in ,

எப்போ வரப் போறே? (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“எப்ப வீட்டுக்கு வருவே பாட்டி?”

“வரேன்டா கண்ணா.”

“இப்படித்தான் நான்  பொங்கலுக்கு வந்த போதும் என்கிட்ட சொன்னே. இப்போ தீபாவளிக்கும் நானே தான் உன்னைப் பார்க்க வந்திருக்கேன். நீ ஊருக்கு வரவே மாட்டேங்கறியே பாட்டி…”

“வரேன் செல்லம். நான் வந்தா என்ன, நீ வந்தா என்ன? பாட்டியைப் பார்க்கறதுக்கு நீ வந்தியே… அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷம்.”

“ஆனா நீ ஊருக்கு வந்தாத்தானே எனக்கு சந்தோஷமா இருக்கும். என்னோட விளையாட்டுச் சாமான் எல்லாம் உன்கிட்ட காட்டுவேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து விளையாடலாம். நீ இங்கே தனியாத்தானே பாட்டி இருக்கே? என்கூட வந்து இருக்கலாமே…”

பேரனிடம் சொல்ல என்னிடம் பதில் இல்லை.

“பாட்டி, இங்கே இருக்கறவங்க யார் வீட்டுலயும் கார், பைக் எல்லாம் இல்லையா? அப்புறம் வெளில என்னை மாதிரி குட்டிப் பசங்க யாரும் விளையாடவே இல்லையே. அவங்க யாராவது விளையாடினாலாவது நான் அவங்ககூட போய் விளையாடுவேன். உன்னைப் பார்க்கணும்னு ஆசையா வரேன். ஆனா இங்கே வந்தா போரடிக்குது பாட்டி.”

“நான் கண்டிப்பா வரேன்டா கண்ணா. நீ தீபாவளிக்கு பட்டாசு எல்லாம் வெடிச்சியா? ஸ்வீட் எல்லாம் சாப்பிட்டியா?”

“ஆமாம் பாட்டி, கம்பி மத்தாப்பு, ஃப்ளவர்பாட் எல்லாம் விட்டேன். ஸ்வீட் சாப்பிட்டேன். நீ என்ன ஸ்வீட் சாப்பிட்டே பாட்டி?  வீட்டுலயே  பண்ணியா?”

“ஆமாண்டா கண்ணே. உனக்கு மைசூர்பாக் பிடிக்கும் இல்லையா. அதனால பாட்டி கொஞ்சமா மைசூர்பாக் பண்ணேன். வேற எதுவும் பண்ணல டா தங்கம். பாட்டி எதுவும் சாப்பிடறதில்லையா… அதனால எதுவும் பண்ணல. அடுத்த முறை வரும்போது உனக்கு என்ன வேணும்னு சொல்லு, செஞ்சு வைக்கறேன். இந்தா  சாப்பிட்டுப்  பாரு.”

“ஹைய்…  சூப்பர் பாட்டி.”

அவனுக்குப் பிடித்த மைசூர்பாக் என்பதால், அதைச சாப்பிடும் ஆர்வத்தில் என்னிடம் கேள்விகள் கேட்பதை மறந்து போனான் என் நான்கு வயதுப் பேரன்.

அவனுக்கு எப்படிப் புரிய வைப்பது? எப்படியும் இன்னும் ஒன்றிரண்டு வருடங்களில் அவனே இதைப் புரிந்து கொள்வான்.

அவனைப்  பொறுத்தவரை இது பாட்டி வீடு, முதியோர் இல்லம் என்று தெரியாது. தெரியவரும் போது அதை எப்படிக் கையாள்வது என்று பார்த்துக் கொள்ளலாம்.

ஊரில் கணவரும், நானும்தான் இருந்தோம். அவரது மறைவுக்குப் பின் அங்கே தனியாக இருக்க வேண்டாம் என்று  சென்னைக்கு அழைத்து வந்தான் மகன். ஆனால் அவன் வீட்டிற்கு அழைத்துப் போக இயலவில்லை.

இருதலைக்கொள்ளி   எறும்பாகத்  தவிக்கும்  அவனது சூழ்நிலையைப் புரிந்து கொண்டதால் நானும் எதுவும் மறுத்துப் பேசவில்லை. ஊருக்கு வெளியே சற்று தள்ளியிருந்த மூத்த குடிமக்களுக்கான குடியிருப்புகளில் ஒன்றை வாடகைக்கு எடுத்து, என்னைத் தங்க வைத்திருக்கிறான்.

தனித்தனி வீடுகள் தான். சொந்தமாக வீட்டை வாங்கி வசிக்கும் வயதானவர்களும் இருக்கிறார்கள். என்னைப் போல் வாடகைக்கு தங்கியிருப்பவர்களும் இருக்கிறார்கள்.

வீட்டிலேயே சமைத்துக் கொள்வதென்றால் அதற்கான வசதிகளைச் செய்து கொண்டு சமையல் செய்து கொள்ளலாம். இயலாதவர்கள் அவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டுக் கொள்ளலாம். அதற்கு ஏற்றாற்போல் பணம் கட்ட வேண்டும்.

பணம் கட்டுவதில் மகனுக்கு ஒன்றும் வசதிக் குறைவு இல்லை. ஆனால் 50 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அவன் வீட்டிற்கு என்னை அழைத்துப் போவதில்தான் அவனுக்குச் சிக்கல்கள்.

மருமகளுக்கு என்னை வீட்டில் வைத்துக் கொள்வதில் விருப்பமில்லை. அவளைப் பொறுத்தவரை அவள் கணவனும் குழந்தையும் மட்டும் தான் அவளது உலகம், வீடு எல்லாம். அவர்களைத் தாண்டி வேறு யாருக்கும் அந்த வீட்டில் இடம் அளிக்க அவளுக்கு விருப்பமில்லை. அவளுடைய பெற்றோர்களுக்கும் அதே நிலைதான்.

இதை அவளே நிறைய முறை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறாள்.

“வயசானவங்களை எல்லாம் வீட்டுல  வச்சுப் பார்த்துக்க முடியாது. அவங்களைப் பார்த்துக்கறதுல எங்க வாழ்க்கையைக் கழிச்சிட்டோம்னா, அப்புறம் எங்க வாழ்க்கையை எப்போ வாழறது?

வீட்ல எப்பவும் அவங்களுக்குன்னு ஒரு ரூம் குடுக்கணும்.  அவங்களுக்குப் பிடிச்சது, அவங்க உடம்புக்கு ஒத்துக்காதது இப்படிப் பார்த்துப் பார்த்து சமையல் செய்யணும். எங்கேயாவது வெளில போகணும்னா அவங்களையும் கூட்டிட்டுப் போகணும். இல்ல தனியா விட்டுட்டுப் போகணும்னா அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டுப் போகணும்.

சுதந்திரமே இல்லாத மாதிரி இருக்கும். நம்ம இஷ்டத்துக்கு வாழவே முடியாது. அவங்க காலம் எல்லாம் முடிஞ்சு,  நமக்கு தனியா நேரம் கிடைக்கும்போது நமக்கு வயசாயிடும். இந்த கதையே வேண்டாம். யாரா  இருந்தாலும் அவங்கவங்க வீட்ல இருந்தாப் போதும். என்ன ஏற்பாடு வேணாலும் செஞ்சுக்கலாம். பணத்தை விட்டெறிஞ்சா எல்லாத்துக்கும் ஆள் இருக்காங்க. அந்த வேலையை எல்லாம் நான் செய்ய மாட்டேன். எனக்கு என் குடும்பம் தான் முக்கியம்.”

இப்படி நிறைய முறை அவள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதனால்தான்  இந்த ஏற்பாடு. ஆனால் பேரனைப் பொறுத்தவரை ஊரில் இருக்கும் வீட்டைக் காலி செய்துவிட்டு நான் வீடு மாற்றி வந்திருக்கிறேன் என்று மட்டும்தான் தெரியும்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மகன் மட்டும் பேரனை அழைத்துக் கொண்டு வந்து பார்த்துவிட்டுப் போவான். தேவையான சாமான்களை அவ்வப்போது வாங்கித் தருவான்.

என் அவசரத் தேவைகளுக்கு அருகிலேயே கடை இருப்பதால் நான் வாங்கிக் கொள்வேன். இந்த இரண்டு வருடங்களில் ஒருமுறைகூட மருமகள் என்னைப் பார்க்க வரவில்லை.

இப்போதுகூட, இங்கே இருக்கும் நிறைய பேர் அவரவர் உறவினர் வீட்டிற்கு தீபாவளி கொண்டாடப் போய் விட்டார்கள். மகனோ, மகளோ வந்து அழைத்துக் கொண்டு போனார்கள். பண்டிகைக் கொண்டாட்டத்திற்குப் பிறகு கொண்டு வந்து விடுவார்கள் ஆனால், இதுவரை என்னை அது போல் வீட்டிற்கெல்லாம்  அழைத்துப் போகவில்லை. நானும் அதைப்பற்றி மகனிடம் கேட்கவில்லை.

பத்து மாதம் என் கருவில் சுமந்து, இவ்வளவு வருடங்களாக மனதில்  சுமந்து  கொண்டிருக்கிறேன்.  ஆனால் அவன் வீட்டில் ஒரு நாள் நான் தங்குவதற்கு  இடமளிக்க  அவனுக்கு மனமில்லை. இதையெல்லாம்  என்னவென்று செல்வது?

மனதில் பலவித சிந்தனைகள்  என்னை அழுத்திக்  கொண்டிருக்க,  பேரன் மீண்டும் ஆரம்பித்தான்.

“பாட்டி, நீ அங்கே வந்தா என்னோட ரூம்ல படுத்துக்கலாம்  பாட்டி. என்னோட  பீரோல உங்க ட்ரெஸ் எல்லாம்  வச்சுக்கலாம். பாட்டிக்கு நம்ம வீட்டுல தனி ரூம் இல்லையே… அதனாலத்தான் பாட்டி இங்கே வரலேன்னு அப்பா  சொன்னாங்க. நீ  என் ரூம்ல தங்கிக்கோ  பாட்டி.  என் கட்டில்ல  தூங்கிக்கோ. எனக்குக் கொஞ்சமா இடமிருந்தாப் போதும் பாட்டி.  அப்பா, அம்மா ரெண்டு பேரும்  வேலைக்குப்  போயிட்டா  தனியா இருக்க பயமாயிருக்கு  பாட்டி. மாலு அக்கா  எப்பவும் ஃபோன் பார்த்துட்டே  இருக்காங்க.  என்கூட விளையாட யாருமே இல்ல  பாட்டி.”

தோளைச்  சுற்றிக்  கட்டிக்  கொண்டு பேரன் கெஞ்சும் போது கண்ணீர் தான் வந்தது. ஆனால் எதுவும் செய்ய முடியாத நிலையில் நான் இருக்கிறேன்.

அதற்குள் என் மகன் அவனிடம் ஏதோ கதைகளைச் சொல்லி சமாதானப்படுத்தி, அங்கிருந்து கிளம்பினான். பேரன் என்னிடம் இவ்வளவு பேசிய  போதும்கூட  என் மகன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை. ‘எங்ககூட வந்து ஒரு வாரம் தங்கிட்டுப் போ மா. எப்போ வரே?’ என்று கேட்க வாய் வரவில்லை.

பேரன் முன்னால் அழக்கூடாது என்பதால் எப்படியோ சமாளித்துக்  கொண்டேன். கன்னத்தில்  ஈரமான  முத்தத்தைக்  கொடுத்து விட்டுக் கிளம்பினான்  பேரன்.

“பை பாட்டி,  இந்த  ஊர்ல இருந்து  எங்க ஊருக்கு கார்லயே  போயிடலாம் பாட்டி. நான் நெக்ஸ்ட்  டைம்  வரும் போது  நீ கண்டிப்பா என்கூட வரணும். ஓகே பாட்டி?  அப்பா, அடுத்து  எப்போ பாட்டி  ஊருக்கு வருவோம் பா?”

இவ்வளவு நேரம் என்னை கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்த என் பேரன், இப்போது அவன் அப்பாவைக் கேள்வி கேட்க ஆரம்பித்திருந்தான்.

இருவரும் விடைபெற்றுக் கிளம்பிய பிறகு, அடக்கி வைத்திருந்த கண்ணீரை வழியவிட்டபடி, பேரன் என் கன்னத்தில் பதித்துவிட்டுப் போன முத்தத்தின் சிலிர்ப்பில் என்னை மறந்து உட்கார்த்திருந்தேன்.

அடுத்து அவன் எப்போது வருவான்?

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 14) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    ஞானோதயம் (சிறுகதை) – பிருந்தா ரமணி