in ,

இரட்டைக்கதை (சிறுகதை) – ✍ அப்புசிவா, சேலம்

இரட்டைக்கதை (சிறுகதை)

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 104)

ஒன்று 

பிரம்மராயன் அந்த சிலையையே உறுத்துப் பார்த்தான். இதை வடிக்கும் வாய்ப்பு கிடைத்த போது அடைந்த மகிழ்ச்சி இன்னும் நீடிக்குமா என  தெரியவில்லை

என்ன தான் யோசித்தாலும் அதன் உயிரோட்டம் தெளிவாகவில்லை. நாளை முதல் கோயில் திறப்புக்கு வேலைகள் ஆரம்பமாகிவிடும். இன்றே இது முடித்து கொடுத்திருக்க வேண்டியது. 

ராஜேந்திர சோழனின் திருவுருவ சிலையை வடிப்பதென்பது, அதும் காலாகாலத்துக்கு நிலைத்து நிற்கும் ஒரு சிலையை வடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்தை அவனால் இன்னமுமே நம்பமுடியவில்லை. 

தஞ்சையின் மிக எளிய சிற்பியான பிரம்மராயன், சிறுசிறு கோயில் சிற்பங்களை வடித்து காலத்தை ஓட்டிவந்தவன். குழந்தைப்பேறின் போது வயிற்றில் குழந்தையுடன் மனைவி இறந்துவிட தனித்துவிடப்பட்ட அவனுக்கு இந்த சிற்ப வேலைகள்தான் ஆறுதல். 

மிக தீவிர வேலைகாரன். அவனது சிற்பங்கள் பேசும் வல்லமையுடையது. எனினும் அரச வேலைகளோ அல்லது மிகப்பெரும் உருவாக்கங்களிலோ பங்கெடுக்கும் சந்தர்ப்பம் அவனுக்கு வாய்க்காமலேயே இருந்தது. 

ஆனாலும் இவனது திறமைக்கு கேட்கும் தங்கத்தை எளியமக்கள் மறுப்பில்லாமல் தந்து வருவதாலும், தொடர்ந்து வேலைகள் கிடைத்ததாலும், பெரும் பொறுப்புகளில் கிடைப்பதுபோன்று அவனும் சம்பாதித்தான்.  

தனிமை வாட்ட, தனது கவனத்தை பணத்தை பெருக்கும் வழிகளில் செலவிட்டான். இருபது கழஞ்சு பொன் பெறும் வேலைகளுக்கு இருமடங்கு பொன் கேட்டு பெற்றான். தவிர, தன்னிடம் சேரும் அளவில்லாத செல்வத்தை வேளாண் மக்களின் தேவைக்கு நூறுக்கு நாற்பது என்ற வகையில் வட்டிக்கும் கொடுத்தான். 

அது அரசால் அங்கீகரப்பட்டதாலும், எளிய மக்கள் நியாமாக திருப்பித் தருவதாலும் செல்வம் குவிந்தது அவனிடம். சேரும் செல்வம் அவனுக்கு அளவில்லாத போதையைத் தந்தது. 

கங்கை கொண்ட சோழபுரம் என்ற இந்த திட்டத்தை உத்தமசோழனாம்  ராஜேந்திரன் அறிவித்த காலம் தொட்டு… அதைபற்றி பெரிதும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் சென்ற மாதம் தலைமை கணக்காயர் இவனை சந்தித்தார்.

“இதை நீ கண்டிப்பாக செய்யவேண்டும் பிரம்மராயா…. “ 

“என்னால் இது முடியுமா மாசாத்தனாரே….” 

“உன் சிறப்பு கேட்டுதான் வந்தேன் தம்பி. தலைமைச்சிற்பி பெருந்தேவனார் தானே எடுத்துச்செய்ய பிரியப்பட்டு ஒதுக்கிக் கொண்ட வேலையிது. மற்றவர்கள் பணிகளை முடிக்கும் தருவாயில், பெருந்தேவனாரின் உடல் நிலை சற்று மந்தமாக இது நின்றுவிட்டது. கங்கைகொண்டானின் திருவுருவச்சிலை கோயில் நிற்கும் காலந்தோறும் நிலைக்கும் சிறப்புடையது. அதை அவசரகோலத்தில் யாரிடமும் ஒப்ப அவருக்கு மனமில்லை. ஊரெல்லாம் விசாரித்து, உன்னை கண்டறிந்தேன்… தயவுசெய்யப்பா… “ 

ஒரு தலைமை கணக்காயர், அரசருடன் நேரிடை தொடர்புகொண்டவர். அவர் தன்னிடம் கெஞ்சுவது ராயனுக்கு சற்று இறுமாப்பாய் இருந்தது.  

“அரச வேலை… உங்களுக்காக ஏற்றுக் கொள்கிறேன்… ஆனால் என் ஊதியம்…? “ 

“அதற்கு கிலேசப்படாதே… இது தனிச்சிறப்பான ஒரு சிலை. அரசருக்கு வியப்பளிக்க அவருக்கே தெரியாமல் செய்து வருகிறோம். உனக்கு எண்பது கழஞ்சு பொன்னும், ஓராண்டுக்கான தானியமும் தருகிறேன்… “ 

வியப்பில் வாயடைத்துப் போனான் பிரம்மராயன்.. அவன் எதிர்பார்த்தது இருபது கழஞ்சு பொன் மட்டுமே. அவர் சொல்லச் சொல்ல அந்த வேலையின் பிரமாண்டம் அவனுக்கு தெரிந்தது. 

எனினும் அதை காட்டிக் கொள்ளாமல், “இன்னும் பத்து சேர்த்துக் கொடுங்கள், முடித்து தருகிறேன்… “ என்றான். 

மாசாத்தனாருக்கு அவனது மனநிலை புரிந்தது… ஆனாலும் வேறுவழி தெரியவில்லை அவருக்கு. 

“ஒதுக்கப்பட்டது உடன்… பெருந்தேவனாரின் தனி அன்பளிப்பும் சேர்த்துதான் சொல்லியிருந்தேனப்பா… பரவாயில்லை…  எனது சேமிப்பில் அந்த பத்து கழஞ்சு பொன்னும் தருகிறேன்…. “ என்று சொல்லிவிட்டு சென்றார். 

மிக ஆர்வமாய் செய்ய ஆரம்பித்தான். தஞ்சை பெரிய கோயில் ஆணுருவாய் அமைய, இந்த கோயில் பெண் உருவாய் அமைகிறது என்பதை கேள்விபட்டதால்.. இராஜேந்திர சோழமன்னனின் முகம் சற்று பெண் சாயலில் வருமாறு வடித்தான். 

அழகாகவே வந்தது. ஆனால் தூரத்தில் இருந்து பார்க்க… முகம் ஜீவனற்று இருப்பதையும், கண் திறக்க அது ஒரு பெண் உருவாகவே மாறும் அபாயம் இருப்பதையும் கண்டு அதிர்ந்துபோனான். 

நாளை காலை சிலையை எடுத்துச்செல்ல வீரர்களுடன் மாசாத்தனார் வருவதாக சொல்லியிருந்தார். கூடவே சன்மானத்தையும் தருவதாக சொல்லியனுப்பியிருந்தார். 

செய்வதறியாது திகைப்புடன் எழுந்த பிரம்மராயன்… திறப்புவிழாவுக்கு தயாரான கோயில் பிரகாரங்களில் கால்போன போக்கில் சுற்றினான். கிட்டத்தட்ட நூற்றி எண்பது அடி நீளம் கொண்ட மதிலை மூன்றுதடவை சுற்றியிருப்பான்.

பின் கோயிலின் பிரகாரங்களில் அலைந்தான். பதிக்க தயாராக வைக்கப்பட்டிருந்த சிற்பங்களை காண, அவனது சிற்பிமனம் விமர்சனங்களை தெளித்துக்கொண்டே சென்றது. இன்னும் சிறப்பாக செய்யவேண்டிய நெளிவுகளை தனக்குள் பேசிக்கொண்டான். 

சிலது அவனுக்கு ஆர்வமூட்ட, நின்று ரசித்தான். பெரியகோயிலைவிட இதில் சிற்பங்கள் மிக அழகாக வடிக்கப்பட்டிருந்தாக அவனுக்கு தோன்றியது. 

உடல் அசதி தெரிய.. வெளிவந்தவன்… சிங்கமுகம் கொண்ட கிணறுபோன்ற குளத்தின் வாயிலில் சோர்ந்து அமர்ந்தான். மறுநாளை நினைக்க அவனுக்கு வெலவெலப்பாக வந்தது.  

‘நூறு கழஞ்சு போதாதா ராயா..?’ என்று சிங்கமுகம் இவனைப்பார்த்து சிரித்தாற்போலிருந்தது. 

இவ்வளவு அழகிய சிற்பங்களின் மத்தியில் அவனதும். ஆனால் இவ்வளவு சிற்பங்களையும் காணும் மக்கள்… அதைவிட கடாரம்வென்ற இராஜேந்திரனின் திருவுருவை எப்படி ஆவலாய் காண எண்ணுவார்கள்… அதை சாயந்திர பொழுதுக்குள் எப்படி முடிப்பது என்று தெரியாமல் கண்மூடினான். 

“தம்பி… ராயனா… கும்பிடபோன தெய்வமப்பா நீ… “ என்ற குரல் கேட்டு கண்விழித்தான். அது மீனாட்சியம்மாள். 

“என்ன தாயே… இங்கே… “ என்றான் பிரம்மராயன். 

மீனாட்சியம்மாள் சற்று முதியவள். ஒரு எழுபது ஆண்டாவது கடந்திருப்பாள். 

“சொல்வது ஒரு பக்கமப்பா… களைத்து சோர்ந்திருக்கிறாய்… இந்த அப்பத்தை சிறிது சாப்பிடு முதலில்”

அப்பம் விற்று காலத்தை ஓட்டும் கிழவிக்கும் யாருமில்லை. தனது செலவு போக மீதமான வருவாயை ராயனிடம் கொடுத்துவைப்பதும், அவசர தேவைகளுக்கு பின்அவனிடம் சிறுக பெற்றுக் கொள்வதுமாக இருப்பாள். 

இது போல பலரின் சேமிப்பும் ராயனிடம் உண்டு. அவனது கணக்கீடே வேறு. எந்த ஆவணங்களும் இன்றி பெறப்படும் இந்த செல்வம், அவனது சேமிப்பில் கணிசமானதாக இருந்தது. சிலர் மறைந்துவிட திருப்பித்தர வேண்டியதில்லை. 

பசியின் வீச்சு அப்போது தான் அவனுக்கும் உறைத்தது. அவசர அவசரமாக அந்த அப்பத்தை பிட்டு வாயிலிட்டு விழுங்கினான். 

“ நீ சொல்… அம்மா…” என்றான் சாப்பிட்டவாறே.

“மெதுவா சாப்பிடு மகனே…. உங்கிட்ட எவ்வளவு கொடுத்து வச்சிருப்பேன் ராயா….”

ராயனுக்கு லேசாக பிசிறடித்தது. 

“கணக்கு பார்க்கணும் கிழவி… இப்போது என்ன அதுக்கு….? “ 

“ஒண்ணுமில்லையப்பா… எனக்கும் வயசாகுது… எப்போ இந்த சிவன் கூப்பிடுவானோ தெரியலை… என் கொடுப்பினை, இந்த கோயிலை பார்த்துடுவேன். ஆனால் ஒரு உறுத்தல்… “ 

“என்ன… இந்த வயசில உறுத்தல்…. “ 

“இவ்வளவு அழகான கோயிலில் என் பங்கும் இருந்தா நல்லாருக்குமில்ல… அதுதான் நேத்து கனாவில தோணியது. என் பணத்தை கோயில் நிர்வாகத்தில் கொடுத்து…. “ 

ராயனுக்கு நன்றாக விக்கியது.  “ அட கிழவி… உனக்கு மனநிலை சரியில்லையா… ஒரு பத்து பொன் கூட தேறாது… உன் சேமிப்பு.. இவ்வளவு பெரிய கோயிலில்… ஒரு இரண்டடி கல்லை வாங்ககூட ஆகாது… உன்னை எதிர்பார்த்தா ராஜா உட்கார்ந்திருக்கார்… நினைப்பை பாரு… “ 

பணம் கைவிட்டு போவதாய் அவனால் கற்பனை செய்ய கூட முடியவில்லை. 

“அது சரி தான் தம்பி… எனக்கு சிலை வைக்க வேணாம்… ஆனா நீ சொன்ன கல் என்பேரை சொல்லுமில்லையா… “ 

“அம்மா… அவசரப்படாதே… இதுக்கெல்லாம் பட்டயத்தில் பேர் வராது… அப்புறம் பாக்கறேன்… “ என்று அவசரமாக கிளம்ப ஆயத்தமானான் பிரம்மராயன். 

“நீ சொல்வதும் சரிதான். யாருக்கும் தெரியாது… பட்டயம் போடமாட்டார்கள். ஆனால் யாருக்குன்னு சேர்த்து வைக்கிறேன்..?… கொடுத்தால் என் மனசுக்கு தெரியுமில்ல… அந்த சிவனுக்கும் தெரியுமில்லையா… அதான் தோணுச்சு.. சரி விதி விட்ட வழி…” என்று மீனாட்சியம்மாள் சொல்ல பிரம்மராயனுக்கு தலையில் யாரோ பொளேரென்று அறைந்தாற்போலிருந்தது. 

யாருக்குன்னு சேர்த்து வைக்கிறேன்..?… 

யாருக்குன்னு சேர்த்து வைக்கிறேன்..?… 

யாருக்குன்னு சேர்த்து வைக்கிறேன்..?… 

“நான் கிளம்புகிறேனப்பா… உனக்கு பசி தீரலை போல… இன்னொரு அப்பம் சாப்பிடுகிறாயா… “  என்று கேட்ட மீனாட்சியம்மாளை உறுத்துப்பார்த்தான் பிரம்மராயன்

அழகு வயதில் இல்லை. செல்வத்தில் இல்லை. இதோ இந்த மீனாட்சியின் அன்பு முகத்தில் இருக்கிறது… கண் திறந்தார் போலிருந்தது அவனுக்கு. 

“ஏனப்பா அப்படி பார்க்கிறாய்….? “ 

“ஒன்றுமில்லையம்மா… பசி அடங்கியது. மனசு நிறைவாய். நாளை காலை வீட்டுக்கு வா… உன் பொன் … அத்துடன் உன் மகனாக என் தொகையையும் சேர்த்து தருகிறேன். உன் ஆசையை மகனாய் நிறைவேற்றுகிறேன்” என்றான் பிரம்மராயன். சொல்லச்சொல்ல அவன் கண் கலங்கியது. 

“அடடா… நீ கொடுத்தாலும் இல்லையென்றாலும் நீ எனக்கு மகன்தானப்பா “ என்று சிரித்தாள் மீனாட்சியம்மாள். அந்த சிரிப்பையும் கண் ஒளியையும் மனதில் பதித்துக்கொண்டான் பிரம்மராயன். 

வேகமாக திரும்பிய அவன், தன் சேமிப்பு முழுவதையும் எடுத்து மூட்டையைக் கட்டினான். மறுநாள் வரப்போகும் சன்மானத்தையும் பாடசாலைக்கு தருவதாக ஓலையெழுதினான். நிறைவாய் அந்த சிற்பத்தின் முன் அமர்ந்தான். 

மீனாட்சியம்மாளின் சிரிப்பை அதற்கு கொடுத்தான். கண்ணில் அந்த ஒளியை இடம் மாற்றினான். தூரத்தில் இருந்து பார்க்க…. கம்பீரமும், பெண்மையும் கலந்து உயிரோட்டமாய் சிரித்தான் இராஜேந்திரசோழன். 

இரண்டு 

இருகைகளிலும் வழிந்த ரத்தத்தின் வாசனை மூளையில் எட்ட, அப்படியே விக்கித்து அமர்ந்தார் சோழியவரையன். என்ன ஆயிற்று எனக்கு என்ற கேள்வி அவர் மனதில் பேயாட்டம் போட்டது. கண்கள் இருட்டினார் போல தோன்றியது. 

இன்று காலை நேரம் மீண்டும் திரும்பாதா… திருத்திக் கொள்வேனே… என்று பரிதவிப்புடன் சற்று மயக்கம் வந்தது அவருக்கு. 

இன்று காலை சோழியவரையன் மெதுவாக சென்றடைந்த போது பிரம்மராயன் வீட்டில் இல்லை. தூரத்தில் இருந்து வந்த களைப்பின் வலி தெரிய, அப்படியே ராயனின் வீட்டுத்திண்ணையில் அமர்ந்தார். 

சிறிது தண்ணீர் அருந்தினால் நன்றாக இருக்கும் என தோன்ற சுற்றிலும் தேடி, மூலையில் இருந்த பானையிலிருந்து எடுத்து அருந்தினார்.. அதை எடுக்கும் போது ஜன்னலின் வழியே பிரம்மராயனின் சிற்பங்கள் கன்ணில் பட்டன. 

அழகழகான தெய்வ உருவங்கள். உயிரோட்டம் ததும்பும் வேலைப்பாடு. பிரம்மராயனின் திறமையை கேள்விபட்டதுண்டு. எனினும் நேரில் காண  அது இன்னமும் அதிகரித்தது. 

தான்வந்த காரியத்தின் பாரம் புரிய, சோழியருக்கு ரசனையின் ஆர்வம் மட்டுபட்டது. இன்று அறுபது கழஞ்சு தருவதாக ராயன் சொல்லியிருந்தான். அரசுக்கு கட்டத்தவறிய நிலவரியின் தொகை நாற்பது இருக்கும். 

கடன்கள் ஆக ஒரு பத்து கழஞ்சு போகும். மீதம் வைத்து மகளின் திருமணத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும்.  நேற்று வந்திருந்த வரி அதிகாரியின் கோபமான பேச்சு சோழியவரையனுக்கு நினைக்கவே பயமாக இருந்தது. 

அதிகாரி மிக கண்டிப்பானவர் மட்டுமல்லாமல், சோழபுரம் கோயிலும் முடியும் தருவாயில் இருப்பதால், அதன் தேவைக்கு, அரசின் கடுமையான ஆணையின்படியும் அவர் செயல்படவேண்டியிருந்தது வரையனுக்கு புரிந்தது. 

வைத்திருந்த ஆறு காணியிலும் சோழியவரையனுக்கு நல்ல வருவாயே இருந்தது. ஆசை யாரையும் விடுவதில்லையே. தூரத்து துறைமுக நண்பர்களுடன் இணைந்து  கப்பல்களில் துணிவகைகளை பாரசீக நாட்டுக்கு அனுப்பும் தொழிலில் ஈடுபட்டு, கவிழ்ந்த கப்பலுடன் அவரது செல்வங்களும் மூழ்கியது. 

அனுபவமில்லாத கப்பல் வியாபாரிகளை, அதிக லாபம் ஈட்டும் பொருட்டு அமர்த்தியதால் ..இருப்பதையும் இழந்தார். ஆனாலும் யாரையும் ஏமாற்றாத குணமும், தர்மங்களும் சோழியவரையனுக்கு பாதுகாப்பாய் இருந்தது. 

அந்த மான வாழ்வு,  நாளை வரி செலுத்தாதுபோனால் பறிபோகும் அபாயம்.  பிரம்மராயன் நூறுக்கு நாற்பது வீதம் காசுகள் தருவதாக கேள்விபட்டு அவனிடம் கேட்டது நல்லதாக போயிற்று. 

அவனை வரையனுக்கு அறிமுகம் இல்லையே தவிர ராயனுக்கு அவரை நன்கு தெரிந்திருந்தது. உடனே சம்மதம் சொல்லி இன்று வரச்சொல்லியிருந்தான். சிற்ப வேலைகளில் சிறப்பான வருமானம் மட்டுமல்லாமல், வட்டிக்கு கொடுத்து வாங்குவதிலும் வல்லவனான பிரம்மராயனுக்கு சேரும் செல்வத்தை அவன்பின் அடக்கியாள குடும்பமோ, வாரிசுகளோ இல்லையென்பது இயற்கையின் விசித்திரமாக அவருக்கு தோன்றியது.

 நடந்து வந்ததின் அசதியில் அப்படியே திண்ணையில் சாய்ந்து கண்ணயர்ந்தார். எவ்வளவு நாழிகையோ…. 

“ அய்யா… எழுந்திருங்க… அய்யா…” என்ற பிரம்மராயனின் குரல் அவரை எழுப்பியது.

“ ஆ…மன்னிக்கணும் பிரம்மராயா… அசந்துவிட்டேன்… “ 

“தெரிகிறது அய்யா… ஒரு அவசர வேலையாக கோயில் வரை போய் வந்தேன். முதலில் இதை சாப்பிடுங்கள்…பிறகு எதுவும் பேசலாம்… “ என்ற ராயன், இரு அப்பங்களையும், நான்கைந்து பணியாரங்களையும் அவருக்கு அளித்தான். 

மனது மறுக்கச் சொன்னாலும் அதை மீறி பசி அவற்றை சாப்பிடத் தூண்டியது. சாப்பிட்டுக் கொண்டே அவனிடம் பேச ஆரம்பித்தார். 

“விழாவுக்கு நாள் நெருக்கமே… கோயில் வேலை எவ்வளவு ஆகியிருக்கிறது தம்பி…” 

“முடியும் தருவாய் தான் அய்யா… இன்னும் ஒருவாரத்தில் கங்கைகொண்டானாம் உத்தமசோழன் வருகிறார். வந்த இருநாட்களில் கும்பாபிஷேகம் ஆகிவிடும் “ 

“ஓ…. சரி… ம்ம்… மகிழ்வான நிகழ்வு தானப்பா… “ 

கும்பாபிஷேக நிகழ்வுகூட மனதில் நிலைக்காத அவரின் மனநிலை அவருக்கு சுயவிரக்கத்தை தோற்றுவித்தது. 

“நான் அதில் பெரும் வேலைகளை செய்யவில்லை அய்யா… ஆனாலும் கடைசி நேரத்து அதிர்ஷ்டமோ என்னவோ… இராஜேந்திரனின் திருவுருவச்சிலையை செய்யும் பேறு எனக்கு வாய்த்தது.. இன்று அதன் கண்திறக்கும் வேலை மட்டுமே… “ என்ற ராயன், சோழியவரையருக்கு அருந்த சிறிது நீராகாரத்தை கொடுத்தான். 

“இது மிகப்பெரும் பேறுதானப்பா… திருவாதிரை நாளில் உதித்த, வானவன்மாதேவியின் வாரிசுக்கு சிலைவடிக்கும் பேறு… பாக்கியம். “ 

“ஆமாம் அய்யா… நேற்றுவரை… அதன் படைப்பில் திருப்தி இல்லாமல் பயந்துகொண்டிருந்தேன். இன்று முடித்துவிடும் ஆர்வம் வந்துவிட்டது… காலத்திற்கும் நிலைக்கும் படைப்பல்லவா… “ 

“ஆனால், ரத்த ஆறு ஓடிய கங்கைபோரை நினைவுபடுத்தும் அந்த பெயர்தான் சற்று உறுத்துகிறது… கங்கைகொண்ட சோழபுரம்… “ 

“அந்த போர்… ஆக்ரமிப்புக்கு இல்லையே…. சோழகங்க ஏரியை சுத்தப்படுத்த கங்கா நீரை கொண்டுவரச்சென்றபோது இகழ்ந்து தடுத்தவர்களை எதிர்த்து வென்றது… உத்தமசோழனின் தவறில்லையே… “ 

“அதுவும் சரி தான்… ஏரி நன்றாக அமைந்துள்ளதா…. “ 

“கடல் போல் உள்ளது அய்யா… கோயிலை இதுவரை நீங்கள் பார்வையிடவில்லையா… “ 

“இல்லை… தம்பி.. சிறிது வேலைச்சுமை… தவிர முடிவடைந்து… அரசர் வரும்போது பார்த்துக் கொள்ளலாமென…. “

“அரசருடன் இளவல் இராஜகேசரியும் வருகிறாராம். இங்கே மாளிகைமேட்டு அரண்மணை தயாராகிறது “ என்று சொல்லியபடியே பிரம்மராயன் வீட்டுக்குள் சென்றான். 

ஏதோ பெரும் மூட்டையை தூக்கி வைக்கும் ஓசையும், தொடர்ந்து நாணயங்களின் உலோக ஓசையும் கேட்டது. மனநிறைவுடன் அமர்ந்திருந்தார் சோழியவரையன். 

சிறிது நேரமாக… “அய்யா… உள்ளே வாருங்கள்… இங்கே அமர்ந்து பேசலாம் “ என்ற பிரம்மராயனின் குரலுக்கு அவசரமாக எழுந்து உள்ளே சென்றார் சோழியவரையன். 

அங்கே பிரம்மராயன் சம்மணமிட்டு அமர்ந்திருந்தான். அவன் முன் ஒரு பெரிய பானை கவிழ்ந்து இருந்தது. அதில் இருந்து கழஞ்சுகளும், செப்பு ,கருங்காசுகள் அத்துடன் ஈழகாசுகளும் சிறு மலையாக கொட்டப்பட்டிருந்தது. 

ராயன் அவற்றை ரகவாரியாக பிரித்து, பக்கத்தில் இருந்த ஒரு ஓலையில் எழுதிக்கொண்டே வந்தான். 

“இதெல்லாம் என் மொத்த சேமிப்பு அய்யா…. “ என்றபடி எண்ணிக்கொண்டே பேச ஆரம்பித்தான் ராயன்.

அவனது செழிப்பை காட்டுகிறானோ என்று ஒரு நிமிடம் தோன்றிய எண்ணத்தை ராயனின் இயல்பான பேச்சு துடைத்தது. 

“நல்லது ராயா… உழைப்புக்கேற்ற சேமிப்பு. இதை செய்யத்தவறியதன் விளைவுகள் நான் அனுபவித்திருக்கிறேன்… “ 

“நீங்கள் பெரியவர் … உங்களிடம் மனம்விட்டு பேசுகிறேன். என் உழைப்பின் பலன் இதில் பத்தில் ஒரு பகுதியே… மீதமெல்லாம் பாவத்தின் சம்பளம். ஆமாம் … ஒன்றுக்கு நான்காக சிலைகளுக்கு ஏமாற்றி பெற்றது… தவிர அநியாய வட்டியின் மொத்த உருவம் இந்த காசுகள்” என்று ராயன் சொல்ல, அதற்கு என்னவிதமாக பதிலுரைப்பது என்று திணறினார் சோழியவரையன். 

“தவறாக எண்ணாதீர்கள்… இன்று கோயிலில் ஒரு மூதாட்டி தன் மொத்த சேமிப்பான பத்து கழஞ்சுகளை கோயிலுக்கு கொடுக்க … அவளிடம் உனக்கு சேமிப்பு வேண்டாமா என கேட்டேன்… ‘யாருக்காக நான் சேர்த்து வைக்க வேண்டும்’ என்ற அவளின் ஒரு கேள்வி என் கண்களை திறந்தது…“ 

“அதிசயம் தான்… திறப்பு காணாத கோயிலிலும் ஆண்டவனின் திருவிளையாடல்… “ 

“ஆமாம் அய்யா… ஊர் தூற்ற சேர்த்து… ஆறடி மண்ணில் புதைய… தேவையா… 

அது தான்.. ஒரு தெளிவுடன் வந்தேன். மனம் நிறைவாக இருக்கறது. இந்த பொன் கழஞ்சுகளை கோயிலின் கலச வேலைகளுக்கும், மீதமுள்ளதை வேதபாடசாலைகளுக்கும் என் பங்காக ஓலை எழுதிக் கொண்டிருக்கிறேன். தவிர இராஜேந்திரனின் உருவுக்கு சன்மானமாய் நாளை கிடைக்கும் நூறு கழஞ்சுகளை சிங்கமுக கிணற்றின் பராமரிப்புக்கு தரவும் எழுதி வைத்திருக்கிறேன். “ 

“சற்று அவசரப்படுகிறாயோ… உனக்கு அதிக வயதாகவுமில்லை… சிறிதை தானம் செய்… முன்னூற்றம்பது கணிக்கு மேல் நிலமுள்ள கோயிலுக்கு வராத வருவாயா… “ 

“இல்லை அய்யா… தந்தையாக நினைத்து உங்களிடம் சொல்கிறேன்… ‘யாருக்காக… ‘ என்ற கேள்வியின் வீரியம் மனதில் ஆழ பதிந்துவிட்டது. தவிர எனக்குள்ள மூன்று வேலி நில வருவாயும்… சிற்ப வேலையின் வருவாயும் போதும் எனக்கு… “ 

“உன் விருப்பமப்பா… சரி… நேரம் வெகுவாக ஆகிறது.. மகளும் தேடுவாள்… நான் விடைபெறவா…. “ 

“ சரி அய்யா… “ என்று ராயன் சொல்ல… தயங்கியபடி… கேட்டார் சோழியவரையன். 

“தம்பி… ஒரு அறுபது கழஞ்சு கேட்டேனே….. “ 

“ஓ…அதை மறந்தேனே….. எனக்கு இருநாளில் பழைய நிலுவைகள் வர இருக்கிறது. ஒரு எண்பது கழஞ்சு இருக்கும். அதை அப்படியே உங்களுக்கு தருகிறேன். வட்டிகூட வேண்டாம்… முடியும்போது சிறுக சிறுக தாருங்கள்… “ 

சோழியவரையனின் தலையில் இடி விழுந்தார் போலிருந்தது. “அடடா… தம்பி… எனக்கு நாளை தான் தேவை.. மிக அவசரம்… நாற்பது மட்டும் தந்து உதவு.. அது கூட போதும்…. “ 

“மன்னிக்கவும் அய்யா… தவறாக எண்ண வேண்டாம். இந்த செல்வம் முழுதும் தானம் செய்ய சபதம் எடுத்துக் கொண்டேன்… இரு நாட்கள் மட்டும் பொறுங்கள்… “ 

“இந்த தானம் தர சில நாட்களாவது ஆகுமே… எனக்கு உதவுவதும் தானத்தில்தானப்பா சேரும். உன் காலில் வேண்டுமானாலும் விழுகிறேன்… என்னை காப்பாற்று”  என்று சோழியவரையனின் நா தழுதழுக்க… அவர் குரல் உடைந்து போனது. 

அவரின் அந்த திடீர் உணர்ச்சி கொப்பளிப்பை எதிர்பாராத பிரம்மராயன் விக்கித்து நிமிர்ந்து பார்க்க… தான் கொட்டிய வார்த்தையின் வீரியம் உறைத்தது சோழியவரையருக்கு. 

இதுநாள் வரை சேர்த்து வைத்திருந்த பெயர், மதிப்பு அனைத்தையும் வெறும் நாற்பது கழஞ்சு பொன்னுக்கு விலைபேசிய உணர்வு அவருக்கு ஏற்பட்டது. ராயனின் வெறித்த பார்வையும்.. அவன் முன் குவிந்து கிடந்த செல்வமும் மூளையில் கிறுகிறுப்பை ஏற்படுத்தியது. 

என்ன நடந்தது என்று ராயன் யூகிக்கும் முன்னே… அருகில் இருந்த முடித்து வைக்காத ஒரு சிலையின் முனை அவன் தலையில் தாக்கியது. தெறித்த ரத்தம் சோழியவரையரின் கையெல்லாம் வழிந்தது. 

இருகைகளிலும் வழிந்த ரத்தத்தின் வாசனை மூளையில் எட்ட, அப்படியே விக்கித்து அமர்ந்தார் சோழியவரையன். என்ன ஆயிற்று எனக்கு என்ற கேள்வி அவர் மனதில் பேயாட்டம் போட்டது. கண்கள் இருட்டினார்போல தோன்றியது. 

இன்று காலை நேரம் மீண்டும் திரும்பாதா… திருத்திக்கொள்வேனே… என்று  பரிதவிப்புடன் சற்று மயக்கம் வந்தது அவருக்கு. சுதாரித்து எழுந்தவர்..கைகளை கழுவினார். ஒரு கயிறை கொண்டு ராயனின் உடல் தூக்கில் தொங்குவது போல கட்டி… வீட்டின் பழைய உத்திரத்தில் மாட்டிவிட்டார்.

அந்த பொன் கழஞ்சு மூட்டையை மட்டும் எடுத்து தோளில் போட்டுக்கொண்டு… கண்களை துடைத்தவாறு வெளியேறினார். அவர் கால்கள் அவரை மீறி கோயிலை நோக்கி இட்டுச்சென்றது. பாணர் தெரு… குயவர் தெரு… அடுத்து அந்தணர் வீதி… தாண்டி சென்றார். 

கடைவீதியில் தங்க வைர வைடூரிய கடைகளை பார்த்தபடி… இதெல்லாம் வாங்குவேன் என்று மனதில் நினைத்தபடி சென்றார். பின் காவலர் வீதியை கடக்கும்போதும் அவர் மனதில் பயம் தோன்றவேயில்லை. 

கோயிலின் நூற்றியெண்பது அடி மதிலை சுற்றிச்சுறி வந்தார். ஆறடி உயர்ந்த நந்தியை பார்த்து… ‘ நான் உன்னை விட பெரியவன் நந்தியே..’ என்றார். உயர்ந்த துவாரபாலகர்கள் இவரைப்பார்த்து முறைப்பதாய் தோன்றியது. 

அந்த பார்வையை தவிர்க்க வெளிவந்தவர் விமானம் அருகே வர… மேலே ஏற்ற வைக்கப்பட்டிருந்த அந்த பிரமாண்ட சிகரத்தின் மீது மெதுவாக சாய்ந்து ஆசுவாசம் கொண்டார். மனதில் இருந்த கவலைகள் மறைவதாய் பிரமை ஏற்பட்டது. 

முகத்தில் நிழல் பட நிமிர்ந்து பார்த்தவர் மேலே அந்த கழுகைக்கண்டார். அதன் கைகளில் ஒரு பெரிய முயலை தூக்கியபடி சுற்றிச்சுற்றி வந்தது. 

‘கழுகே… நானும் உன்னைப் போல தான். பார்ப்பவர்… முயல் பாவமென்பர்… ஆனால் வேட்டை உன் நியதி… நானும் என் பசிக்கு வேட்டையாடினேன்… தவறில்லையே… ‘ என்று சிறு மர்மப் புன்னகையுடன் முணுமுணுத்தார். 

சிறிது சாய்ந்து கண்மூட… அந்த கழுகு பாரம் தாளாமல் தவறவிட்ட முயல் படுவேகமாக அவரின் தலைமீது விழுந்தது. விழுந்த வேகத்தில்… நிலைதடுமாறி அவர் சரிய… அந்த பொன் மூட்டை… கைநழுவி… அந்த சிகரத்தின் மையதுளையில் போய் விழுந்தது. 

******** 

“ஆஹா… அதிர்ஷ்டகாரன் தான் நீ சோழியவரையா… “ என்ற குரலை கேட்டு 

மெதுவாக கண் விழித்தார் சோழியவரையன். அது மருத்துவர் அமரபரணன். 

அவரருகே வரையனின் ஒரே மகள் கண்களை துடைத்தபடி… சிறிது புன்னகையுடன் அவரருகே வந்தாள். 

“என்ன… ஆயிற்று… எனக்கு… மருத்துவரே… “ 

“ஒன்றுமில்லை… ஓய்வு போதும்… தேறிவிடுவாய்.. “ 

“கும்பாபிஷேகம் பார்க்க வேண்டும்… வரி கட்ட வந்து விடுவாரள்.. என்னை தூக்கிவிடுங்கள்… “ 

“அட கடவுளே… வரையா… உனக்கு தலையில் அடிபட்டு விபத்து அப்பா…. ஒரு மாதகாலமாக மயக்க நிலையில் இருந்தாய்… நீராகாரம்… பால் மூலம் உன்னை காப்பாற்றினோம். இந்த மாதிரி மீண்டு தெளிவது அதிசயம்தான். சோழ அரசில் அதிசயத்துக்கு பஞ்சமேது… “ 

“என்ன… ஒரு மாதமா…. அரசர் வந்து போய்விட்டாரா… என் நிலம்… வரி… “ 

“பதறாதே… ஒரு அதிசய நிகழ்வு நடந்தது. நீ விபத்தில் சிக்கிய அன்று… பிரம்மராயன் என்ற ஒரு சிற்பியும் இறந்திருக்கிறான். தான் இதுவரை சேமித்த செல்வங்களை கோயிலுக்கு ஓலை எழுதிவிட்டு… வாழ்வின் நிறைவில் தற்கொலைக்கு முயன்றிருக்கிறான். ஆனால் உத்திரம் அவன் கனம் தாளாமல் முறிந்து விழுந்து தான் வடித்த சிலையில் மோதி இறந்துவிட்டான். அவன் தேடியதை கிடைத்த மகிழ்வுடன். அவன் வடித்த தன் உருவசிலையையும், அவனது பெருமையையும் கேட்டறிந்த அரசர் அவன் பெயரில் ஒரு பள்ளிபடைக்கோயில் எழுப்ப ஆணையிட்டதோடு… நிலவரி நிலுவைகளையும் ரத்து செய்துவிட்டார். “ 

அவரையே உறுத்துப் பார்த்தார் சோழியவரையன். 

“விமானம் மேலே சிகரத்தை ஏற்றும் போது… மேலிருந்து பொன் கழஞ்சுகளும் கொட்டியது அதுதான் மிக சிறப்பான அதிசயமப்பா… அரசர் மெய் மறந்தார். உனக்குதான் இதெல்லாம் பார்க்க கொடுத்துவைக்கவில்லை. “ 

தன் விழியோரம் கண்ணீர் வழிவதை உணரமுடிந்தது சோழியவரயருக்கு.

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. அப்புசிவா..சேலம். இரட்டை கதை.
    சிறுகதை எண் 104.
    இக்கதை பிரம்மராயன் நம் மனதில் நிற்க சோழிவரையன் குணம் அறிய முடிகிறது.சூழ்ச்சி செய்வோருக்கு தண்டனை இறைவன் தராமல் விடுவதில்லை. இப்படியும் இருக்கத்தானே செய்கிறார்கள். கதை சொன்ன விதம் அழகு அற்புதம்.கதை புராண காலத்து கதை சிறப்பாக எழுத்து நடை.அருமை அருமை.வாழ்த்துக்கள்…

  2. கதை புராண காலத்துக் கதை அல்ல. சரித்திர/வரலாற்றுக் கதை. வரலாற்றுக் கதை படைப்பதில் கதாசிரியருக்கு முழு வெற்றி. நல்ல கதையம்சத்துடன் இரண்டையும் ஒருங்கிணைத்துள்ளார்.

நிலையற்ற மாயை (சிறுகதை) – ✍ முகமது பிர்தவ்ஸ், திருநெல்வேலி

யார் நீ? (சிறுகதை) – ✍ சாரு கீர்த்தனா, கோவை (கல்லூரி மாணவி)