in , ,

கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 2) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அத்தியாயம் 1

அடுத்த வாரத்தில் ஒரு நாள், பக்கத்து ஊர் பேருந்து நிலையத்தில் அமர்ந்து, எடை பார்க்கும் கருவி மூலம் பயணிகளுக்கு வெறும் ஒரு ரூபாயில் எடைப் பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தான் முருகன்.

பிறக்கும் போதே ஒரு கால் சூம்பிப் பிறந்தவன். ஒரு விபத்தில் தாய் தந்தை இருவரையும் ஒரு சேர இழந்தவனை உறவினர்கள் உதறித் தள்ளினர்.  அடைக்கலம் தந்தது “மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு இல்லம்”

தாய் தந்தையரை இழந்த பின், உடன் பிறந்தவர்கள் யாருமில்லாத காரணத்தால் தனி ஆளாய் அந்த வீட்டில் ஒற்றையாய்க் கிடந்த சிறுவனை வீட்டு ஓனர் விரைந்து வந்து வெளியில் தூக்கிப் போட்டார்.

“மூணு மாசமாச்சு இவனோட அப்பன் வாடகை குடுத்து!… ஹும் அவன் உசுரோட இருக்கும் போதே அப்படி… இப்ப அவனும் போய்ச் சேர்ந்திட்டான்… பொண்டாட்டியையும் கூடக் கூட்டிக்கிட்டுப் போயிட்டான்… இனி யாரு தருவா அந்த வாடகைப் பணத்தை?” தெருவில் நின்று வீட்டு ஓனர் கத்த, கதறினான் சிறுவன்.

தெருவே வேடிக்கைப் பார்த்தது.  யாருமே உதவிக்கு வரவில்லை. தாய் மாமன் தலை தெறிக்க ஓடினான்.  சித்தப்பா சிட்டாய்ப் பறந்து போனான்.  பெரியப்பா பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடினார்.

எங்கிருந்தோ வந்தாள் அந்தப் பெண்மணி.  கை, காலெல்லாம் நடுங்க, “மலங்க… மலங்க” விழித்துக் கொண்டு நின்ற சிறுவன் அருகில் வந்து, “பயப்படாதப்பா… நான் இருக்கேன்” என்று சொல்லி அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தாள்.

 “என்ன பொன்னம்மா… பையன் மேலே பாசத்தைப் பொழியறே?… என்ன விஷயம்?” வீட்டுக்காரன் நக்கலாய்க் கேட்க,

“த பாரு… நான் உன் கூட தர்க்கத்துக்கு வரலை… வீட்டுக்குள்ளார இருக்கற பையனோட துணிமணிகளை எடுக்க வழி விடு!… அதுகளை எடுத்துக்கிட்டு… பையனையும் என் கூட நான் கூட்டிக்கிட்டுப் போறேன்!… தனிமரமான எனக்கு இவனாவது துணையிருக்கட்டும்” அந்தப் பொன்னம்மா தைரியமாய்ப் பேசினாள்.

பொன்னம்மாவை மேலிருந்து கீழ் வரை பார்த்த வீட்டு ஓனர், “சரிதான்… புருஷனை இழந்து தனியா இருக்கற உனக்கு ஒரு துணை அவசியம்தான்…” என்று விகல்பமாய்ச் சொல்ல,

 “த்தூ…” என்று காறித் துப்பினாள் பொன்னம்மா.

 “ஏய்… என்ன… கொழுப்பு ஏறிப் போச்சா?… நான் யாரு தெரியுமா?” கோபமானான் வீட்டுக்காரன்.

அவனுடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்து அசிங்கப்பட விரும்பாத பொன்னம்மா பையன் பக்கம் திரும்பி, “நீ வாப்பா…. இவனெல்லாம் மனுஷ ரூபத்துல திரியற ராட்சஸன்… இவன் கூடப் பேசினா அது நமக்குத்தான் கேவலம்” சொல்லியபடி பையனை இழுத்துக் கொண்டு நடந்தாள்.  தன் சூம்பிப் போன காலை இழுத்துக் கொண்டு பரிதாபமாய் நடந்து சென்ற முருகனை ஊரே பார்த்து ரசித்தது.

சரியாக மூன்று மாதங்கள்தான் முருகனால் அந்தப் பெண்மணியுடன் வாழ முடிந்தது. காரணம்?… சிங்கப்பூரில் சமையல் வேலைக்காக எப்போதோ சொல்லி வைத்திருந்த அந்தப் பொன்னம்மாவிற்கு முருகன் அவளுடன் வந்து சேர்ந்த ராசியாலோ என்னவோ திடீரென்று அழைப்பு வந்தது.

ஆனாலும் அவள் முருகனை அவனுடைய உறவினர்கள் செய்தது போல் “அம்போ” என்று விட்டு விட்டுப் போகாமல், ஊருக்கு வெளியேயிருந்த அந்த மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டுத்தான் விமானம் ஏறினாள்.

 “என்ன தம்பி… வெயிட் மெஷினை வெச்சுக்கிட்டு கனவு காணுறியா?” குரல் கேட்டு பழைய சிந்தனையிலிருந்து விடுபட்ட முருகன், “ம்… இது மேலே ஏறி நில்லுங்க சார்” என்றான் அந்த மெஷினைக் காட்டி.

 அந்த நபரின் எடையை மெஷின் துல்லியமாகக் காட்ட, “பரவாயில்லையே… இந்த தடவை நல்லாவே எடை குறைஞ்சிருக்கேன்… அப்ப வாக்கிங் போனது சரிதான்” என்று சொல்லிக் கொண்டே முருகன் கையில் காசைத் திணித்து விட்டு நகர்ந்தான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு,  “டேய்ய்ய்… நீ அந்த ஊனமுற்றவர்கள் இல்லத்துல இருக்கற பையன் தானே?”

கர்ண கடூரக் குரல் உசுப்ப, அண்ணாந்து பார்த்தான் முருகன்.

“சொல்லுடா… நீ அங்க இருக்கறவன்தானே?”

நிதானமாய் மேலும், கீழும் தலையாட்டினான் சிறுவன்.

“அன்னிக்கு நாங்க கிடா வெட்டு வசூலுக்கு வந்தப்ப… தெனாவெட்டாப் பேசி எங்களைத் துரத்தி விட்ட கூட்டத்துல ஒருத்தன் தானே நீ?”

“இல்லை”யென்று குறுக்கே தலையாட்டினான் முருகன்.

“கோபி… பயல் பொய் சொல்லுறான்… நம்ம மேலே கல்லை விட்டெறிஞ்ச கூட்டத்துல இவனும் இருந்தான்” இன்னொருத்தன் சொல்ல,

குனிந்து முருகனின் சட்டைக் காலரைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினான் கோபி.  அந்த ஏரியாவில் கடந்த ஏழெட்டு வருடங்களாய்த் தன்னை ஒரு பெரிய ரவுடியாய் நிலை நாட்டிக் கொண்டிருப்பவன் அவன்.

சூப்பைக் காலோடு நிற்க முடியாமல் தள்ளாடிய முருகனை அப்படியே மல்லாக்கத் தள்ளி விட்டான்.  தரையில் விழுந்த முருகன் எழ முடியாமல் தத்தளிக்க, அவன் இடுப்பில் ஒரு உதை விழுந்தது.

 “அய்யோ” என்று கத்தினான் முருகன்.

அதற்குள் அந்த எடை மெஷினைக் கையிலெடுத்த இன்னொருவன் அதை தரையில் ஓங்கியடிக்க, அது இரண்டாய்ப் பிளந்தது.  பாய்ந்து வந்த வேறொருவன் தரையில் கிடந்த எடை மெஷினின் பாகங்களை பலங் கொண்ட மட்டும் காலால் மிதித்துத் தேய்க்க, அது சுக்கு நூறாய் நொறுங்கியது.

மெல்ல எழுந்து நின்ற முருகன், அவர்களைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட, “ஏண்டா சூம்பிப் போன காலை வெச்சுக்கிட்டு நீ இத்தனை திமிராய் இருக்கறப்போ… கையும் காலும் நல்லா இருக்கற எங்களுக்கு எத்தனை திமிர் இருக்கும்…?” சொல்லிக் கொண்டே முருகனின் கன்னத்தில் ஒரு பேயறையை இறக்கினான் கோபி.

கண்களில் பூச்சி பறக்க, மயங்கினான் அவன்.

“போதும்… போதும்… இதுக்கு மேலே அடிச்சா பயல் செத்தாலும் செத்திடுவான்… வாங்கடா போகலாம்” சொல்லியவாறே கோபி நடக்க, அவன் சகாக்கள் பின் தொடர்ந்தனர்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 9) – ரேவதி பாலாஜி

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 28) – இரஜகை நிலவன்