in , ,

கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 1) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“முத்து நகரம்” என்று செல்லமாக அழைக்கப்படும் தூத்துக்குடி.

ஊருக்கு வெளியே, சற்று மேடான பகுதியில், யாரோ ஒரு புண்ணியவான் உபயத்தில் எழுந்தருளியிருந்த அந்தக் கட்டிடம் “மாற்றுத் திறனாளிகள் மறு வாழ்வு இல்லம்” என்னும் போர்டுடன் கம்பீரமாய்..? நின்று கொண்டிருந்தது.

நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் அதற்குள் தங்கியிருந்தனர். சிலருக்கு கை,கால் ஊனம், சிலருக்கு பார்வைக் குறைபாடு, சிலருக்கு கூன் முதுகு.  எல்லோருமே ஏதோவொரு வகையில் தங்கள் குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்டு, சமூகத்தாரால் அவமதிக்கப்பட்டு, தெருவில் பிச்சைக்காரர்களாய்த் திரிந்து கொண்டிருந்தவர்கள். அவர்களை அழைத்து வந்து உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் கொடுத்து ஆதரவளித்து வந்தது அந்த இல்லம்.

       தங்களுக்குத் தெரிந்த தங்களால் இயன்ற சிறு சிறு தொழில்களைச் செய்ய அங்கே அவர்களுக்கு வசதியும் செய்து தரப்பட்டிருந்தது.  அதற்கான ஊதியமும் அளிக்கப்பட்டு வந்தது. அங்கே தயாரிக்கப்படும் ஊதுபத்திகளை பக்கத்து ஊர்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்தனர் கண் தெரியாத சிலர்.

       மகிழ்வான வாழ்க்கையை மன நிறைவோடு அவர்கள் வாழ்ந்து வந்த காலகட்டத்தில்தான் ஒரு மதிய வேளையில் அங்கே அந்த அமங்கல நிகழ்வு நடந்தேறியது.

       இல்லத்தின் மெயின் கேட்டருகே எதோ சலசலப்புக் கேட்க, எட்டிப் பார்த்தார் அலுவலக உதவியாளர் ஆறுமுகம்.  யாரோ சிலர் வாட்ச்மேனுடன் வாக்கு வாதம் செய்து கொண்டிருந்தனர்.  “யார் இவங்க?… எதுக்கு இங்க வந்து சத்தம் போட்டுக்கிட்டிருக்காங்க?” தனக்குள் கேட்டுக் கொண்டு கேட்டருகே சென்றார் ஆறுமுகம்.

       “என்ன வாட்ச்மேன்… யார் இவங்க?… என்ன பிரச்சினை?”

       “சார்… இவங்க இந்த ஊர் இளைஞர்கள் சார்!… கிடா வெட்டறாங்களாம்… அதுக்கு நன்கொடை வேணும்ன்னு கேட்க வந்திருக்காங்க சார்” வாட்ச்மேன் வடிவேல் சொல்ல,

       அந்த இளைஞர்கள் பக்கம் திரும்பிய ஆறுமுகம், “என்னப்பா… என்ன திடீர்னு கிடா வெட்டு?” கேட்டார்.

       “ம்.. ஊர்ல மழையே பெய்ய மாட்டேங்குது… அதுக்குத்தான் சாமிக்கு கிடா வெட்டறோம்” என்றான் பெரிதாய் மீசை வைத்திருந்த ஒருத்தன்.

       “நல்ல காரியம்தான்… ஆனா இங்க நன்கொடை கொடுக்கறதுக்கு அதிகாரம் எங்களுக்கில்லை!… நாங்களே சம்பளத்துக்கு வேலை பார்க்கற ஆளுங்க” என்றார் ஆறுமுகம்.

       “அந்தக் கதையெல்லாம் வேண்டாம்… இந்த ஊர் எல்லைக்குள்ளாரதான் உங்களோட இந்த  இல்லமும் இருக்கு… அப்ப நீங்களும் நன்கொடை கொடுத்தே ஆகணும்” பெரிய மீசை அதிகாரமாய்க் கேட்டது.

       “அப்ப ஒண்ணு செய்யுங்க… இந்த இல்லத்தை நடத்திட்டிருக்கற டிரஸ்ட்டோட ஆபீஸ்… சிட்டில இருக்கு அங்க போய்க் கேட்டுக்கங்க” என்று ஆறுமுகம் சொன்ன மாத்திரத்தில் பாய்ந்து வந்து அவன் சட்டையின் நெஞ்சுப் பகுதியைக் கொத்தாகப் பற்றிய அந்த பெரிய மீசை, “என்னடா எகத்தாளம் பேசறே?… உங்க கிட்ட நன்கொடை வாங்கறதுக்காக நான்… அங்கேயும் இங்கேயும் அலையணுமா?” கேட்டான்.

       அவன் பிடியிலிருந்து ஆறுமுகத்தை விலக்க வந்த வாட்ச்மேனை இன்னொருவன் இடுப்பில் எட்டி உதைக்க மல்லாக்க விழுந்தார் வாட்ச்மேன் வடிவேல்.

       வந்ததும் வராததுமாய் மீசையின் அருகே வந்து அவன் கையைப் பற்றி ஆறுமுகத்தை விடுவிக்க முயன்றார் இல்லத்தைச் சேர்ந்த கூன் முதுகுப் பெரியவர்.  “அடக் கூனப்பயலே… என் கிட்டேயே உன் வேலையைக் காட்டறியா?” என்று சொல்லி மீசை அந்தப் பெரியவரை வேகமாய்த் தள்ளி விட, குப்புற விழுந்தார் பெரியவர்.

        இதற்குள் சத்தம் கேட்டு இல்லத்தினுள்ளிருந்த மாற்றுத் திறனாளிகளில் சிலர் தட்டுத் தடுமாறி வெளியே வந்தனர். தங்களால் அந்த இளைஞர் கூட்டத்தை எதிர்க்கவோ… தாக்கவோ முடியாது என்பதை உணர்ந்து… கெஞ்ச ஆரம்பித்தனர்.  “அய்யா… அய்யா… அவரை ஒண்ணும் செய்யாதீங்கய்யா!…  அவர் பாவம்ய்யா…”

       ஆறுமுகமும் தன் பங்கிற்கு, “இங்க பாருங்கப்பா… இங்கே இருக்கற எல்லோருமே பரிதாப ஜீவன்கள் இவங்களால உங்களுக்கு நன்கொடையெல்லாம் கொடுக்க முடியாது!… ஏதோ யாரோ இரக்கப்பட்டு கொடுக்கற தர்மத்துல உயிரை வளர்த்துக்கிட்டிருக்காங்க!… அதனால… தயவு செய்து… இங்கிருந்து போயிடுங்க!… உங்களைக் கையெடுத்துக் கும்பிடறேன்” கெஞ்சினார்.

       முகத்தைச் சுளித்தபடி அந்த மாற்றுத் திறனாளிகளையெல்லாம் மேலிருந்து கீழ் வரை உற்றுப் பார்த்து விட்டு, “டேய் குமாரு… சொன்ன மாதிரி இதுகெல்லாம் பிச்சைக்கார கோஷ்டிடா… இதுக கிட்டேயிருந்து பத்துக்காசு கூடத் தேறாது… வாங்கடா போகலாம்” சொல்லியவாறே பெரிய மீசை நகர, அவனோடு வந்த அந்த ஏழு இளைஞர்களும் இவர்களை அருவருப்பாய் பார்த்து விட்டு நகர்ந்தனர்.

       அவர்கள் சென்ற பின் வாட்ச்மேனிடம் அங்கலாய்த்தார் ஆறுமுகம், “சாமிக்கு கிடா வெட்டறதுக்குன்னு கேட்டானுக… நம்ம கையிலிருந்தாவது அம்பதோ நூறோ குடுத்திருக்கலாம்”

       “அய்ய… நீங்க வேற?.. இவனுகெல்லாம் ஊருக்குள்ளார வேலை வெட்டிக்குப் போகாம… இந்த மாதிரிதான் “கோயில் வசூலு… கிடா வெட்டறோம்… கஞ்சி ஊத்தறோம்!”ன்னு சொல்லி ஊருக்குள்ளார அடாவடியா வசூல் பண்ணி… இவனுக தண்ணி ஊத்திக்கிட்டு… கிடாக்கறி தின்பானுக!… இவனுகளுக்கெல்லாம் குடுக்கவே கூடாது சாமி!… பார்த்தீங்கல்ல எவ்வளவு திமிரா உங்களை சட்டையைப் பிடிச்சு… என்னைக் கீழே தள்ளி… பாவம் அந்த பெரியவரையும் கீழே தள்ளி எத்தனை அக்கிரமம் பண்ணிட்டுப் போறானுகன்னு?” வாட்ச்மேன் வடிவேல் சொல்ல,

       மேலும் கீழும் தலையை ஆட்டிக் கொண்டே திரும்பிய ஆறுமுகம், போகிற போக்கில், “வாட்ச்மேன்… மகாபாரதத்துல ஒரு வசனம் வரும்!… “நீ எத்தனை பாவம் வேணும்னாலும் செஞ்சுக்கிட்டேயிரு!… ஆண்டவன் முதல்ல உன்னை ஒண்ணும் பண்ண மாட்டான்!… ஆனா நீ என்னிக்கு உன் ஆட்டத்தை நிறுத்திட்டு, “போதும்.. ஓய்வெடுப்போம்”ன்னு ஒதுங்கறியோ… அன்னிக்குத்தான் அவனோட ஆட்டத்தை ஆரம்பிப்பான்!… இவனுகளும் ஒரு நாள் ஓய்ஞ்சு போகத்தான் போறானுக… அன்னிக்குத்தான் ஆண்டவனும் ஆரம்பிக்கப் போறான்” சொல்லி விட்டுச் சென்றார்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    புது செருப்பு (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    உடல் பொருள் ஆவி (இறுதி அத்தியாயம்) – ஸ்ரீவித்யா பசுபதி