in ,

என்று தணியும் இந்த…? (சிறுகதை) – ✍ தாழை. இரா. உதயநேசன், அமெரிக்கா

என்று தணியும் இந்த...?
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 32)

“எம்மோவ்… நா போயிட்டு வாரேன். நேரமாயிடுச்சு, மேஸ்திரி  திட்டுவாரு..” நளினி வேலைக்குப் புறப்பட்டாள்

“ஏன்டி  நளினி.. ஞாயித்துக்கிழமை லீவுதானடி…” அப்பாவைப் பெற்ற பாட்டியின் குரல் ஒலித்தது. அது எப்போதும் அதிகாரத் தோரணையாகவே இருக்கும்.

“இல்ல பாட்டி.. அர்ஜண்டா ஆர்டர் வந்துருக்காம். அதனால வரச் சொல்லிட்டாங்க..” பதிலளித்தாள் நளினி.

“டிபன்ல கஞ்சியும் டப்பால வெங்காயமும் வச்சிருக்கேன். மறக்காம எடுத்துட்டுப் போ..” அம்மாவின் குரல் பொழக்கடையிலிருந்து ஒலித்தது.

“சரிம்மா. வரேன்… கமலம் கூட வந்துட்டா.” மதிய சாப்பாட்டை எடுத்துக் கொண்டு, உடன் வேலை செய்யும் கமலத்துடன் புறப்பட்டாள் நளினி.

சிவகாசியில் பட்டாசுத் தொழில் சிறப்பு என்றால் குடியாத்தத்தில் தீப்பெட்டித் தொழிற்சாலை வெகு சிறப்பு. சுற்றுவட்டாரத்தில் பெரும்பாலான மக்கள் இந்த வேலை தான் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிரசித்திப் பெற்ற மான்மார்க் தீப்பெட்டித் தொழிற்சாலை.

பெரிய பெரிய ஷெட்டில் தீக்குச்சி அடுக்குகிறவர்கள், சிறுசிறு அறைகளில் அதற்கு மருந்துப் பூசுகிறவர்கள் என  வெவ்வேறு அறைகளில் அந்த வேலைகள் சிறப்பாக நடைபெற்று வந்தது.

நளினி, கமலம் உட்பட இன்னும் அறுபதிற்கும் மேற்பட்டவர்கள் காலி தடுக்குகளைப் பெற்று, அதில் மரக்குச்சிகளை அடுக்கி கொடுப்பார்கள். ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு அடுக்குவார்கள். அதன் பின்னர் அதிலே மருந்துப்  பூசி காய வைத்து, மாலைக்குள் பிரித்து தீப்பெட்டியில் அடைத்து விடுவார்கள். சூரியன் வரவில்லையென்றால் அது காய்வதற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகி விடும்.

நளினி தடுக்கு அடுக்குவாள். அதே நேரத்தில் அதில் மருந்துப்  பூசும் வேலையும் அவளுக்கு நன்றாகத் தெரியும். அதனால், அவளுக்குக் கூலி அதிகமாக வரும். காலையில் எட்டு மணியளவில்  வேலைக்குச் சென்றால், வீடு திரும்புவதற்கு இரவு எட்டு மணிக்கூட ஆகிவிடும்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. மிகவும் அனுபவம் வாய்ந்த இருபது பேரை மட்டும் தொழிற்சாலைக்கு வரவழைத்து  அவசர ஆர்டர் வேலைகளைச் செய்ய வைத்தார்கள்.

இரவு 9 மணி.

நளினி இன்னும் வீட்டிற்கு வரவில்லை. அவளின் அம்மா பார்வதி தனது கணவன் குமரேசனைத் துரிதப்படுத்தினாள்.

“ஏங்க… போய் மூத்தவள பாத்துட்டு வாங்க. இவ்வளோ நேரமாச்சு. இன்னும் வரல…” பார்வதி அங்கலாய்க்க, கூடவே பாட்டியும் சேர்ந்துக் கொண்டாள்.

“டேய்… குமரேசா.. போடா. போய் ஒரு எட்டுப் பாத்துட்டு வா.. ஞாயித்துக்கிழமையில வேலைக்குப் போக வேணாமுன்னு சொன்னா அவ கேக்குறாளா” பாட்டியின் குரலில் கவலைத் தெரிந்தது.

“ஏய் பார்வதி. மேல் சட்டையக் கொண்டு வா. முதல்ல கமலத்துக்கிட்ட விசாரிச்சுட்டு வந்துடுறேன். ரெண்டு பேரும் ஒன்னா தான போனாங்க…. அப்பறம் ஏன் நளினி மட்டும் இன்னும் வரல..?” மேல் சட்டையைப் போட்டவாறு கமலத்தின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார் குமரேசன்.  

சற்று தூரம் நடந்தவர் மீண்டும் குடிசைக்கு வந்து, “ஏய் பார்வதி அந்த யூரியாப் பையக் கொடு. மழை வர்ற மாதிரி இருக்கு.. மண்வாசனை வருது..” பார்வதி யூரியாப் பையைக் கொடுக்க, அதை வாங்கித் தலை மீதுப் போட்டுக் கொண்டுப்  புறப்பட்டார் குமரேசன்.

மழைத் தூறல் ஆரம்பித்திருந்தது. தெருவும் அடங்கியிருந்தது. அந்தக் கிராமத்தில் இருந்த சில ஓட்டு வீடுகளிலும் கார வீடுகளிலும் மின்சார விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது.

பல வீடுகள் தென்னங்கீற்றுகளால் ஆனது. ஆங்காங்கே ஓரிரு மச்சு வீடுகளைப் பார்க்க முடியும். குமரேசன் சுற்றும் மற்றும் பார்த்துக் கொண்டே சென்றார்.  

திடீரென மின்னல்… பெரிய இடியுடன் வந்துப் போனது. குமரேசனுக்கு திக் திக் என அடித்துக் கொண்டது.

அங்கே தெருவோரம்,  பீடியைப் பற்ற வைத்து புகையைத் தெருவில் விட்டுக் கொண்டு நின்றிருந்தான் சுப்ரமணி.

“டேய் குமரேசா.. என்னடா இந்த நேரத்துல.. மழை வரும் போல இருக்குது. இடி இடிச்சுக்கிட்டு இருக்குற நேரத்துல எங்கடா போற?” குரல் கொடுத்தான் சுப்ரமணி.

“அது மாமோய்… நம்ம நளினி வேலைக்குப் போச்சி… இன்னும் வரல. அதான் கமலம் வீடு வரைக்கும் போய் ஒரு எட்டு பாத்துட்டு வரலாமுன்னு..” நடந்துகொண்டே பதில் சொன்னார் குமரேசன்.  

“சரி… சரி… மழைக்கு முன்னாடி பாத்துட்டு சீக்கிரம் போ…. மழை நெறையா வர்ற மாதிரி இருக்கு” சுப்ரமணி சத்தமாகச் சொன்னான்.

“சரி மாமோய்…” என்று பதிலளித்துவிட்டு, வேகமாக நடந்தார் குமரேசன்.

சட…சட.. என மழை கனமாகக் கொட்ட ஆரம்பித்தது. “இன்னும் பத்துவீடு தாண்டிப் போனா கமலம் வீடு வந்துடும்… ச்சே.. அதுக்குள்ளே காத்தும் மழையும் இப்புடி சோ…னு வந்துடுச்சே…” என்று சொல்லிக் கொண்டே பக்கத்திலிருந்த   மாரியப்பன் வீட்டின் திண்ணை மீது ஏறி நின்றுக் கொண்டார் குமரேசன்.

முழங்கால் வரைக்கும் நன்றாக நனைந்து விட்டது. மழை வேகமாகப் பெய்தது. . அரைமணிநேரம் அங்கேயே நின்றார். மழைநீரும் கழிவுநீரும் ஒன்றாகச் சேர்ந்து தெருவில் ஓடிக் கொண்டிருந்தது.

துர்நாற்றத்தில் குமரேசனுக்கு குமட்டிக் கொண்டு வந்தது. அதை விட, மகளைப் பற்றிய கவலையும் அதிகமானது. ஆகவே, லுங்கியைத் தொடை வரைக்கும் ஏற்றிக் கட்டிக் கொண்டு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.

தலையில் இருந்த யூரியா பையைச் சரி செய்தபடியே கமலம் வீட்டிற்கு வந்துச் சேர்ந்தார்.  

கமலம் வீட்டுக் கதவு மூடப்பட்டிருந்தது.

“கமலம்.. அம்மா கமலம்… நளினி அப்பா வந்துருக்கேன்மா..” குரல் கொடுத்தார் குமரேசன்.  

ஓட்டு வீட்டில் மின்சார விளக்கு போடப்பட்டது. கமலமும் அவளுடைய பெற்றோரும் வந்து கதவைத் திறந்தார்கள்.

“என்னடா குமரேசா.. கொட்டுற மழையில வந்துருக்க..?” கமலம் அப்பா கேட்டார்.

“அது மாமா… நளினி இன்னும் வீடு திரும்பல… ஓவர் டைம் வேலையேதும் பாக்குறாளா என்னானு கமலத்துக்கிட்ட கேட்டுக்கிட்டுப் போகலாமுன்னு வந்தேன்..” குமரேசன் குரலில் படபடப்புத் தெரிந்தது.

“மாமா… நா ஆறு மணிக்கே வந்துட்டேன். நளினிக்கு எட்டு மணி வரைக்கும் மருந்துப் போடுற குடோனுல வேலையிருக்குனு மேஸ்திரி ராமு சொன்னாரு. அஞ்சு பேரு மட்டும் போதுமுன்னு சொல்லிட்டாங்க மாமா. ஆனா  இப்போ மணி பத்து ஆயிடுச்சே… இன்னுமா வரல…?” கவலைத் தோய்ந்தக் குரலில் கேட்டாள் கமலம்.

குமரேசனுக்குக் கவலைத் தொற்றிக் கொண்டது.

“சரிம்மா… என்னானு தெரியல.. தீப்பெட்டி கம்பெனி வரை போய் பாத்துட்டு வந்துடுறேன்…” குமரேசன் பதைபதைப்போடு புறப்பட்டார்.

“குமரேசா.. இரு… நானும் வரேன்..” கமலத்தின் அப்பாவும் குமரேசனோடுக் கிளம்பினார்.

மழை நின்றிருந்தது. ஆங்காங்கே மழைநீர் தேங்கியிருந்தது. தவளைகளின் உர்.. உர்… சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது.

“ஏன்டா… குமரேசா.. நளினிக்கு கலியாணம் பண்ணிடக் கூடாதா..? 23 வயசாயிடுச்சுல… உங்க அக்கா பையனுக்கு கேட்டாங்க  தான..?”  பேசிக் கொண்டே சென்றார்கள்.

“ஆமா மாமா… வர்ற தை மாசம் முடிச்சுடலாமுன்னு பாக்குறேன்.  மாப்பிள்ள மிலிட்டரில இருக்குறாரு.  அப்போ தான் லீவுல வர்றாராம்… அவருக்காகத் தான் மாமா காத்துக்கிட்டு இருக்கிறோம்..”

இருவரும் பேசிக் கொண்டே நடக்க,   மான் தீப்பெட்டி தொழிற்சாலையும்   வந்தது.

தொழிற்சாலை வெளியே ஒரே கூட்டம். போலீஸ், கட்சிக்காரர்களின் கரை வேட்டிகள் என கம்பெனி பரபரத்துக் கொண்டிருந்தது.

நெஞ்சு படபடக்க குமரேசனும் அவனது மாமாவும் போய் சேர்ந்தார்கள். காவல் துறை ஜீப்பில் இருந்த அதிகாரியிடம் மான் தீப்பெட்டி தொழிற்சாலை முதலாளி கனிவாக பேசிக் கொண்டிருந்தார். கம்பெனியிலிருந்த சிலர் காவல் ஆய்வாளரிடம் காதில்  கிசுகிசுக்க… குமரேசனை அழைத்தார் காவல் ஆய்வாளர்.

“ஐயா.. நீங்க தான் நளினியோட அப்பாவா..?”

“ஆமாங்க ஐயா… என் மக இன்னும் வீட்டுக்கு வரல… அவளைத்  தேடிக்கிட்டு வந்தேன்.. ஐயா.”

“உங்க பேரென்ன..?”

“குமரேசனுங்க ஐயா… என்னோட மக..?”

“இது யாரு உங்கக் கூட..?” போலீசாரின் விசாரணைத் தொடங்கியது.

“எங்க மாமா தான். இவங்கப் பொண்ணு கமலம் கூட இங்க தான் வேலப் பாக்குது. அது சாய்ந்தரமே வந்துருச்சு. நளினி தான் வரல. அதனால தான் தேடிக்கிட்டு  வந்தோம்ய்யா..” குமரேசனின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்க குரல் கம்மியது.

“அது குமரேசா.. மருந்துப் போடும் போது குச்சி உரசி.. தீப்புடிச்சுடுச்சு…. இப்போ உங்க பொண்ணு நளினி அரசாங்க ஆஸ்பத்திரில இருக்கு.. அதப் பத்தி தான் விசாரிச்சுக்கிட்டு இருக்கோம்.. நீ போய் உம் மகள ஆஸ்பத்திரியிலப் பாரு… நா வந்துடுறேன்..” காவல் ஆய்வாளர் நெல்சன் பதட்டமில்லாமல் பேசினார்.

“அய்யோ.. என் மகளே… அய்யோ.. அய்யோ” என வாயிலும் வயிற்றிலும் அடிச்சு கத்தி கதறினார் குமரேசன். கூட வந்த அவரது மாமாவும் அங்கிருந்தவர்களும் அவரைச் சமாதானப்படுத்தினார்கள்.

ஆய்வாளர் கட்டளையை ஏற்று, காவலர் ஒருவர் குமரேசனையும் அவனது மாமாவையும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார்.

ஆய்வாளர் நெல்சன் விசாரணைக்காக ஏ.சி.அறையில் மான்மார்க் தீப்பெட்டி முதாலாளியுடன் பேச்சு நடத்திக் கொண்டிருந்தார்.

“தீப்பெட்டி குடோனில் பெரிய அளவில் தீப்பற்றவில்லை. ஒரு சிறிய அறையில் ஒரு மூன்று டஜன் தீப்பெட்டி பண்டல்கள் மட்டும் எரிந்து சாம்பலாகிக் கிடந்தன. எனவே, நளினியின் தீக்காயங்களுக்கான காரணம் கண் கூடாகவே தெரிந்தது. அதை சரிக்க ட்டத்தான் ஏ.சி. அறையில் பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அரசு மருத்துவமனையில் காவலர் வாகனம் நின்றது. தீக்காயங்களுக்கானச் சிகிச்சைப் பிரிவில் நளினியின் உடல் முழுதும் கூண்டு போன்ற வடிவிலான துணிகளால் மூடப்பட்டிருந்தது. கழுத்திற்கு மேல் முகம் மட்டும் தெரிந்தது.

குமரேசனின் மாமாவை வெளியிலேயே நிறுத்தி விட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான விசேட உடைகளை அணிவித்து நளினியின் தகப்பனாரை உள்ளே அழைத்துச் சென்றார்கள் மருத்துவக் குழுவினர்.

நளினியின் முகத்தில் தீக்காயங்கள் ஏதுமில்லை. கண்கள் மூடியிருந்தாள். கழுத்திற்கு கீழ் அறுபது சதவீதத்திற்கும் மேற்பட்ட தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தது. உடல் உறுப்புகள் பெருமளவில் சேதமடைந்திருந்தன.

அந்த அறைக்குள் சென்றதுமே குமரேசனுக்கு குமட்டல் ஏற்பட்டது. உடல் கருகியதால் ஒருவிதமான துர்நாற்றம் வீசியது. துண்டால் வாயையும் மூக்கையும் மூடிக் கொண்டு அருகில் சென்றார் குமரேசன்.

“அம்மாடி.. என்னப் பெத்தவளே.. இப்படியா ஒன்னப் பாக்கணும்…?” ஓவென அழுது விட்டார் குமரேசன்.

குமரேசனின் மாமா அங்கிருந்து வேகமாக வீட்டிற்கு கிளம்பினார். அந்த இரவு நேரத்தில் பாழாய்ப் போன மின்சாரம் வேறு தடைபட்டு வீதியெங்கும் கடும் இருளாகக் காட்சியளித்தது. மழை நீர் தேங்கியிருந்தப் பகுதிகளில் மிகவும் கவனமாக நடந்து ஊருக்குள் வந்தார்.

குமரேசனின் வீட்டுத் திண்ணையிலும் வீட்டிற்கு முன்னாடியும் அதிகமான ஆட்கள் நிற்பது, அவ்வப்போது வந்துச் செல்கின்ற மின்னலின் வெளிச்சத்தில் தெரிந்தது.

நளினியின் வீட்டை நெருங்கியதும், அழுதுக் கொண்டிருந்த பார்வதி, “அண்ணா… நளினிய பாத்தீங்களா… அவ நல்லாருக்காளா… ஊருல பசங்க வந்துச் சொன்னாங்க… குடோன்ல தீப்புடிச்சுடுச்சாம்…. நளினிய ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்களாம்… எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல… அண்ணா..” ஓவென அழுதுப் புலம்பினாள் பார்வதி.

“நா பெத்த மவராசி… நளினி… நளினி… ஓ நளினி…” பாட்டிக்கு மூச்சடைத்தது.. சத்தம் போட்டுக் கொண்டே கீழே சாய்ந்தாள்.

“அட ஏம்பா… பொம்பளைங்க.. கொஞ்சம் வெலகி நில்லுங்க… காத்து வரட்டும். பாட்டிக்குத் தண்ணி கொடுங்க….” குமரேசனின் மாமா நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.

பாட்டியின் முகத்தில் தண்ணீர் தெளித்ததும்… பாட்டி முனகிக் கொண்டே இருந்தாள்.

“நான் நளினியை பாக்கணும்… கூட்டிட்டுப் போங்க. எம் பொறப்பு… எம் பொறப்பு… ஓ…. எம் பொறப்பு… நளினி…” பாட்டி ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள்.

அங்கிருந்தப் பொம்பளைங்க பாட்டியைப் பார்த்து சத்தம் போட்டனர்.

“ஏ பாட்டி… ஒப்பாரி வைக்கிற… சும்மா இரு… நளினிக்கு ஒன்னும் ஆகாது..” கமலத்தின் அம்மா ஆறுதல் கூறினாள்.

“ஏம்ப்பா முருகேசா… ராத்திரியாச்சு.. கவர்மெண்ட்டு ஆஸ்பத்திரிக்குப் போகணும்.. சத்த போய் இஸ்மாயில்கிட்ட நா சொன்னேன்னு சொல்லி… குதிரை வண்டியப் பூட்டி வரச் சொல்லு…. ஒரு எட்டு ஆஸ்பத்திரிக்குப் பார்வதி, பாட்டி எல்லாரையும் கூட்டிட்டுப் போயிட்டு வரலாம்” குமரேசனின் மாமா கட்டளையிட்டுக் கொண்டிருந்தார்.

அரைமணி நேரத்தில் இஸ்மாயிலின் ஜட்கா வண்டி வந்தது.

“பாய் ரொம்ப நன்றி வந்ததுக்கு” சுப்ரமணியின் குரல் சோகமாய் ஒலித்தது.

“இருக்கட்டும் சுப்ரமணி… ஆபத்துக்கு ஒதவுறது நல்லது” இஸ்மாயில் பாய் சொன்னார்

குதிரை வண்டியில் பார்வதி, பாட்டி, கமலத்தின் அம்மா ஏறிக் கொள்ள, மேலும் சில உறவுக்காரப் பெண்களும் ஏறிக் கொண்டனர்.

இஸ்மாயில் பாய், “போடா அமிதாப்… போ… போ… சல்லோ… சல்லோ…” எனக் கூறியதும், டிங்.. டிங்.. மணியோசை எழுப்பிக் கொண்டே குதிரை வண்டி பறந்தது.

மூன்று கிலோ மீட்டர் தூரத்திலிருந்து அரசு மருத்துவமனைக்குப் போய்ச் சேர்ந்தது. குதிரை வண்டிப் பின்னாடியே குமரேசனின் மாமாவும் இன்னும் சிலரும் டி.வி.எஸ்.50-ல் வந்து சேர்ந்தனர்.

வண்டியை விட்டு இறங்கியதும் ஓடிச் சென்று, அரைத்தூக்கத்திலிருந்த ஆஸ்பத்திரி ஊழியரிடம் விபரம் கேட்டு, அங்கே தனியாக ஒதுக்குப்புறத்திலிருந்த வார்டுக்குச் சென்றார்கள்.

அது தீப்பற்றியவர்களுக்கான வார்டு. அதை நெருங்க நெருங்க குமட்டல் வந்ததையும் பொறுத்துக் கொண்டு, அங்கிருந்தவர்களிடம் நளினியை வைத்திருக்கும் இடத்தைக் கேட்டுக் கொண்டு  வந்தார்கள்.

அங்கிருந்த நர்சும் அட்டண்டரும் இவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. மீண்டும் ஓவென பாட்டியும் பார்வதியும் அழ ஆரம்பித்தனர். அந்த இரவு நேரத்தில் அவர்களின் கூக்குரல் எல்லாப்பக்கத்திலும் எதிரொலித்தது. இந்தச் சத்தத்தைக் கேட்ட மருத்துவர் எழிலன், அவர்களருகே வந்து அவர்களை சமாதானப்படுத்தினார்.

“நீங்க மட்டும் வாங்க..” என நளினியின் அம்மாவை மட்டும் அழைத்துச் சென்றார். நளினிக்கு தீவிர சிகிச்சை உபகரணங்கள் பொருத்தியிருப்பதால் பார்த்து விட்டு மட்டும் வரவேண்டுமெனக் கூறினார்.

பாட்டியும் வரேன் என்று அடம் பிடித்தாள். ஆனால், வயது காரணமாக மருத்துவர் அங்கேயே உட்கார வைத்து விட்டு,  பார்வதியை மட்டும் கூட்டிச் சென்றார்.

அங்கே குமரேசன் சன்னல் ஓரமாக நின்று அழுது கொண்டிருந்தார். பார்வதியைப் பார்த்ததும் ஓவென அழ, பார்வதி ஓடிச் சென்று தனது கணவனைக் கட்டிப்பிடித்துக் கதறினாள்.

தீக்காயங்களுக்கான வார்டு என்பதால், தொற்று ஏதும் வராமலிருக்க வேண்டுமென மருத்துவர் கவனமாயிருந்தார்.

குமரேசனும் பார்வதியும் நளினிக்கு வலது இடது புறமாக நின்றுக் கொண்டிருந்தார்கள்.

மருத்துவர் எழிலன் அவர்களைப் பார்த்து, “ஐயா… உங்க மக நளினியால பேச முடியாது. ஆனா நீங்க சொல்றத கேக்க முடியும்” மருத்துவர் மெல்லியக் குரலில் சொல்லி விட்டு, குமரேசனின் தோளைத் தட்டிக் கொடுத்தார்.

“ஏ.. பொறப்பே… தை மாசம் கலியாணம் கட்டிக் கொடுத்து அழகு பாக்கனுமுன்னு இருந்தேனே… இப்புடி ஆயிடுச்சே… மருந்து ஒரசி  தீப்புடிச்சு மாட்டிக்கிட்டியே… ஒத்தப் பொம்பளைப் புள்ளையத் தீயிலக் கருக வச்சுட்டேனே…  நா என்ன பண்ணுவேன்..?” குமரேசன் கதற, பார்வதி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள்

தனது பெற்றோரின் கதறலையும் அழுகுரலையும் கேட்டுக் கொண்டிருந்த நளினியின்  கண்கள் ஓரத்திலிருந்து சில நீர்த்துளிகள் அவளின் காதோரமாக நனைத்துக் கொண்டிருந்தது. வாய் பேசவில்லை. ஆனால், அவளின் மனதுப் பேசியது.

“ஐயா மேஸ்திரி.. நா.. போகணும். எட்டு மணியாச்சு. மத்தவங்க எல்லாரும் போய்ட்டாங்க..” அன்று மாலை நளினி வேலை முடிந்ததும் மேஸ்திரியிடம் படபடத்தாள்.

“சரி.. நீ.. போகலாம். மருந்து அறையில அந்தப் பத்து பண்டலையும் அடுக்கி வச்சுட்டு போயிடு நளினி…”

நடக்கப்போகும் விபரீதம் புரியாமல், அந்த அறையில் சென்று மான்மார்க் தீப்பெட்டி பண்டல்களை இடமாற்றம் செய்து அடுக்கிக் கொண்டிருந்தாள் நளினி.

அப்போது, மேஸ்திரி அறைக்குள் வந்து தாழிட்டான். நளினிக்கு திக்..திக் என்றாகி விட்டது.

“மேஸ்திரி.. கதவைத் திறங்க… நா போகணும்..” நளினியின் சொல் வெறும் சொல்லாகவே இருந்தது.

“இதோ பாரு நளினி… ரொம்ப நாளா ஒன்ன பாத்துக்கிட்டு தான் இருக்கேன். இன்னிக்குத் தான் வசமா நேரம் கெடச்சது… அடம் புடிக்காம வந்துரு… ஒனக்கு வேண்டியதெல்லாம் கெடக்கும். ஒன்னையும் மேஸ்திரியா ஆக்கிடுறேன். நீ நெனச்ச மாதிரி ஜாலியா இருக்கலாம்..” மேஸ்திரியின் வக்கிரப்புத்தி அதிகமாகி, அவளை நெருங்கி கட்டிப் பிடித்து இழுத்து மூர்க்கமாகத் தள்ளினான்.

தீப்பெட்டி பண்டல்கள் நடுவே விழுந்தாள் நளினி. எவ்வளவு கூச்சல் போட்டாலும் யாருக்கும் கேட்காது. அது ஞாயிற்றுக்கிழமை வேறு. இது எல்லாமே மேஸ்திரிக்கு சாதகமாகப் போய் விட்டன.

“நளினி… அடம்புடிக்காத..” மீண்டும் மூர்க்கமாக அவளைத் தள்ளினான் மேஸ்திரி. மறுபடியும் நளினி கீழே விழுந்ததில் பண்டலிலிருந்த தீப்பெட்டிகள் சிதறிக் கொட்டியது. எங்குப் பார்த்தாலும் தீப்பெட்டியும் தீக்குச்சிகளுமாய் இருந்தன.

மறுபடியும் மேஸ்திரி வேகமாக அவளை நோக்கிப் போக, நளினி தன் கையிலிருந்தத் தீக்குச்சியை உரசினாள். அறைமுழுதும் தீப்பெட்டிகள் வெடித்துச் சிதறியது. மேஸ்திரியின் காமப்பசிக்குத் தப்பி, தீக்கிரையாகினாள் நளினி. அறை முழுதும் தீ பரவ, அதன் நடுவில் சீதையாக தன் கற்பைக் காத்துக் கொண்டாள் நளினி.

அறையை விட்டு வெளியேறிய மேஸ்திரி, நளினி அறை தீப்பற்றிக் கொண்டது எனக் கூறி, ஒன்றும் தெரியாத அப்பாவி போல் கண் கலங்கினான்.

நளினியின் ஓரவிழிக் கண்ணீர் நடந்த நிகழ்வுகளை அசைப் போட்டுக் கொண்டிருந்தது. மகளின் கண்ணீருக்கான அர்த்தம் புரியாமல், குமரேசனும் பார்வதியும் அழுது கொண்டேயிருக்க,  சன்னல் வழியே காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது.

வரவேற்பு அறையில் செவிலியர் வைத்திருந்த ரேடியோவில் “என்று தணியும் இந்த…அடிமையின் மோகம்..?” என பாரதியார் கோபம் கொப்பளிக்கப் பாடிக் கொண்டிருந்தார்..!

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads  தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 

             

                         

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

17 Comments

  1. தீப்பெட்டித் தொழிலாளர்களின் வாழ்வில் இப்படி ஒரு வலி…இருப்பதை இன்று உணர்ந்தேன். அருமையான கதை…

  2. மிக மிக சிறப்பான சிறு கதை.
    படித்தேன் ருசித்தேன். இத்தனை
    ஆற்றல் உங்களுக்குள். இன்னும் இன்னுமாய்
    தொடருங்கள் . போற்றுதல்பாராட்டுக்கள்.
    அண்ணா🙏

  3. மிக மிக சிறப்பான சிறு கதை.
    படித்தேன் ருசித்தேன். இத்தனை
    ஆற்றல் உங்களுக்குள். இன்னும் இன்னுமாய்
    தொடருங்கள் . போற்றுதல்பாராட்டுக்கள்.
    அண்ணா🙏

  4. நளினியின் சோகத்திலிருந்து மீண்டு வர நேரமானது.
    மனம் கனக்கிறது.
    மெளனங்கள் மரணிக்கும் வேளை
    உண்மை உறங்காது.

  5. கதை என்பது மக்களை , அதாவது வாசிப்பவரை சென்று சேர்வது. ஆழமான படைப்பு மக்கள் வாழ்வில் ஆதிக்கமும் செலுத்தும், கண்ணகியின் கதை போல. இந்த கதையில், நாயகி தன்னை அழித்துக் கற்பை காத்திருப்பது சமூகத்தில் பெண்களின் அடிமை வாழ்வியலை பாதுகாக்க நினைப்பவர்களுக்கு மட்டுமே ஏற்புடையதாக இருக்கும். இந்த கதையில் நாயகி எதிரிக்கு தண்டனை கொடுத்து தான் தப்பிதிருக்க வேண்டும். கால மாற்றத்திற்கான முடிவாக இருந்திருக்கும். மற்றபடி கதை வடிவம், நகர்வு மற்றும் திருப்பங்கள் நன்றாக உள்ளன. கதையில் பெண் பேசியிருக்க வேண்டும். தனக்கு நேர்ந்ததை பேசும் பெண் காலத்திற்கு வேண்டியவள், கதையை அழகுற செய்திருப்பாள்.

  6. வேலை செய்யும் இடத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அநேகம். சிலர் வெளியே சொல்கிறார்கள். சிலர் நளினி போல மறைத்து விடுகிறார்கள். நளினி போன்றோர் அநேகர் இங்கே இருக்கிறார்கள். அடித்தட்டு மக்களின் வேதனை என்று மறையும் என தெரியவில்லை.
    இருப்பினும் தனது கற்பைக் காப்பாற்ற சிதையில் இறங்கிய நளினி நம் இதயத்தில் என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மறைந்து… தைரியமாக வாழும் நிலை உருவாக வேண்டும்.

    என்று தணியும் இந்த … என்ற பாரதியின் குரலுக்கு விடை கிடைக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

    கதையும் கதை நகரும் விதமும் அருமை.

  7. அனைவருக்கும் வணக்கம்

    குடும்பத்தின் வறுமையின் காரணமாக தந்தையின் பாரத்தையும் கணவன் பாரத்தையும் குடும்பத்தையும் சுமக்க வேண்டும் என்று ஒரு பெண் தன்னுடைய சுய விருப்பங்களையும் அடகுவைத்து கொண்டுதான் வேலைக்கு செல்கின்றாள். அப்படி வேலைக்குச் செல்லும் இடத்தில் தனக்கு ஏற்படும் அவல நிலைகளை சகித்துக் கொண்டு தான் வேலை செய்கின்றாள் அதில் மனதில் ஏற்றிக் கொண்டால் குடும்ப பாரத்தை நம்மால் இறக்கி வைக்க முடியாது என்று மனதிற்குள்ளேயே புதைத்து கொண்டு தான் ஒரு பெண் வேலை செய்கின்றாள்.படித்த பெண்கள் ஆக இருக்கட்டும் படிக்காத பெண்கள் ஆக இருக்கட்டும் தான் வேலை செய்யும் இடத்தில் தனக்கு பாதுகாப்பு இருக்கிறது என்றால் அது விரல்விட்டு சொல்லக்கூடிய சதவிகிதத்தில் மட்டும்தான் இருக்கின்றது.வீட்டிலேயும் அடிமையாகத்தான் இருக்கின்றாள் வேலைக்கு செல்லும் பொழுதும் அவள் அடிமையாகத்தான் இருக்கின்றாள். பெயருக்கு வேண்டுமானால் பெண்கள் சுதந்திரம் அடைந்து விட்டார்கள் என்று பெருமையாக பேசிக் கொள்ளலாம்.ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் பெண் என்னும் அடிமைச்சங்கிலிகளுக்குள்ளேயே அகப்பட்டு தான் வாழ்கின்றாள். மேலும் சிறகுகள் வெட்டப்பட்ட பறவைகள் ஆபத்தானவர் வாழ்கின்றார் என்று தணியும் இந்த அடிமையின் மோகம் என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்ட சிறுகதை படித்து அறிந்து பார்த்தால் சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகளை தொடும் நிலையில் நாம் இருந்தாலும் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இன்னும் எட்டாத கனியாக தான் இருக்கின்றது. இத்தனை ஆண்டுகள் சுதந்திரம் பெற்று கடந்த போதிலும் பெண்களுக்கு உண்டான கொடுமைகள் இன்னும் அதிகமாகத்தான் இருக்கின்றதே தவிரஇன்னும் குறைந்தபாடு இல்லை என்பதை நாள்தோறும் ஊடகங்களின் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாம்.பெண் என்பவள் ஒரு போகப் பொருள் தன்னுடைய காமப்பசியை அனுபவித்துக் கொள்ள அவதரித்து வந்த ஒரு உயிருள்ள பொம்மை தன்னுடைய தேவைகளை செய்வதற்காகவே பிறந்து வந்தவள் என்று தான் இருக்கின்றது.பிறந்த குழந்தையாக இருக்கட்டும் முதிர்ந்த பெண்மணியாக இருக்கட்டும் யாருக்குமே பாதுகாப்பு இல்லை எந்த ரூபத்தில் இருந்தாலும் அவள் அடிமை என்கின்ற முத்திரைகளோடு தான் வாழ்கின்றாள். தந்தை அண்ணன் தம்பி கணவன் மகன் பேரன் மாமனார் நண்பன் என்று எல்லாம் உறவுகளோடு அவள் வாழ்ந்தாலும் பாதுகாப்பாக சுதந்திரமாக வாழ்கின்றார் என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.தான் உண்டு தன் வேலை உண்டு தன்னுடைய வாழ்க்கை உண்டு தன் குடும்பம் உண்டு என்று அவள் வாழ்ந்தால் கூட சில காம கொடூரர்கள் பார்வையில் அவள் சிக்கிக் கொண்டு தன்னைத் தானே மாய்த்துக் கொள்கின்ற நடந்தேறி தான் வருகின்றது. கற்பை இழந்த பெண் இந்த பூமியில் வாழக்கூடாது என்று பெண்ணுக்கு மட்டும் இந்த பூமியில் எழுதாத சட்டமாக இருக்கின்றது. சேலை மீது முள் பட்டாலும் முள் மீது சேலை விழுந்தாலும் பெண்ணுக்குத் தான் அது பாதிப்பு என்று சமூகம் சட்டங்கள் வைத்திருப்பதால் தான் இந்த மாதிரி என்னால நீ போன்றோர்கள் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்கின்றார்கள். சீதை சிதைக்குள் தன் சதையை வதம் செய்து கொண்டாலும் அவள் உயிரோடு எழுந்து வந்தாள் ஆனால் இங்கே ஒரு கற்புடைய சீதையோ சிதைக்கு தன்னைத்தானே வதம் செய்துகொண்டாள். இன்னும் எத்தனையோ நளினிகள் தங்களுக்குத் தாங்களே தண்டனை கொடுத்துக் கொள்கின்றார்கள். கவரிமான் பரம்பரை போன்று பெண்கள் வாழ்கின்றார்கள் ஆனால் தவறுகளை இழைக்கும் ஆண்கள் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வாழ்கின்றார்கள். என்று தணியும் இந்த அடிமையின் மோகம் அருமையான சிறுகதை மிகவும் மனதை பாதித்தது நிச்சயமாகவே இன்றைய காலகட்டங்களில் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள் இருக்கின்ற அவள நிலைகளையும் சித்தரிக்கும் வண்ணமாக இருக்கின்றது. பெண்கள் எப்பொழுது தன்னில் சரிபாதி தனக்குள் ஒருவள் என்று இந்த சமூகம் நினைக்கின்றதோ அன்று தணிந்துவிடும் இந்த அடிமைகளின் மோகம் காமத்தின் மோகம் மோகத்தின் மோகம்.

  8. மிகவும் சிறப்பான உணர்வுப்பூர்வமான சிறுகதை . எத்தனைஎத்தனை நளினிக்கள் எந்தப் பிரபஞ்சத்தில் சீதைகளாய் தமக்குத்தாமே சிதைக்குள் செல்லும் அவலம் . என்று தணியும் இந்த …. என்ற பாரதி வரிகளுக்கு மிகப்பொருத்தமான சிறுகதை . இனிய நல்வாழ்த்துகள் .

  9. மிகவும் அருமையான கதை.நளினிக்கு கிடைத்த தண்டனை மேஸ்திரிக்கு கிடைத்து இருக்க வேண்டும் .வேளைக்கு போகும் பெண்களுக்கு நடக்கும் கொடுமையை பிரதிபலிக்கும் கதையாக உள்ளது .இது போன்ற பல கதைகள் எழுத வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் . நன்றி….

  10. இது கதையல்ல பெண்கள் வாழ்க்கையின் நிஜம் பல கனவுகளோடு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஏற்படும் கோர சம்பவம் தன் கற்பை காப்பாற்றிக்கொள்வதற்கு காம வெறி பிடித்த நயவஞ்சகனிடமிருநது தன்னை தானே காப்பாற்றிகொள்வதற்கு தீ இட்டு கொண்டு தன் கற்பை காப்பாற்றி கொள்வதில் வெற்றி பெற்றால், ஆனால் தன்னுடைய தாய் தந்தையிடம் நடந்த சம்பவத்தை சொல்ல முடியவில்லையே என்பதில் தோல்வி அடைந்தால் 8 வயது முதல் 80. வயது வரை உள்ள பெண்களை கற்பழிக்கின்ற காமகொடூர இன்னும் இந்த உலகத்தில் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இந்த. நூல் சொல்லும் கதை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை அருமையாக எடுத்துரைத்திருத்க்கீறீர்கள் நீங்கள் . நளினியின் விழியோரம் வழியும் கண்ணீர் என் மனதை நெகழ வைத்தது என்று தனியும் இந்த தாகம் வெற்றியின் தாகமாக ஒலிக்கும்

  11. Anru than kanavanai meetka poraadi maduraiyai eritha kannakiyum inru thanudaiya maanathai ezhakaamal iruka poraadi thanaiyea thee vaithu konda naliniyum penkal inathirkea oor vidivelliyaaka irukiraarkal

அல்வா நாட்கள் 😂(சிறுகதை) – ✍ இந்துமதி கணேஷ்

அபலையின் ஆசை (சிறுகதை) – ✍ செல்வா ச.பார்த்திபன், திருப்பூர்