in ,

மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 14) – தி.வள்ளி, திருநெல்வேலி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12   பகுதி 13

சித்தி ராகினியின் கார் டிரைவர் மகாவை ஈஸ்வர பவனத்தில் இறக்கி விட்டுவிட்டுக் கிளம்பினார். கம்மென்று அமைதியில் உறைந்திருந்த பங்களா மகாவிற்கு ஒருவித ஆச்சரியத்தைக் கொடுத்தது.

என்ன ஆச்சு.. ஏன் ஒருத்தரையுமே காணும். தோட்டக்காரன்.. சுந்தரம் அண்ணா.. தங்கம் எல்லாரும் எங்க போயிட்டாங்க…இவர்தான் இவங்களெல்லாம் வரவேண்டாம் சொல்லிட்டாரா …தன்னிடம் இருந்த சாவியால் வீட்டை திறந்தவள். அலுப்போடு சோபாவில் அமர்ந்தாள்.

காற்றில் கலந்து மெலிதாக அடித்த சென்ட் வாசனையும், பூ வாசனையும், மகாவுக்கு வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது. பாத்ரூமுக்குள் போனவள் கடகடவென வாந்தியெடுக்க ஆயாசமாக சோபாவில் அமர்ந்தாள். இது என்ன பூ வாசனை யார் வந்து விட்டு போனார்கள் என்று யோசித்தாள்.

டைனிங் டேபிளில் இருந்த மஸ்ரூம் பிரியாணி , ரய்த்தா சிப்ஸ் ஆகியவை பார்த்ததும்.. ‘ஓகோ தங்கத்தை சமையல் பண்ண சொல்லியிருக்கிறார் .சாப்பிட்டு விட்டுத்தான் கிளையண்ட்டை பார்க்கப் போயிருக்கிறார் போல. இல்ல கிளையண்ட் யாரும் இங்கே வந்தார்களா ?அப்படியும் தெரியலையே..’ பலவாறாக குழம்பினாள். மீதி இருந்த பிரியாணியை ப்ரிட்ஜுக்குள் வைக்க பிரிட்ஜ்ஜை திறந்தாள்.

 உள்ளே இருந்த பிரஷ் மேங்கோ ஜூஸ் கவனத்தை ஈர்த்தது. இவருக்குத்தான் மேங்கோ ஜூஸ் பிடிக்காதே, அப்புறம் ஏன் தங்கத்தை போட சொல்லியிருக்காரு என்று யோசித்தவளாய் ஜூஸ்ஸை எடுத்து ஒரு க்ளாசில் ஊற்றிக் குடித்துவிட்டு அதை கிச்சன் சிங்கில் போட போனவள் ,அதில் ஏற்கனவே ஒரு ஜூஸ் கிளாஸ் கழுவ கிடப்பதைப் பார்த்தாள்… யார் வந்தார்கள் இவர் நம்மிடம் ஒன்றுமே சொல்லவில்லையே… வரட்டும் எப்படியும் சாயங்காலம் வந்திடுவார்… வந்ததும் கேட்போம் என்று முடிவு பண்ணிக் கொண்டாள்.

செல்போனை எட்டி எடுத்தவள் தங்கத்திற்கு டயல் பண்ணினாள் மகா “அம்மா… நல்லாயிருக்கீங்களா? வாந்தியெல்லாம் குறைஞ்சிருக்கா? உடம்பு எப்படிம்மா இருக்கு?” என்றாள் தங்கம் வாஞ்சையோடு.

“தங்கம்.. நான் இப்ப நம்ம வீட்டுக்கு வந்திருக்கேன்..ஐயா இல்ல.. வெளியில போயிருக்காரு .நீ சமைச்சு வச்சதெல்லாம் டேபிள்ல இருந்தது.. ஜூஸ் கூட இருந்தது . ஐயா எங்க போனாரு ? யார் வீட்டுக்கு வந்தாங்க? அவங்க கூடத் தான் அவர் வெளியில போனாரா?” என்று கேட்டாள்.

தங்கத்துக்கு திக்கென்றது. ஒரு கணம் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்தாள். ‘வந்தது இளம்பெண்.. அதுவும் ஒரு நடிகை…. என்று சொன்னால், மகாம்மாவுக்கு சந்தேகம் வருமே ..தொடர்ச்சியாக கேள்வி கேட்டாலும் ஏதாவது உளறி விடக்கூடாது’ என்று ஜாக்கிரதையாக…

 ‘அம்மா! ஐயா லஞ்ச் தயார் பண்ணி, ஜூஸையும் போட்டு வச்சிட்டு போ.. முக்கியமான ஒரு கிளையண்ட் வருவாங்க.. அவங்களோட எனக்கு மீட்டிங் இருக்கு ..அது முடிஞ்சதும் சாப்டுட்டு நான் அங்களோட வெளியில போயிட்டு வருவேன்’னு சொன்னாரு…’மஷ்ரூம் பிரியாணி செஞ்சு வைச்சுட்டுப் போ… நாளைக்கு காலையில வேலைக்கு வந்தாப் போதும்’னு சொன்னாரு .அதனால வேலை முடிஞ்சதும் எல்லாத்தையும் எடுத்து மேஜை மேல் வச்சிட்டு வந்துட்டேம்மா ” என்றாள்.

அவள் நிறைய படங்கள் பார்ப்பவள் என்பதால்.. வந்தனாவைப் பார்த்ததுமே அவள் நடிகை என்பது தெரிந்து விட்டது …’ தேவையில்லாமல் இப்போது அதைக் கூறினால் ஏதாவது பிரச்சினை ஏற்படும். சுந்தரம் அண்ணன் சொன்னது சரிதான் நமக்கெதற்கு வம்பு’ என்று யோசித்தாள்.

மகாவிற்கு முதல் முறையாக சந்தேகம் வந்தது. ‘நம்மிடம் பேசும்போது அவரு கிளையண்ட் யாரும் வந்திருக்கிறதா சொல்லலையே..ஏன் நம்மிடமிருந்து மறைத்தார்? . அவர் வரட்டும் இன்னைக்கு இதற்கு விடை கிடைக்காமல் விடப்போவதில்லை. நான் திடீரென்று கிளம்பி வந்தது நல்லதாப் போச்சு’ என்று நினைத்துக் கொண்டாள். சித்தி, சித்தப்பா திருப்பதி ஒரு நாள் டிரிப்பாக போய் வர எண்ணி இருந்ததால் உண்டியல் பணத்தை அவர்களிடம் கொடுத்து விடுவதற்காக வீட்டிலிருந்து உண்டியலை எடுத்து வருகிறேன் என்று கிளம்பி வந்தாள். சித்தி எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை .

குழப்பம் அதிகமாக, அதிகமாக தலைசுற்றியது.’ கொஞ்ச நேரம் படுத்து ஓய்வெடுப்போம்… மத்ததெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.. ‘என்று நினைத்தவள், மாடிக்குப் போய் படுக்கை அறையை திறந்தாள். ஹாலில் அடித்த அதே செண்ட் வாசனையும், பூ வாசனையும் அங்கேயும் அடித்தது. முதன் முறையாக மகாவின் மனதில் ஒரு பயம் வந்து அமர்ந்தது. இவர் தப்பான வழியில் போகிறாரா? யாரையோ ஒரு பெண்ணை வீட்டிற்கு கூட்டி வந்திருக்கிறார். தலையணைக்கு கீழே கிடந்த கிளிப்பும், குப்பைத் தொட்டியில் கிடந்த மல்லிகைப்பூவும் அவள் எண்ணத்தை உறுதிப்படுத்தியது.

தலையில் இடி விழுந்தது போல ஒரு அதிர்வு.. தலைசுற்றியது. ‘நான் எப்படி இவ்வளவு அசடாக இருந்திருக்கிறேன். இவர் மேல் நான் வைத்த நம்பிக்கையை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறார். நிச்சயம் ஒரு பெண் இங்கு வந்திருக்கிறாள். அவருக்கும் இவளுக்கும் என்ன தொடர்பு? எதற்காக ஒரு பெண்ணை நான் இல்லாத நேரம் படுக்கையறை வரை கூட்டி வந்திருக்கிறார் …மனம் கொதித்தது. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? இவளைப் பார்க்கத்தான் வாராவாரம் பெங்களூருக்கு ஓடினாரா? எவ்வளவு தைரியமும் துணிச்சலும் இருந்தால் நான் இல்லாத சமயம் அவளை வீட்டிற்கு.. அது என் படுக்கையறைக்கு வரவழைத்திருப்பார் ..’

‘இப்படி ஒரு நம்பிக்கை துரோகியையா நான் நேசித்தேன்? வயிற்றில் கையை வைத்துக்கொண்டு குமறி குமறி அழுதாள். ‘கண்ணா நீ வந்த நேரம் உன் அப்பா நம்மை விட்டு விலகி எவ்வளவு தூரம் போயிட்டார் ‘.இந்தக் குழந்தை வந்ததற்கு கூட அவர் பெரிதாக ஆனந்த கூத்தாடவில்லை. காரணம் இவள் தான் போல. தலை சுற்றிக் கொண்டு வர, படுக்கையில் உட்கார போனவள் .சே! எவளோடையோ படுத்த இந்த படுக்கையில் உட்கார மாட்டேன்’ என்று வெளியே வந்து கதவை ஓங்கி அடித்தாள் …

நிதானமாக தன் அப்பாவின் அறைக்கு சென்று அப்பாவின் படத்தின் முன் குலுங்கி குலுங்கி அழுதாள்’.அப்பா ஒரு நன்றி கெட்ட ஆளை நீங்கள் வளர்த்திருக்கிறீர்கள். இந்த வீட்டிலேயே வளர்த்து, நீங்கள் படிக்க வைத்து, உங்களுடைய கம்பெனியிலேயே எம்.டி ஆக்கி அழகு பாத்தீங்க… இன்று அவர் எனக்கு செய்த துரோகத்தைப் பாத்தீங்களா …

இவருக்கு அன்பையும் பாசத்தையும் வாரி.. வாரி.. கொடுத்ததைத் தவிர நான் என்ன பாவம் செய்தேன்? இந்த நாலு வருஷமாய் வராமல் இருந்த இந்த குழந்தை இப்போது வந்திருக்கிறது. நான் என்னப்பா செய்வேன்? “என்று மனமுடைந்து அழுதாள்.அசதியான உடல்நிலை அவளை மேலும் பலவீனமாக்க… எப்போது உறங்கினோம் என்று தெரியாமல் அப்படியே அப்பாவின் படத்தின் முன்னால் கவிழ்த்து உறங்கினாள் …

தன் காம களியாட்டங்களை எல்லாம் முடித்த பிறகு திரும்பிய ராம்..’ ஈஸ்வர பவனம்’ அமைதியில், இருளில், மூழ்கியிருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டான்.

இதற்குள் மகா வந்திருப்பாளே.. ஏன் லைட்டுகளைப் போடவில்லை? அப்படியானால் அவள் வரவில்லையா? அவள் வரவில்லையென்றால் இங்கேயே வந்தனாவுடன் சந்தோஷமா இருந்திருக்கலாமே.. அனாவசியமாக கிளம்பி போய் இருக்க வேண்டாமே என்றெல்லாம் எண்ணங்கள் ஓட தன்னிடமிருந்த சாவியால் கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.

கனத்த மவுனம் அவனை வரவேற்றது…

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வந்தது யாரு? (சிறுகதை) – முகில் தினகரன்

    டிப்ஸ் (சிறுகதை) – கோபாலன் நாகநாதன்