in , ,

கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 7) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அத்தியாயம் 1     அத்தியாயம் 2     அத்தியாயம் 3     அத்தியாயம் 4

அத்தியாயம் 5    அத்தியாயம் 6

வேன் டிரைவர் வேக வேகமாய் ஓடி வந்தார்.  “ஆறுமுகம் சார்!… ஆறுமுகம் சார்”

“என்ன டேவிட்?…. எதுக்கு இப்படிப் பதறியடிச்சிட்டு ஓடி வர்றே?” திகிலுடன் கேட்டார் ஆறுமுகம்.

“இந்தாங்க… என் மொபைல்ல டவர் கிடைக்குது… ஹெட் ஆபீஸுக்குப் பேசிப் பாருங்க”

வேகமாய் அதைப் பறித்து, “ஹலோ… ஹலோ” கத்தினார் ஆறுமுகம்.

எதிர்முனையில் செகரட்டரி நாராயணசாமி இருந்தார். “ம்… சொல்லுங்க ஆறுமுகம்!… அங்க நீங்கெல்லாம் எப்படியிருக்கீங்க?… ஒண்ணும் பிரச்சினையில்லையே?” அக்கறையோடு விசாரித்தார்.

“இங்க ஒண்ணும் பிரச்சினையில்லை சார்!… நம்ம இல்லம் இருப்பது சரியான மேட்டுப்பகுதி அதனால… நாங்க எல்லோரும் பாதுகாப்பா இருக்கோம்!… வந்து… நான் இப்ப எதுக்குக் கூப்பிட்டேன்னா…. இங்க நம்ம இல்லத்துக்கு நிறைய விருந்தாளிக வந்திருக்காங்க!” என்றார் ஆறுமுகம் சந்தோஷமாய்.

“என்னய்யா சொல்றீங்க?… திருடனுக அங்கேயும் பூந்துட்டானுகளா?” எதிர் முனையில் செகரட்டரி கோபமாய்க் கேட்க,

“சார்… நான் விருந்தாளிகள்ன்னு சொல்றேன்… நீங்க திருடனுகளா?ன்னு கேட்கறீங்க… உண்மையிலேயே இல்லத்துக்கு நிறைய கெஸ்ட்ங்க வந்திருக்காங்க சார்” என்ற ஆறுமுகம் விளக்கமாய்ச் சொல்லி முடித்ததும்,

“ஓ… அப்படியா?… எங்க கிராமத்துப் பக்கமெல்லாம்… வீட்டுக்குத் திருடனுக வந்திட்டாங்கன்னா… “விருந்தாளிக” வந்திட்டானுக!ன்னுதான் சொல்லுவாங்க… அதான் அப்படிக் கேட்டேன்..” என்றார் செகரட்டரி சிரித்துக் கொண்டே,

ஊருக்குள் வெள்ளம் புகுந்து, வீடுகளெல்லாம் மூழ்கி விட்ட காரணத்தால் அடைக்கலம் தேடி  அகதிகளாய் தங்கள் இல்லம் தேடி வந்த மக்களைப் பற்றி செகரட்டரியிடம் ஆறுமுகம் கூற, “அப்படியா?… தாராளமா அவங்களுக்கு அடைக்கலம் குடு ஆறுமுகம்…” என்றார் அவர்.

“சார் உங்க பர்மிஸன் கேட்காமலேயே… இங்க கிட்டத்தட்ட எழுபது பேருக்கும் மேலே அடைக்கலம் குடுத்திட்டேன்… அவங்களுக்காக உணவையும் சமைக்கச் சொல்லிட்டேன்!” என்றார் ஆறுமுகம்.

“ஓ… வெரி குட்!… வெரி குட்!… அப்புறம் இருக்கற நிலைமையைப் பார்க்கும் போது… இன்னும் கூட மக்கள் அங்க வருவாங்க!ன்னு தோணுது… அவங்களுக்கெல்லாம் சமைக்க பொருட்கள் இருக்கா?” செகரட்டரி கேட்டார்.

“சார்… உண்மையில் அதைக் கேட்கத்தான் சார் உங்களுக்கு போனே பண்ணினேன்!… மளிகைப் பொருட்கள், அப்புறம் பால்… தண்ணீர் பாட்டில்… படுக்க பாய்… போர்த்துக் கொள்ள போர்வை எல்லாமே வேணும் சார்!”

“டேண்ட் வொரி… நான் எப்படியாவது ஒரு வேனைப் பிடிச்சு… நீங்க கேட்டதையெல்லாம் அனுப்பி வைக்கறேன்… எல்லோரையும் நல்லா கவனியுங்க…. என்ன?” சொல்லி விட்டு போனை வைத்த செகரட்டரி எடுத்த அதிரடி நடவடிக்கையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் ஒரு ஹெலிகாப்டர் உதவிப் பொருட்களைச் சுமந்து கொண்டு அந்த மாற்றுத் திறனாளிகள் இல்லத்தின் மீது பறந்தது.

அதே நேரம், தனது கார் பட்டறை, அலுவலகம் எல்லாமே தண்ணீரில் மூழ்கிப் போயிருக்க, சகாக்களுடன் மொட்டை மாடியில் கலவரம் அப்பிய முகத்துடன் நின்று கொண்டிருந்தான் ரவுடி கோபி.

“அண்ணே… தெக்கான் ஏரி உடைஞ்சிடுச்சு போலிருக்கண்ணே… மொத்த தண்ணியும் ஊருக்குள்ளார புகுந்து மொத்த ஊரையும் மூழ்கடிச்சிடுச்சு… இப்ப என்னண்ணே பண்றது?”

யோசனையுடன் மேவாயைத் தேய்த்த கோபி, “ஆமாம்… ஜனங்கெல்லாம்… படகு ஏறி எங்கியோ போயிட்டிருக்காங்களே… எங்கே போறாங்க?” கேட்டான்.

“எங்கேண்ணே போவாங்க?… மேடான இடத்தைத் தேடிப் போறாங்க!… மொத்த தண்ணியும் வத்திப் போறதுக்கு எப்படி இன்னும் நாலஞ்சு நாளாயிடும்… அதுவரைக்கும் இந்த மக்கள் சாப்பாட்டுக்கு என்ன பண்ணப் போறாங்களோ?” அங்கலாய்த்தான் ஒரு அடியாள்.

அண்ணாந்து வானத்தைப் பார்த்த கோபி, “வானம் இன்னும் கருக்கலாய்த்தான் இருக்கு… காத்தும் வேற குளிர் காத்தாய் வீசுது!… எனக்கென்னமோ…. மழை இன்னமும் கொட்டுமோ?ன்னு பயமாயிருக்கு!… ஏற்கனவே ஏரி உடைஞ்ச தண்ணில ஊரே மிதக்குது… இதுல மழைத்தண்ணியும் சேர்ந்திடுச்சுன்னா… அவ்வளவுதான்… நாம் நிக்குற இந்த மொட்டை மாடியும் கூட தண்ணில மூழ்கிப் போயிடும்” என்றான்.

“அண்ணே… இப்ப என்ன பண்றதுண்ணே?” பயந்து போன அடியாள் கேட்க,

“வேற என்ன பண்ண முடியும்?… நாமும் ஒரு படகைப் பிடிச்சு ஏறிக்கிட்டு அவங்க எங்க போறாங்களோ… அங்க போக வேண்டியதுதான்” என்றான் ரவுடி கோபி.

அவர்கள் நின்று கொண்டிருந்த மொட்டை மாடிச் சுவற்றை ஒட்டி ஒரு படகு ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் சுமார் பத்துப் பதினைந்து பேரைச் சுமந்து கொண்டு செல்ல,  கை தட்டி அந்தப் படகை அழைத்தான் கோபி.

திரும்பிப் பார்த்த படகுக்காரன், “இருங்க… வர்றேன்” என்று சொல்லும் விதமாய்க் கை ஜடை செய்து விட்டு படகை அன்வர்கள் நிற்கும் அந்த மொட்டை மாடியை நோக்கித் திருப்ப முயல, “படகுக்காரரே… ஏற்கனவே இதுக்குள்ளார பத்துப் பேருக்கும் மேலே இருக்கோம்… இதே போதும் படகை நேரா விடுங்க” என்றான் ஒரு தாடிக்காரன்.

“பதினஞ்சு பேருக்கும் மேலே இது போலாம் சாமி”

“இங்க பாருங்க… நான் அதுக்காக சொல்லலை… அந்த மொட்டை மாடில நிக்குற அந்த கோபியும் அவனோட ஆளுங்களும் ரொம்ப ரொம்ப மோசமானவங்க… அவங்களை இந்தப் படகுல ஏத்துனீங்க… இங்க வந்தும் ஏதாச்சும் பிரச்சினை பண்ணுவானுக… அதனாலதான் வேண்டாம்!ங்கறேன்” என்றான் தாடி..

“தம்பி… அதே பயத்துலதான் நானும் சொல்றேன்… இப்ப இவனை ஏத்திக்காமப் போனேன்னா… அப்புறம் என்னிக்காச்சும் ஒரு நாள் என்னைத் தெருவுல வெச்சுப் பந்தாடிடுவான்… அதான் எதுக்கு வம்பு?… ஏத்தித் தொலைப்போம்” படகுக்காரன் ஏற்கனவே பதிக்கப்பட்டவன் போல் பேச, தாடிக்காரன் அமைதியானான்.

படகு மொட்டை மாடி அருகே வந்ததும், கோபியும் அவன் கைத்தடிகளும் ஏறிக் கொள்ள, படகு நகர்ந்தது.

“டேய் ராமு… சிகரெட் குடுடா” என்றபடி தன் தோழனைப் பார்த்து கோபி கை நீட்ட, அந்த ராமு சட்டைப்பையிலிருந்து சிகரெட்டை எடுத்து கோபியிடம் தர, வாங்கிக் கொண்ட கோபி, “லைட்டர் யாரு?… உங்கப்பன் வந்து தருவானா?” என்று கோபத்தோடு கேட்க, அவசரமாய் லைட்டர் நீட்டினான் ராமு.

புன்னகையோடு அதை வாயில் பொருத்தி அதன் நுனிக்கு நெருப்பு கிரீடத்தை கோபி அணிவிக்க, படகிலிருந்த பெண்கள் புகையின் நெடி தாங்காமல் முகம் சுளித்தனர்.

“ஏம்ப கோபி… பொம்பளைங்கெல்லாம் இருக்காங்கல்ல…. அந்த வெள்ளை பீடியை துக்கிப் போட்டுடலாமல்ல?” படகுக்காரன் கேட்க,

“எலேய்… என்னைப் பார்த்தாலே மூத்தரம் போற பயல் நீ என்னையே அதிகாரம் பண்றியா?” கோபி கத்தினான்.

படகுக்காரன் அமைதியானான்.

“ஆமாம்… எங்க எல்லோரையும் எங்கே கூட்டிட்டுப் போறே?” கோபி புகையோடு கேட்டான்.

“ம்… மேட்டுப் பகுதிக்கு”

“மேட்டுப் பகுதின்னா?”

“மேட்டுப் பகுதின்னா… அதோ அங்க தெரியுது பாரு சின்னக் குன்று மாதிரி… அந்தக் குன்றோட அடிவாரத்துல தெரியற கட்டிடத்துக்கு” படகுக்காரன் கையைக் காட்டிச் சொன்னான்.

திரும்பி தன் சகாக்களைப் பார்த்த கோபி, “அது… அந்த நொண்டிப் பசங்க… குருட்டுப் பசங்க தங்கியிருக்கற இல்லமாச்சே?… அங்கியா போகுது படகு?” கையிலிருந்த சிகரெட்டை தண்ணீருக்குள் வீசியபடி கேட்டான் கோபி.

 “ஆமாம்… அந்த இல்லத்துக்குத்தான் போறோம்”

 “எலேய்… நாங்கெல்லாம் என்ன ஊனப்பசங்களா?…. எங்களை எதுக்கு அங்க இட்டுட்டுப் போறே?” கோபியின் கையாள் கூவினான்.

 “இப்போதைக்கு வீடு வாசல் இழந்து… சொத்து சுகம் இழந்து… ஒதுங்க இடம் இல்லாம… திங்கச் சோறில்லாம… குடிக்கத் தண்ணியில்லாம இருக்கற நாம எல்லோருமே இப்ப ஊனங்கள்தான்”

 “அய்யய்யா… அந்த ஊனப் பசங்க இல்லத்துக்கு நாங்க வர முடியாது… எங்களை இறக்கி விடுப்பா” கோபி இறங்கத் தயாரானான்.

 “ம்… படகை நிறுத்தறேன் அப்படியே இறங்கிக்கங்க” என்றான் படகுக்காரன்.

 “இங்கேயா?… இங்க எப்படிப்பா இறங்கறது?”

 “தெரியுதல்ல?… அப்ப வாயை மூடிக்கிட்டு அமைதியாய் வாங்க” படகுக்காரன் சற்றும் அஞ்சாமல் சொன்னான்.

வேறு எந்த மார்க்கமும் இல்லாததால் கோபியும், அவன் சகாக்களும் அமைதியாய் நின்றனர்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மதி வதனா (பகுதி 7) – ராஜேஸ்வரி

    ரெயின் கோட் (சிறுகதை) – சுஶ்ரீ