இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்
சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 116)
எப்போதும் காலையில் அந்த வெய்யோனை வரவேற்பதே வர்ணிகாவின் வாசல் கோலம் தான். அதை கண்டே அவன் மனம் குளிர்ந்து இளங்கதிர்களை பரப்பிடுவான்
இன்றும் அதே தான் மனம் நிறைந்து போனது அந்த வெய்யோனுக்கு, வாசலை நிறைத்த வானவில் நிறங்களை கொண்டு. வர்ணஜாலத்தை நிகழ்த்தியிருந்தாள் அந்த ரங்கோலியில்
அந்த பெண்ணவளின் தரிசனம் காண பகலோன் காத்திருக்க, அவளோ நெற்றி வியர்வை வழிய தந்தையின் இரண்டாவது மனைவியின் மகளுக்கு, அதாவது அவளின் சித்தியின் பெண்ணான தனது சின்ன தங்கைக்கு, கல்லூரிக்கு கொண்டு செல்ல மதிய சமையலை செய்து கொண்டிருந்தாள்
இது எப்போதுமே வழக்கமான செயல் தான். அவளை அழைத்தார் மாலதி
அவரின் சத்தத்தில் சற்று பதறியவள், அவர் விரும்பி குடிக்கும் ஹார்லிக்ஸை கலக்கி கொண்டு கொடுத்தாள்
“வர்ணிமா தங்கச்சி எழுந்திட்டாளா?”
“இல்லை சித்தி, காபியோட போய் தான் எழுப்பனும்”
“அப்டியா, சரி சீக்கிரம் கண்ணு, இப்பவே மணியாச்சி”
சரியென தலையசைத்து அடுப்படி வந்தவள், அடுப்பை குறைத்து வைத்து விட்டு, தங்கைக்கு காபியுடன் அவள் அறைக்குள் நுழைந்தாள்
இயல்பிலேயே கொஞ்சம் சிடுசிடு குணம் கொண்ட சந்தனா, பெயருக்கேற்றபடி சந்தன நிறம் கொண்டவள். தன் அழகின் மீது கொஞ்சம் கர்வமும் உடையவள்
வர்ணியின் அழைப்பில் அதே கோவ முகத்தோடு தான் எழுந்து அமர்ந்தாள்
“எவ்ளோ நேரம் உனக்காக காத்திருக்கிறது, நான் எழுந்த உடனே காபி குடிப்பேன்னு உனக்கு தெரியும் தானே”
“ஆமாடாமா”
“பின்ன ஏன் இவ்ளோ நேரம், பாரு உன்னால தான் எனக்கு லேட். காலேஜூக்கு மட்டும் லேட் ஆச்சி, உன்ன தொலைச்சிடுவேன் பாத்துக்க”
“லேட் ஆகாதுடாம்மா, பாத்ரூம்ல ஹீட்டர் போட்டாச்சி, ட்ரெஸ் எடுத்து வைச்சாச்சி, சாப்பாடு ரெடி. நீ குளிச்சிட்டு வந்தா ஓகே” என்றவள், அப்போது தான் அடுப்பில் இருந்த பொரியல் நினைவில் வர, சமையலறைக்கு விரைந்தாள்
தங்கையை கல்லூரி அனுப்பி, சித்தியை அலுவலகம் அனுப்பி, தான் வழக்கமாக செல்லும் பிள்ளையார் கோவிலுக்கு விரைந்தாள்
வர்ணியின் சின்ன வயதிலிருந்து இப்போது வரை அவளுக்கு இருக்கும் ஒரே நட்பு அந்த செல்வ விநாயகர் தான். அவரிடம் தனது கோரிக்கைகளை வைத்து வணங்கியவள், வெளியில் வர அங்கோ ஒருவன் ஒரு பெண்ணிடம் வரம்பு மீறி நடப்பது போல தோன்ற, கோவம் கண்களில் மின்ன அவ்விடம் சென்றவள், அவனின் கண்ணங்களை “பளார் பளார்” என்று வீங்க வைத்து விட்டாள்
துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடினான் அவன். அந்த பெண் அழுது கொண்டே நன்றி தெரிவித்தாள்
“நன்றிக்கா, எல்லாரும் பார்த்திட்டு நமக்கென்னன்னு போறப்ப, நீங்க தான் வந்து உதவி செஞ்சீங்க”
“இதோ பாருமா, எப்பவும் தைரியமா இருக்கனும். நமக்கு ஒரு கஷ்டம் வந்தா, அதை நாம தான் தீர்க்கணும், புரியுதா” என்றவள், வீட்டிற்கு கிளம்பினாள்
இது தான் நம்ம வர்ணிக்காவோட குணம். ரௌத்திரமும் பொங்கும் பாசமும் கரை புரண்டு ஓடும்
“ஹலோ ஹலோ, இடியட்ஸ் என்ன பண்ணிட்டு இருக்கீங்க. ஒரு வேலையை உருப்படியா பண்ண தெரியல” என்று கண்ணில் கனல் தெறிக்க கைபேசியில் பேசியபடி படி இறங்கி கொண்டிருந்தான் சத்ரியன்
தாய் தந்தையை சிறு வயதிலேயே இழந்தவன், தன் அண்ணணோடு தொழில் சாம்ராஜ்யத்தை சிறப்பாக நடத்தி கொண்டிருக்கிறான்
கோவமாக பேசியபடி வந்து டயனிங் ஹாலில் அமர, அப்போது தான் உணவை சாப்பிட்டு விட்டு அவனை பார்த்து ஒரு புன்னகையுடன் தனது அறைக்குள் நுழைந்தான் அவன் அண்ணன் வர்ஷன்
பார்ப்பவரை ஒரு தடவையாவது திரும்பி பார்க்க வைக்கும் கம்பீரம் மற்றும் புன்னகைக்கும் விழிகள், சிவந்த உதடுகள் குழந்தை குணம்
அண்ணனிடம் தனது டென்சனை மறைத்து போலியாக ஒரு புன்னகையை காட்டியவன், உணவை உண்ண ஆரம்பித்ததும், உண்மையில் அவன் கோபத்தைகாணாமல் போகச் செய்பவள் கைபேசியில் அழைத்தாள்
“ஹலோ சத்தி எப்டி இருக்க? பேசியே ரெண்டு நாள் ஆகுது, ஒரு மெசேஜ் கூட இல்ல. போ, நான் கோவமா இருக்கேன்”
“அட என் தனா குட்டிக்கு கோவமா… இன்னும் அரை மணி நேரத்துல நான் உன் முன்னாடி நிற்பேன், அப்ப உன் கோவத்தை நீ எப்டி காட்டினாலும் நான் வாங்கிப்பேன்” என புன்னகையுடன் சொன்னவனின் வார்த்தையின் அர்த்தத்தை புரிந்தவள், செவ்வானமாய் சிவந்து போனாள்
இன்று ஏனோ விடிந்ததில் இருந்து ஏதோ காரணம் இன்றியே மனம் குழப்பத்தில் இருந்தது வர்ணிகாவுக்கு
தங்கை கல்லூரி சென்று விட்டாள். ஆனால் சித்தி ஹாலில் ஏதோ சிந்தனையிலேயே அமர்ந்து இருந்தார். இவளும் அவரை கவனித்தவாறு சுவாமிக்கு மாலை கட்டி கொண்டிருந்தாள்
சட்டென சித்தி, “வர்ணி இங்க கொஞ்சம் வா” என்று அழைத்த சத்தம் காதில் விழ, ஓடிச் சென்று அவர் முன் நின்றாள்
அவளை ஒரு தரம் யோசனையாக மேலிருந்து கீழே வரை பார்வையால் அளந்தவர் சற்று தயங்கினார்.
பின் என்ன நினைத்தாரோ சட்டென, “வர்ணி உனக்கு ஒரு வரன் பார்த்திருக்கிறேன் நல்ல பணக்கார இடம், ஆனா பாவம் அம்மா அப்பா இல்ல, அவங்க அண்ணனும் தம்பியும் தான் இருக்காங்க. பிஸ்னஸ் பன்றாங்க, அவங்க வீட்டையும் அவங்களையும் நல்லபடியா பாத்துகிறதுக்கு அந்த தம்பி அவங்க அண்ணாக்கு பொண்ணு பாக்கிறாராம். அதான் அதுக்கு நீ தான் சரியா இருப்பனு தோணுச்சு அவங்ககிட்ட பேசி முடிச்சுட்டேன். அடுத்த வாரத்துல கல்யாணம்”
இப்படி சட்டென நீட்டாமல் முழுங்காமல் ஒரு இடியை அவள் தலையில் இறக்குவார் என்று தெரியாமல் சிரித்துக் கொண்டு நின்றிருந்த வர்ணியின் முகம், துணி கொண்டு துடைத்த கண்ணாடி போல ஆனது
அதை கவனித்தாலும் மாலதி தொடர்ந்து பேசினார், “அடுத்த வெள்ளிக்கிழமை நல்ல நாளாம், அதனால அன்னைக்கே முடிவு பண்ணியாச்சு, கல்யாண செலவெல்லாம் அவங்களே பாத்துக்கறாங்களாம். ஆனாலும் நாம சும்மா இருக்க முடியுமா, அதான் நாளைக்கு நீ ரெடியா இரு காலைல போய் தேவையான நகை புடவை எல்லாம் எடுத்திட்டு வந்திடலாம் அப்ப தான் ஜாக்கெட் தைக்க நேரமிருக்கும்” என தன்னுடைய கருத்தை சொல்லி விட்டு
‘நான் பேசி முடிச்சிட்டேன்’ என்ற ரீதியில் சோபாவில் இருந்து எழுந்து தனது அறைக்குள் அடைந்து கதவையும் அடைத்து விட்டார்
‘அதாவது, இனி என் வாய் கூட திறக்காது, உன் கேள்விகளுக்கு இங்கு , நான் சொல்வதே இறுதி வாக்கியம்’ என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார் என்பதை வர்ணியால் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது
நாக்கு உலர்ந்து போனது, கை கால்கள் பலமிழந்து போனது, அப்படியே தொப்பென சோபாவில் அமர்ந்தாள். என்ன நிகழ்ந்து விட்டது, அவளது வாழ்வை தீர்மானிக்கும் முடிவு கூட அவளிடம் இல்லையா?
இவ்வளவு நாளும் நன்றாக இருந்த சித்தி, இவ்வாறு முகத்தில் அடித்தது போல பேசி சென்றது ஏன்? இந்த வாழ்க்கை தனக்கு நல்லதா இல்லை கெட்டதா? என்ன முடிவெடுப்பது என திணறி போனவள், எழுந்து தனது நண்பனை காண சென்றாள்
‘என்ன புள்ளையாரப்பா? இப்டியா சட்டென்று தலையில் இடியை இறக்குவ…நான் என்ன பண்ணட்டும். சித்தி ஏதோ செய்தி வாசிப்பது போல சொல்லிட்டு போயிட்டாங்க, என்ன பன்னட்டும் நான்’ என்று அவள் கெஞ்சுவதும் மிஞ்சுவதுமாக, அந்த விநாயகனிடம் தனது ஆதங்கத்தை கொட்டி முடித்தாள்
அப்போது அந்த செல்வவிநாயகனின் கரத்தில் இருந்த இளஞ்சிவப்பு பன்னீர் ரோஜா அவளின் பாதத்தில் விழுந்தது. அதை கண்ட வர்ணியின் முகத்திலோ சின்ன பிரகாசம் வந்தது
“என்ன புள்ளையாரப்பா, இது தான் உன்னோட வாழ்க்கைன்னு சொல்றியா? இல்லை உனக்கேத்த ராஜகுமாரன் தான் சித்தி பார்த்த மாப்பிள்ளைன்னு சொல்றியா” என கேட்க
காற்றிலாடிய மணி ஓசை எழுப்ப, அதை அந்த விநாயகனின் வார்த்தையாக எடுத்து கொண்டவள், மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு திரும்பினாள்
மறுநாள் மாலதியுடன் சென்று மகிழ்ச்சியாக நகை புடவை என்று எடுத்து கொண்டாள். இது தான் முதல் தடவையாக கடைக்கு வந்து ஆடை எடுக்கிறாள்.
எப்போதும் சந்தனாவும் மாலதியும் சென்று எடுத்து வரும் ஆடைகளை அவளிடம் கொடுப்பார்கள். அதனால் இன்று இதை நன்றாக மகிழ்ச்சியான நாளாய் கழித்தாள்
மறுநாள் வீட்டிற்கு வந்த டெய்லரிடம் அனைத்தையும் கொடுத்து அளவுகளும் கொடுத்து விட்டார்கள்
“வர்ணி, உனக்கு மாப்பிள்ளைய பார்க்க ஆசையே வரலயா?” என்று மறுநாள் வந்த சந்தனா கேட்ட போது தான் வர்ணிக்கும் அந்த ஆசை துளிர் விட்டது
ஆனால் உடனே மாலதி சந்தனாவை அழைக்க, அவளும் சென்று விட்டாள். வர்ணிக்கோ, தனக்கு கனவனாக போகிறவன் எப்படி இருப்பான்? ராஜகுமாரன் போல இருப்பானா? இல்லை ஒரு அரசனை போல இருப்பானா? நல்ல திடகாத்திரமா ஆண்மைக்குரிய இலக்கணங்களோடு இருப்பானா?
பின்னஸ் மேன் என்றால், படங்களில் வருபவர்கள் போல கோட் சூட் போட்டு கண்ணாடி அணிந்து கையில் ஒரு போனுடன் அழகாக நடந்து வருவானா என, கனவில் அவனுடன் மிதந்தாள்
மறுநாள் எப்படியாவது தங்கையிடம் கேட்டு விடலாம் என்று தவிப்போடும் யோசனையோடும் அமர்ந்து இருந்தவளின் அருகில் வந்த சந்தனா, “வர்ணி நான் உன் வருங்கால கணவன் ஆபிஸ் தான் போறேன் வர்றியா?” என அழைத்தாள்,
ஏற்கனவே தன்னவனை காண ஆசையில் இருந்தவள், சட்டென “சரி” என்று தலையாட்டி விட்டாள்
இதனை கண்ட சந்தனா வாய்க்குள் புன்னகைத்து விட்டு, அவளை அழைத்து கொண்டு காரில் புறப்பட்டாள்
அது பத்து மாடி கட்டடம், கண்ணாடியால் ஆன பளிங்கு கட்டடம் போலவே இருந்தது
அதையே வியந்து அண்ணாந்து பார்த்திருந்தவளை, “என்ன கட்டடத்தையே இப்டி பாக்குற, அப்றம் உன்னவரை எப்டி பார்ப்ப?” என்று அவளை சீண்டி சிவக்க வைத்து, உள்ளே அழைத்து சென்றாள் சந்தனா
உள்ளே சென்றதும், “அங்க பாரு, அவரு தான் உன்னோட அவரு” என சந்தனா கூற, சற்று வெட்கம் மேலோங்க செந்தாமரையாய் சிவந்த கண்ணத்தை கையால் தேய்த்தபடி மெதுவாக விழி உயர்த்தி பார்த்தாள் வர்ணி
கண்ணாடி கதவுக்கு அந்த பக்கம், வெள்ளை நிற கோட் சூட்டில், கன்னத்தில் குழி விழ, புன்னகையோடு எதிரில் இருப்பவரோடு பேசிக் கொண்டிருந்தான் வர்ஷன்
“வர்ணி அவர் பேரு தெரியுமா?” என கேட்ட சந்தனாவிடம், “ம்கூம்” என தலையசைத்தாள்
“என்ன இது கூட தெரியாதா உனக்கு? அம்மாகிட்ட கேட்டு இருக்க கூடாதா? அவரு பேரு வர்ஷன், வர்ஷன் தேவ் சிங்”
“என்ன சிங்கா?”
“ம்ம்ம் ஆமா, அவங்க அப்பா வட மாநிலத்தை சேர்ந்தவர், அம்மா தமிழ். பிஸ்னஸ் இங்க இருந்ததால இங்க இருந்தாங்க, அவங்க பேரன்ஸ் இறந்த பிறகு அவங்க ஞாபகமா இங்கயே நிரந்தரமா இருக்கறாங்க”
“ஓ சரி, உனக்கெப்டி இவ்ளோ விசயம் தெரிது” என சற்று சந்தேகமாய் தங்கையை நோக்க
அவளோ குங்குமத்தை அள்ளி பூசியது போல சிவந்த முகத்தை புன்னகையில் மறைத்தபடி வெட்கத்துடன், “நானும் அவரோட தம்பி சத்ரியன் தேவ் சிங்கும் காதலிக்கறோம். உங்க கல்யாணம் முடிஞ்சி கொஞ்ச நாள் கழிச்சி படிப்பு முடிஞ்சதும் எங்களுக்கும் கல்யாணம்”
“ஓ சந்தோசம்” என புன்னகைத்தவள், தன்னோடு தங்கையும் அதே வீட்டில் வாழப் போகிறாள் என மகிழ்ந்தாள் வர்ணி
மனதின் ஓரம் இருந்த சிறு பிணக்கும் நிவர்த்தி ஆகி, தன்னவனை உரிமையோடு பார்க்க தொடங்கினாள்
சற்று நேரத்தில், “வர்ணி நீ இங்கயே இரு, நான் அவரை பார்த்திட்டு வந்திடுறேன்” என சென்று விட்டாள் சந்தனா
வர்ணியோ இந்த உலகிலேயே இல்லை. தான் கனவில் வடித்திருந்த தன்னவனின் வரி வடிவத்தை விட, நிஜத்தில் உண்மையில் ஒரு ஹீரோ போலவே இருந்தான் வர்ஷன்
பார்த்து கொண்டே இருக்கலாம் போல இருந்தது, ஆனால் அதற்குள் சந்தனா வந்து அழைத்து சென்று விட்டாள்
அன்றிலிருந்து, நேரில் கண்ட தன்னவனோடு கனவுலகில் உலா வந்தாள் வர்ணி. திருமணத்திற்கு பின்னான இனிய வாழ்வை எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தாள்
திருமண நாளும் விடிந்தது. அந்த வெய்யோனே கவர்ந்து செல்ல விரும்பும் அழகோடு, கல்யாண கனவுகளோடு மிளிர்ந்த வர்ணிகா, மணமேடை வந்து அமர்ந்தாள்
அவளருகில் சிரித்த முகமாய் அமர்ந்து இருந்தான் வர்ஷன். அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன், ஒரு புன்னகையோடு திரும்பி கொண்டான்
அந்த ஒரு நொடி பார்வை உயிர் வரை தீண்டிச் சென்றது வர்ணிகாவை. மனதில் மகிழ்ச்சி பொங்க தன்னவனின் கரங்களால் திருமாங்கல்யத்தை பெற்றுக் கொண்டு, செல்வி வர்ணிகாவில் இருந்து திருமதி வர்ணிகா வர்ஷன் தேவ் சிங்காக மாறிக் கொண்டாள்
இனிய கலகலப்புடன் திருமணம் நல்ல முறையில் நடந்து முடிய, விருந்து உபசாரமும் நல்முறையில் முடிந்தது
ஆனால் சில இடங்களில் வர்ஷன் சடங்குகள் செய்ய சற்று தடுமாறுவதும், அவனுக்கு சத்ரியன் உதவி சமாளிப்பதும் நடந்தது
அதை பார்த்தாலும், நன்கு கவனிக்கும் நிலையில் வர்ணி இல்லை. தன்னவனை கண்களால் பருகி கொண்டிருந்தாள் வர்ணிகா
சோர்ந்து போனாலும், வியர்த்து முகத்தில் சோர்வு தெரிந்தாலும், காலையில் சிந்திய அதே புன்னகையுடன் நின்றிருந்தான் வர்ஷன்
இது எவ்வாறு சாத்தியம் என்று எண்ணி கொண்டாள் வர்ணி. ஆனால் என் கணவன் ரொம்ப ஸ்ராங் என்று தனக்கு தானே சொல்லியும் கொண்டாள்
மற்றவர்கள் தத்தமது அறைகளில் முடங்கி கொள்ள, சற்று தயக்கம் கொஞ்சம் பயம் நிறைய வெட்கம் கலந்த கலவையாய் தன்னவனின் அறைக்குள் நுழைந்தாள் வர்ணி
நல்ல நறுமணம் அவளை வரவேற்றது. கட்டிலை சுற்றி அலங்காரங்கள் மிகவும் அழகாக இருந்தது. ஆனால் தன்னவனை அந்த அறையில் காணவில்லை
கையில் கொண்டு சென்ற பால் செம்பை அருகில் இருந்த டேபிளில் வைத்தவள், தன்னவனை தேடலானாள்
பாத்ரூமில் இல்லை, பால்கனி கதவை திறந்து பார்த்தால் அங்கும் இல்லை, எங்கு தான் சென்றிருப்பார் என்ற சிந்தனையை கலைத்தது, அருகில் பூட்டியிருந்த கதவுக்கு உள்ளிருந்து வந்த சத்தம்
சற்று பயம் மேலோங்க மெதுவாக அந்த கதவின் கைபிடியை திருகி திறந்தாள்.உள்ளே கண்ட காட்சியில் திகைத்து மூச்சடைத்து உறைந்து போனாள் பெண்ணவள்
வர்ஷன் மேலாடை இல்லாமல், முட்டி வரை உள்ள ஷாட்ஸ் போட்டு கொண்டு வியர்த்து போய் அந்த அறையில் நிறைந்திருந்த விதவிதமான பொம்மைகளுடன் விளையாடி கொண்டிருந்தான்
என்ன இவர் இப்டி பண்ணிட்டு இருக்கார் என எண்ணினாலும், ஒரு ஆணை அதுவும் முதல் முறை ஒரு ஆணை இப்டி அரைகுறையாக பார்த்தால் எப்டி இருக்கும் ஒரு பேதைக்கு
தன்னவனின் உடற்கட்டை கண்டு வெட்கம் மேலோங்கினாலும், அவன் இங்கு
இந்த கோலத்தில் என்ன செய்கிறான் என அறிந்து கொள்ளும் நோக்கில் முன்னேறி நடந்தாள்
தன் தவிப்பு பயம் வெட்கம் படபடப்பு அனைத்தையும் ஒதுக்கி வைத்து, யோசனையோடு அவன் முன் சென்றாள். அவளை கண்டவனோ, அனைத்து பற்களும் தெரிய வாய் திறந்து சிரித்தவன் பாய்ந்து வந்தான்
அவளிடம், “ஹாய் பொம்மை எப்டி இருக்க? தூங்கலையா நீ? வா வந்து என் கூட அப்ப விளையாடு” என குதித்து குதித்து கேட்டான்
உறைந்து நின்றவள், அந்த இடத்திலேயே வேரோடி விட்டாள்
என்ன இது மூன்று வயது குழந்தை போலல்லவா இவனின் செயல்களும் பேச்சும் இருக்கிறது. குழப்பத்தில் நின்றிருந்தவளிடம் மேலும் பேசினான் அவன்
“சத்தி சொன்னான் இந்த பொம்மை எல்லாம் பேசாது, அதனால உனக்கு பேசுற பொம்மை ஒன்னு வாங்கி தரேன், அது கூட நீ நாள் முழுக்க இருக்கலாம் விளையாடலாம்னு. அதுக்கு நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா?
அவன் சொன்ன மாதிரில்லாம் செய்து செய்து நான் ரொம்ப களைச்சி போய்ட்டன். கால் எல்லாம் வலிக்கிது, வர்ஷன் பாவம் தானே எனக்கு கொஞ்சம் கால் பிடிச்சி விடுறியா?” என மழலை போலவே பேசி கொண்டிருந்தான்
வர்ணிகா தான் இதில் தலை சுற்றி போய் பேந்த பேந்த முழித்து கொண்டிருந்தாள்
‘என்ன ஒரு துரோகம்? தன் வாழ்வை இப்படி நாசம் செய்து விட்டார்களே. இல்லை ஒருவேளை இந்த விசயம் சித்திக்கு தெரியாதோ? அப்படியும் இருக்குமா? இல்லை எல்லாம் தெரிந்தும் தன்னை இவனுக்கு கட்டி வைத்து விட்டனரா?” என்று மனதினுள் குமுறி கொண்டிருந்தாள்
எவ்வளவு நேரம் அப்பிடி அமர்ந்து இருந்தாளோ தெரியவில்லை. அருகில் படுத்திருந்த வர்ஷன் அவள் மடியில் கை போட்டதும் தான் நிகழ் உலகு வந்தாள்
நின்று கொண்டிருந்தவள் எப்போது அமர்ந்தாள் பேசி கொண்டிருந்தவன் எப்போது உறங்கினான் என்று எதுவுமே அறியாள் இந்த பேதை பெண்
கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்தவள், எழுந்து நேரம் பார்த்தாள். மணி நான்கு என்று காட்ட, முன்னறைக்கு சென்றவளின் உடலும் மனமும் ரொம்பவே சோர்ந்து போயிருந்தது
அப்படியே அங்கிருந்த நாற்காலியில் சாய்ந்தவள், தன்னை அறியாமல் உறங்கி போனாள். எப்போதும் போல பழக்கதோஷத்தில் சட்டென விழிப்பு வர, மணியை பார்த்தாள்
ஆறு என காட்ட, எழுந்து அவசர அவசரமாக குளித்து புடவை ஒன்றை எடுத்து கட்டியவள், கண்ணாடி முன் நின்று தன்னை சரி செய்து கொண்டாள்
கண்ணில் குங்குமம் விழ, அதை வைப்பதா வேணாமா, நான் கண்ட கனவுகள் எல்லாம் வீணாகி விட்டதே. தினமும் காலையில் கணவன் கையால் குங்குமம் இட்டு கொள்ள வேண்டும் என்ற அவளின் முதல் ஆசையே நிறைவேறா ஆசையாகி விட்டதே என மனதில் புலம்பி கொண்டவள், தன் விதியை நொந்து கொண்டு தானே குங்குமத்தை வைத்து கொண்டாள்
மாடியில் இருந்து கீழிறங்கி வந்து, பூஜையறைக்குள் நுழைந்து, சுவாமிக்கு அலங்காரம் செய்து ஊதுபத்தி வாசனை வீட்டை நிறைக்க விளக்கேற்றி வழிபட்டாள்
பின் சமையலறைக்குள் நுழைய, ஏற்கனவே அங்கு ஐம்பது வயது வயது பெண்மணி ஒருவர் ஆவி பறக்க காபி போட்டு கொண்டிருந்தார்
அவர் பெயர் தங்கம்மா. வர்ணியை கண்டதும், கண்கள் பனிக்க, “வாம்மா தங்கமே, எங்க பெரிய தம்பிக்கேற்ற ராணி தான் நீங்க” எனவும், அவருக்கு ஒரு புன்னகையை பரிசாக்கினாள்
தன் விதியை நொந்து கொண்டு, காபி கோப்பைகளோடு வந்து ஹாலில் அமர்ந்து இருந்த சித்திக்கும் தங்கைக்கும் கொடுத்து விட்டு மாடியேறினாள்
முதல் அறை சத்ரியனின் அறை, அடுத்து அவனின் அலுவலக அறை, அடுத்து அவர்களின் பெற்றோர் அறை அது எப்போதும் பூட்டியே இருக்கும்
அடுத்து தான் வர்ஷனின் அறை. சத்ரியனின் அறைக்கு செல்லலாமா வேணாமா என்று மாடிப்படியின் முடிவில் நின்று யோசனையில் இருக்க அவனே கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான்
“வாங்க அண்ணி” என்று வாய் நிறைய புன்னகையுடன் அழைத்தவன், அவளின் குற்றம் சுமத்தும் பார்வையை புரிந்து கொண்டவன் போல் ஒரு கணம் தயங்கி நின்றான்
பின், ”எங்களை மன்னிச்சிருங்க அண்ணி, நான் எல்லாத்தையும் முன்னாடியே சொல்லி இருக்கணும். அது வந்து நானும் தனாவும் ரெண்டு வருஷமா விரும்புறோம். எங்க கல்யாணம் நடக்கனும்னா எங்க அண்ணா உங்களை கட்டிக்கனும் அப்படினு உங்க சித்தி சொன்னதும், எனக்கு வேற வழி தெரியல
எங்க அப்பா அம்மா அண்ணாவுக்கும் தான் ஆக்ஸிடன்ட் ஆனது. அவனுக்கு பயங்கர அடி, ஐந்து வருசமா இப்டி தான் இருக்கான். காட்டாத டாக்டர் இல்லை போகாத கோயில் இல்லை. எனக்கு இருக்குற சொந்தம் அவன் ஒருத்தன் தான்
அதான் அவனுக்கு ஒரு துணை வேணும் அவன் சரியாகனும் அப்டின்ற ஒரு நப்பாசைல தான் உங்க வாழ்க்கைய பலி ஆக்கிட்டேன், என்ன மன்னிச்சிருங்க அண்ணி”
“பரவால்ல விடுங்க, என் வாழ்க்கை இதான்னு அந்த கடவுள் முடிவு
பண்ணிட்டார் போல, என்னோ தலைவிதிபடி நடக்குறது நடக்கட்டும். அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க. அவரை சரி பன்ன வேண்டியது என்னோட பொறுப்பு, நீங்க கவலைப்படாதீங்க” என்றவள், அதற்கு மேல் தன் கண்ணீரை அவனுக்கு மறைக்க தனது அறை வந்து சேர்ந்தவள்
தன் சித்தி தனக்கு செய்த துரோகத்தை எண்ணி கண்ணீர் சிந்தினாள். அவளின் கவலை போக்க வல்லவனோ துயில் களைந்து எழுந்தவன் தன்னருகில் தன் அழகு பதுமை போன்று இருக்கும் பொம்மையை காணவில்லை என்ற டென்சனில் வெளியே வந்தான்
கட்டிலில் அழகோவியமாய் அமர்ந்து இருந்தவளை ஒரு கணம் ரசித்து பார்த்தவன், பாய்ந்து வந்து அவளை கட்டி கொண்டு கன்னத்தில் முத்தம் பதித்தான்
பதற்றத்திலும் பயத்திலும் அவனை உதறி தள்ளி எழுந்து நின்றவள், அவனை காண
அவனோ, “என்ன பொம்மை நீ பயந்திட்டியா? நான் எப்பவும் எழுந்தோன என்னோட பேவரைட் பொம்மைக்கு முத்தம் கொடுப்பேன். இனி நீ தான் என்னோட பேவரைட் பொம்மை” என கை தட்டி சிரித்தவாறு கட்டிலில் ஏறி குதித்தான்
ஆற்றாமையோடு அவனை பார்த்தவள், இழுத்து பிடித்த உணர்வோடு “இனி பிரஸ் பன்னா தான் எல்லாம்” என்று அவனை பாத்ரூம் அழைத்து சென்றாள்
பின் தன்னை நிதானப்படுத்தி கொண்டு வெளியே சென்று, சற்று மன இறுக்கம் விலக காற்றாட புல்வெளியில் நடக்கலாம் என தோட்டத்திற்குள் இறங்கினாள்
சித்தியின் அறையில் ஏதோ சத்தம் அதிகமாக கேட்பது போலவும் சண்டை போடுவது போலவும் தோன்ற, கவனிக்காமலேயே அவளின் காதில் அத்தனையும் விழுந்தது
“ம்மா நீ செய்தது ரொம்ப தப்பு மா…”
“என்னடி நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்”
“என்ன தப்பா… வர்ணிக்கு இப்டி ஒரு பைத்தியத்தை தான் கல்யாணம் பண்ணி வைப்பியா?”
“ஏண்டி அவனுக்கென்ன கொறச்சல்? நல்ல பணக்காரன் தெரியுமா, ஆளும் நல்ல வாட்டசாட்டமா தான் இருக்கார். யாராவது பார்த்தா பைத்தியம்னு சொல்லுவாங்களா”
“என்னமா நீ செய்த தப்ப நியாயபடுத்த பாக்குறியா? இதுல அந்த சத்ரியனும் சேர்ந்து என்னைய ஏமாத்திட்டார். இதுவரை அவங்க அண்ணா இப்டிபட்டவங்கன்னு சொன்னதில்ல, இப்பவும் சொல்லல. இனி அவன் எனக்கு வேணாம்”
“ஏய் ஏண்டி இப்டி லூசு மாதிரி பேசுற? அவங்க எவ்ளோ பணக்காரங்க தெரியுமா. உன்கிட்ட சொல்ல கூடாது நான் சொன்னதை செய்தா தான் உனக்கும் அவருக்கும் கல்யாணம்னு சொல்லி தான் அவங்க அண்ணா கல்யாணமே நடந்தது. அதனால இதுல அவர் தப்பு எதுவுமில்லை”
“என்னம்மா சொல்ற?”
“ஆமா… அதோட இந்த வயசுல வர்ணி கல்யாணம் பண்ணினா தான் சொத்து முழுக்க அவ கைக்கு வரும். அப்ப தாணடி அதை நாம வாங்க முடியும்”
“என்ன நீ லூசு மாதிரி உளர்ர?”
“நானாடி உளர்றேன், உங்கப்பன் தான் சாகும் போது சொத்தெல்லாம் அவ பெயர்ல எழுதிட்டு, கல்யாணம் ஆன அப்றம் அதை அவ கைக்கு போகும்னு சொல்லிட்டு போய்ட்டாரு. அப்ப அவ விருப்பப்பட்டு யாருக்கு வேணா தரலாம்.
இதுக்காடி கஷ்டப்பட்டு எங்க அக்காவ கொன்னு அவர கல்யாணம் பண்ணி உன்னை பெத்தேன் . அவளையும் நல்லா பார்த்து உங்களை எல்லாம் வளர்த்து இந்த சொத்தை கம்பெனியை பாதுகாத்து வந்தேன். அதான் அவளுக்கு இவன கட்டி வைச்சேன். நேத்தே அவகிட்ட சொத்து பத்திரத்துல சைன் வாங்கி என் பெயருக்கும் மாத்தியாச்சு” என்று சொல்லி அவர் இடி இடி என சிரிக்க, அக்காவுக்கும் தங்கைக்கும் ஒரு சேர தலையில் இடி இறங்கியது
தங்கள் தாய் இவ்வளவு கோரமான உள்ளம் கொண்டவரா என்று அதிர்ந்து போயினர். அவருக்கு சரியான தன்டனை இறைவன் தருவான் என்று இருவருமே எண்ணி கொண்டு விலகி போயினர்
நாட்களும் கடந்து போனது, வர்ணி அந்த வீட்டோடு நன்றாக பொருந்தி போனாள். வீடே கலகலப்பாக மாறியது
சந்தனா கூட வர்ணியோடு சேர்ந்து இங்கேயே அடிக்கடி தங்க ஆரம்பித்தாள். தனித்து போன மாலதி, சொத்தை ஆசை தீர அனுபவித்து தனிமை தாக்கிய போது நோயில் விழுந்தார்
அப்போது தான் தான் செய்த பாவங்களின் எண்ணிக்கை மனக்கண்ணில் வரிசை கட்டி நிற்க, அனைவரிடமும் மன்னிப்பை வேண்டினார். பெற்ற மகளும் வளர்ப்பு மகளும் மன்னிக்கவுமில்லை, மறக்கவுமில்லை என மௌனமாய் விலகினார்
சந்தனா படிப்பு முடிய, ஒரு நல்ல நாளில் சந்தனா சத்ரியன் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தாள் வர்ணிகா
வர்ணிகாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அலுவலக பணிகளை கற்று கொடுத்து கொண்டிருந்தான் சத்ரியன்
எப்போதும் தனது பொம்மைகளுடன் மட்டும் பேசி விளையாடி அறைக்குள்ளேயே முடங்கி கிடக்கும் வர்ஷன், வர்ணிகாவின் உதவியாலும் அவளின் அன்பான நட்பான அனுகுமுறையாலும் அறையை விட்டு வெளி வந்துள்ளான்
காலையில் சத்ரியனோடு தோட்டத்தில் வாக்கிங், வர்ணியோடு சமையலறையில் சின்ன சின்ன உதவிகள், மாலையில் தோட்டத்தில் சந்தனாவோடும் தங்கம்மாவோடும் விளையாட்டு என, வர்ஷனின நாட்களும் அழகாக நகர்ந்தது
அவன் மனதில் வர்ணிகா மீது இன்னதென்று தெரியாத ஒரு பாசம், உரிமை, தனக்கு மட்டுமே அவள் என்ற எண்ணம், உயர்ந்து கொண்டே போனது
அவளால் தான் சற்று மாறுவது போல அவனுக்கே உணர்வு எழுந்தது. அவளை கண்டதும் என்னன்னவோ எண்ணங்கள் தோன்ற, அவளை ரசிக்க ஆரம்பித்தான்
அவளின் செயல்களையும் அவளுக்கு பிடித்தவைகளையும் கவனிக்க ஆரம்பித்தான். ஆனால் அதற்கு விளக்கமும் காரணமும் தான் தெரியவில்லை
வர்ணிகா கூட, அவனை நெருங்கும் ஒவ்வொரு தடவையும் தனது பெண்மை வாட்டும் ஒவ்வொரு நொடியும் அவனின் நிலையை எண்ணி கொள்வாள். அவனுக்கு தற்போது ஒரு தாயின் அன்பே தேவை என தனக்கு தானே சொல்லி கொள்வாள்
இருந்தும் அவனால் மட்டுமே தட்டி எழுப்ப முயன்ற உணர்வுகள் அவளை அவன் மேல் காதலுற செய்தது
ஒரு நாள், இதுவரை அவன் செல்லாத பூஜையறைக்குள் வர்ணியை தேடி கொண்டே நுழைந்த வர்ஷன், அங்கு தங்கள் பெற்றோரின் படத்திற்கு மாலையணிவித்து இருப்பதை கண்டவனுக்கு, ஏதேதோ நிகழ்வுகள் நிழலாக தெரிய, தலைவலி அதிகமாகி மனது பாரமாகி கத்திக் கொண்டே மயங்கி விழுந்தான்
அவனின் அலறல் சத்தத்தில் பதறியடித்து ஓடி வந்தவர்கள், வர்ஷனை கண்டு துடித்து போயினர். பதறிப் போய் டாக்டருக்கு அழைத்தான் சத்ரியன்
“ஏதோ அதிர்ச்சி தான், நாளை மருத்துவமனை அழைத்து வாருங்கள்” என சொல்லிச் சென்றார்
மற்றவர்கள் கலைந்து செல்ல, அவனின் தலையை தடவிய வண்ணம் அவனருகில் அமர்ந்தவாறு உறங்கி போனாள் வர்ணி
அவள் கண் விழித்த போது, அவளையே வைத்த விழி எடுக்காது பார்த்து கொண்டிருந்த தன்னவனின் பார்வையில் மாற்றத்தை உணர்ந்தவள், கண் விரிய அவனைப் பார்த்தாள்
அவனோ, மோகன புன்னகையுடன் அவளை அள்ளி அணைத்து கொண்டான்
வர்ஷன், வர்ஷன் தேவ் சிங்காக தன்னவளுடன் இணைந்தான்
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
திரைப்படத்துக்கு ஏற்ற கதை.