மண்டி போட வைத்தன.

திடீரென்று வாட்சைப் பார்த்தவன், “ஓ மை காட்… நாம வந்து இரண்டு மணி நேரம் ஆச்சு!.. இதுக்கு மேலும் இங்கே உட்கார்ந்துகிட்டு இருந்தா கடைக்காரன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிடுவான்” என்றான்.

“ப்ச்…கண்டிப்பாக கிளம்பணுமா?” செல்லமாய் சிணுங்கினாள்.

“பின்னே… விடிய விடிய இப்படியே உட்கார்ந்துக்கலாம்கறியா?… ”

“எந்திரிக்கவே மனசு வர மாட்டேங்குது!… உன் கூட பேசிட்டே இருக்கலாம் போல இருக்கு!” கொஞ்சினாள்.

“அது சரி…” என்றபடி. எழுந்தவனின் கையை இழுத்து மீண்டும் அமரச் செய்தாள்.

அந்த தொடுதலில் அவன் சுவிட்சர்லாந்து வரை போய் திரும்பினான்.  ஆல்ப்ஸ் மலை பனிச்சறுக்குகளில் விளையாடி மகிழ்ந்தான். அழகிய நைல் நதி ஓரத்தில் நடனமாடினான்.

“என்னம்மா… ஏன் மறுபடியும் உட்கார வைக்கறே?” மயக்கத்தில் கேட்டான்.

“ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லணும்!… அதைச் சொல்லலாமா?… வேண்டாமான்னுதான் தயங்கிட்டிருக்கேன்” என்றாள்.

“இவ்வளவு தூரம் வந்த பின்னாடி என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்?” இபோது அவன் பேச்சில் முன்னை விட நெருக்கம் கூடியிருந்தது.

“எனக்கு ஒரு விஷயத்தை நெனச்சா…. ரொம்ப பயமா இருக்கு” என்றாள் நடிப்புடன்.

“பயமா?… உனக்கா?… எதுக்கு?” முகத்தில் கேள்விக்குறியோடு கேட்டான்.

“அந்தக் கராத்தே மாதவன்… கொஞ்ச நாளா என்னை ரொம்ப டீஸ் பண்ணிட்டே இருக்கான்!… என்னென்னமோ பேசறான்… ஏகத்துக்கு வழியறான்!… மனசுக்குள்ளே உன்னை வெச்சுக்கிட்டு அவன் கூட பழக எப்படி முடியும்?…” உதட்டைச் சுழித்துக் கொண்டு அவள் பேச, அவன் சொக்கிப் போனான்.

“ராஸ்கல்… அப்படியா செய்யறான்?” சிவாவின் விழிகள் சிவப்பு வாங்கின.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காத்திருப்பு (சிறுகதை) – Writer Susri, Chennai

    வானமடி நீ எனக்கு ❤ (பகுதி 7) – ராஜேஸ்வரி