in , ,

உடல் பொருள் ஆவி (இறுதி அத்தியாயம்) – ஸ்ரீவித்யா பசுபதி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7

மகாபலிபுரத்தில் குமரன் மற்றும் டாக்டரிடமிருந்து சேகரித்த தகவல்களால் ஓரளவுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை கபிலனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் அமானுஷ்ய வேலை என்று சொல்லி இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர அவரது போலீஸ் மூளை ஒத்துக் கொள்ளவில்லை.

“எவ்வளவோ வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு ஆணவக் கொலைக்கு இப்போ பழி வாங்கல் நடக்குமா? அப்படியே இருந்தாலும் ஒரு நாயால எப்படி தானா இந்தப் பழி வாங்கலைப் பண்ண முடியும்? இதுக்குப் பின்னாடி யாராவது இருக்காங்களா? கூடிய சீக்கிரம் இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வரணும்.’

இப்படி தனக்குள்ளாகவே நினைத்துக் கொண்டு சென்னையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார் கபிலன். அவரது கைபேசி அழைக்கவே எடுத்தார்.

எதிர்முனையில் கிடைத்த தகவல்கள் அவருக்கு இன்னும் குழப்பத்தையும், ஆச்சரியத்தையும் ஒருசேர அளித்தன. ராஜரத்தினத்தின் கைபேசியை ஆராய்ந்ததில் கிடைத்த தகவல்கள்தான் அவை.

ராஜரத்தினம் கடைசியாகத் தொடர்பு கொண்ட எண்ணையும், அது வல்லபனுடைய எண் என்றும், அவர்கள் இருவரும் பேசிக் கொண்ட தகவல்கள் முப்பது வருடங்களுக்கு முன் நடந்த ஒரு ஆணவக் கொலை பற்றியதாகவும் அந்தத் தகவல்கள் இருந்தன. வல்லபனின் உத்தரவின் பேரில் அமிர்தவளவன், அம்பலவாணன், மணிவேல், ராஜரத்தினம் நான்கு பேரும் கூட்டாகச் செய்ததும் தெரிய வந்ததாக சைபர் க்ரைம் உதவியுடன் கண்டறந்ததாகச் சொன்னார்கள்.

கபிலனுக்கு இப்போது வழக்கு முழுவதும் புரிந்தாலும், வளர்மதி என்னவானாள், கருப்பு நாய் எங்கிருந்து வந்தது என்பது மட்டும் குழப்பமாகவே இருந்தது.

‘வளர்மதி உயிரோட இருக்காளா? இருந்தா எங்கே இருக்கா? இல்ல, சேதுபதியை உயிரோட புதைச்ச மாதிரி வளர்மதியையும் ஏதாவது பண்ணிட்டாங்களா? அப்படி அவளையும் கொலை பண்ணியிருந்தா அதை எப்படிக் கண்டுபிடிக்கறது? கொலை பண்ண நாலு பேருமே இப்போ உயிரோட இல்ல. மிஞ்சியிருக்கறது வல்லபன் மட்டும்தான். அந்த வல்லபன்கிட்ட விசாரிச்சு உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரணும். மதுரை காவல்துறைகிட்ட இதைப்பத்தி பேசணும்.’

இந்த வழக்கில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி தனக்குள் ஒரு பட்டியல் தயார் செய்து கொண்டார் கபிலன். இன்னும் சிக்கல்கள் நீளப் போகிறதா அல்லது சீக்கிரமே முடிவுக்கு வரப் போகிறதா என்ற குழப்பம் அவரை வேறு எதிலும் கவனம் செலுத்த விடாமல் இம்சித்தது.

மீண்டும் வந்த கைபேசி அழைப்பு அடுத்த அதிர்ச்சியைத் தந்தது. இந்த அழைப்பு மதுரையில் இருந்து வந்து. சாலை விபத்தில் வல்லபன் உயிரிழந்ததாகத் தெரிவித்தது அந்த ஃபோன் தகவல். வல்லபன் பயணித்துக் கொண்டிருந்த காரின் குறுக்கே திடீரெனப் பாய்ந்த கருப்பு நாயால், கார் நிலைதடுமாறி மேம்பாலத்தில் இருந்து கீழே உருண்டு, சம்பவ இடத்திலையே வல்லபன் உயிரிழந்து விட்டாராம். ஆயாசத்துடன் ஃபோனை வைத்தார் கபிலன்.

‘இதோட வேட்டை முடியுமா? இல்லை, நமக்குத் தெரியாத, இதுவரைக்கும் கிடைக்காத தகவல் ஏதாவது இருக்கா? இந்த வழக்கால ஒரு வாரமா நிம்மதியே இல்ல. தலைவலியா இருக்கு.’

சலித்துக் கொண்டார் கபிலன். மீண்டும் கைபேசி அழைப்பு. எரிச்சலுடன் ஃபோனை ஸ்பீக்கரில் போட்டு அருகில் வைத்து, கண்களை மூடிக் கொண்டார்.

“சார், வணக்கம். நான் கூடுவாஞ்சேரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பேசறேன். எங்க ஸ்டேஷனுக்குக் கொஞ்சம் முன்னாடி ஒரு ஃபோன் வந்துது. ஒரு குடியிருப்பு பகுதில, ஒரு வீட்டுல இருந்து கெட்ட வாடை அடிக்கறதா சொன்னாங்க. ரெண்டு கான்ஸ்டபிளை அனுப்பி பார்க்கச் சொன்னேன். அவங்க சொன்ன தகவல் உங்க கேஸ் சம்பந்தப்பட்டதா இருக்கும்னு தோணுது. நீங்க கொஞ்சம் ஸ்பாட்டுக்கு வர முடியுமா? நான் லொகேஷன் ஷேர் பண்றேன்.”

சுறுசுறுப்பனார் கபிலன். இன்ஸ்பெக்டர் அனுப்பிய லொகேஷனுக்கு விரைவாகப் போகும்படி ட்ரைவரிடம் சொன்னார். யாராக இருக்கும், என்னவாக இருக்கும்? விடையைத் தெரிந்து கொள்ளும் ஆவல் தொற்றிக் கொண்டது.

கூடுவாஞ்சேரியில் சந்து சந்தாக நுழைந்து, ஆளரவமற்ற இடத்திற்கு வந்து நின்றது அவரின் ஜீப். பேய் வீடு போல் இருந்த அந்த வீட்டின் முன்பு இரண்டே இரண்டு போலீஸ் மட்டும் நின்றிருந்தார்கள்.

சுற்றியிருந்த வீடுகளில் வசிப்பவர்கள் ஏனோ வீட்டிற்குப் பக்கத்தில் வரக் கூடத் தயங்கியபடி தூரத்திலேயே நின்று மெதுவான குரலில் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

ஏதோ ஒரு வாடை குடலைப் பிரட்டுவது போல் இருந்தது. அந்த இடமே சற்று வித்தியாசமான உணர்வைத் தந்தது. மூக்கை கர்ச்சீப்பால் மூடியபடி வீட்டிற்குள் நுழைந்தார் கபிலன்.

அவ்வளவாக சாமான்கள் எதுவும் இல்லை. பராமரிப்பு இல்லை. முன் அறையில் காவல்துறை தேடிக் கொண்டிருந்த அந்தக் கருப்பு நாய் அடங்கிப் போயிருந்தது. உள்ளே இருந்த அறையில் வயதான பெண்மணி கையில் வெட்டு காயத்துடன் கிடந்தார். உடல் அழுக ஆரம்பித்திருந்தது.

“கான்ஸ்டபிள், இந்தம்மா யாரு, என்னன்னு அக்கம்பக்கம் விசாரிச்சீங்களா?”

“சார், விசாரிச்சுட்டோம் சார். யாருக்கும் இந்த அம்மாவோட பேர் கூடத் தெரியல. அவங்க வீட்டை விட்டு வெளில வந்து பார்த்ததே இல்லையாம். இவங்க வீட்டுக்குள்ளயும் யாரையும் விட மாட்டாங்களாம். எப்போ வெளில போறாங்க, சாமான் வாங்குவாங்கன்னு எதுவுமே ஒழுங்காத் தெரியல. ரெண்டு, மூணு வருஷமா இங்க இருக்காங்களாம். இந்த நாய்தான் அப்பப்போ வெளில வருமாம்.”

வீட்டை நோட்டம் விட்டார் கபிலன். உருப்படியாக எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. மேசை மேல் இருந்த சில புத்தகங்களை நகர்த்திப் பார்த்தார் கபிலன். ஒரு புத்தகத்தில் இருந்து பழைய புகைப்படம் ஒன்று கீழே விழுந்தது. கபிலன் அதை எடுத்துப் பார்த்தார்.

இளம்வயதில் ஒரு அழகான ஜோடிகள். கீழே ஏதோ பெயர்கள் எழுதியிருப்பது மங்கலாகத் தெரிந்தது. தூசியைத் துடைத்து விட்டு மொபைல் வெளிச்சத்தில் பெயர்களைப் படித்தார்.

சேதுபதி, வளர்மதி

பெருமூச்சுடன் மீண்டும் அந்தப் பெண்மணியைப் பார்த்தார். அவள் முகத்தில் முதுமையையும் மீறி ஒரு நிம்மதி தெரிந்தது. மூக்கை இறுக பொத்திக் கொண்டு சற்று நெருங்கிப் பார்த்தார்.

வளர்மதியின் இளமைப் பருவ சாயல் ஒட்டிக் கொண்டிருந்தது. அவள் கையைப் பற்றியபடி இன்னொரு உருவம் அருகே இருந்ததற்கான தடம் கூர்ந்து கவனித்த போதுதான் தெரிந்தது.

மற்றவர்கள் சொன்னது போல் இது அமானுஷ்ய நிகழ்வு என்று புரிந்தது. இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு வெளியே சொல்ல ஒரு காவல்துறை உயர் அதிகாரியான அவரால் இயலவில்லை.

வெறிநாய்த் தாக்குதலால் விபத்து என்று சொல்லி, அந்த வழக்கிற்கு அதோடு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆணவக் கொலையால் பிரிந்த இரு காதல் இதயங்களின் ஆன்மாக்கள் நீண்ட பிரிவிற்குப் பின் இணைந்து மகிழ்ந்தன.

பிரிந்தவர் ஒன்று சேர்ந்த பிறகு அங்கே நமக்கென்ன வேலை. பிரிந்த காதல் இனிமேலாவது ஒன்று சேர்ந்து வாழட்டும்.

(நிறைவடைந்தது)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 1) – முகில் தினகரன், கோவை

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 21) – தி.வள்ளி, திருநெல்வேலி