in

ஒரு கையேந்தியின் கனவு (சிறுகதை) – ✍ எஸ்.ராம்கபிலன்

ஒரு கையேந்தியின் கனவு (சிறுகதை)

ழைகளும், கையேந்திகளும் பெரும்பாலும் வாழும் இடமான கூவ நதிக்கரையும் இரயில் தண்டவாள பாலங்களுமே எங்கள் இருப்பிடங்களாய் இருந்தன

அங்கேயே அடுக்களை, படுக்கை அறை என சங்குகளும், அரசியல் தலைவர்களின் கட்அவுட்களும் வைத்து, வீடு என்ற அமைப்பை உருவாக்கி வாழ்ந்து வந்தோம்

அனைவரும் குடும்பங்களோடும், பிள்ளைகளோடும் சிரித்து பாச வலையில் வாழ்ந்தனர், அங்கு நானும் வாழ்ந்தேன் ஒரு சிலந்தியின் வலையில்.

எனக்கு சொந்தம் என்ற பெயரில் இருந்தது தோல்கள் சுருங்கி நெஞ்செலும்புகள் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் என்னுடைய தாத்தாவும், குட்டி நாய் மணியும் மட்டுமே

பையை தூக்கிக் கொண்டு நானும், மணியும் வழக்கம் போல தொழிலுக்குப் புறப்பட்டோம்

‌போகும் போது, சாலையில் வேகமாக வந்த டூவீலர், நடைமேடையில் நின்று கொண்டிருந்தவர் மீது புயல் போல மோதி விட்டு மறைந்து சென்றது.

அவர், ரத்தக்காயங்களுடன் சாலையிலையே மயங்கி விழுந்தார்,  தீடிரென அவருக்கு வலிப்பு வந்தது, வலியில் துடித்தார்

அதை பார்த்ததும், எனக்கு படபடப்பாக இருந்தது. ஓடிச் சென்று அருகில் இருந்த கடையில் தண்ணீர் வாங்கி வந்து, அவர் முகத்தில் தெளித்துக் கொண்டே அருகில் இருந்தவர்களை  அழைத்தேன்

சட்டென்று கண்ணிமைக்கும் நேரத்தில் கூடியது கூட்டம்,  சிலர் ஆடோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.

கூட்டத்தில் ஒருவர் என்னைப் பார்த்து, “சின்ன வயசுலயே பொறுப்பா இருக்கியே, என்னப் படிக்கிற?” என்றதும்

“முன்னாடி இஸ்கூல் என் அப்பனாத்தா இருந்தப்ப போனேன். பிளாட்பாரத்துல தூங்கிட்டு இருந்தவங்கள, இப்படி தான் ஒருத்தன் காரேத்தி கொன்னுட்டான். இப்ப நான் கையேந்தி” என மெல்லிய குரலில் உரைத்து விட்டு, சிறு புன்னகையுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்

நூறடி தூரம் வந்த பின் தான் என் உண்டியலின் நினைவு வந்தது. பதட்டம் கலந்த பயத்துடன் கூட்டம் கூடிய இடத்தை நோக்கி ஓடினேன்.

அங்கு உண்டியலை காணவில்லை . அருகில் இருந்த மக்களிடம் கேட்ட போது, அவர்கள் சொன்ன ஒரே பதில் “பார்க்கவில்லை” என்பதே.

பின் அழுது கொண்டே வீட்டிற்குச் சென்று, நடந்ததை தாத்தாவிடம் கூறினேன்.

அவருக்கு உண்டியல் காணாமல் போனதை விட, இனி பீடிக்கட்டு வாங்க காசு இல்லையென்ற கோபமே மேலோங்கியது

அதன் வெளிப்பாடாய், பிரம்புக் கம்பில் என் தோல்கள் கிழிய ரத்தம் ஒழுக சரமாரியாக அடித்தார்.

வலி தாங்க முடியாமல் நான் கத்தியதில், அருகாமையில் இருந்த குடும்பத்தினர் தாத்தாவை திட்டித் தீர்த்தனர்.

அதையெல்லாம் காதில் வாங்காத தாத்தா, என்னையும் மணியையும் வெளியே துரத்தினார்.

அடி வாங்கின மயக்கத்தில் நான் உறங்கிக் கொண்டிருக்க, என் மேலிருந்து கசிந்த ரத்தத்தை நாக்கால் ருசித்தான் மணி, அவன் பசி அவனுக்கு

மழையைத் தொடர்ந்த குளிர்காற்றால் பற்கள் நடுங்க,   இரவு முழுவதும் கோணியை தலையில் போட்டுக் கொண்டு, எப்போது விடியுமென திண்ணையில் நின்று கொண்டிருந்தோம்.

மறைந்த சூரியனும் காலையில் எழுந்தான். தாத்தாவும் எழுந்தார்

வழக்கம் போல பையை தூக்கிக் கொண்டு, “இன்னைக்கு காசு கொண்டு வந்தா உள்ள வா, இல்லேனா இங்கயே கிட” என்றதுடன் பார்வையை விட்டு மறைந்தார்

சிறிது நேரம் கழித்து நானும், மணியும் கையேந்தப் புறப்பட்டோம்.

ஏனோ அன்று தெருக்களில் குப்பைகளும் நெகிழிகளும் குறைவாகவே இருந்தது.

ஏனென்று விசாரித்த போது, சற்று முன்பு தான் நகராட்சி வண்டி வந்து அள்ளிச் சென்றது என்றனர்

கவலையோடு இருந்த குப்பைகளை மூட்டை கட்டிக் கொண்டு வழக்கமாக செல்லும் பழைய பேப்பர் கடைக்குச் செல்ல, அந்தப் பேப்பரும், நெகிழியும் 1 ரூபாய்’க்கு தான் இருந்தது

இப்படி மீண்டும் தினம் ஒரு ரூபாய் என, மீண்டும் புது உண்டியலில் சேமிக்க ஆரம்பித்தேன்

சில வாரங்களுக்கு பின்,  அன்றைய  ஒரு  ரூபாயை வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு, “அண்ணா.. இன்னும் ஒரு ரூபாய் தருவிங்களா?” என்று கடைக்காரரிடம் கேட்டேன்

“என்னது இன்னும் ஒரு ரூபாயா?” என வினோதமாக பார்த்தார்

“அண்ணா… நா இப்ப உண்டியல்ல பணம் சேர்த்துகிட்டு இருக்கேன், அதுல இப்ப 29 ரூபாய் வந்துருச்சு, இன்னும் ஒரு ரூபா சேத்தா முப்பது ரூபா ஆகிடும், அதான் கேக்கறேன்” என்றேன்

“சரி… எதுக்கு பணம் சேக்கற?”

“எனக்கு படிக்கணும்னு ரொம்ப ஆசை, ஆனா வசதியில்ல. தாத்தாகிட்ட கேட்டதுக்கு, நீ கையேந்தி தான் பொழைக்கணும்னு சொல்லிட்டார். அப்ப தான் ஒரு புத்தக கடைக்காரர் எங்கிட்ட சொன்னார். ‘யாரும் கத்துத் தராத பாடத்த உனக்கு ஒரு நல்ல நூல் கத்துத் தரும்’னு. அதை வாங்கத் தான் பணம் சேக்கறேன்” என்றேன்

“அது சரி… என்ன நூல் அது?”

“அதை நான் அந்த புத்தகக்கடைக்காரர்கிட்ட கேட்டதுக்கு, உண்மையா நீ படிக்க விரும்பினா அது என்ன புத்தகம்னு உனக்கு தெரிய வரும்னு சொன்னார்”

கவனமாய் நான் சொல்வதைக் கேட்ட கடைகாரரின் முகம், சட்டென சூரிய காந்தியாய் மலர்ந்தது.

மௌனமாய் மேலும் ஒரு ரூபாயை எடுத்து என் கையில் திணித்தார்

அதை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு ஓடி வந்தேன். தகரப் பெட்டியை திறந்து, உண்டியல் பணத்தை எண்ணிப் பார்க்க, அதில்  25 ரூபாய் மட்டுமே இருந்தது.

குழப்பத்தில் அழுது கொண்டே தாத்தாவிடம் கேட்க, அவர் பார்க்கவில்லை என்றார்

பணம் பறிபோன துக்கத்தில் இரவு முழுவதும் தூங்காமல் யோசித்துக் கொண்டிருந்தேன்.

நான் உறங்கி விட்டதாக நினைத்து தகரப் பெட்டியை உருட்டினார் தாத்தா

அதைப் பார்த்தும் பார்க்காதது போல் என் உறக்கம் எனும் நாடகத்தை தொடர்ந்தேன்

அவரும் நான் தூங்கிவிட்டதாய் நினைத்து, காசுகளை அள்ளி பையில் போட்டுக் கொண்டார்

மறுநாள் காலை எழுந்ததும், மனம் தாளாமல், “ஏன் நைட் என்னோட காசை எடுத்தீங்க?” என தாத்தாவிடம் கேட்க

“என்னது காசா? நா எதுவும் எடுக்கலையே” என பொய் உரைத்தார்

“இல்ல, நீங்க எடுத்ததை நான் பாத்தேன்” என கத்தியதும்

“ஆமாடா  எடுத்தேன்.  பீடிக்கட்டு வாங்க எடுத்தேன், என்னையே கேள்வி கேக்கற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா?” என கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார்

இவரின் மிரட்டலுக்கு பயந்து  எதுவும் பேசாமல் உண்டியலை வீட்டில் வைக்கக் கூடாது என முடிவெடுத்து, நானும், மணியும் அதைத் தூக்கிக் கொண்டே அலைந்தோம்

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுகஉலகியற்றி யான்“

என்ற வரிகள் அந்த அரசு பள்ளியை கடக்கும் போது எனக்குக் கேட்டது.  மெல்ல கடந்து சென்றேன்.

போகும் வழியில் இரண்டு நபர்கள் ஒரு நூலைப் பற்றி பேசியது விஷயங்கள் என் காதில் விழுந்தது

“அது தமிழுக்கே கிடைத்த பொக்கிஷம்” என அவர்கள் கூறக் கேட்டதும், என் ஆர்வம் அதிகமானது. அதன் பெயரை அவர்களிடம் கேட்டுக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

புத்தகக்கடைக்காரரிடம், “நான் வாங்கப் போகும் புத்தகத்தின் பெயர் தெரிந்து விட்டது. திருக்குறள் சரியா?” என்றதும்

ஆச்சரியத்துடன், “நீ உண்மையாகவே ஒன்றை விரும்பி உழைத்தால் இந்த பிரபஞ்சமே உனக்கு வழி வகுக்கும். அதைப் படித்தால் போதும், ஏனென்றால் அனைத்திற்கும் முதன்மை திருக்குறளே” என்றார்  கடைக்காரர்

மகிழ்ச்சியுடன் பணத்தை எண்ணிப் பார்த்த போது, ஒரு ரூபாய் குறைவாக இருந்தது

வீட்டில் சென்று பார்க்கலாமென்று ஓடினேன். வீட்டின் அலமாரி முதல் அடுப்பங்கரை வரை எங்கு தேடியும் ஒற்றை ரூபாய் கிடைக்கவில்லை

கவலையோடு வெட்டவெளியில் சென்று நின்றேன் . அங்கு ஒரே கூட்டமாக இருந்தது. அவர்களுக்கு  நடுவில் தாத்தா படுத்திருந்தார்

அவர் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் ஒட்டியிருந்தது.

மற்றவர் தடுத்தும் கேளாமல், அந்த நாணயத்தை எடுத்துக் கொண்டு தலை தெறிக்க புத்தகக் கடையை நோக்கி ஓடினேன், மணியும் பின்னாடியே ஓடி வந்தான்.

கடைக்காரரிடம் 30 ரூபாயை கொடுத்து திருக்குறளை வாங்கி, எங்கள் தெருமுனையில் நின்று, பள்ளியில் வாசித்த அதே குறளை வாசித்தேன்

அதற்கு பொருளும் தேடினேன்,  “பிச்சை எடுத்து தான் நீ உயிர் வாழ முடியும் என்ற நிலை இங்கு இருக்குமென்றால். உன்னை அந்நிலைக்கு ஆளாக்கியவன் இறந்து போவான்” என்று எழுதியிருந்தது

அதன் அர்த்தத்தை நான் உணர்ந்த போது, உறவினர்கள் தாத்தாவின் உடலை கொண்டுச் சென்றார்கள் ஊர்வலமாய்

(முற்றும்)

Click Pictures here to view April 2021 Contest Entry Videos👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. படிக்க துடிக்கும் சிறுவனின் ஏக்கம்..
    அதை திருக்குறளோடு ஒப்பிட்டது அருமை, நல்ல கதை…

  2. பாவம் அச்சிறுவன்….கதை திருக்குறளோடு ஒப்பிட்டு முடித்த விதம் மிக நன்று.

    வாழ்த்துகள்.

    கீதா

அரிசி வடாம் செய்முறை (👩‍🍳ஆதி வெங்கட்)

என்னுள் கரையும் கனவே…(சிறுகதை) – ✍ கரோலின் மேரி