எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பாட்டி அனத்தறது எனக்கு கேட்டது, ”அலமு, சாந்தா, யாரும் இல்லையா கோந்தையை எழுப்புங்கோ, அவரோட ஜன்ம நட்சத்திரம் இன்னிக்கு,கோவிலுக்கு போய் ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வரச் சொல்லு, அப்பறம்ன்னா நேரம் இல்லைன்னு ஓடிப் போயிடுவான்” இல்லாத தாத்தா மேல இன்னுமும் பாட்டிக்கு காதல்.
“டேய் சிவா எந்திரி மணி ஏழாச்சு”,இது அம்மா.
“போம்மா இன்னிக்கு லீவுதானே மெதுவாதான் எந்திருப்பேன்.” கால்களை மடக்கி கண்களை இறுக மூடிக் கொண்டேன்.
அம்மா ஒண்ணும் சொல்லலை, ஆனா என் தலைமாட்டில நின்னு என் முகத்தையே பெருமையுடன் பார்ப்பதை உணர முடிந்தது. என் தலை முடியை லேசாக கலைத்து விட்டு தன் நித்ய கடமைகளை செய்ய புறப்பட்டு விட்டாள், அம்மான்னா அம்மாதான்.
அடுத்து சாந்தா, என் அக்கா,”ஏய்,லூஸ் கடங்காரா, என் பேனாவை எடுத்தயாடா? எடுத்தா இடத்துல திரும்ப வைக்க மாட்டயா” என்னைப் பிடித்து உலுக்கினாள்.
அலுப்புடன் கண்களைத் திறந்தேன் இனிமே தூங்கினாப்பலதான்.”பாருக்கா என் ஷர்ட் பாக்கெட்லதான் இருக்கும்”
அக்கா,”ஷர்ட்டை இப்படியே போட்டுண்டு போவயா? காலர் பின்னால பார் அடையா அழுக்கு உவ்வே நாத்தம் வேறே,இப்படி ஷர்ட் போட்டுட்டு போனா காலேஜ்ல ஒரு பொண்ணு உன் பக்கத்துல வரமாட்டா.” சொல்லிய வண்ணம் அந்த ஷர்ட்டை கையோட துவைக்க பாத்ரூம் கொண்டு போனா. அவளுக்கென்ன தெரியும்,மாடில குடியிருக்கற கமலி, ஏற்கனவே மனசுல குடி புகுந்தாச்சுனு.
பாட்டி முனகிண்டே வந்தா,”டேய் செல்லக்குட்டி,என் சிவராஜா,சிரமம் பாக்காம குளிச்சிட்டு கார்த்தாலயே இந்த கோவிலுக்குப் போயிட்டு வந்துடுடா ராஜா. நம்ம தாத்தாவுக்கு ஜன்ம நட்சத்திரம் ஒரு அர்ச்சனை பண்ணிடு.நீ பொறந்தப்ப அவருக்கு எத்தனை சந்தோஷம் தெரிமா,சிங்கக் குட்டியா என் பேரன் பிறந்துட்டான்னு கொண்டாடுவாரே”.
எனக்கும் தாத்தாவை நல்லாவே ஞாபகம் இருக்கு நான் எட்டாவது படிக்கற வரை இருந்தாரே. என் கையை பிடிச்சிட்டு பீச்சுக்கு கூட்டிட்டுப் போய் சுண்டல்,கோன் ஐஸ் வாங்கிக் கொடுப்பாரே.பாக்கறவங்களை எல்லாம் நிறுத்தி,”என் பேரன், எவ்வளவு நல்லா இங்லீஷ்ல வ்யாசம் எழுதறான் தெரியுமா”னு பீத்திப்பார்.
இப்ப கமலி மாடில இருந்து,”சாந்தாக்கா”னு இறங்கி வரா.நான் அவ பக்கத்துல வரப்ப,கிசு கிசு குரல்ல “கோவிலுக்குப் போறேன் அரை மணி நேரத்துல, வரயா?”
என் முகத்தைப் பாத்து வக்கணை காட்டிட்டு அக்காவைத் தேடி உள்ளே போறா.
அக்காவுக்கு எங்க மேல லேசா சந்தேகம் வந்திருச்சுனு நினைக்கறேன், “என்னடி கமலி, என் தம்பியாண்டான் என்ன சொல்றான் கிசு கிசுனு”
கமலி சட்னு “ஒண்ணுமில்லையே”
“சரி,சரி எல்லாரும் முளிச்சிட்டுதான் இருக்கோம்,வந்த காரியத்தை சொல்லு”
நான் நல்ல பிள்ளையா குளிச்சிட்டு,”பாட்டி போயிட்டு வரேன் கோவிலுக்குனு”கல்யாணப் பரிசு படத்துல சரோஜாதேவி “அம்மா போயிட்டு வரேன்” னு கத்தி கத்தி சொல்லுவாங்களே அந்த மாதிரி 3 தடவை கத்தியாச்சு.
அக்கா,”டேய் லூசு கமலி இன்னும் மூணு நாள் கோவிலுக்கெல்லாம் வர மாட்டா,நீ போய் அர்ச்சனை பண்ணிட்டு வா”
“போக்கா நீயா எதாவது கற்பனை பண்ணிட்டு”
என்னடா இவன் பாட்டி,அம்மா,அக்கா,கமலினு சொல்லிட்டே போறான் அப்பாவைப் பத்தி ஒண்ணும் சொல்லலையேனு தானே யோசிக்கிறீங்க?
அப்பா நல்லவர், தான் உண்டு தன் கலெக்டர் ஆபீஸ் உத்யோகம் உண்டுனு சமத்தா இருப்பார்.சம்பளம் வந்தவுடனே அம்மாகிட்ட ஒப்படைச்சிட்டு,அடுத்த சம்பளத்துக்கு உழைப்பார்.வேற ஒண்ணும் தெரியாத அப்பாவி.
நீங்கல்லாம் கற்பனை பண்ற மாதிரி நானும் கமலியும் தீவிரக் காதலர்கள்லாம் இல்லை. சமயம் கிடைச்சா வெறும் வாயால சீண்டுவேன்.இந்த நாலு வருஷத்தில நெருங்கி நின்னு தொட்டுப் பேசினதெல்லாம் 3 தடவைக்கு மேல இல்லைன்னு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க.நாங்க மனசார ஒருத்தரை ஒருத்தர் விரும்பறோம்கறது மட்டும் உண்மை.
அக்காக்கு கல்யாணம் ஆச்சு சிம்பிளா,சொந்தத்திலயே பையன் சிக்கினதால,அதுவும் உள்ளூர்லயே.
நான் டிகிரி முடிச்சு ஒரு பிரைவேட் கம்பெனில வேலைக்கும் சேந்துட்டேன். ஆறு மாசமா சம்பாதிக்கறேன்.அம்மா நச்சரிக்க ஆரம்பிச்சிட்டா,”சீக்கிரம் எனக்கு ஒத்தாசையா ஒரு பொண்ணு வந்தா தேவலைனு”
அக்கா இந்த வாரம் வந்தப்ப அம்மா கிட்ட,”ஏம்மா தினம் இவ்வளவு புலம்பறயே சிவாக்கு கால் கட்டு போடணும்னு,கைல வெண்ணையை வச்சிட்டு நெய்க்கு யாரும் அலைவாங்களோ”
“என்னடி சொல்றே,யாரு அந்த வெண்ணை”
“மாடி வீட்டு கமலி உன் கண்ணுக்குத் தெரியலையா,எவ்வளவு சமத்துப் பொண்ணு, அதுந்து பேச மாட்டா,போய் பேசிப் பாருங்களேன்”
அம்மா அக்காக்கு முன்னாலயே என்னைக் கேட்டா,”ஏண்டா சிவா அந்த மாடி வீட்டுப் பொண்ணை கேட்டுப் பாக்கலாமா”
நான் புரியாத மாதிரி,”என்ன கேக்கணும்மா,பாட்டியோட டைகர் பாம் தீந்து போச்சுன்னயே அதுவா?”
அக்கா,”ஆமாம் டைகர் பாம், பூண்டு மாத்திரை இதெல்லாம்தான்,ஆளைப் பாரு சரியான திருடன். விடும்மா கமலியை சாருக்கு பிடிக்கலை போல வேற இடம் பாப்போம்”
நான் சட்னு,”அய்யோ அது அப்படி இல்லை,அம்மாக்கும் உனக்கும் பிடிச்சிருந்தா எனக்கென்ன”
கமலி வீட்லயும் அந்த அபிப்பிராயம் இருக்கும் போல,என்னை மாதிரி ராஜா மாப்பிள்ளை கிடைக்க கொடுத்து வச்சிருக்கணுமே.
அப்பாகிட்ட சொன்னப்ப,”யாரு ஒடிசலா ஒரு பொண்ணு காப்பி கொண்டு வந்து கொடுத்ததே, போன சண்டே அதுவா?”
அம்மா,”எப்பதான் இந்த நிஜ உலகத்துல வரப் போறீங்களோ,ஆமாம் அந்தப் பொண்ணு தான் சிவாக்கு பொருத்தமா இருப்பா“
“சிவாவா அது யாரு?”
“உங்க பையன் பேரே மறந்து போச்சா?”
“ஓ நம்ம சிவாக்கா? கல்யாணம் பண்ற வயசு வந்தாச்சுங்கறயா? சரி பண்ணிடலாம், பி.எஃப் லோன் போட்டுடறேன்”
எங்க கல்யாணம் வடபழனி வரலட்சுமி கல்யாண மண்டபத்துல தடபுடலா நடந்தது.
கமலி என் காதலி,என் அன்பு மனைவி ஆனாள். மத்த விஷயங்களை எல்லாம் விவரமா எதிர்பாக்காதீங்க என் கிட்ட இருந்து. அடுத்த வருஷமே தங்க விக்ரகமா வீட்டுக்கு குட்டி லக்ஷ்மி வந்தாச்சு.
இந்த சின்ன வாழ்க்கைலதான் எத்தனை பெண்களப்பா, இந்த தேவதைகள் இல்லாத ஒரு வாழ்க்கை உலகில் சாத்தியப் படுமா சொல்லுங்க!
உலகப் பெண்கள் தினம்னு ஒண்ணு தனியா எதுக்கு?தினசரி பெண்களைக் கொண்டாட வேண்டாமோ
எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings