in ,

மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 4) – தி.வள்ளி, திருநெல்வேலி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3

இதுவரை:

நடிகை வந்தனாவுடன் உல்லாசமாக இருக்கிறான் ராம்குமார். அவன் அப்பா திதி இருப்பதால் உடனே வரச் சொல்லி போன் பண்ணுகிறாள் அவன் மனைவி மகா.

இனி:

அன்று காலையிலிருந்தே மகா பரபரப்பாக இருந்தாள். ராம்குமாரை போனில் பிடிக்க முடியாமல் திண்டாடினாள். எத்தனையோ தடவை, திரும்பத் திரும்ப போன் பண்ணியும், ராம்குமார் எடுக்கவில்லை.

அதன் பிறகு அவன் போன் சுவிட்ச் ஆப்பில்தான் இருந்தது. ஆனாலும் அவளுக்குள் ஒரு நம்பிக்கை.. ‘மாமா திதி நாளைக்குனு சொல்லிட்டோம். எப்படியும் காலையிலில் வந்துடுவாங்க ‘என்று தீர்மானமாக நம்பினாள்.

முதல்நாள் ஐயருக்கு திதி கொடுக்க வேண்டிய சாமான்களையும், காய்கறி, அரிசி, இலை, போன்றவற்றை லிஸ்ட் எழுதி கொடுக்க, சுந்தரம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். மாமாவின் படத்தை துடைத்து சுத்தப்படுத்தி, சந்தனம், குங்குமம் வைத்தாள்.சுந்தரம் தனி ரோஜாப்பூவில் மாலை வாங்கி கொண்டு வந்து கொடுத்தார்.

வெற்றிலை, பாக்கு, பழங்கள் என எல்லாவற்றையும் நினைவாக வாங்கி வைத்தாள். வாசலில் மாவிலைத் தோரணம் கட்ட, வேலை பார்க்கும் தங்கம், வீட்டை துடைத்து பெருக்கி, துடைத்து, சுத்தமாக்கி எல்லாவற்றையும் ரெடியாக எடுத்து வைத்தாள்.

ஐயரை 10 மணி வாக்கிலேயே வரச் சொன்னாள். ஆனால் காலை வரை போன் ஒன்றும் வராததும், விடிந்ததும் கவலை சூழ ஆரம்பித்தது. நேரம் செல்லச் செல்ல, என்ன செய்வது என்று தெரியவில்லை. இதுவரை இது போன்ற ஒரு சூழல் வந்ததில்லை.

10 மணிக்கு ஐயர் வந்து சேர்ந்தும், ராம் வரவில்லை. ‘என்னாச்சு ஏன் வரவில்லை?’ என்ற குழப்பம், பயம் மனதை கௌவிய்து.

ஐயர் காத்திருந்து பார்த்துவிட்டு, “கூடப் பிறந்தவங்க யாராவது இருந்திருந்தால், அவங்கள வைச்சாவது கொடுத்திருக்கலாம். இப்ப என்னம்மா செய்றது?” என்றார்.

மகாவுக்கு பதில் சொல்ல தெரியாமல் கண் கலங்கியது.

ஐயரே, “அம்மா வருத்தப்படாதீங்க… ஐயா ஏதோ ஒரு காரணத்தினால் தான் வரல.. வந்த பிறகு பார்த்துக்கலாம். அடுத்த பட்ஷத்துல திதி கொடுக்கலாம். இன்னைக்கு கொஞ்சம் பச்சரிசியும், அகத்திக்கீரையும் பசுமாட்டுக்கு கொடுத்துடச் சொல்லுங்க” என்றார்.

ஐயர் கிளம்பியதும், செய்து வைத்த பாயசம், வடையை மாமா படத்திற்கு முன் வைத்து பூஜை செய்தாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.

‘ராம் ஏன் இப்படி செய்கிறார்… என்ன ஆயிற்று இவருக்கு… ஒழுங்காக இருந்தவர், இப்போது சமீபகாலமாக ரொம்பவே மாறிட்டாரு… திதிக்கு வராத அளவுக்கு அப்படி என்ன முக்கிய நிகழ்வு ஆபீஸில இருக்கும்… இல்லை அது காரணமாக இருக்க முடியாது வேறு என்ன விஷயம்?’ மகாவின் மனதில் கவலையும், குழப்பமும் அலைக்கழித்தது.

ராம்குமார் ஒன்றும் அவளுக்கு புதியவனில்லை. பிறந்ததிலிருந்தே கூடவே ஒன்றாக வளர்ந்தவன் தான். அவளுக்கு ஐந்து வயதாகும் போது அவளுடைய அம்மா மூளையில் கட்டி வந்து இறந்து போனாள்.

5 வயது சிறுமியாய் நின்ற மகாவை வளர்க்க வழி தெரியாமல் ஈஸ்வர் திண்டாடினார். உறவினர்கள் எல்லோரும் இன்னொரு திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தினர். வருபவள் மகாவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்த்தால் என்ன செய்வது என்ற கவலையில் மறுமணமே வேண்டாம் என்று முடிவு செய்தார் ஈஸ்வர்.

ஆனால் அவர் நினைத்தது போல பெண் குழந்தையை வளர்ப்பது அவ்வளவு எளிதாக இல்லை. எனவே தங்கை கமலத்தையும், அவள் கணவனையும், சிறுவன் ராம்குமாருடன் வந்து தன் வீட்டில் தங்கச் சொல்லி வேண்டிக் கொண்டார்.

மகாவை வளர்த்தது அவள் அத்தை தான். நிறைய நீதிக்கதைகளைச் சொல்லி நல்ல பண்புகளை ஊட்டி நல்லபடியாக வளர்த்தாள்.

ராம்குமார் 17 வயதாகும்போது விதியின் பயனோ என்னவோ, கமலமும் அவள் கணவனும் சென்ற கார் விபத்துக்குள்ளாகி இருவருமே அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். அதன்பிறகு இடிந்து போயிருந்த ராம்குமாரை, ஈஸ்வர் தான் அதிக பாசத்தை காண்பித்து தன்பால் திருப்பினார்.

அவன் கல்லூரிக்கு போய் படித்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய பிஸினஸ்ஸையும் கற்றுக் கொடுத்தார். அவன் வழி மாறிப் போய் விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். தன்னுடைய வாரிசாகவே அவனை வளர்த்தார்.

ஆரம்பத்தில் ராம்குமாரும் மாமாவிடம் மிகுந்த பாசம் வைத்திருந்தான். மகா கூடவே வளர்ந்ததாலோ என்னவோ பெரிதாக அவனுக்கு மகாவிடம் ஈர்ப்பு எதுவும் கிடையாது.

ஆனால் காலப்போக்கில் உல்லாசமாக வாழ பணம் நிறைய தேவை என்பது புரிந்தது. தன் அப்பா, அம்மாவின் சொத்துக்கள் அவனுடைய ஆசையை நிறைவேற்ற போதாது என்று தோன்றியது.

அவனுடைய கவனம் மகாவின் பேரில் திரும்பியது. தன் மாமாவின் ஒரே செல்லப் பெண் மகா. அவருக்குப் பின்னால் சொத்து அனைத்திற்கும் ஒரே வாரிசாகி விடுவாளே என்ற எண்ணம் அவள் பால் அவன் கவனத்தைத் திருப்பியது.

ஈஸ்வர் திடீரென உடல்நலமில்லாமல் போக, தன் ஒரே மகளை அப்படியே விட்டு விட்டுப் போக மனமில்லாமல், ராம்குமாருக்கு கல்யாணம் செய்து கொடுக்க முடிவெடுத்த போது, அவன் பெரிதாக ஆட்சேபனை எதுவும் சொல்லவில்லை.

அந்த வீட்டிலேயே ராம்குமாரை பார்த்து வளர்ந்ததால் மகா மனதில் ராம்குமார் பேரில் அளவற்ற அன்பும், பிடிப்பும் இருந்தது. அவளும் அப்பாவிற்கு எதிர்ப்பு சொல்லவில்லை.

எளிமையான முறையில் திருமணத்தை நடத்தி விட்டு, மிகப் பிரம்மாண்டமாய் தொழிலதிபர்கள் அனைவரையும் அழைத்து ஒரு விருந்து கொடுத்தார். அத்துடன் ‘மகா மார்பிள்ஸ்’ எம்.டி .என்ற தன்னுடைய பதவியையும் மருமகனுக்கு விட்டுக் கொடுத்தார்.

முக்கால்வாசி ஷேர்கள் மகா பேரில் இருந்தாலும், ராம்குமார் தான் கம்பெனியை நிர்வகித்து வந்தான் அதுபோக அவருடைய வீடு, சொத்துகள் அனைத்தும் மகள் பெயரில் உயில் எழுதிவைத்தார்.

மகா-ராம்குமார் திருமணத்திற்கு பின் அதிக காலம் ஈஸ்வர் இருக்கவில்லை. அவர் இறந்த போது மகாவுக்கு கல்யாணமாகி இரண்டு வருடங்களே ஆகியிருந்தது .

அதன் பிறகு ராம்குமார் தன் மாமாவுடன் இருந்து எல்லா நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டிருந்ததால் கம்பெனியை திறம்பட நடத்தி வந்தான். பிஸினஸ் நன்றாக நடக்க மகாவுக்கு மனது நிம்மதியானது.

‘அப்பாவின் ஆசைப்படி எல்லாம் நடந்து வருகிறது, அவர் பெயர் வைக்க ஒரு குழந்தையை மட்டும் கொடு’ என்பது மட்டுமே இறைவனிடம் அவள் பிரார்த்தனையாக இருந்தது

எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கும் போது இப்படி ஒரு தடுமாற்றம் ராம்குமாரிடம்.

‘பிசினஸில் ஏதும் பிரச்சனையா? கடன் ஏதும் வாங்கி இருக்காரா? இல்லை வேறு ஏதாவது விஷயமா?’ என பல குழப்பங்கள் அவளை ஆட்டுவித்தது. கேட்கவும் யோசனையாக இருக்க என்ன செய்வது என்று யோசித்தாள். ஆனால் ராம்குமார் அவன் அப்பாவுக்கு திதி கொடுக்க வராதது அவளுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது.

அவள் மனம் சஞ்சலப்படும் போதெல்லாம் அவள் அப்பாவின் படத்தின் முன்னால் நின்று தான் ஆறுதல் தேடி கொள்வாள்.

அப்போதும், “அப்பா! எனக்கு பிரச்சனை என்ன என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அதை சமாளிக்க கூடிய மனதைரியமும் துணிச்சலையும் நீங்கள் எனக்கு கொடுக்க வேண்டும்”. என மனமுருக வேண்டிக் கொண்டாள்.

மறுநாள் மதியம் கால் டாக்சியில் வந்திறங்கினான் ராம்குமார். தலையில் கையில் பெரிய கட்டு போட்டிருக்க…பதறியபடி ஓடினாள் மகா… என்னாச்சு ராம்குமாருக்கு????

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விடியலைத் தேடும் விவசாயி (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

    சந்திப்பு (சிறுகதை) – கவிஞர் இரஜகை நிலவன், மும்பை