in ,

கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 27) – தி.வள்ளி, திருநெல்வேலி 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1   பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6   பகுதி 7   பகுதி 8    பகுதி 9    பகுதி 10    பகுதி 11    பகுதி 12    பகுதி 13    பகுதி 14    பகுதி 15    பகுதி 16      பகுதி 17     பகுதி 18    பகுதி 19    பகுதி 20    பகுதி 21    பகுதி 22    பகுதி 23     பகுதி 24     பகுதி 25     பகுதி 26

அப்பா, அம்மாவை வழியனுப்பிவிட்டு ரூமுக்கு வந்த காவ்யா அவசரமாக ஜெய்க்கு போன் பண்ணினாள் ..ஜெய் போனை எடுத்தவுடன்…

“சாரி டா ஜெய்..நீ கூப்பிடும் போது கீழே அம்மா அப்பா வீட்டுக்கு கிளம்பிகிட்டிருந்தாங்க. மாமா அத்தை எல்லாரும் இருந்தாங்க. அதனால தான் உடனே உங்கிட்ட பேச முடியல.. அவங்கள அனுப்பிட்டு நிதானமா பேசுவோம்ன்னு தான் கட் பண்ணினேன்.”

காவ்யா குரல் கேட்டவுடன் ஜெய் மனது இளகியது..’.பாவம் அவள் சூழ்நிலையை புரிஞ்சுக்காம அவள தப்பாக நினைக்கிறோமே ..’ என்று தோன்றியது

“எப்படி இருக்க காவ்யா ..ரிசப்ஷன், கல்யாணம், எல்லாம் முடிஞ்சு நீ ரொம்ப டயர்டா இருப்ப.. அதனாலதான் நேத்து உன்ன கூப்பிடல. மேரேஜ் போட்டோஸ் எல்லாம் பார்த்தேன் உங்க ரெண்டு பேர் முகத்திலயும் ஒரு சோர்வு தான் தெரிஞ்சுது. எல்லாம் என்னால தான். நான் இங்க வரலைன்னா ..நாம வேற எதையாவது பிளான் பண்ணி இருக்கலாம் ..குடும்பம் ஒரு பெரிய கமிட்மெண்ட்டா போச்சு எனக்கு ..அதனால இப்படி ஒரு முடிவுக்கு வர வேண்டிய தாயிடுச்சு .நீயும் ஆதர்ஷும் இதனால எவ்வளவு மன கஷ்டத்திற்கு ஆளாகியிருப்பீங்கன்னு புரியுது ..”புலம்பி தீர்த்தான் ஜெய்.

“என்ன விடுங்க ஜெய்! ஆதர்ஷ் பாவம்! நமக்காக அவர் இதையெல்லாம் சகிச்சுக்க வேண்டியிருக்கு. அவர மாதிரி ஒரு ஜென்டில்மேன பார்க்க முடியாது நேற்று நைட்டு என் கிட்ட ரொம்ப ஆதரவா பேசினாரு…’ நான் ஜெய் கிட்ட சொன்னது தான் உங்ககிட்ட சொல்றேன்.. நீங்க இந்த ஒரு வருஷம் உங்க வீடு போல சுதந்திரமாக இருங்க . அன்னைக்கு சொன்னது போல உங்கள என்னுடைய கூட பிறக்காத சகோதரியா நினைக்கிறேன்னு’ சொன்னதும் என்னால தாங்க முடியல.. அழுகையே வந்துடுச்சு ..

சரிப்பா.. இங்கே உள்ளத நாங்க மேனேஜ் பண்ணிக்கறோம். நீ கவலைப்படாதே! உன்னுடைய ஜாப்ல ஜாயின் பண்ணிட்டியா..வேலை எப்படி போகுது அக்காம்டேஷன் எல்லாம் சௌரியமா இருக்கா ..சாப்பாடுக்கு என்னப்பா செய்ற நீயே சமைச்சுக்கிரியா…”

ஜெய்யுடன் பேச ஆரம்பிக்க ஒரு மணி நேரம் போனது. நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தாள் . ரூம் கதவு தட்டப்பட…” ஜெய் யாரோ கதவைத் தட்டுறாங்க.. நான் உன்கிட்ட நாளைக்கு பேசுறேன் ” என்று மனமில்லாமல் போனை கட் பண்ணினாள்.

வெளியே பாரு நின்றுகொண்டிருந்தாள்,” அண்ணி! அம்மா உங்கள கீழ சாப்பிட வரச் சொன்னாங்க .அண்ணனும் , அம்மாவும் கீழ உங்களுக்காக வெயிட் பண்ணிகிட்டு இருக்காங்க.. சாப்பிட வாங்க “

“எனக்காக வெயிட் பண்றாங்களா?” என்றவள் வேகமாக கீழே இறங்கினாள் ..

ருக்மணிதேவி ” என்னம்மா காவ்யா.. அம்மா கிட்ட பேசிகிட்டு இருந்தியா மணி 9 ஆக போகுது ..இன்னும் பசிக்கலையா? வா இங்கே வந்து உட்காரு எங்களோட ..சாப்பிடுவோம். பாரு அருமையா சப்பாத்தியும், சிக்கன் கிரேவியும் பண்ணியிருக்கா ..உனக்கு எது பிடிக்கும்னு அவகிட்ட சொன்னா அதையும் பண்ணிடுவா .”

“இல்ல அத்தை.. நான் எல்லாமே சாப்பிடுவேன். அதான் பிடிக்கும் இதான் பிடிக்கும்னு இல்ல… எனக்குனு எதுவும் தனியா செய்ய வேண்டாம் அவங்க சமைக்கிறத நான் சாப்பிடுகிறேன்” என்றாள் காவ்யா .

பொறுமையாக, தன்மையாக பதில் சொல்லும் மருமகளை ஆசையாக பார்த்தாள் ருக்மணி தேவி .’சாரதா சொன்னது போல் நல்ல குணமாகத்தான் தெரிகிறாள்.. பார்ப்போம்’ என்று நினைத்துக்கொண்டாள்.

காவ்யாவுக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. “மாயாக்கா இல்லையா? வீட்டுக்குப் போய்ட்டாங்களா?” என்றாள் ஆதர்ஷைப் பார்த்து ..

அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் ..”அவள நீ தேடவே வேண்டாம் .கரெக்டா காலையில் வந்து நிப்பா” என்றான்.

“ரொம்ப அருமையான பொண்ணும்மா ..மாமாவுக்கு தங்கச்சி மக..ஆதர்ஷ் அத்தை பேரு சாரதா ..ஒரு நாள் நீங்க ரெண்டு பேரும் அத்தை வீட்டுக்கு போயிட்டு வாங்க ..மாயா வந்தா வீடே கலகலப்பாயிடும்” .

சொல்லிவைத்தது போல மறுநாள் காலை 10 மணிக்கு மாயா வந்தாள். வந்தவள் நேராக கிச்சனில் போய் “பாரு ..மாம்ஸ் வெளியே போயிட்டாரு தானே..”

“ஆமாம்மா… பெரியய்யா அரை மணி நேரத்துக்கு முன்னாடியே போயிட்டாரு. “

“அப்ப ஜாலிதான் ..”

‘அடிக்கடி காவ்யாவை தொந்தரவு பண்ண கூடாது. ‘புதிதாய் கல்யாணம் ஆனவர்கள்.’என்று சாரதா சொல்லி அனுப்பியிருந்தால், அத்தையை பார்க்க படியேறினாள் ..

“நிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ..

நீரலைகள் இடம் மாறி

நீந்துகின்ற குழலோ …

மாதுளையின் பூ போலே

மலருகின்ற இதழோ..

மானினமும் மீனினமும்

மயங்குகின்ற விழியோ…

குறு நகையின் வண்ணத்தில் ..

குழி விழுந்த கன்னத்தில் ..

தேன் சுவையை தான் குழைத்து..

கொடுப்பதெல்லாம்

இவள் தானோ …

காவ்யா…நீ தானோ..”

பாடிக்கொண்டே ஏறியவள் காவ்யா தென்படுகிறாளா என்று தேடினாள்.ஆதர்ஷ் ரூம் திறந்திருக்க அவன் வழக்கம் போல அவனுடைய ராக்கிங் சேரில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தான் …

“என்ன அத்தான்! எங்கேயாவது ஜாலியா காவ்யாவை கூட்டிகிட்டு, ஊர் சுத்த போயிருப்பீங்கன்னு நெனச்சிகிட்டு வந்தா புஸ்தகம் படிச்சுகிட்டு உட்கார்ந்திருக்கீங்க! இதெல்லாம் உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியலையா ..சரி சரி நீங்க இப்படித்தான் தெரிஞ்சு தானே.. காவ்யா எங்கே?” என்றாள்.

“இவ்வளவு நேரம் இங்க தான் இருந்தா. இப்ப எங்க போனான்னு தெரியலை .. ஒருவேளை கீழே போய் இருக்கலாம்” என்றான்.

“சரி சரி நான் பாத்துக்குறேன்” என்றவள்.. அத்தை ரூமிலிருந்து பேச்சு சத்தம் கேட்க, அங்கே போனாள் ..காவ்யா அங்கேதான் அமர்ந்து அத்தையுடன் பேசிக் கொண்டிருந்தாள் …

“ஹேய்..மாயா அக்கா வாங்க வாங்க ..”என்றாள் ஆர்வத்தோடு.

“என்ன அத்தையும் மருமகளும் பேசிக்கொண்டிருக்கும்போது பூஜையில் கரடி மாதிரி நான் வந்துட்டேனா..? “

“ஏய் வாயாடி உட்காரு…நாங்க என்ன ராணுவ ரகசியமா பேசறோம்..சும்மா காவ்யா அவங்க வீட்டைப் பத்தி சொல்லிகிட்டிருந்தா ” என்றாள் ருக்மணி..

“அத்தை உங்களுக்கு என் கதையை கேட்டு கேட்டு போர் அடிச்சிருக்கும். இப்ப புதுசா மருமக வந்ததும் அந்தப்பக்கம் சாஞ்சிட்டீங்கப் பாத்தீங்களா?..”

பாரு மூன்று பேருக்கும் ஜூஸ் எடுத்து வந்தாள் ..முதலில் மாயாவிடம் நீட்ட..

“அம்மா பார்வதி தேவி முதலில் பட்டத்து ராணிக்கே பழரசத்தை கொடுங்கள்.

“அப்ப்பா ஆரம்பிச்சுட்டியா ? ஏண்டி போன பிறவியில் நீ நாடகக் கொட்டகையில் தான் பிறந்திருப்பே..எப்ப பாரு வசனம் பேசிட்டு ..”

காவ்யா கலகலவென சிரித்து விட்டாள் ..

“அத்தை அந்த இந்த நகைச்சுவை உணர்வு என்பது எல்லோருக்கும் வராது . அடுத்தவங்களை சிரிக்க வைக்கிறது ஈஸி கிடையாது.அது ஒரு தனி கலை. மாயா அக்கா நீங்க எப்ப வருவீங்கன்னு தான் காத்துகிட்டு இருக்கேன் .நீங்க வந்தாலே கலகலப்பா பேசுறீங்களா ..மூட் மாறிப் போயிடுது..”

“அப்ப என்னை இந்த அரண்மனையின் விதூஷகன் என்கிறாய் “

“அக்கா நானும் உங்கள மாதிரிதான். எப்பவும் கலகலன்னு பேசிகிட்டு, சிரிச்சுகிட்டு, இருக்கிறது தான் எனக்கும் பிடிக்கும். ரொம்ப சீரியஸா இருக்கிறதெல்லாம் வேலைக்கு ஆகாது ..காலேஜிலேயே சொல்லுவாங்க நான் இருக்கிற இடம் எப்பவும் கலகலப்பாக இருக்கும்ன்னு. அதே போலத் தான் நீங்களும்” என்றாள் வாஞ்சையோடு..

ஏனோ காவ்யாவிற்கு மாயாவை ரொம்பவே பிடித்துப் போனது ..அந்தக் குழந்தை மனமும், வெகுளிப் பேச்சும், கலகலப்பான சுபாவமும் அவளுக்கு தன்னையே மறுபடி பார்த்துக் கொள்வது போல இருந்தது.

ஜெய்யுடன் சந்தித்த நாட்கள் எல்லாம் எவ்வளவு கலகலப்பாக சந்தோஷமாக கழித்திருக்கிறேன். இப்போது சமீபகாலமாக எப்போதும் ஏதோ ஒரு அழுத்தம் இருக்க சிரிப்பையே மறந்து விட்டேன். இப்ப அதை நினைவூட்டுகிறது மாயாவின் கலகலப்பான பேச்சுகள் ..

“காவ்யா என்ன எங்கேயோ சிந்தனை உலகத்துக்கு போயிட்டீங்க என்னை தனியா விட்டுட்டு ..சரி வாங்க தோட்டம் ரொம்ப அழகா இருக்கும். பங்களா தோட்டத்தை ஒரு தடவை சுத்திட்டு வருவோம் .இன்னைக்கு என்னென்ன செடியில் யார் யாரெல்லாம் பூத்திருக்காங்கன்னு தெரியல..அத்தை ஒரு அரைமணி நேரம் தோட்டத்தை சுத்தி பார்த்துட்டு வர்றோம்”

“போயிட்டு வாம்மா” என்றாள் மனநிறைவோடு ருக்மணிதேவி ..

இரண்டு பட்டாம்பூச்சிகளும் செடிகளுக்கிடையே நடக்க மலர்கள் ஆசையாய் அவர்களைப் பார்த்தன..ரொம்ப நாளைக்கு பிறகு மாயாவின் நட்பு காவியாவின் மனதில் ஒரு சின்ன சந்தோஷத்தை ஏற்படுத்தியது வாஸ்தவம்தான் ..

ஆனால் மாயாவின் மனதில் மட்டும் ஒரு சின்ன சந்தேகம். கல்யாணமாகி மறுநாளே அத்தான் புத்தகத்துடன் உட்கார்ந்திருக்கிறான் இவளோ அவனைப் பற்றி பேசவே பேசாமல் வேறு ஏதேதோ பேசுகிறாள் ..என்ன ஆச்சு இவர்களுக்குள்? ..ஏதோ நெருடியது…

(அலை வீசும் 🐬)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வலிகளை ரசிப்போம் (சிறுகதை) – சுஶ்ரீ

    அநுபவி ராஜா! அநுபவி! (சிறுகதை) – ஜெயலக்ஷ்மி