2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4
அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7
அந்தப் படகு மாற்றுத்திறனாளிகள் இல்லம் இருக்கும் மேட்டிற்கு அருகில் சென்று நிற்க, படகிலிருந்த ஒவ்வொருவரும் நிதானமாய் இறங்கினர்.
இறங்க முடியாமல் தடுமாறியவர்களுக்கு படகுக்காரன் கை கொடுத்து உதவினான்.
எல்லோரும் இறங்கி முடித்த பின் அந்த ஐவர் மட்டும் படகிலேயே இருக்க, “என்னப்பா?… இறங்கலையா?” படகுக்காரன் கேட்டான்.
“நாங்க இங்க இறங்க விரும்பலை… எங்களை வேற எங்காச்சும் இறக்கி விடு” என்றான் கோபி கோபமாய்.
“தம்பி… அப்படியே மேலே பாருங்க வானம் எப்படி இருட்டிக்கிட்டு நிக்குதுன்னு… ஏற்கனவே ஏரி உடைஞ்ச தண்ணீல ஊரே மிதக்குது… இன்னும் மழைத் தண்ணியும் கூட சேர்ந்திட்டா இந்த ஊரே கடலாயிடும்… அதனால பேசாம இந்த இல்லத்திலேயே போய் அடைக்கலமாயிடுங்க… அவ்வளவுதான் நான் சொல்லுவேன்”
அப்போது ஹெலிகாப்டர் சத்தம் கேட்க, எல்லோரும் அண்ணாந்து பார்த்தனர்.
“பார்த்துக்கங்க… இல்லத்துல இருக்கற நூத்துக்கும் மேற்பட்ட ஆட்களுக்கு ஹெலிகாப்டர் மூலமா உனவுப் பொருட்கள் வந்திடுச்சு… அதனால வீம்பு பிடிக்காம படகை விட்டிறங்கி இல்லத்துக்கே போங்க…” படகுக்காரன் உசுப்பினான்.
கடந்த காலங்களில் அந்த இல்லத்திற்கும், அங்கே தங்கியிருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தான் செய்த அக்கிரமங்கள் நினைவில் வந்து போக, கோபியின் மனம் படகை விட்டு இறங்க மறுத்தது.
“த பாருங்கப்பா… எனக்கொண்ணும் பிரச்சினையில்லை… நீங்க எங்க சொல்றீங்களோ… அங்க போய் உங்களை இறக்கி விட்டுடுவேன்!… ஆனா ஒண்ணு நீங்க எம்ங்க போனாலும் இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு சோறு தண்ணி கிடைக்காம அல்லாடுவீங்க… ஜாக்கிரதை”
“தல… இந்த படகுக்காரன் சொல்றதுதான் யதார்த்தம்… பேசாம நாம எல்லோரும் இங்கேயே இறங்கிடுவோம்….” கோபியின் சகாக்களில் ஒருத்தன் நிறம் மாற, இன்னொருத்தனும் அதே பாணியில் சரணடைய, வேறு வழியில்லாமல் கோபியும் படகிலிருந்து இறங்கினான்.
அந்த இல்லத்தின் பின் புறத்திலிருந்த காலி மைதானத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்க, அதிலிருந்த மளிகை மற்றும் இதர பொருட்களை இல்லத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் தாமாகவே சென்று மழையில் நனையாத வண்ணம் அள்ளிக் கொண்டு வந்து ஸ்டோர் ரூமிலும், வராண்டாவிலும் பாதுகாப்பாய் வைத்தனர்.
கோபியும் அவன் ஆட்களும் தயங்கித் தயங்கி நடந்து வருவதை தூரத்திலிருந்து கவனித்து விட்ட, வேன் டிரைவர் டேவிட், “அடப்பாவிகளா… இந்த மழை வெள்ளத்திலும் கூட அடங்கலையா இவனுக?” என்றான் பற்களை “நற… நற’வென்று கடித்தபடி.
திரும்பிப் பார்த்த வாட்ச்மேன் வடிவேலு, “ஆஹா… அவனுக கையில் வாரிக் குடுக்கறதுக்குன்னே…. இன்னிக்குன்னு பார்த்து நாம நிறைய பொருட்களை வாங்கி வெச்சிருக்கோமே…” என்று அங்கலாய்க்க,
ஆறுமுகம் மட்டும், “கொஞ்சம் பொறுமையாயிருங்க… எனக்கென்னமோ அவங்க இங்க ரவுடித்தனம் பண்ண வரலைன்னு தோணுது” என்றார்.
“எதை வெச்சு அப்படிச் சொல்றீங்க?” டேவிட் கேட்க,
“வழக்கமா… அந்த கோபியோட நடை எப்படியிருக்கும் தெரியுமா?… சும்மா ஆண் சிங்கம் பிடரியைச் சிலுப்பிக்கிட்டு நடக்கற மாதிரி இருக்கும்!… அதே மாதிரி அவனோட சகாக்கள் மூஞ்சில வண்டி வண்டியா திமிர் இருக்கும்… ஆனா இப்ப அதெல்லாம் அப்படியே உல்டாவா மாறியிருக்கு… கோபி முதல் பந்திலேயே அவுட்டான பேட்ஸ்மேன் மாதிரி நடந்து வர்றான்,… அவனோட ஆளுங்க… அவன் செஞ்சுரி போடுவான்னு பந்தயம் கட்டித் தோத்துப் போன மாதிரி சோகமா வர்றானுகளே” என்றார் ஆறுமுகம்.
சிறிது தூரம் நடந்து வந்த கோபியும் மற்றவர்களும், இவர்களை வந்து சந்திக்க வெட்கப்பட்டுக் கொண்டு, தயங்கி நிற்க, ஆறுமுகம் மட்டும் ஏதோ முடிவு செய்தவர் போல், “ம்ம்ம்… டேவிட்… உள்ளார போய் அந்த முருகனையும்… ம்ம்ம்… அந்த சத்தியவேந்தனையும் இங்க வரச் சொல்லு” என்றார்.
நெற்றியைச் சுருக்கிய டேவிட் “சார்… அவங்க எதுக்கு இப்ப?” கேட்டான்.
“ப்ச்… ஏன்?… எதுக்கு?ன்னு கேட்காதே… “போய்க் கூட்டிட்டு வா”ன்னா வா!… அவ்வளவுதான்” ஆறுமுகம் லேசாய்க் கோபத்தைக் காட்ட, “சரி…சரி” என்றபடி நகர்ந்தான் வேன் டிரைவர் டேவிட்.
அடுத்த ஐந்தாவது நிமிடம் சூம்பிப் போன காலை இழுத்துக் கொண்டு முருகனும், அவன் தோளைப் பிடித்துக் கொண்டு பார்வையில்லாத சத்தியவேந்தனும் அங்கு வந்து சேர்ந்தனர்.
“எதுக்கு சார்… எங்களை வரச் சொன்னீங்க?” முருகன் கத்தலாய்க் கேட்க,
“டேய்… டேய்… எதுக்குடா இப்படிக் கத்தறே?… கொஞ்சம் மெதுவாப் பேசுடா” என்று அவனை அடக்கிய ஆறுமுகம், “முருகா… மெல்ல தலையைத் திருப்பி அங்க பாரு?” என்று சொன்னதும், நிதானமாய்த் திரும்பிப் பார்த்தான் முருகன்.
சற்று தூரத்தில் கோபியும் அவன் தோழர்களும் நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும், “சார்.. இவனுக எதுக்கு சார் இங்க வந்திருக்கானும்?… அய்யய்யோ… இவனுக ரொம்ப மோசமான ஆளுக சார்…” படபடத்தான் முருகன்.
அதற்குள் சத்தியவேந்தன் இடையில் புகுந்து, “முருகா… யாரு முருகா?… யாரு வந்திருக்காங்க?” அச்சம் தொணிக்கும் குரலில் கேட்டான்.
“டேய்… அன்னிக்கு மார்க்கெட்டிலிருந்து நீ வியாபாரம் முடிச்சு வரும் போது உன்னை எட்டி உதைச்சுக் கீழே தள்ளி,…. உன் கையிலிருந்த பணத்தையெல்லாம் பிடுங்கிட்டுப் போனானே ஒரு எருமை மாடு… அவனும்… அவன் கூட்டாளிகளும் இங்கேயும் வந்திட்டானுகடா”
இரு கைகளையும் தலைக்கு மேல் வைத்துக் கொண்ட சத்தியவேந்தன், “போச்சு… போச்சு… இன்னிக்கு இங்கே ஏதோ ஒரு கலவரம் நடக்கப் போகுது” என்றான்.
“த பாருங்கப்பா… நீங்களே ஏன் எதையெதையோ கற்பனை பண்ணறீங்க?… அவங்களைப் பார்த்தா ரகளை பண்ண வந்தவனுக மாதிரித் தெரியலை!… அதனால… அவங்களையும் நாம நம்ம விருந்தினர்களா நெனச்சு… உபசரிச்சு… சாப்பாடு போட்டு… தங்க இடமும் குடுப்போம்” என்றார் ஆறுமுகம்.
“என்னது… இவனுகளைப் போய் உபசரிக்கறதா?… சார்… அப்படிக்கிப்படி நெனச்சு அவனுக பக்கத்துல போயிடாதீங்க… அப்புறம் அன்னிக்கொரு நாள் அம்மனுக்கு கூழ் ஊத்தறதுக்காக பணம் கேட்டு வந்து நம்ம வாட்ச்மேன் அய்யாவை உதைச்சுக் கீழே தள்ளினானுக பாருங்க?… அது மாதிரி உங்களையும் உதைச்சுக் கீழே தள்ளிடுவானுக… ஜாக்கிரதை” என்றான் முருகன்.
“தம்பிகளா… வாழ்க்கைல நீங்க கத்துக்க வேண்டிய மிக முக்கியமான ஒண்ணு என்ன தெரியுமா?…. உனக்கான நேரம் வரும் வரை பிறர் அடியைப் பொறுத்துக் கொள்வது!… நீங்க இத்தனை நாளு பொறுத்திட்டிருந்தீங்க… இப்ப உங்களுக்கான நேரம் வந்திடுச்சு… நீங்களும் அவனுகளைத் தாக்குங்க” என்றார் ஆறுமுகம்.
“அய்யோ… சார்… நாங்களாவது… அவனுகளைத் தாக்குவதாவது…. சும்மா கொசு அடிக்கற மாதிரி அடிச்சுத் தேய்ச்சிட்டுப் போயிடுவானுக” என்றான் சத்தியவேந்தன் எங்கோ பார்த்துக் கொண்டு.
“டேய் நான் உங்களைத் தாக்கச் சொன்னது கையால் அல்ல…”
“பின்னே?”
“அன்பினால் தாக்குங்கள்!… அன்பு கூட ஒரு வகை ஆயுதம்தான்” என்றார் ஆறுமுகம்.
“ம்ஹும்… ஒண்ணுமே புரியலை சார்” தலையைத் தேய்த்தான் சத்தியவேந்தன்.
“ஒண்ணும் இல்லை!… நீங்க ரெண்டு பேரும் நேரா அந்த ரவுடிப்பயல் கிட்டே போங்க… புன்னகையோட… “வாங்கண்ணே”ன்னு சொல்லுங்க… அப்புறம்… “நீங்கெல்லாம் சாப்பிட்டீங்களா?”ன்னு கேட்டுட்டு அவங்க கையைப் பிடிச்சு சாப்பிடக் கூட்டிட்டுப் போங்க” என்று ஆறுமுகம் சொல்ல,
“அய்யோ… நான் மாட்டேன் சாமி… மார்க்கெட்டுல அவன் அடிச்ச அடி இன்னும் வலிக்குது… மறுபடியுமா?” பயந்தான் முருகன்.
“டேய்… நான் சொல்றபடி செய்யுங்க… அப்புறம் நடக்கறதைப் பாருங்க” நம்பிக்கையை ஊட்டி அவர்களை அனுப்பினார் ஆறுமுகம்.
வானம் மழையைச் சற்று வலுப்படுத்திக் கொண்டது.
“அன்பு என்னும் அஹிம்சை மந்திரம்” எப்பேர்ப்பட்ட இரும்பு மனிதரையும் இளக வைத்து விடும் என்பது ஆறுமுகத்தின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை நன்னம்பிக்கையா?… இல்லை மூட நம்பிக்கையா?… என்பதை அறிந்து கொள்ள, வாட்ச்மேன் வடிவேலுவும், வேன் டிரைவர் டேவிட்டும் “திக்…திக்” இதயத்துடன் காத்திருந்தனர்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings