in ,

மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 9) – தி.வள்ளி, திருநெல்வேலி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8

மகா அன்று ரொம்பவே சந்தோஷமாக இருந்தாள். இந்த வாரம் ராம்குமார் பெங்களூர் போகவில்லை என்று சொன்னதுமே அவள் சந்தோசத்தில் மிதந்தாள். சின்ன சின்ன விஷயத்திற்கு கூட சின்ன குழந்தை போல சந்தோஷப்படுவதே அவள் இயல்பு.

ராம்குமார் மகாவிடம், “மகா! நம்ம பெங்களூர் பிராஞ்சை எக்ஸ்டெண்ட் பண்றதுக்கு பேங்கில் கொஞ்சம் லோன் போட வேண்டியதிருக்கு. சில பேப்பர்ஸ் நீ சைன் பண்ணனும்”

“சொல்லுங்க! என்னென்ன பேப்பர்ல கையெழுத்து போடணும்னு.. நான் போட்டுட்டுப் போறேன்… தங்கம் கூப்பிட்டுகிட்டே இருக்கா..”

“நீ என்னென்னு புரிஞ்சுக்கிட்டு, படிச்சு பார்த்து கையெழுத்துப் போடு மகா..”

“நான் எதுக்குங்க படிச்சு பார்க்கனும். நீங்கதான் எல்லாம் பொறுப்பா பார்க்கிறீங்களே. நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும்”

ராம்குமாரிடமிருந்து பேனாவை வாங்கி, அவன் குறிப்பிட்ட இடங்களில் கையெழுத்தைப் போட்டாள். வெளியே உள்ள பேங்க் பேப்பர்களுடன் சேர்த்து உள்ளே வைத்திருந்த வெற்றுக் காகிதங்களிலும், விவாகரத்துப் பத்திரத்திலும் சேர்த்து அவளை அறியாமலே அவள் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தாள்.

ராம் மனசில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது. இவ்வளவு ஈசியா இந்த மகா.. முட்டாள் தன்னை நம்புகிறாள். அவனுக்கு சிரிப்பாக வந்தது. முதலில் வந்தனாவுக்கு போன் பண்ணி இந்த சந்தோஷ செய்தியைச் சொல்ல வேண்டும்.

ராம் மகாவிடம், “மகா உனக்கு வேலை இருந்தால் போ” என்றான் கனிவை குரலில் சேர்த்துக் கொண்டு.

“வேறு ஏங்காவது கையெழுத்துப் போட வேண்டியது இருக்காங்க, இருந்தா போட்டுட்டு ஒரேயடியாப் போயிடறேன்” என்றாள்.

 “இப்போதைக்கு இல்ல மகா, எல்லாம் தான் ஒரேடியா போட்டுட்டியே..” என்றான் நக்கலாக.

அதைப் புரிந்து கொள்ளாத மகா, “சரி சரி.. அப்ப நான் போறேன். வேலை நிறைய கிடக்குது. நான் போனாத்தான் தங்கம் சமையல சீக்கிரம் முடிப்பா” என்று சொல்லிக் கொண்டே கீழே இறங்கினாள்.

மனதில் சந்தோஷம் அலையலையாய் அடிக்க, வந்தனா நம்பரை செல்போனில் ஒற்றினான். வந்தனா லைனில் வர, “ஹனி ஒரு குட் நியூஸ்!” என்றான். விஷயத்தை விவரமாக கூறியதும் வந்தனா சந்தோஷத்தில் குதிப்பாள் என்று எதிர்பார்த்தான்.

“இப்பதான கையெழுத்து வாங்கியிருக்க.. இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கு. ஒன்னொன்னா பண்ணு…” என்றாள். அவன் வராத எரிச்சல் அவள் குரலில் தெரிந்தது.

“எவ்வளவு பெரிய விஷயம் வந்தனா. நீ சாதாரணமா சொல்ற.. நான் எந்த சந்தர்ப்பத்துக்கு இவ்வளவு நாள் காத்து கொண்டு இருந்தேனோ இந்த சந்தர்ப்பம் இன்றைக்குத்தான் வாய்த்தது. நான் பெங்களூர் போகலைன்னு சொன்னதும்… வாரக்கடைசியில் வீட்ல இருக்கிறதுனால மகா ரொம்ப சந்தோஷமா இருந்தா. அவ சந்தோசமா இருக்கிற மூட்ல கையெழுத்துக்களை வாங்கிட்டேன் தெரியுமா?” என்றான் பெருமிதத்தோடு .

“இந்த மகா எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. நீ இவ்வளவு பில்டப் கொடுக்கிற அளவுக்கு” என்றாள் வந்தனா எரிச்சலோடு.

“நீ நினைக்கிற மாதிரி அவ சாதாரண ஆளு இல்லைங்கறதை நீ புரிஞ்சுக்கனும். அவ கோடீஸ்வர அப்பாவுக்கு ஒரே வாரிசு. சகல சொத்துக்களும் அவ பேருல இருக்கு. எங்க மாமா என்ன நம்பாம.. தன்னுடைய உயிலை வேற விதமா எழுதி வச்சிருக்காரு. அவளுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுச்சின்னா சொத்துகள் முழுக்க அவள் குழந்தைக்கு… குழந்தை இல்லாத பட்சத்தில் அவருடைய ‘ஈஸ்வர் ட்ரஸ்டு’க்கு போய் சேர்ந்துவிடும். அவர் எனக்குன்னு எழுதி வைத்திருப்பது அவருடைய சொத்தில ஒரு பங்கு மட்டுமே… மீதி மூன்று பங்கு மகா பேர்ல தான் இருக்கு. அதனால அவள சரியானபடி ஒரு காரணம் சொல்லி தான் கழற்றி விடனும். ஈ.சி.ஆர் பங்களா கட்ட 2 கோடி ஆயிருக்கு. இத்தனைக்கும் இடம் மாமா பெயரில் தான் இருக்கு. எனவே அவளை நேரடியாக பகைக்க முடியாது”

அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே வேலை பார்க்கும் தங்கம் ஓடிவந்தாள், “ஐயா சீக்கிரம் வாங்க, அம்மா மயங்கி விழுந்துட்டாங்க”

“வந்தனா உன்கிட்ட கொஞ்ச நேரம் கழிச்சுப் பேசுறேன். போன வச்சிடறேன்” என்று சொல்லி போனை வைத்தான்.

“என்னாச்சு தங்கம்?”

“ஐயா! அம்மா வேலை பார்த்துகிட்டு இருந்தாங்க. எலுமிச்சம்பழ ஜூஸ் கேட்டாங்க…. போட்டுக் கொடுத்தேன். குடிச்சதும் அதை அப்படியே வாமிட் பண்ணிட்டாங்க. சோஃபாவில உட்கார்ந்தவங்க… திடீரென மயங்கி விழுந்துட்டாங்க” என்றாள் பதறியவாறு .

அடுத்த பத்தாவது நிமிடம் தங்கத்தின் உதவியோடு மகாவை காரில் ஏற்றிக்கொண்டு நகரின் பிரபல மருத்துவமனைக்கு விரைந்தான் ராம். என்ன ஆயிற்று மகாவிற்கு? ஒருநாளும் இது போல ஆனதில்லையே. பொன் முட்டையிடும் வாத்து அல்லவா, அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டுமே காரியம் ஆகும்வரை மனம் பதறியது.

மகாவை மருத்துவமனையில் அட்மிட் பண்ணினான். ஏதாவது பெரிய பிரச்சனையாய் இருக்குமோ? இவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா சொத்து முழுக்க ட்ரஸ்டுக்கு போயிடுமே. முழுசா இவகிட்ட இருந்து சொத்தை வாங்குறவரைக்கும் இவ நல்லா இருக்கனும் என்று கடவுளை வேண்டிக் கொண்டான் ராம்.

வெளியே வந்த மருத்துவர், ராம் அருகே வந்தார். அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று படபடப்புடன் காத்திருந்தான் ராம். அருகில் வந்தவர், அவன் கைகளை குலுக்கி, “கங்கிராட்ஸ் ராம்! நீங்க அப்பாவாக போகிறீர்கள்” என்றார்.

அதிர்ந்தான் ராம்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பேச மறந்த ஊமைகள் (சிறுகதை) – முகில் தினகரன், கோயமுத்தூர்

    மத்யமாவதி (பகுதி 2-மாயா மாளவ கௌளை) – சாய்ரேணு சங்கர்