in ,

அகங்காரம் இல்லா அலங்காரம் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

      நகரின் மத்தியிலிருந்த அந்தக் கல்யாண மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜெகஜ்ஜோதியாய் மின்னிக் கொண்டிருந்தது. கார் பார்க்கிங்கில் உள் நாட்டு மற்றும் வெளி நாட்டுக் கார்கள் ஏகமாய் நிறுத்தப்பட்டிருக்க, அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கென்றே நாலைந்து செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். 

      மண்டபத்தினுள் பட்டுப்புடவைகள் சர…சரக்க, ஜுவல்லரி விளம்பரமாய்ப் பெண்கள் கூட்டமும், பட்டு வேட்டி சட்டையுடன் மொபைல் போன் பேசிக் கொண்டே ஆண்கள் கூட்டமும், குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டே குழந்தைகள் கூட்டமும் மகிழ்ச்சியின் உச்சத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்க, மணப்பெண்ணின் தாயாரான சுலோச்சனா மட்டும் டென்ஷனாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள்.  ஏற்கனவே பருமனான உடல்வாகு கொண்ட அவள் நாலடி நடந்தாலே மூச்சு வாங்குவாள்.  இன்று ஒரு முக்கியமான பிரச்சினையை அல்லவா தோளில் சுமந்து கொண்டு அலைகிறாள்?… கேட்கவா வேணும்?… “புஸ்ஸு… புஸ்ஸு” என பாம்பைப் போல் மூச்சு விட்டுக் கொண்டேயிருந்தாள்.

“ஹூம்… ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே புக் பண்ணி, மொத்தப் பணத்தையும் அட்வான்ஸா குடுத்திட்டு வந்தோம்!.. ஆனா அந்த பியூட்டி பார்லர் சசிகலா மேக்கப் போடுவதற்குத் தான் வராமல் தன்னோட பார்லர்ல வேலை பார்க்கிற யாரோ ஒரு கத்துக்குட்டியை நம்ம மகளுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ண அனுப்பியிருக்காளே?… அவளைச் சும்மா விடலாமா?…” கோபத்துடன் சொன்ன மணப்பெண்ணின் தாயார் சுலோச்சனா, தன் மொபைலில் “சசி பியூட்டி பார்லர்” ஓனர் சசிகலாவுக்கு கால் செய்தாள். மொபைல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்க, ஆத்திரத்தில் பற்களை “நற…நற’வென்று கடித்தாள்.

“த பாரு சுலோச்சனா!… இந்தக் கடைசி நிமிஷத்துல எதுவும் செய்ய முடியாது… பேசாம வந்திருக்கற அந்தப் பெண்ணையே மேக்கப் போடச் சொல்லு!… முகூர்த்த நேரம் நெருங்கிக்கிட்டே இருக்கு!… கல்யாணம் முடிஞ்சதும் அந்த பியூட்டி பார்லர்காரி கிட்டே பேசிக்குவோம்”.  கணவர் சொல்ல,

“ஆரம்பத்துல இந்த பியூட்டி பார்லர்க்காரி ரொம்ப ரொம்ப சாதாரணமாய்த்தான் இருந்தாள்… ரெண்டு மூணு திரைப்படத்துல ஹீரோயினுக்கு மேக்கப் உமனா போயிட்டு வந்ததிலிருந்து பெரிய பப்ளிஷிட்டி கிடைச்சிடுச்சு… ரேட்டையும் ஏத்திக்கிட்டா… ரொம்பத்தான் கிராக்கி பண்ணிக்கறா!… எனக்கு ஆரம்பத்திலிருந்தே இவளை புக் பண்ண இஷ்டமேயில்லை… ஏன்னா… இவளெல்லாம். கிடைச்ச வரை லாபம்ன்னு வர்ற ஆர்டரையெல்லாம் ஒத்துக்குவா… அப்புறம் கடைசி நேரத்துல தன் கிட்ட வேலை பார்க்கிற யாரோ ஒரு பெண்ணை டிரெய்னீ பியூட்டிஷியன்னு சொல்லி அனுப்பி வெச்சு சமாளிப்பா!” முகத்தை அஷ்ட கோணலாய் அபிநயித்துக் கொண்டே சொன்னாள் சுலோச்சனா.

“அவளைப் பற்றி இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வெச்சுக்கிட்டு… அப்புறம் ஏன் அவளை புக் பண்ணினே?… வேற பியூட்டி பார்லரே இல்லையா இந்த ஊர்ல?” சுலோச்சனாவின் கணவர் கோபமாகவே கேட்டார்.

“அதுக்குக் காரணம் நான் அல்ல!…. மாப்பிள்ளையோட அம்மா… அந்த “சசி பியூட்டி பார்லரை”த்தான் மணப்பெண் மேக்கப்புக்கு புக் பண்ணனும்னு கண்டிஷனா சொல்லிட்டாங்களே?” கைகளைப் பிசைந்தபடி சொன்னாள் சுலோச்சனா.

“சரி… நடந்ததையே திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை!… இனி நடக்க வேண்டியதைப் பற்றிப் பேசுவோம்!… சொல்லு… என்ன பண்ணலாம்?… நேரம் வேற ஓடிக்கிட்டேயிருக்கு” சீரியஸானார் சுலோச்சனாவின் கணவர்.

“ஓ.கே…ங்க… நீங்க சொன்ன மாதிரியே அந்தக் கத்துக்குட்டி பியூட்டிஷியன் பொண்ணையே மேக்கப் போடச் சொல்லிடுவோம்!… ஆகிற மாதிரி ஆகட்டும்” அரை மனதுடன் அங்கிருந்து நகர்ந்தாள் சுலோச்சனா.  ஆனாலும் அவள் மனத்தில் சசி பியூட்டி பார்லர் ஓனர் சசிகலாவை “நறுக்”கென்று நாலு வார்த்தை கேட்டே தீர வேண்டும்!.. என்கிற ஆத்திரம் மட்டும் அடங்காமலேயிருந்தது.

அவளுடைய ஆத்திர வேள்விக்கு மேலும் நெய் வார்ப்பது போல், திருமணத்திற்கு வந்திருந்த சில பெண்மணிகள், “என்ன சுலோச்சனா… ஒரு நல்ல பியூட்டி பார்ல மேக்கப் புக் பண்ணியிருக்கலாமல்ல?… பாரு கல்யாணப் பொண்ணாட்டமா இருக்கா உன் மகள்?… வீட்டுல கேஷுவலா இருக்கற மாதிரியல்ல இருக்கா?” என்று சொல்லி விட்டுச் சென்றனர்.

      திருமணம் முடிந்த அடுத்த நாளே சுலோச்சனா “சசி பியூட்டி பார்லர்” எண்ணுக்குக் கால் செய்தாள்.  ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது. பொறுமையிழந்து அதன் ஓனர் சசிகலாவின் மொபைலுக்குக் கால் செய்தாள்.  ரிங் போனது… ஆனால் எடுக்கப்படவில்லை.  “ஃப்ராடு… ப்ராடு” திட்டித் தீர்த்தாள்.

சரியாக ஒரு வாரம் கழிந்ததும், சுலோச்சனாவின் மொபைலுக்கு கால் வந்தது. “மேடம் நான்… சசி பியூட்டி பார்லரிலிருந்து.. சசிகலா பேசறேன்!”

      அதற்காகவே காத்துக் கொண்டிருந்த சுலோச்சனா, “ஏம்மா… நீ என்ன நெனச்சிட்டிருக்கே உன் மனசில… புக் பண்ணும் போதே அட்வான்ஸா பணத்தை வாங்கிட்டு மேக்கப் பண்றதுக்கு யாரோ ஒரு கத்துக்குட்டியை அனுப்பி வெச்சிருக்காயே… உன் மேல் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணினா என்ன?” என்று கத்த ஆரம்பிக்க,

      இடையில் புகுந்த அந்த சசிகலா, “அம்மா… என்னை மன்னிச்சிடுங்கம்மா!… நான் வேணுமின்னே வராமல் போகலை!… காரணமிருக்கு”

 “உனக்கு ஆயிரம் காரணம் இருக்கும்… அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை!… வாக்குக் குடுத்தபடி நீ ஏன் வரலை?… அதுக்கு பதில் சொல்லு முதல்ல!… நான் உன் மேலே போலீஸ் கம்ப்ளைண்ட் குடுக்கற அளவுக்குக் கோபமாயிருக்கேன்” பொரிந்து தள்ளினாள் சுலோச்சனா.

 “அது… வந்து… நம்ம வீட்டுக் கல்யாணத்துக்கு சரியா இருபது நாள் முன்னாடி என்னோட கணவர் தவறிட்டார்!… பதினாறாம் நாள் காரியம் முடிஞ்சதும் உடனே  பார்லரைத் திறந்திட்டேன்!… அதே அன்னிக்குத்தான் உங்க மகள் கல்யாணம்!… விதவையான எனக்கு ஏனோ மணப்பெண்ணுக்கு அலங்காரம் பண்ண மனசு வரலை!… அது ஒரு அபசகுனமாகவே பட்டது எனக்கு!… அதான் வேற பொண்ணை அனுப்பிச்சேன்!… ஸாரிங்கம்மா!… நம்ம வீட்டுப் பெண்ணுக்கு என்னால மேக்கப் பண்ண முடியலையே?ன்னு நானே ரொம்ப வருத்தத்துல இருக்கேன் மேடம்”

      சுலோச்சனாவின் மனம் கனத்துப் போனது. “வந்து… பரவாயில்லை…” பேச முடியாமல் திணறியபடி இணைப்பிலிருந்து வெளியேறினாள்.

      அவளருகே வந்த கணவர், “என்ன சுலோ… ஆத்திரம் தீர அவளைத் திட்டித் தீர்த்திட்டியா?” சிரித்தவாறே கேட்க,

       “இல்லைங்க… என்னால அவளைத் திட்ட முடியாத மாதிரியான காரணத்தை அவ சொல்லிட்டா” என்ற சுலோச்சனா அந்த சசிகலா சொன்ன விஷயத்தைத் தன் கணவரிடம் சொல்ல,

       சில நிமிடங்கள் அவளையே கூர்ந்து பார்த்தவர், “சுலோ… அந்தப் பெண்… தான் விதவையாயிட்ட விஷயத்தை மறைச்சு… நம்ம கல்யாணத்துல வந்து நம்ம பொண்ணுக்கு மேக்கப் போட்டிருந்தா… அந்த விஷயம் நமக்குத் தெரியவா போகுது?…நிச்சயம் தெரியாது!… ஆனாலும் அவள் அப்படிச் செய்யலை!… ஏன்னா… அவ தன்னுடைய கஸ்டமர்களையும் தன்னோட உறவுகளா நினைக்கறா… அதனாலதான் அவ நெம்பர் ஒன் இடத்துல இருக்கா..”

      அமைதியாய்த் தலையை மேலும், கீழும் ஆட்டினாள் சுலோச்சனா.

(முற்றும்)     

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆழம் அறிந்து காலை விடு (சிறுகதை) – விடியல் மா.சக்தி

    உயிர்கொல்லி (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத்தமிழாழன்