எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பொதுவா சித்திரை வைகாசி மாசங்களை வசந்தகாலம்னு கொண்டாடுவாங்க. அது ஏன்னு எனக்குத் தெரியலை. எனக்கு விடியக் காலைல பனி பெய்யும் மார்கழி மாசம்தான் ரொம்பப் பிடிக்கும். இதைத்தான் முன்பனிக்காலம்னு சொல்லுவாங்க இல்லை?
முதல் நாளே அம்மாகிட்ட ஒரு ஸ்லேட்டுப் பலகைலயோ,கூடத்து தரைலயோ புள்ளி வச்சு கோலம் போட கத்துப்பேன்.
மறுநாள் காலை 6 மணிக்குள்ளே வாசத் தெளிச்சு கோலப் பொடில அதே கோலத்தை வாசல்ல போட்டுட்டு, ஒரு கத்து வாசல்ல இருந்தே,”அம்மா இங்கே வந்து பாரேன்” அம்மா புன்முறுவலோட அப்ரூவ் பண்ணினாதான் அப்படியொரு சந்தோஷம்., அம்மா மட்டுமா?
கடைக்கண்ணால் எதிர்வீட்டையும் பாப்பேன்.,கட்டை விரலையும்,சுட்டு விரலையும் சுளிச்சு மடக்கி அப்ரூவல் அங்கே இருந்தும் வரும்.அதுல அந்த விடியற்காலை குளிர்லயும் இன்னும் கொஞ்சம் குளிர்ந்து போகும்.ஒரு குதியோட உள்ளே போவேன்.
இப்ப உங்களுக்கு ஆர்வம்தானே? நான் யாரு,என் பேரன்ட்ஸ் யாருனு தெரிஞ்சிக்க? ஏய் வேற என்ன தெரியணுமாம்?
நான்தான்பா சுசீலா,என் அம்மா பாக்யலக்ஷ்மி, அப்பா வெங்கடேஷ், ஒரு வாலுத் தம்பி வாசு. அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோவில் பக்கத்துல வீடு,வைஷ்ணவா காலேஜ்ல ஆர்ட்ஸ் படிக்கிறேன் போறுமா?
என்னத்தையோ மறைக்கறேனா? அதெல்லாம் ஒண்ணுமில்லை. யாரோ ஒரு எதிர்வீட்டுப் பையன் எக்சைஸ் பண்ண ஜிம்முக்கு போறதுக்கு முன்னால கொஞ்சம் நின்னு நான் போட்ட கோலத்தை ரசிச்சா அதுல என் குத்தம் என்ன இருக்கு, அது என்ன பெரிய விஷயமா உங்க கிட்ட சொல்றதுக்கு!
அம்மா,”ஏண்டி ஒருநாளைப் போல வாசல்ல இருந்து கத்தறே,நானா வந்து பாக்க மாட்டேனா உன் கோலத்தை? சரி இந்த செம்மண் பூச்சை மட்டும் அகலமா தீத்தாம மெலிசா போடு இன்னும் சூப்பரா இருக்கும்.”
இந்த வயசு,இந்த நாட்கள் இப்படியே போயிட்டு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.சந்தோஷமா இருந்தா கடவுளுக்கே பொறுக்காதோனு கோவமா வருது இப்ப.
அதுக்காக கிழிஞ்ச புடவையோட இட்லிக் கடை வச்சு குடும்பத்தைக் காப்பாத்தறேனோனு நீங்களா கற்பனை பண்ணிக்காதீங்க.
நான் இப்ப செளக்கியமாதான் இருக்கேன், என் வீட்டுக்காரர் பெரிய ஹார்ட் சர்ஜன். நுங்கம்பாக்கத்துல பெரிய பங்களா, கார்,வேலைக்கு ஆட்கள்னு குழந்தையா ம்ஹூம் அந்த பாக்யம்லாம் இல்லை, பாவம் ஹார்ட் சர்ஜனுக்கு நிக்க நேரமில்லை, நீங்க வேற ஒவ்வொரு நிமிஷமும் அவருக்கு பல ஆயிரம் ரூபா ஆச்சே.
அப்பப்ப அந்த அரும்பாக்க தினங்கள் ஞாபகம் வரும்.இனிமே சொல்றதுக்கென்ன, எனக்கும் இப்ப 35 வயசாகப் போறது. அந்த பாஸ்கரன் நான் போடற கோலத்தை ரசிச்சான் என் வயசு,அழகு அத்தனையையும்தான்.அவனை மட்டும் சொல்லி என்ன பிரயோஜனம், நான் என்ன ஒழுங்கு நானும்தான் அவனை தினமும் எதிர் பாத்தேன்.
நான் காத்தாலை கோலம் போடறப்ப, காலேஜ் போறதுக்கு முன்னாடி வீட்டு வாசல்ல பைக்கை நிப்பாட்டி மஞ்சள் துணியால துடைச்சிட்டே கையை யாருக்கும் தெரியாம அசைப்பானே. நானும் முகத்தை துடைச்சிக்கறாப்பல லேசா கை காட்டிட்டு போவேன். இந்த அசட்டுச் செய்கைகள்லயே அவ்வளவு சந்தோஷம் பூரிச்சுப் பொங்கும்.
ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு ஒரு வார்த்தை பேசினதில்லை, நான்தான் பொண்ணு அவனாவது தைரியமா வந்து பேசியிருக்கலாம் இல்லை? இல்லை சுஶ்ரீனு ஒத்தர் காதல் கதைகள்லாம் எழுதறாரே அதுல வராப்பல ஒரு நாலு வரி கிறுக்கி லெட்டர் கொடுக்கலாம்,ம்ஹூம் அதுவும் ஒரு மக்குப் பண்டாரம்.
ஒரு நாள் வாசு வந்து,”அக்கா எதிர் வரிசைல ஒரு அண்ணா இருக்காரே,நீ காலேஜ் போறப்ப பைக் துடைச்சிட்டு நிப்பாரே”
“டேய் அவர் அண்ணன் இல்லை மாமானு சொல்லணும்”
“மாமான்னா நம்ம சோமு மாமா மாதிரி சொட்டைத் தலையோட இருக்கணுமே”
“போடா லூசு இது வேற மாதிரி,சரி சொல்லு அவர் ஏதாவது சொன்னாரா,அக்கா கிட்ட கொடுனு எதாவது கொடுத்தாரா?”
“அதெல்லாம் இல்லைக்கா,பைக் ரேஸ் விடப் போறோம் பாக்க வரியானு” கேட்டார்.
“சீ..சீ..அதெல்லாம் சட்டப்படி தப்பு,நீங்க ரேஸ்க்கு போகக் கூடாது,அக்காவுக்கு பிடிக்காதுனு போய் சொல்லிடு சரியா”
“சரிக்கா இப்பவே போய் சொல்றேன்”
அவன் சொன்னானா இல்லையா தெரியறதுக்குள்ளே இடி மாதிரி அந்த செய்தி. நள்ளிரவில் கடற்கரைச்சாலையில் பைக் ரேஸ் நடத்திய 4 பேர்களில் சாலை டிவைடரில் படு வேகத்தில் நிலை தடுமாறி மோதிய இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி. அரும்பும் முன்னே என் காதல் கருகியது.
அப்பா அம்மா சொன்ன டாக்டரை (ஒரு வேளை அவருக்கும் பாஸ்கர்னு பேர் அதனாலயோ) எதிர்ப்பு இன்றி கல்யாணம் பண்ணிண்டேன். தம்பிக்கும் தன் ஆஸ்பிடல் நிர்வாகத்துலயே வேலை போட்டு கொடுத்திருக்கார்
.பங்களா முன்னால சின்னத் தோட்டம் இருக்கு.என் கூட விளையாட போமரேனியன் நாய்க்குட்டி இருக்கு புசு புசுனு, வீட்லயே ஹோம் தியேட்டர் இருக்கு வேற என்ன வேணும் வாழ்க்கைல ஒரு பொண்ணுக்கு?அழறேனா இல்லையே சந்தோஷமாதான் இருக்கேன்.
டாக்டர்,பிரபல ஹார்ட் சர்ஜன் பாஸ்கரன் எம்.பி.பி.எஸ், எம்.எஸ்.,எஃப்.ஆர்.சி.எஸ்., இன்னும் என்னென்னவோ பின் ஒட்டுக்கள். அவரோட மனைவியாச்சே அழ முடியுமா! இந்த முன்பனிக்காலம்,கோலம், குதூகலம் எல்லாம் வெட்டிப் பேச்சு.
எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings