in

மறக்க முடியாத தீபாவளி (கீதா சாம்பசிவம்) – Deepawali Ninaivugal Contest Entry 2

மறக்க முடியாத தீபாவளி

சிறுவயது தீபாவளி

சின்ன வயசில் தீபாவளி சமயம் அநேகமாய் ஜுரம் வந்து படுத்திருப்பேன். ஆகவே ரொம்பச் சொல்ல ஒண்ணும் இல்லைனே சொல்லணும்.

ஆனால் அப்போதிருந்த உற்சாகம், பட்டாசு வெடிக்கும் ஆர்வம், இப்போதைய குழந்தைகளிடம் இல்லை.  ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் இருந்தாலும், அப்போதைய தீபாவளி நினைவுகள் நினைத்தாலே இனிக்கும் வகை தான்.

தீபாவளி ஜவுளி கலாட்டாக்கள்

தீபாவளி குறித்த பேச்சு எல்லாம் நவராத்திரிக்கே ஆரம்பிக்கும். எனக்குத் துணி எடுக்கும் முன்னர், அப்பா ஒரு முறை தெரிஞ்ச ஜவுளிக் கடைகளை எல்லாம் சுத்தி வருவார்

அந்த வருஷம் லேட்டஸ்ட் என்னனு தெரிஞ்சுப்பார். எல்லாத்துக்கும் மேலே, அதை வாங்கும் அளவுக்குப் பணம் வேணுமே, அதுக்காக மூணு மாதங்கள் முன்பிருந்தே தயார் பண்ணிப்பார்

தீபாவளிக்கு பக்ஷணங்கள் நிறையவே செய்வாங்க.  அதுக்காகவும் சாமான்கள் சேகரம் பண்ணப்படும்.

அண்ணாவுக்கும், தம்பிக்கும் அரை டிரவுசர் எனப்படும் உடையும், மேல் சட்டையும் துணி வாங்கித் தைக்கக் கொடுப்பாங்க.  அதிலே தான் அப்பா காமெடி பண்ணி இருப்பார்.

வளரும் பசங்கனு சொல்லி தையற்காரரிடம் அளவு எடுக்கிறச்சே தாராளமாத் தைங்கனு சொல்லிடுவார்.   அரை மீட்டர் துணி போதும்ங்கற இடத்திலே, ஒரு மீட்டர் வாங்கி இருப்பார்.  ஆகவே அது அண்ணா மாதிரி இரண்டு பையர்கள் போட்டுக்கிறாப் போல் இருக்கும். தம்பிக்கும் அப்படித் தான்.

இந்த தீபாவளிக்குத் தைச்ச டிரவுசரை, அவங்க அதுக்கப்புறமா இரண்டு வருஷம் கழிச்சுப் போட்டால் கூடப், பெரிசாத் தான் இருக்கும். அவங்க போட்டுக்கவே முடியாது

ஆனால் அப்பாவுக்கோ பிள்ளைங்க ரெண்டு பேரும் அசுர வளர்ச்சி என நினைச்சுப்பார். அடுத்த தீபாவளிக்கும் இதே கதை தொடரும். அண்ணாவுக்குத் தைச்சதெல்லாம் தம்பி வளர்ந்து போட்டுக்க ஆரம்பிச்சான்னா பாருங்களேன்.

பட்டாசு கலாட்டாக்கள்

அடுத்துப் பட்டாசு. அதுவும் குறிப்பிட்ட கடையிலே தான் வாங்குவார். எவ்வளவுக்குனு நினைக்கிறீங்க? இரண்டே ரூபாய்க்கு.

அதிலேயே லக்ஷ்மி வெடி, குருவிவெடி, சீனிச்சரம், ஓலைப் பட்டாசு, கொம்பு வாணம், புஸ் வாணம், ஏரோப்ளேன், அணுகுண்டு, பென்சில் மத்தாப்பு, சாட்டை, கம்பி மத்தாப்பு, தீப்பெட்டி மத்தாப்பு எல்லாமும் வரும்.

அதை நான்கு பாகமாய்ப் போடுவார் அப்பா.  நான் பெண் குழந்தை என்பதால், பட்டாசு எல்லாம் கிடையாதுனு சொல்லிப் பார்ப்பார்.  ஆனால் நான் விட மாட்டேனே! எனக்கும் வேணும்னு கேட்டு வாங்கி வைச்சுப்பேன்.

கடைசியிலே உடம்பாப் படுத்துப்பேனா, எல்லாத்தையும் அண்ணா, தம்பிக்குக் கொடுத்துடுனு அப்பா சொல்லுவார். கடைசியிலே அவங்களோடதையும் சேர்த்து அப்பாவே விட்டுடுவார்.

தீபாவளி பக்ஷணம்

தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னாடியே இருந்து, அம்மா பக்ஷணம் பண்ண ஆரம்பிப்பாங்க. மைசூர்ப்பாகு நிச்சயமா இருக்கும், அல்வா இருக்கும். மற்ற ஸ்வீட் அம்மாவுக்கு என்ன முடியுமோ அது.

மிக்சர் நிச்சயமா இருக்கும். அதுக்குப் பண்ணும் போதே, தேன்குழல், ஓமப்பொடினு பண்ணுவாங்க.  அப்புறமா உக்காரை நிச்சயமா இருக்கும். இது சிலர் அரிசியிலெ செய்யறாங்க. எங்க வீட்டிலே து.பருப்பு, க,பருப்பு வறுத்து ஊற வைச்சு அரைச்சுச் செய்வாங்க.

தீபாவளிக்கு எனக்கு உடம்பு சரியில்லாமல் போகும் சமயங்களில் எல்லாம் எல்லா பக்ஷணங்களும் கார்த்திகைக்குத் திரும்பப் பண்ண ஆரம்பிச்சது, கடைசியில் அது ஒரு வழக்கமாவே மாறிப் போச்சு! 😂

தீபாவளி நாள்

தீபாவளிக்குக் காலம்பர மூணரை மணிக்கே அம்மா எழுப்புவாங்க.  எழுந்துக்கத் தான் சோம்பலா இருக்கும். இந்த அம்மாவெல்லாம் தூங்கவே மாட்டாங்க போலனு நினைச்சுப்பேன்

முதல்லே நான் எழுந்து குளிச்சாத் தான், அப்புறமா அண்ணா, தம்பி எல்லாம் குளிக்கலாம்.  அந்த நேரத்துக்கே அம்மா குளிச்சிருக்கிறதைப் பார்த்தா ஆச்சரியமா இருக்கும்.

அமாவாசையும் சேர்ந்து வந்தால் அப்பா குளிச்சிருக்க மாட்டார்.  ஏன்னா, முதல்லெ ஒரு தரம் எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சுட்டா அப்புறமா அமாவாசைத் தர்ப்பணத்துக்கு மறுபடி குளிக்கணும். ஆகவே பண்டிகை தனித்து வந்தால் எண்ணெய்க் குளியல். எல்லாம் முடிஞ்சு மூணு பேரும் குளிச்சுட்டு வந்ததும், அப்பா தன் கையாலே துணி எடுத்து தருவார்

அதுக்குள்ளே அம்மா சாமிக்குக் கோலம் போட்டு விளக்கு ஏத்தி, பக்ஷணம், துணி, பட்டாசு எல்லாம் எடுத்து வைச்சிருப்பாங்க. அப்பா குளிச்சுட்டா நிவேதனம் பண்ணுவார். இல்லைனா அம்மாவை விட்டு செய்ய சொல்லுவார். எல்லாரும் புதுத் துணி உடுத்தி சந்தோஷமாப் பட்டாசு வெடிக்கப் போவோம்.

உறவுகள் விசிட்

அதுக்கு அப்புறமா உள்ளூரிலேயே இருக்கும் பெரியப்பா, பெரியம்மா வீடுகள், தாத்தா வீடு ஆகிய வீடுகளுக்குப் போயிட்டு அவங்ககிட்டெ எல்லாம் ஆசிர்வாதம் வாங்கிட்டு வருவோம். பணமோ, துணியோ, பக்ஷணம், பட்டாசு என்று அது கலெக்‌ஷன் தனி.

தலை தீபாவளி நினைவுகள்

கல்யாணம் ஆனதும் முதல் தீபாவளிக்கு மதுரைக்குப் போகணும். பெரியப்பா அப்போதைய திருவனந்தபுரம் விரைவு வண்டிக்குப் பயணச் சீட்டு முன் பதிவு செய்து அனுப்பி இருந்தார்

நான் தண்டையார்ப்பேட்டை அலுவலகத்திலிருந்து நேரே எழும்பூர் வந்திருந்தால் பயணம் எளிதாக இருந்திருக்கும். ஆனால் 3மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பி அம்பத்தூர் வந்து, அங்கே பெட்டி, படுக்கைகளைத் தயார் செய்து கொண்டு இருவரும் ஐந்தரை மணி போல் கிளம்பி விட்டோம்.

அன்னிக்குனு பார்த்து எழும்பூருக்கு இருந்த பேருந்து தாமதமாய்க் கிளம்பியதோடு அல்லாமல், கூட்டம் தாங்காமல் நின்று நின்று போனது. எங்கள் வண்டி மாலை ஏழேகால் மணிக்கு. ஆறே முக்கால் வரை அது பூந்தமல்லி ரோடு வரலை.

அதன் பின்னர் வந்தப்போ நாங்க எழும்பூர் ரயில்நிலைய வாயில் வரை போகும் வரை நிற்காமல், தினத்தந்தி அலுவலகத்தில் இறங்கிக் குறுக்கு வழியே ரயில் நிலையம் சென்றால், நாங்கள் உள்ளே நுழையவும் வண்டி கிளம்பவும் சரியாக இருந்தது.

ஓடிப் போய் ஏற நினைத்தால், அங்கே இருந்தவர்கள் தடுத்துவிட்டார்கள். அதன் பின்னர் அந்தக் கூட்டத்தில் நின்று, மதுரைக்குப் புதுசாகப் பயணச் சீட்டு பாண்டியன் விரைவு வண்டியில் வாங்கிக் கொண்டு, முன் பதிவு செய்யப்படாத பெட்டியில் போர்ட்டர் மூலம் இடம் பிடித்து இரவு முழுவதும் ஒடுங்கிக் கொண்டே பிரயாணம் செய்தோம்.

காலை திருவனந்தபுரம் விரைவு வண்டியில் எங்களை எதிர்பார்த்திருந்த என் பிறந்தகத்தினருக்குக் கவலை வந்து விட்டது. தம்பி மட்டும் ரயில் நிலையத்திலேயே காத்திருந்தான்.

நாங்கள் பாண்டியனில் போய் இறங்கியதும் தான் அவனுக்கும் உயிர் வந்ததுனு சொல்லலாம். இப்படியாக எங்கள் தலைதீபாவளி மறக்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது.

ஆனால் அப்போ ஆரம்பித்த முன்பதிவு செய்யாத பெட்டியில் ஒடுங்கிக் கொண்டு செய்த பயணம், பின்னாட்களில் வழக்கம் ஆனது ஒரு விந்தை!

புகுந்த வீட்டு  தீபாவளி

கல்யாணம் ஆனப்புறமா தீபாவளி என்பதும் கிட்டத்தட்ட ஒரு வாரம் முன்னரே பக்ஷணத் தொழிற்சாலை ஆரம்பிப்பதோடு ஆரம்பிக்கும்

நம்ம ரங்க்ஸுக்குக் குடும்பம் மொத்தத்துக்கும் துணி எடுக்க வேண்டி இருப்பதால் தீபாவளிக்கு இரண்டு மாசம் முன்னாலிருந்தே சிக்கன நடவடிக்கைகளை ஆரம்பிப்பார்.

பக்ஷணத் தொழிற்சாலைக்கு வேண்டிய சாமான்களை சேகரம் செய்வது என் பொறுப்பு.  அக்கம்பக்கம் அனைவரின் ரேஷன் கார்டுகளையும் வாங்கி தீபாவளிக்குப் போடும் சர்க்கரை (அப்போல்லாம் எக்ஸ்ட்ரா சர்க்கரை போடுவாங்க) வாங்கிச் சேகரம் செய்வேன்.

காலை எழுந்து வீட்டில் சமையல், டிபன் வேலை முடித்து ஒன்பது மணிக்கெல்லாம் ரேஷனுக்கும் போய் சாமான் வாங்கி வந்து, பின்னர் வீட்டுக்கு வந்து மாமியார், மாமனாருக்குச் சாப்பாடு போட்டு, நானும் சாப்பிட்டுவிட்டு மறுபடி என்னோட கலெக்‌ஷன் வேலைக்குக் கிளம்புவேன்.

அதை முடிச்சுட்டு இரண்டு மணிக்கு வருவேன்.  கொஞ்ச நேரம் ஓய்வு. படிப்பு. ஹிஹிஹி, அப்போப் படிச்சுட்டும் இருந்தோமுல்ல! :))))

அது முடிஞ்சதும் மாலை டிஃபன், காஃபி, இரவு உணவுக்கான ஏற்பாடுகள்.  என்னிடம் படிக்கும் குழந்தைங்க, என் குழந்தைங்க எல்லாருக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தல்னு இருக்கும்.

இதுக்கு நடுவிலே பக்ஷணமும் பண்ணி இருக்கேன்.  இப்போ??? நினைச்சாலே எப்படிச் செய்தோம்னு ஆச்சரியமாத் தான் இருக்கு.

விஜயதசமி அன்னிக்கு நாங்க ரெண்டு பேரும் போய் எல்லாருக்கும் துணி எடுப்போம். நான், எங்க பெண் தவிர்த்து மாமியார், 2 நாத்தனார்கள், (மூத்த நாத்தனாரால் வர முடியாது. மற்ற இருவர் வருவாங்க) எங்க பையர், மாமனார், கடைசி மைத்துனர், நம்ம ரங்க்ஸ் என எல்லோருக்கும் துணி எடுக்கணும்.

அநேகமாய் கோ ஆப்டெக்ஸ்; ஒரு மாறுதலுக்கு உள்ளூர் துணிக்கடையில் கடனுக்கு. எங்கே எடுத்தாலும் கடன் தொகை முடிவடைய ஒரு வருடம் வரை ஆயிடும். அதாவது  அடுத்த தீபாவளி வரை வரும் :)))), என்றாலும் தீபாவளி உற்சாகமாகவே இருந்தது.

தொலைக்காட்சி வந்தப்புறம் தீபாவளி சிறப்புப் படமும், சிறப்பு நாடகமும் பார்க்க வீட்டில் கூட்டம் தாங்காது. அவரவர் வீட்டு பக்ஷணப் பரிமாற்றங்களோடு பார்த்த நாட்கள் அவை

இந்நாள் தீபாவளி

இப்போதோ குழந்தைங்க ஒரு பக்கம், நாங்க ஒரு பக்கம்.  2011ஆம் வருஷம் மட்டும் எங்க பையர் வீட்டிலே யு.எஸ்ஸிலே கொண்டாடினோம்.  குழந்தைங்களோட இருக்கிற சந்தோஷம் இருந்தாலும் இந்தியாவிலே பண்டிகை கொண்டாடிய சந்தோஷம் என்னமோ வரலை.

இப்போ நவராத்திரி என்றால் கூட கொலு வைச்சுட்டு நான் மட்டுமே தன்னந்தனியா உட்கார்ந்திருக்கிறாப்போல் இருக்கு.  அதுவும் சென்னையில் யாருமே வர மாட்டாங்க. ஸ்ரீரங்கத்தில் பண்டிகை கொஞ்சம் பரவாயில்லைனு தோணுது.

இருந்தாலும் பக்ஷணத் தொழிற்சாலை மாதிரி பக்ஷணங்கள், புடைவைக் கடை போலப் புடைவைகள் என வாங்கிக் கொண்டாடிய காலம் எல்லாம் போய், இப்போ நாம் இருவர், நமக்கு நாம் இருவர் மட்டுமேனு தீபாவளி கொண்டாடிட்டு இருக்கோம்.

காலம் மாறியது என்பதோடு அல்லாமல், உறவுகள் ஒரு இடம் நாம் ஒரு இடம் என்றெல்லாம் ஆகும்னு நினைச்சுப் பார்க்கவில்லை. இதையும் ஏற்று கொண்டு வாழப் பழகியாச்சு.

எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துகள்

சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇

ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி

சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇

Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. கீதா மாமியின் தீபாவளி நினைவுகள், கூட உட்கார்ந்து கதை கேட்டாப் போல இருக்கு.. அந்த காலத்திற்கும் இப்போதைய சூழலுக்கும் உள்ள நிதர்சனம் கண்முன்னே காட்சியாக தெரிகிறது..

  2. போன வருஷம் அம்பேரிக்காவில் குழந்தைகளோடு தீபாவளி. காலம்பர பிள்ளை வீட்டில் எண்ணெய் தேய்த்துக் குளித்துச் சாப்பிட்டுவிட்டுப் பின்னர் மத்தியானமாப் பெண் வீட்டிற்குப் போனோம். இப்படி இருவர் வீட்டிலும் கொண்டாடினோம். இந்த வருஷம் அந்த நினைவுகள் மட்டுமே மனதில்.

பால்கோவா (திரட்டுப்பால்) சியாமளா வெங்கட்ராமன் – Deepawali Recipe Contest Entry 4

சீனிப் பணியாரம் (பா.ரேஷ்மா) – Deepawali Recipe Contest Entry 5