in ,

மகா மார்பிள்ஸ் (நாவல் – அத்தியாயம் 21) – தி.வள்ளி, திருநெல்வேலி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12   பகுதி 13   பகுதி 14   பகுதி 15  பகுதி 16   பகுதி 17   பகுதி 18   பகுதி 19   பகுதி 20

சந்தியாவையும், வந்தனாவையும் ஏர்போர்ட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு கம்பெனிக்குத் திரும்பினான் ராம். வந்தனாவை நினைக்கையில் ஒரு சிறு புன்னகை அவன் உதட்டில் மலர்ந்தது.

சின்ன குழந்தை போல வாய் ஓயாமல், “அடுத்த வாரக் கடைசியில வருவீங்களா?” நூறு தடவை கேட்டாள்.

“ஒரே வாரத்தில் எப்படி திரும்ப வர முடியும்? அதுக்கு அடுத்த வாரம் வர்றேன்”னு சொன்னதும் முகம் வாடி போனது. அப்புறம் ஏர்போர்ட்டில் அவளுக்கு பிடித்த டார்க் சாக்லேட் வாங்கி கொடுத்து சமாதானம் செய்ய வேண்டி இருந்தது ராம்கு.

வந்தனாவுடன் கழித்த அந்த இரண்டு நாட்கள் எவ்வளவு நன்றாக இருந்தது. மனம் கிளர்ச்சியில் தடுமாறியது. அவளோடு கழித்த அந்த தனிமை பொழுதுகள் அவன் மனதில் ஒரு சிலிர்ப்பை உண்டாக்கியது. வந்தனாவுடன் வாழ்நாள் முழுக்க கழிக்க எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் அவனுக்குள் தீவிரமாக வந்து அமர்ந்து கொண்டது.

நியாய தர்மம் எல்லாம் யோசித்துப் பார்க்கக்கூடிய அளவுக்கு பொறுமையாய், பக்குவப்பட்டதாய், அவன் மனது இல்லை. காமத்தின் வசத்தில் முழுவதும் சிக்கி விட்டவன் மகாவிடமிருந்து எப்படி விலகலாம்… வந்தனா கூட எப்படி வாழலாம் என்பதிலேயே சிந்தனை முழுக்க உழன்றது .

வேலையை கவனித்துச் செய்ய முடியவில்லை …மனம் பூராவும் ஒரே குழப்பமும், கலக்கமுமாக இருந்தது.

நல்லபடியாக எல்லாம் முடிய வேண்டும். எந்த பிரச்சனையும் இல்லாமல்.. யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல்.. மகாவிடமிருந்து தனக்கு விடுதலை கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்றால் முதலில் மகாவுக்கு எந்த சந்தேகமும் வரக்கூடாது ..சந்தேகம் வராமல் இருந்தால்தான் இந்த மருந்தை அவளுக்கு கொடுக்க முடியும். மருந்தை எப்படிக் கொடுப்பது? தங்கத்திடம் கொடுத்து கொடுக்கச் சொன்னால், தங்கத்துக்கு சந்தேகம் வரலாம்.. தானே கொடுத்தால் மகா குடிக்க மாட்டாள். பாலில் கலந்து கொடுத்தாலும் மகா குடிக்கவேண்டுமே..அதுவும் தன்னை நம்பி .

எப்படி இருந்தாலும் அவசரப்படாமல் ஓரிரு நாட்கள் நிதானமாக அவளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். அவளுக்கு தன் பேரில் ஓரளவு நம்பிக்கை வந்த பிறகுதான் மருந்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். தங்கத்திடம் கொடுப்பதைவிட தானே கலந்து கொடுத்தால் நல்லது என்று தோன்றியது. தங்கம் ஒருவேளை மருந்தை கொடுக்க மறந்து விட்டால்..எண்ணங்கள் மனதுக்குள் ஆர்ப்பரிக்க …வேலைகளைப் பார்க்கும் மூட் இல்லாததால் வீட்டிற்கு கிளம்பினான்.

செல்லும் வழியில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நிறுத்தி நிறைய பழங்கள், நல்ல தரமான குங்குமப்பூ ,பேரிச்சை மற்றும் உலர் பழங்கள் ..நட்ஸ்..என கை கொள்ளாமல் சாமான்களை வாங்கிக் கொண்டு ஈஸ்வர பவனம் திரும்பினான். அதிசயமாக லைட் எல்லாம் எரிய தங்கம் வந்து கதவைத் திறந்தாள்.

“என்ன தங்கம் இன்னும் வீட்டுக்கு போகலையா ..?”

“அம்மா தனியா இருக்காங்க.. ரூம்ல படுத்திருக்காங்க. அதான் கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாம்னு இருந்தேன். இப்ப கெளம்ப வேண்டியதுதான் .நைட்டு டிபன் உங்க ரெண்டு பேருக்கும் தயார் பண்ணி வச்சிருக்கேன். மேஜைல இருக்கு அம்மா இன்னும் சாப்பிடல..” என்றாள்.

“தங்கம்… இதுல நிறைய பழங்கள் இருக்கு அம்மாவுக்கு தினமும் பிரஷ்ஷா ஜூஸ் போட்டு குடு.. சரியா சாப்பிட மாட்டேங்குறா. இதுல இருக்கிறது நல்ல குங்குமப்பூ தரமானது, தினமும் கொஞ்சம் பாலில் போட்டுக் கொடு. அப்புறம் பேரிச்சம்பழம் தினமும் ராத்திரி கொடு. டாக்டர் சத்துள்ள உணவு சாப்பிடச் சொன்னார்ல… கீரை எல்லாம் கொடுக்கிறியா?”

‘என்ன ஐயாவுக்கு திடீர்னு பொண்டாட்டி மேல ஒரேடியா பாசம் ..ஜூஸக் கொடு… குங்குமப்பூவக் கொடுன்னு.. ஒரேடியாக தாங்கராரு… இது உண்மையான பாசமாக இருக்க முடியாது. நேத்து வரைக்கும் கூத்தியா கூட இருந்துட்டு, இப்ப வந்து பொண்டாட்டிக்கு அது கொடு இது கொடுத்துன்னு பாசத்தைப் பொழிகிறார். இவர் நடிப்பை நம்புறதுக்கு நான் என்ன முட்டாளா?’ அவள் மனம் கொதித்தது. ஆனால் என்ன செய்ய.. சுந்தரம் அண்ணன் சொன்னது போல எஜமானியம்மா மேல ஆயிரம் பாசம் இருந்தாலும் நாம வேலை பாக்குற ஆட்கள் தானே நமக்குன்னு உள்ள எல்லைக்குள்ள தான் நிக்க முடியும்.

“அம்மாவ நான் நல்ல கவனிச்சிக்கிறேன். எல்லாம் பாத்துக் கொடுக்கறேன்” என்றாள் தன் உணர்ச்சிகளை வெளியே காண்பிக்காமல்.

“நேரம் ஆயிடுச்சுல்ல… கொஞ்சம் இரு தங்கம்! முருகன்தான் கார் ஓட்டிட்டு வந்தான். முருகனை உன்னை கொண்டு போய் வீட்டில் விட சொல்கிறேன்” என்றான் ராம் பெருந்தன்மையாக.

இப்பவெல்லாம் ராம் சுந்தரத்தை அதிகமாக கூப்பிடுவதில்லை. மகா எங்காவது வெளியே போக வேண்டி இருந்தால் அவரை பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று ஈ.சி.ஆர் பங்களா டிரைவர் முருகனையே தனக்கு கார் ஓட்டச் சொல்லியிருந்தான். ஈ.சி.ஆர் பங்களாவை முருகன் தான் பராமரித்து வந்தான் .

“தங்கம்! முருகன் வெளியே நிற்பான்..அவனை கொஞ்சம் கூப்பிடு” என்றான் ராம்.

“வேண்டாம் ஐயா.. நானே போயிடுவேன்.. பக்கத்துல தானே இருக்கு. நான் அப்ப வர்றேன் ஐயா..” என்றவள் திரும்பிப் பார்க்காமல் விடுவிடுவென வெளியே நடந்தாள்.’ என்ன செய்ய.. நாய் வேஷம் போட்டா குறைக்கத்தான் வேண்டி இருக்கு… வேலைக்கு வந்தாச்சு, முதலாளி கேட்கும் போது மரியாதைக்கு பேசித்தான் ஆக வேண்டியதிருக்குது. மகா அம்மாவுக்காக தான் …இல்லாட்டா எப்பவோ வேலைய விட்டு நின்னுருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள் .நடப்பதை எண்ணி மனதுக்குள் குமைந்து கொண்டே வீட்டிற்கு நடந்தாள்.

“மகா.. மகா ” என்று கூப்பிட்டபடி ரூம் கதவை தட்டினான்.

மகா கதவைத் திறந்தாள்,” இன்னும் சாப்பிடலைன்னு தங்கம் சொன்னா… வா மகா நாம ரெண்டு பேரும் சாப்பிடுவோம் .உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..” என்றான் குரலில் குழைவை வரவழைத்துக் கொண்டு…

ஒன்றும் பேசாமல் கீழே இறங்கிய மகாவை டைனிங் சேரை இழுத்து உட்கார வைத்தவன்…. தட்டை எடுத்து அவள் முன் வைத்தான். தங்கம் செய்து விட்டுப் போயிருந்த சப்பாத்தியையும் குருமாவையும் அவளுக்கு வைத்தான்…

“உனக்காக இல்லைன்னாலும், நம்ம குழந்தைக்காக சாப்பிடு மகா.. உனக்கு என் பேர்ல ரொம்ப கோபம் இருக்கும். வெறுப்பும், ஆத்திரமும் இருக்கும். என்னால புரிஞ்சுக்க முடியுது. உன் கோணத்திலிருந்து உன் இடத்திலிருந்து பார்த்தால் உன் உணர்வுகள் ரொம்ப சரி… நான் உனக்கு அப்படி ஒரு ஏமாற்றத்தை கொடுத்திருக்கக் கூடாது. இத்தனை நாள் கழிச்சு நமக்குன்னு ஒரு குழந்தை கிடைச்சிருக்கு. அந்த சந்தோஷம் எனக்கு மனசு பூரா இருக்குது. இனிமே உன் கூடயும், நம்ம குழந்தை கூடயும், நல்லபடியா வாழ்வேன். கொஞ்ச நாள் பொறுத்துக்கோ.எல்லாத்தையும் நானே சரி பண்ணிடறேன். வந்தனாவை விட்டு முழுக்க விலகிடுறேன். இனி எனக்கு நீ …உனக்கு நான்…நமக்கு நம்ம குழந்தை. சந்தோஷமா இந்த வீட்டுல வாழ்வோம். மாமா ஆசைப்பட்டதும் அதுதான் .”

“ஏது திடீர்னு பாசம் என் மேல உங்களுக்கு… நீங்க உங்க இஷ்டப்படியே வாழுங்க. நான் ஒன்னும் சொல்லல. என்னை விட்டுருங்க தயவுசெய்து “என்றாள் மகா எரிச்சலோடு…

“அப்படி சொல்லாத மகா.. நாம இதுக்கா கல்யாணம் பண்ணிகிட்டோம். நான் அதை யோசிச்சுப் பாக்கல.. அதுவும் இப்ப நீ குழந்தை உண்டாகியிருக்கும் போது எனக்கு என்னுடைய பொறுப்பு புரியுது. நல்ல அப்பாவா குழந்தைக்கும்..நல்ல கணவனா உனக்கும் இருக்கனும்ங்கிற ஆசை வருது…”

அவனுக்கு பதில் ஒன்றும் சொல்லாமல் மகா தலை குனிந்தவாறே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் ..

அவள் என்ன நினைக்கிறாள் என்பதை ராம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை ..நல்லவேளை கத்தவில்லை… கோபப்படவில்லை… சண்டை போடவில்லை. அதனால் ஏதோ ஒரு சிறு மாற்றம் அவள் மனதில் ஏற்பட்டிருக்கலாம் என்ற நம்பிக்கை ராம்க்கு வந்தது ..ஒருவேளை குழந்தை பிறந்தால் குழந்தைக்கு அப்பா வேண்டும் என்று நினைக்கிறாளோ.

மகாவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அவள் முகம் சலனமற்றிருந்தது….என்ன நினைக்கிறாள் மகா… புரியாத புதிராக இருந்தது ராம்க்கு…குழப்பமே மிஞ்சியது அவனுக்கு.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உயிர் உள்ள வரை உஷா (அத்தியாயம் 2) மஞ்சள் சுடிதார் – பாலாஜி ராம்

    எதையோ நினைச்சு… எதுவோ ஆச்சு! (சிறுகதை) – முகில் தினகரன், கோவை