in ,

விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 13) – முகில் தினகரன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8    பகுதி 9    பகுதி 10    பகுதி 11    பகுதி 12

அவள் நகைச்சுவையில் அவன் முகத்தில் இறுக்கம் கூடியதே தவிர சிரிப்பு தோன்றவில்லை.

காபியை ஒரு வாய் பருகியவன்,  “எங்கே உன்னோட ஹஸ்பண்ட்?” கேட்டான்.

“இல்லை!… அவர் இன்னும் வீட்டுக்கு வரலை!.. யூஸ்வலாவே அவர் எட்டரை… ஒன்பதுக்குத் தான் வருவார்!…”

“மாமனார்…  மாமியார்?”

“மாமியார்….?… இந்த தெருவில் ஏதாவது வீட்டு வாசல்ல வயசானவங்க மாநாடு நடக்கும் அங்க அவங்க சொற்பொழிவாற்றிக்கிட்டு இருப்பாங்க!… மாமனார்…? மாடி ரூம்ல படுத்து கிடப்பார்!” என்றாள் வித்யா.

“ஏன் அவருக்கு உடம்புக்கு ஏதாவது… சுகமில்லையா?”

“அவர் ஆஸ்துமா பேஷண்ட்!… அதிகம் வெளியில போக மாட்டார்!”

காஃபியைக் குடித்து முடித்து டம்ளரை டீப்பாவின் மீது வைத்தான்.

“சரி எங்களைப் பற்றி விசாரிச்சது போதும்!… உன்னைப் பற்றி சொல்லு விஜய்!… நீ இன்னும் கல்யாணமே பண்ணிக்கலையா?”

அவன் பதிலேதும் கூறாமல் அமைதியாகவே உட்கார்ந்திருக்க, “நான் கேட்ட கேள்விக்கு இன்னமும் பதில் வரலை விஜய்” என்றாள் வித்யா.

சட்டென சிந்தனை கலைந்தவனாய்,  “என்ன… என்ன கேட்டே?” என்றான்.

“ம்ம்… சுரைக்காய்க்கு உப்பு பத்தலையா?ன்னு கேட்டேன்” சிரித்தாள்.

அவன் முகம் மாறி முறைக்க,  “ஸாரி விஜய்… உன்னுடைய மேரேஜ் பத்திக் கேட்டேன்”

நீண்ட பெருமூச்சுடன் பேச ஆரம்பித்தான்.

“வித்யா… நானும் மத்தவங்களை மாதிரி காலாகாலத்தில் கல்யாணம் பண்ணிக்கிட்டு… அமைதியான… சந்தோஷமான… ரொம்ப ரொம்ப சந்தோஷமான வாழ்க்கையைத் தான் நடத்திட்டு இருந்தேன் வித்யா. அதிலும் எனக்கு வாய்ச்ச மனைவி… பெண் தேவதை… மகாலட்சுமி… மண்ணுலகத்துக்கு இறங்கி வந்து விட்ட தேவ மங்கை!… என் மேல அவ காட்டுன அன்பை இந்த உலகத்துல எந்த ஒரு ஜீவராசியும் தன்னோட ஜோடிகிட்டக் காட்டி இருக்காது!… அவ்வளவு அன்பு!..”

“நீ சொல்றதை கேட்கவே சந்தோஷமா இருக்கு விஜய்” என்றாள் வித்யா.

“நம்பாதே வித்யா… எதியும் நம்பாதே!… நாம பாக்குற எல்லா சந்தோஷங்களுமே… நீர்க்குமிழி மாதிரிதான்!… எந்த நிமிஷமும் பட்டுன்னு உடைஞ்சு போயிடும்!… என்னோட சந்தோஷங்களும் அப்படித்தான்!… ஒருநாள் மொத்தமா உடைஞ்சு போச்சு வித்யா!”

“விஜய்…. என்ன சொல்றே?”

“ஆமாம் வித்யா!…. பிரசவம் என்கிற போர்க்களத்தில் என்னோட தேவதை எமன்கிட்ட தோத்துட்டா!.. வித்யா” அவன் பேசுவதை நிறுத்தி விட்டு மௌனமாய் குலுங்கினான்.

பிறகு சத்தமாய் மூக்கை உறிஞ்சினான்., “அட… அவளைத்தான் என்கிட்டேயிருந்து பறிச்சான்…. அட்லீஸ்ட் அவ பெத்து போட்ட அந்தப் பிஞ்சையாவது எனக்குன்னு விட்டுக் கொடுத்திருக்க கூடாதா அந்த எமன்?… பாவி அதையும் கூடவே எடுத்துக்கிட்டு போயிட்டான்” சொல்லி விட்டுச் சத்தம் போட்டு அழுதான்.

எழுந்து போய் வாட்டர் ஜக்கை எடுத்து வந்து ஒரு டம்ளர் தண்ணீரை பிடித்து நீட்டினாள் வித்யா.  வாங்கி பருகியவன் நீண்ட நேரம் தரையையே கூர்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

அந்த அவஸ்தையான அமைதி பிடிக்காத வித்யா, தானே பேசினாள். “விஜய் நாமெல்லாம் படிச்சவங்க… வாழ்க்கையில இன்பமும் துன்பமும்… ஏற்ற இறக்கங்களும்.. சகஜம்!ன்னு தெளிவா புரிஞ்சவங்க!… நாமே இப்படி உடைஞ்சு போகலாமா?… நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து வாழப் பழகிவிட்டால்… மகிழ்ச்சியை நாம் தேடிச் செல்ல வேண்டியதில்லை… அதுவே நம்மைத் தேடி வரும்”

“மகிழ்ச்சி… எனக்கு?” என்று விரக்தியாய்க் கேட்டு விட்டு, தலையை குறுக்கில் ஆட்டினான்.

“ஏன்?… உன்னால் மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள முடியாதா?……. உனக்கு சின்ன வயசுதானே நீ ஏன் வேறொரு கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?”

“ச்சீய்ய்… முதல்ல உன்னோட வாயை கழுவு வித்யா!… நாமெல்லாம் மனுசங்க…. நாய்கள் அல்ல!” என்றான் அவன் கோபமாய்.

“அப்ப ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறவங்க எல்லாரும் நாய்களா?” தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டாள் வித்யா.

“நிச்சயமா!… ஒருவனுக்கு ஒருத்திங்கிறதுதான் மனித தர்மம்!… ஒருத்தி போனா இன்னொருத்தி!… அந்த இன்னொருத்தி போனா இன்னுமொருத்தினு போய்க்கிட்டே இருக்கிறது… மிருக இனம்!”

“நோ…விஜய்… நீ உன் மனசை மாத்திக்கிறது தான் நல்லது.” கெஞ்சலாய் சொன்னாள் வித்யா.

“அது முடியாது வித்யா!…. நான் அவளோட வாழ்ந்த வாழ்க்கை இருக்கே அது உணர்வு பூர்வமான வாழ்க்கை!… அவ என்னோட ரத்தத்தின் ஒவ்வொரு செல்லிலும் கலந்து இருக்கா. என்னோட இதயம் கூட இன்னிக்கும் அவ பேரைச் சொல்லித்தான் துடிக்குது. ஒருவேளை என் உடம்பில் ஓடுகிற மொத்த ரத்தத்தையும் வடித்தெடுத்து… வேறொரு ரத்தத்தை பாய்ச்சிட்டு… அப்படியே இப்ப இருக்கற இதயத்தை அறுத்து எறிஞ்சிட்டு… வேற இதயத்தை பொருத்திட்டா… ஒருவேளை நீ சொன்னது சாத்தியப்படுமோ என்னமோ”

கண்களில் நீர் பனிக்க, உதடுகள் துடிக்க,  அவனையே வைத்த வாங்காமல் பார்த்த வித்யா,  “விஜய்!…  ரியலி யூ ஆர் கிரேட்” என்றாள்.

“நோ…. காட் ஈஸ் கிரேட்!”

“பொண்டாட்டி செத்த அடுத்த மாசமே கல்யாண புரோக்கரைப் பார்த்து… ‘நல்ல வசதியான இடமாப் பாருப்பா’னு சொல்ற ஆண்கள் வாழ்கிற இந்த சமுதாயத்தில… இப்படி ஒருத்தனா?… பாவிப்பெண்ணே… இவன்கூட வாழக் கொடுத்து வைக்காமல் போயிட்டியே?”

வித்யாவின் விழிகளிலும் நீர் வழிவதைக் கண்ட விஜயசந்திரன்,  “பாத்தியா இதுக்குத் தான் சொன்னேன்… என்னோட சோக கதையை சொல்லி உனக்குச் சொல்லி… இப்ப உன்னையும் சோகமாகிட்டேன் பாரு!” வருத்தப்பட்டான்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை!…” அவசர அவசரமாய் விழிகளத் துடைத்துக் கொண்டாள்.

“சரி வித்யா நான் கிளம்புறேன்!… இன்னொரு நாளைக்கு வரேன்”

“கொஞ்சம் வெயிட் பண்ணு விஜய்… டிபன் சாப்பிட்டுட்டுப் போயிடலாம்”

“அதான் இன்னொரு நாளைக்கு வரேன்னு சொன்னேன் அல்ல… அப்ப வந்து டிபன் என்ன?… விருந்தே சாப்பிட்டுட்டுப் போறேன்” எழுந்து வாசல் கதவை நோக்கி நடந்தான் விஜய்.

வாசல் வரை உடன் சென்று அவனை வழியனுப்பி வைத்து விட்டு, தெருவில் இறங்கி நடந்தவனை வியப்புடன் பார்த்துக் கொண்டு நின்றாள் வித்யா.

“ஹும்… ஒரு காலத்தில் ஜீன்ஸ்.. டீ சர்ட்… ஜெர்கின் என்று கலக்கிட்டு இருந்தவன் இன்னிக்கு இப்படியாயிட்டான்!… ச்சை… என்னடா வாழ்க்கை இது?”

“என்ன வித்யா… தூங்குற மாதிரி அபிப்பிராயம் இல்லையா?” மேலே சுழலும் ஃபேனையே வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்த வித்யாவைக் கேட்டான் சுந்தரராமன்.

பார்வையை நகர்த்தாமலேயே,  “தூக்கம் வரலை!” என்றாள்.

“தூக்கம் வரவில்லைன்னா… வர வைப்பதற்கு கைவசம் ஒரு மெத்தேட் இருக்கு!… அப்ளை பண்ணினா… தூக்கம் உடனே வந்துடும்!… அப்ளை பண்ணவா?” கேட்டான் அவன் விஷமமாய்.

ஏதோ ஞாபகத்தில் அவளும், “ம்” என்று ஒப்புதல் சொல்ல, சட்டென்று அவள் மேல் தாவிப் படர்ந்து, அவள் இதழோடு இதழ் பதித்தான்.

முதலில் கிறங்கினாள். பிறகு இணங்கினாள்.  ஒரு நீண்ட இயற்கை இயக்கத்திற்கு பிறகு, அவன் விலகிச் சென்று அசதியுடன் உறங்கினான்.

வித்யாற்கு எப்போதும் உறக்கம் பிடிக்கவில்லை.  உறங்கும்  சுந்தரையே உற்றுப் பார்த்தபடி படுத்து கிடந்தவளின் மனதில் அந்த கேள்வி எழுந்தது.

“அந்த விஜய் தன் மனைவி மேல் வைத்திருந்த அளவு அன்பை… இந்த சுந்தர் என் மேல் வெச்சிருப்பாரா?”

மெல்லத் தன் கரத்தை அவன் முகத்தருகே கொண்டு சென்று, “மொழு… மொழு”வென்று சேவிங் செய்யப்பட்டிருந்த கன்னத்தை வருடினாள்.  “நிச்சயம் வெச்சிருப்பார்…” என்று மெல்லிய குரலில் சொல்லியபடி, அவன் மூக்கைப் பிடித்து திருகி,  “தூக்கத்தை பாரு பத்து கிலோ மீட்டர் ஓடி வந்தவனாட்டம்” வெட்கத்துடன் புன்னகைத்துக் கொண்டாள்.

அப்போது அவளையும் மீறி அவள் மனம், சுந்தரின் “மொழு… மொழு” கன்னத்தை முள் தாடியுடன் கற்பனை செய்து பார்த்தது.

அவளுக்குள் ஒரு அமிலக் குடுவை உடைந்து, மனதின் சுவரெங்கும் விகாரங்கள் ஒட்டிக்கொண்டன.

“இவருக்கும் அந்த விஜய்யின் சோகம் வந்தால் எப்படி இருக்கும்?… இவரும் தாடி மீசையோட திரிந்தால் எப்படியிருக்கும்?” யோசித்துப் பார்த்தாள்.

“அடிப் பைத்தியக்காரி… அதற்கு நீ அல்லவா சாக வேண்டும்?” உள் மனம் எச்சரித்தது.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கண்டுபிடித்த கடிதம் (சிறுகதை) – ரேவதி பாலாஜி

    மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 2) – தி.வள்ளி, திருநெல்வேலி