in ,

மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 11) – தி.வள்ளி, திருநெல்வேலி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8 பகுதி 9   பகுதி 10

ராமின் குரலில் பெரிதாக மகிழ்ச்சி தெரியாதது வந்தனாவிற்கு உறுத்த, “என்ன ராம்! ஏன் டல்லா இருக்கிற? உன் குரல்ல சந்தோஷமே இல்லையே, பக்கத்துல யாரும் இருக்காங்களா?”

“யாருமில்ல வந்தனா… மகா அவ சித்தி வீட்டுக்குப் போயிருக்கா. நீயும் அம்மாவும் வர்றது எனக்கு ரொம்ப சந்தோஷம்தான். ஈ.சி.ஆர். பங்களா பக்காவா ரெடியாயிடுச்சு! ஃபர்னிஷிங் மட்டும்தான் இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு. ஸ்விம்மிங் பூல் கூட நல்லா அமைஞ்சிருக்கு. நீ கூடிய சீக்கிரமே இங்க வந்துடலாம் வந்தனா.”

“போ ராம்! உனக்கென்ன சொல்லிடுவே ஈஸியா… எத்தனை படம் கமிட் பண்ணியிருக்கேன். கால்ஷீட் கொடுத்திருக்கிறேன், அக்ரிமெண்ட் சைன் பண்ணி இருக்கேன். டைரக்டர், புரடியூசர், சும்மா விடுவாங்களா?”

“அதெல்லாம் நீங்க வந்த பிறகு பார்த்துக்கலாம். ஷூட்டிங் இங்கிருந்தே போய்க்கலாம். இப்போ நடிச்சிகிட்டிருக்கிற படம் தவிர புதுசா எதுவும் கமிட் பண்ணாத. நம்மகிட்ட பணம் இருக்கு, நீ நடிச்சு தான் ஆகனும்ங்கறதில்ல”

மகாவைப் பற்றிய கவலை மறந்து… வந்தனா அவன் மனதை ஆக்கிரமித்தாள். அவளோடு கழிக்கும் அந்த இன்ப நேரங்கள் நினைவிற்கு வர, அவன் மனம் கிளர்ச்சி அடைந்தது. அதற்காகவே ஈ.சி.ஆர் ரோட்டில் எப்போது வந்தாலும் அவர்கள் தங்குவதற்கு ஏற்ற மாதிரி முன்பகுதியை ரெடி பண்ணி வைத்திருந்தான்.

வேலை ஒருபக்கம் நடந்தாலும், அனேகமாக தங்குவதற்கு ஏற்றார் போல பங்களா ரெடியாகத்தான் இருந்தது. நல்லவேளையாக மகா இங்கே இல்லை, இருந்தால் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டு டென்ஷன் பண்ணிக் கொண்டிருப்பாள்.

சுந்தரத்தை கூப்பிட்டனுப்பினான் ராம்குமார்.

“சுந்தரம்… நான் வழக்கமா வருவேன்ல பெங்களூர் பிளைட், இங்கே மதியம் 1.40 மணிக்கு வர்றது. அதில நாளைக்கு கெஸ்ட் ரெண்டு பேர் வருவாங்க, அவங்கள ரிசீவ் பண்ணி ஈ.சி.ஆர்.ல புதுசா கட்டிக்கிட்டிருக்கோமே கெஸ்ட் ஹவுஸ், அந்த பங்களாவுல கொண்டு போய் விட்டுட்டு வந்துடுங்க. மதிய சாப்பாடு ஏதாவது ஒரு ஸ்டார் ஹோட்டல்ல வாங்கி கொடுத்துடுங்க. அவங்க ரொம்ப முக்கியமான கிளையண்ட்ஸ், பார்த்து மரியாதையா நடந்துக்கோங்க. இதெல்லாம் உங்களுக்கு சொல்லனும்னு அவசியமல்ல, உங்களுக்கே தெரியும்”

மறுநாள் சுந்தரம் ஏர்போர்ட்டில் காத்திருக்க, ‘மகா கிரானைட்ஸ்’ பிளாக் கார்ட்டை பார்த்துவிட்டு இரண்டு பெண்கள் அருகில் வந்தனர்.

“வாங்கம்மா, உங்களை ரிசீவ் பண்ணத்தான் நான் வந்திருக்கேன். ராம்குமார் ஐயா அனுப்பினாரு. உங்களை ஈ.சி.ஆர் பங்களாவில் கொண்டு விடச் சொல்லியிருக்காரு” என்றார் மனக்கசப்பை வெளிக்காட்டாமல்.

விஷயம் முழுக்க முழுக்க அவருக்கு புரிந்தது. தன்னுடைய நினைப்பு சரியானதுதான். இவங்க தான் அந்த பெங்களூர் பார்ட்டியா? ராம்குமார் இவங்களை சந்திக்கத் தான் அடிக்கடி போறாறா? அன்றைக்கு ஆபீஸ்ல டெலிபோனில பேசிகிட்டிருந்தது கூட இவங்க கூடத் தான் போல.

இருவரில் சற்று வயதான அம்மா இளையவளுக்கு அம்மாவாக இருக்கும் என்று சுந்தரம் நினைத்துக் கொண்டார்.

சந்தியா சுந்தரத்தைப் பார்த்து, “நீதான் சுந்தரமா… ராம்மோட கார் டிரைவரா?” என்றாள் அதிகாரமாக.

“ஆமாம்மா, உங்கள பிக்கப் பண்ணி பங்களாவில் கொண்டு விடச் சொல்லி இருக்கிறார் ஐயா” என்றார் பேச்சை வளர்க்க மனமில்லாமல்.

“ஏன் உங்கள் ஐயாவுக்கு வர நேரமில்லையா… சார் ரொம்ப. பிசியோ?” என்றாள் இளையவள்.

“வந்தனா பேசாமல் வா, இவர்கிட்ட நமக்கு என்ன பேச்சு” என்று அதட்டினாள் அவள் அம்மா.

அவர்களைக் கொண்டு போய் பங்களாவில் இறக்கி விட்டு, சாப்பாடு வாங்கிக் கொடுத்துவிட்டு திரும்பினார் சுந்தரம்.

மறுநாள் மகா சுந்தரத்தை போனில் கூப்பிட்டு சித்தி ராகினி வீட்டிற்கு வரச் சொன்னாள். சுந்தரத்திற்கு வெலவெலத்துப் போனது. ஒருவேளை இவர்கள் இருவரும் வந்தது மகாவிற்கு தெரிந்திருக்குமோ, அவள் சந்தேகப்பட்டு நம்மிடம் கேட்கப் போகிறாளோ?

அப்படியென்றால் என்ன சொல்வது.. சந்தேகம் எனக்கு இருக்கிறது.. எதுவும் உறுதிபடாத நிலையில் எதையாவது சொல்லி அவளை குழப்பக் கூடாது. அதுவும் அவள் ரொம்ப நாளைக்கு பிறகு தாய்மை அடைந்திருக்கும் இந்த நேரத்தில் அவளுடைய சந்தோஷத்தைக் கெடுக்க வேண்டாம். யோசனையோடு ராகினி வீட்டை அடைந்தார்

“சுந்தரம் அண்ணா! நீங்க நல்லா இருக்கீங்களா? ஐயா நல்லா இருக்காங்களா? இன்னைக்கு சித்தி வீட்டில் மஸ்ரூம் பிரியாணி பண்ணினோம். அவர் என் சமையல் இல்லைன்னா நல்லா சாப்பிட மாட்டார். இதோ இந்த ஹாட்பாக்ஸ்ல மஸ்ரூம் பிரியாணி வச்சிருக்கேன். அவருக்கு மஸ்ரூம் பிரியாணினா ரொம்ப பிடிக்கும் .அதுவும் நான் பண்ணதுனா ரொம்பவே இஷ்டமா சாப்பிடுவாரு… கூட சிப்ஸ்.. தயிர் ரய்த்தா… எல்லாம் வச்சிருக்கேன். நீங்க கூட இருந்து மத்தியானம் பரிமாறிருங்க அண்ணா.. அப்பத்தான் நல்ல சாப்பிடுவார். அப்புறம் இந்த டப்பால்ல உங்களுக்கு வச்சிருக்கேன். சாப்டுட்டு சொல்லுங்க எப்படி இருக்குதுன்னு. இந்த வாரம் உங்க ஐயா பெங்களூர் போகவில்லை. அனேகமா நாளைக்கு என்ன பார்க்க வருவார்னு நினைக்கிறேன்”

சின்னக்குழந்தை மாதிரி குதூகலமாக பேசும் மகாவைப் பார்க்க கஷ்டமாக இருந்தது சுந்தரத்திற்கு. சுந்தரம் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு ஆபிசுக்கு கிளம்பினார்.

“சுந்தரம் பெரிய வண்டி சாவியை குடுங்க! இன்னைக்கு லஞ்ச் கிளையண்ட்டோட வெளியில போறேன்”

“ஐயா… அம்மா உங்களுக்கு ஸ்பெஷலா மஷ்ரூம் பிரியாணி பண்ணி கொடுத்தனுப்பி இருக்காங்க. உங்கள சாப்பிட வச்சிட்டு என்னை வரச் சொன்னாங்க”

“அந்த பிரியாணியை நீங்க கொண்டு போங்க.. அம்மா கேட்டா நான் சாப்பிட்டேன்னு சொல்லிடுங்க… உங்களுக்கு வேணாம்னா குப்பையில கொட்டுங்க” என்று பேசிக் கொண்டே வெளியே நடந்தான் ராம்குமார்.

அவன் எந்த கிளையண்ட்டைப் பார்க்க போகிறான் என்பது புரிந்தது சுந்தரத்திற்கு. மனம் கொதித்தது. கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாமல், தாய்மையடைந்திருக்கும் மனைவியை ஏமாற்றுகிறான்.

தாய்மை அடைந்த மகிழ்ச்சியில் சந்தோஷமாக இருக்கும் மகா ஒரு பக்கம்… அவளைப் பற்றி கவலைப்படாமல் வந்தனாவுடன் மோகத்தில் மூழ்கிக் கிடக்கும் ராம்குமார் மறுப்பக்கம்… இந்த விஷயம் மட்டும் மகாவிற்கு தெரியவந்தால்…

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காதல் சிக்னல் (சிறுகதை) – ராஜேஸ்வரி

    மத்யமாவதி (பகுதி 4-சுத்த தன்யாசி) – சாய்ரேணு சங்கர்