in

உனை காணவில்லையே (கவிதை) – ராஜேஸ்வரி

பலவருடம் திறக்காத 

ஜன்னலை

திறந்தேன் ஒரு நாள்

காத்திருந்த தென்றல்

பாய்ந்தது என் மேல்

படர்ந்தது என் முகமெங்கும்

காதோரம் சில்லென்று

குறுகுறுத்தது தன் மெல்லிய 

குரலால்….

சுற்றிச் சுழலும் 

என்னுடன் மெய்கோர்த்து 

ஆடைகள் விசிறடிக்க

அகமகிழ்ந்து பயணிப்பாயே நேரமறியாமல்

இத்தனை காலம்

உனை காணவில்லையே ?!…

என்று கேட்டது

 

சன்னலோரம் மெதுவாக

அமர்ந்து தென்றல் தோழி

மூடிய கண்களைத் திறந்தேன். 

வெளிர்நிற நீல வானில்

மெதுவாய் தவழ்ந்திருந்த

குழந்தை மேகங்கள்

கூட்டமாய் எனைப் பார்த்து

வெட்ட வெளியில் ஓடிவந்து 

அண்ணார்ந்த பார்வையால்

அதிசயமாய் பார்த்தபடி

அன்னநடை நடந்து 

வான வீதியில் எங்களுடன் கைக்கோர்த்து மிதந்து

வரும் அனுபவம் கொண்டு

ஆர்ப்பரித்துச் சிரிப்பாயே!..

பல வருட காலம்

உனை காணவில்லையே …?!

என்று கேட்டது.

 

நினைவுகளில் ஆழ்ந்து

நேரம் கடந்தது…

ஒளி குறைந்த இருள்வெளியில்

கருநீல ஆடை மாற்றிய வானில் 

முத்துக்களாக ஒளிர்ந்த

விண்மீன்கள் எனைப் பார்த்து

ஆச்சரிய புன்னகையுடன்

எண்ணிலடங்கா எங்களை

எண்ண முடியாமல் தோற்று எத்தனை இரவுகள் 

இன்பமான நினைவால்

கட்டிக் கொண்டு 

உற்சாக உறக்கம் கொள்வாயே!

எத்தனை இரவுகளாயிற்று 

உனை காணவில்லையே…!?

என்று கேட்டது.

 

நட்சத்திர பிரஜைகளின்

ராணியாக வலம் வந்த

முழு வட்ட பொன் நிலவு 

என் முகம் கண்டு நின்று

என் பிறை முகத்தையும்

முறை தவறாமல் ஒவ்வொரு

இடமாக மாறி மாறி நின்று

தலை சாய்த்து சாய்த்து 

பார்வையால் எனதழகை 

பிரமிப்பாயே…

என் முழு முக நாளிலும்

இருளில் ஓவியமாக 

தென்னங்கீற்றுகளை

திரையாக்கி அழகு செய்து

மகிழ்வாயே….

பல பௌர்ணமிகளில்

உனை காணவில்லையே…?!

என்று கேட்டது.

 

நான் மௌனமாய் பதிலுரைத்தேன் …

எனக்கு திருமணமாகி விட்டது.

என் பதின்ம வயது புகைப்படத்தைப் பார்த்து

நான் கேட்டேன்…

உனை காணவில்லையே..!?

*************              

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஊமச்சி குலதெய்வம் (சிறுகதை) – பூங்குழலி.S, வடசேரி, தஞ்சாவூர்

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 15) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை