in

பார்த்த முதல் நாளே ❤ (நாவல்)

“கெளதம், லைன்ல இருக்கியா?” என்ற அன்னையின் குரலுக்கு

“சொல்லும்மா” என்றான் கெளதம்

“கண்ணா… நேத்து மாளவிகானு ஒரு பொண்ணு போட்டோ காட்டினேனே, என்ன முடிவு பண்ணின?” என்றார் அன்பாய் 

“அம்மா… சிக்னல் சரியா இல்ல, அப்புறம் பேசறேன்” என கெளதம் அழைப்பை துண்டிக்கப் போக

“இந்த மழுப்பற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம் கெளதம்” என்றார் கிருஷ்ணவேணி, சற்றே கண்டிப்பான குரலில்

“இல்லம்மா, அது….” என சமாதான குரலில் கெளதம் தொடங்க

“போன வருஷம் கேட்டப்ப, லண்டன் போயிட்டு வந்து கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கறேன்னு வாக்கு குடுத்த. இப்ப லண்டன்ல இருந்து வந்ததும் வராததுமா, என்கிட்ட இருந்து தப்பிக்கரதுக்கே கோயமுத்தூருக்கு கெளம்பிட்ட. அவனவன் பெத்தவங்களுக்காக என்ன என்னமோ செய்றான். நான் கல்யாணம் பண்ணிக்கோனு தான கேக்கறேன்” என்றார் மூச்சு வாங்கியபடி

“டென்ஷன் ஆகாதீங்க மிசஸ் கிருஷ்ணவேணி ராமகிருஷ்ணன், எப்படி மூச்சு வாங்குது பாரும்மா” என கெளதம் சிரிக்க

“பேச்ச மாத்தாத கெளதம்” என்றார் இன்னும் கோபமாய்

“நான் ஈவினிங் போன் பண்றேன் மம்மி, சரியா?” என்றான் கெஞ்சலாய்

“முடியாது, இப்பவே சொல்லு” என்றார் கிருஷ்ணவேணி விடாமல்

“அம்மா நான் டிரைவ் பண்ணிட்டுருக்கேன், சரியா பேச முடியல” என்றான், வேண்டுமென்றே கைப்பேசியை சற்று நகர்த்தி வைத்து

சாலை ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு தான் அழைப்பை எடுத்தான் என்ற போதும், வேண்டுமென்றே பெற்றவளிடமிருந்து தப்பிக்க, பொய் உரைத்தான் கெளதம் 

அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல், “வண்டி ஒட்டிட்டே போன் பேசாதனு எத்தன வாட்டி சொல்லி இருக்கேன் கெளதம். கட் பண்றேன், அப்புறம் பேசு” என பதட்டமாய் கூறியபின் அழைப்பைத் துண்டித்தார் கிருஷ்ணவேணி

“அப்பாடா, இன்னிக்கி எப்படியோ எஸ்கேப் ஆயாச்சு” என பெருமூச்சு விட்ட கெளதம், சாலை ஓரத்தில் நிறுத்திய காரை உயிர்பித்தான்

கெளதம் – டாக்டர் கெளதம் ராமகிருஷ்ணன், 27 வயது எலிஜிபில் பேச்சிலர். இளமை பருவத்திற்கு உரிய குறும்புத்தனமும் சில பலவீனங்களும் இருந்த போதும், கண்ணை கவரும் தோற்றமும், நல்ல பண்பும், மெச்சும் படிப்பும் ஒருங்கே அமைவது அரிது என கூறும்படி இருந்தான்

உடன் பிறந்தவள், ஒரே தங்கை சுஜிதா. மூன்று வருடம் முன்பு, அவள் விரும்பிய அருணுடன் திருமணம் முடிந்து, இப்போது ஒன்றரை வயதில் ஒரு ஆண் பிள்ளை

மகனுக்கும் உரிய வயதில் திருமணம் செய்ய கௌதமின் அன்னை வற்புறுத்திக் கொண்டிருந்தார், அவன் பிடி கொடுக்காமல் நழுவிக் கொண்டிருந்தான்

பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில். சென்னையிலேயே அவனுக்கு நல்ல பணி வாய்ப்புகள் வந்த போதும், அதை மறுத்து கோவை வந்தான்

அதற்குக் காரணம், அவன் மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்ட, அவன் பணிபுரியும் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், அதன் நிறுவனருமான, கௌதமின் தாய் மாமா டாக்டர் சந்திரசேகரன்

வாரிசுகளற்ற சந்திரசேகரன், மருத்துவ சேவையும், சமுதாய நலப்பணிகளும் செய்து வந்தார். அதற்கு உறுதுணையாய் நின்றார் அவர் மனைவி வாணி

சிறுவயது முதலே தன் மாமாவைப் பார்த்து, தானும் மருத்துவர் ஆக வேண்டுமென ஆசைப்பட்டு அதில் வெற்றியும் கண்டான் கெளதம். எனவே மருத்துவம் படித்து முடித்ததும், அவருடன் சேர்ந்து பணிபுரிய ஆரம்பித்தான்

மாமாவும் அத்தையும் எத்தனை வற்புறுத்திய போதும், அவர்களுடைய வீட்டில் தங்க மறுத்து விட்டான் கெளதம்

மருத்துவப் பணி, கால நேரம் பாராமல் செய்யும் பணி, தனியே இருப்பதே தனக்கு வசதி என்றவன் கூற, அவன் வேண்டாமென்றும் கேளாமல், கௌதமின் தந்தை அவனுக்கென கோவையில் ஒரு வீட்டை வாங்கி பரிசளித்தார்

கௌதமின் தந்தை ராமகிருஷ்ணன், சென்னையில் மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டின் உரிமையாளர். ஆரம்பத்தில் சென்னையில் மட்டும் கிளைகள் கொண்டிருந்தது.

அவரது அயராத உழைப்பில், படிப்படியாய் வளர்ந்து, கோவை, திருச்சி, மதுரை என பல இடங்களிலும் தங்கள் தொழிலை விரிவுபடுத்தி இருந்தார்

சிறு வயதில் பெரிய குடும்பத்தின் மூத்த மகன் என்ற பொறுப்பில், தான் நினைத்தது போல் அதிகம் படிக்க வாய்ப்பின்றி, உழைப்பால் மட்டும் உயர்ந்தவர் ராமகிருஷ்ணன்

அதற்காக தன் விருப்பத்தை பிள்ளைகள் மீது ஒருபோதும் அவர் திணித்ததில்லை. அவர்கள் விருப்பப்படி படிக்க வைத்தார்

அவருக்கு தன் மகன் கெளதம், டாக்டர் என்பதில் நெஞ்சம் கொள்ளா பெருமை உண்டு

தொழில் தொடங்கிய ஆரம்ப நாட்களில் பொருளாதாரத்தில் சற்றுப் பின்னே இருந்த போதும், பிள்ளைகளை முகம் வாட விட்டதில்லை. அதே நேரம் அதிக செல்லமும் தந்ததில்லை, உழைப்பின் உன்னதத்தை சொல்லி வளர்த்தார்

தனியே தங்கியிருந்தான் என்றாலும், கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் வாணி அத்தையை பார்க்க, அவர் ஆதரவற்ற பிள்ளைகளுக்காக நடத்தி வரும் ‘அன்னை இல்ல’த்திற்கு சென்று விடுவான் கெளதம். வாணியும் அவனை தன் சொந்த பிள்ளையாகவே எண்ணினாள் 

எம்.பி.பி.எஸ் முடித்து, புற்றுநோய் மருத்துவத்தில் மேற்படிப்பு முடித்தவுடன், ‘வாணி மருத்துவமனை’யில் புற்றுநோய் மருத்துவ நிபுணராக மூன்று வருடத்திற்கு முன் பணியில் சேர்ந்தான் கெளதம்

அதற்கு முன் விசிட்டிங் டாக்டர்களை மட்டும் கொண்டிருந்த புற்றுநோய் பிரிவு, கெளதமின் வரவுக்கு பின் முழுநேரப் பிரிவாய் தனி கட்டிடம் அமைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது

சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாய், அந்தப் பகுதியில் புற்றுநோய் சிகிச்சைக்கு ‘வாணி மருத்துவமனை’யே சிறந்தது எனப் பெயர் வரத் தொடங்கியது

கௌதமின் தொடர்ந்து கற்று கொள்ளும் ஆர்வமும், கற்றதை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளும் பெருந்தன்மையும், அந்த மருத்துவமனையையும் தாண்டி அவன் புகழை பரப்பியது. பல்வேறு மருத்துவ கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு உரையாற்றினான்

இந்த சிறுவயதிலேயே, புற்றுநோய் துறையில் ‘சிறந்த டாக்டர்’ எனப் பெயர் பெற்றான்

அதன் காரணமாய் லண்டனில் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு மருத்துவமனை, ‘ஸ்கில்ஸ் எக்ஸ்சேன்ஜ்’ முறையில் ஒரு வருடம் பணிபுரிய அழைப்பு விடுத்தது

அதன்படி லண்டன் மருத்துவமனை டாக்டர் ‘வாணி மருத்துவமனை’யிலும், கெளதம் லண்டன் மருத்துவமனையிலும் ஒரு வருடம் பணிபுரிய வேண்டுமென ஒப்பந்தம் கேட்டு அனுப்பியது

இப்படிச் செய்வதன் மூலம், இரு சாராரும் நிறைய புது விசயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்குமென கோடிட்டு காட்டி இருந்தனர்

‘வாணி மருத்துவமனை’யை விட்டுச் செல்ல கெளதம் தயங்க, அவன் இல்லாத ஒரு வருடம் தன் மருத்துவமனையை பாதிக்கும் என்ற போதும், கேன்சர் துறையில் உலக பிரசித்திப் பெற்ற அந்த லண்டன் மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு நல்ல வாய்ப்பை தவற விட வேண்டாமென, அவன் மாமா சந்திரசேகரன் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தார்

அந்த ஒரு வருட பணி முடிந்து, இரண்டு நாள் முன்பு தான் இந்தியா திரும்பியிருந்தான் கெளதம். சென்னையில் உள்ள தன் வீட்டில் ஒரு நாள் தங்கியவன், மறுநாளே… இதோ வேலைக்கு புறப்பட்டு விட்டான்

‘வாணி மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல்’ என்ற பெயர்ப் பலகை தாங்கிய கட்டிட வாயிலில் நுழைந்த கெளதம், வாகன நிறுத்துமிடத்தில் தன் காரை நிறுத்தி விட்டு, வெண்ணிற ஓவர் கோட்டை தோளில் போட்டபடி, மருத்துவமனைக்குள் நுழைந்தான்   

அவனைப் பார்த்ததும் வரவேற்பில் இருந்த பெண் முகம் மலர, “குட் மார்னிங் டாக்டர் கெளதம், வெல்கம் பேக்” என்றபடி, அவனுக்கு பின்னால் யாரையோ தேடுவது போல் பார்த்தாள்

“குட் மார்னிங் ரூபா, யாரத் தேடறீங்க?” என்றபடி புன்னகையுடன் அவளருகே சென்றான் கெளதம்

“லண்டன் போனவர் தனியாவா வருவீங்க, ஒரு வெள்ளக்கார பொண்ணு பின்னாடி வரணுமே, காணோம்னு பாத்தேன் சார்” என்றாள் ரூபா வம்பாய் 

“வெள்ளக்கார பொண்ணுக எல்லாம் தெளிவா இருக்காங்க ரூபா, யாரும் ஏமாறலை. நம்ம ஊர்ல யாரயாச்சும் ஏமாத்த முடியுதானு தேடணும்” என சிரித்தபடி, அவளுக்கு சரியாய் கேலி பேசினான் கெளதம்

கெளதமின் இயல்பே அது தான், வேலையின் எத்தனை கறாராய் இருக்கிறானோ, அதே போல் உடன் பணிபுரிவோரிடம் ‘தான்’ என்ற அகந்தையின்றி, நேசக்கரம் நீட்டுவதிலும் அவனுக்கு நிகர் அவனே

அதனாலேயே, குறுக்கிய காலத்தில் எல்லோருக்கும் பிடித்தவனாய் ஆகிப் போனான் கெளதம் 

“நீங்க ‘ம்’னு சொன்னா பொண்ணுங்க உங்க பின்னாடி கியூவுல நிப்பாங்க டாக்டர்” என்றாள் ரூபா விடாமல்

“அப்படியா? ம்… சொல்லிட்டேன், யாரையும் காணோமே பின்னாடி” என்றபடி கெளதம் பின்னால் திரும்பி பார்க்க, ரஞ்சனி வந்து கொண்டிருந்தாள்

அவளை கண்டதும் கண்ணில் ஓர் எச்சரிக்கை உணர்வு தோன்ற, “ஒகே ரூபா. சேர்மன் சார் பாக்கணும்னு சொல்லிட்டு இருந்தார், சி யு லேட்டர்” என்றபடி நகர்ந்தான்

“ஐயோ அதுக்குள்ள போயிட்டாரா?” என புலம்பியபடி வரவேற்பு பகுதிக்கு வந்தாள் ரஞ்சனி

“என்ன ரஞ்சனி, உன் ஆளு எஸ்கேப் ஆய்ட்டாருனு டென்சனா?” என சிரித்தாள் ரூபா

“நீ தான் சொல்லணும் என் ஆளுனு. நானும் இந்த ஹாஸ்பிடல்ல சேந்ததுல இருந்து ட்ரை பண்றேன், ஒண்ணும் நடக்கல. போதாததுக்கு இப்ப ஒரு வருஷமா லண்டன் வாசம் வேற. ஹ்ம்ம், பாத்து எத்தன நாளாச்சுனு ஓடி வந்தா, அதுக்குள்ள எஸ்கேப்” என்றாள் புலம்பலாய்

“ஒரு வருஷமென்ன, பத்து வருஷம் பாரின்ல இருந்தாலும் டாக்டர் கெளதம் அப்படியே தான் இருப்பார். கொஞ்சம் கூட பந்தா இல்லாம ரெம்ப நல்ல டைப், இல்லையா ரஞ்சனி?”

“நல்ல டைப் தான், ஆனா சரியான விஸ்வாமித்திரர்டி” என்றாள் ரஞ்சனி பெருமூச்சுடன் 

“அப்ப நீ மேனகையா மாறிடு” என சிரித்தாள் ரூபா 

“என்னமோ போ” என சலித்துக் கொண்டாள் ரஞ்சனி 

“அப்படி ஒண்ணும் பொண்ணுங்கள பாத்தாலே ஓடற ரகம் இல்லையே, எல்லார்கிட்டயும் நல்லாத் தான பேசறார் ரஞ்சனி”

“பேசறதெல்லாம் நல்லாத் தான் பேசுவார், ஆனா பிடி குடுக்க மாட்டார். சரி ரூபா டைமாச்சு, அப்புறம் பாக்கலாம்” என்றபடி தன் அலுவல் அறை நோக்கி நடந்தாள் ரஞ்சனி

ரஞ்சனி, புற்றுநோய் பிரிவில் கௌதமிற்கு செக்ரட்டரியாக பணி புரிகிறாள். அவனின் தினப்படி சந்திப்புகள், நோயாளிகள் வருகை எல்லாம் குறித்து வைத்து, சரியாக நினைவூட்ட வேண்டியது அவளின் முக்கியப் பொறுப்பு

அது தவிர, அந்த துறைக்கு தேவையான மருந்துகளை ஆர்டர் செய்வது, மற்ற டாக்டர்களிடமிருந்து வரும் கடிதங்களுக்கு ஏற்ப பதில்களை தயார் செய்வது, நோயாளிகளின் பைல்களை பராமரிப்பது என பலவும் செய்வாள்

இதையெல்லாம் மீறி, கௌதமை காதலிப்பதை முக்கிய வேலையாய் செய்து கொண்டிருந்தாள்.

கண்டதும் அவன் மேல் காதல் கொண்டு, மறைமுகமாய் தன் மனதை அவனிடம் வெளிப்படுத்தியும் இருக்கிறாள். ஏனோ அவன் கண்டும் காணாதது போல் இருந்தான்

தனக்கு தெரிந்து வேறு எந்த பெண் மீதும் அவன் மனம் ஈடுபடவில்லை என்பதே, இப்போதைக்கு ரஞ்சனிக்கு ஆறுதலாய் இருந்தது

“மே ஐ கம் இன் சார்?” என அறைக் கதவுத் தட்டப்பட 

“கம் இன்” என்றார் டாக்டர் சந்திரசேகரன், தான் பார்த்து கொண்டிருந்த மருத்துவ அறிக்கையில் இருந்து தலையை உயர்த்தாமலே

“அஞ்சு நிமிஷம் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா டாக்டர்?” என்ற பரிட்சயமான குரலில் நிமிர்ந்தவர்

கௌதமை கண்டதும் முகம் மலர, “டேய் கெளதம்” என மகிழ்வாய் விரைந்து அவனருகே வந்து அணைத்துக் கொண்டார்

“எப்படி இருக்கீங்க சார்?” என கெளதம் கேட்க

“ஒதை வாங்கப் போற கெளதம். நாம மட்டும் இருக்கறப்ப சார் போடாதேனு எவ்ளோ வாட்டி சொல்லியிருக்கேன் உனக்கு?” என்றார் சற்றே கோபமாய்

“ஒகே மாமா, எப்படி இருக்கீங்க? வாணி அத்தை வழக்கம் போல உங்கள மிரட்டிட்டு இருக்காங்களா?” என குறும்பாய் சிரித்தான் 

“உனக்கு கொலஸ்ட்ரால் செக் பண்ணனும் மொதல்ல” என அவன் முதுகில் செல்லமாய் அடித்தார் சந்திரசேகரன்

“அது சரி மாமா, முன்னாடி கேபின்ல உங்க செக்ரட்டரி சுதாவ காணோமே” என கெளதம் குறும்புச் சிரிப்புடன் கேட்க

“டேய், நீ இப்ப என்னை பாக்க வந்தியா? என் செக்ரட்டரிய பாக்க வந்தியா?” என முறைத்தார் சந்திரசேகரன்

“ச்சே ச்சே… என்னை பத்தி உங்களுக்கு தெரியாதா மாமா?” என கெளதம் சிரிக்க

“தெரியுண்டா, நல்லாத் தெரியும்” என கேலியாய் சிரித்தவர்

“என் செக்ரட்டரி சுதா கல்யாணம் பண்ணிட்டு மதுரைக்கு போய் ஆறு மாசமாச்சே” எனவும்

“ஒரு அப்பாவி மனுஷன் வாழ்க்கை போச்சே” என்றான் கெளதம் கேலியாய் 

“அதெல்லாம் இருக்கட்டும், லண்டன் எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்தது?” என்றார் ஆர்வமாய் 

“அதான் தினமும் போன்ல உங்களுக்கு அப்டேட் பண்ணிட்டனே மாமா. சூப்பர் வெதர், சூப்பர் ஹாஸ்பிடல், சூப்பர் டெக்னாலஜிஸ், சூப்பர் எக்ஸ்பீரியன்ஸ், இருந்தாலும் ஐ மிஸ்ட் வாணி ஹாஸ்பிடல்” என்றான் மெல்லிய முறுவலுடன்

“அப்ப இந்த மாமாவ மிஸ் பண்ணல, ஹாஸ்பிடல தான் மிஸ் பண்ணியிருக்க… ஹ்ம்ம்” என்றார் வேண்டுமென்றே பெருமூச்சுடன்

“நீங்க வேற ஹாஸ்பிடல் வேறயா மாமா?” என கெளதம் சமாளிக்க

“நல்லா பேச கத்து வெச்சுருக்க, சீக்கரம் கல்யாணம் பண்ணி வெச்சா தான் அடங்குவ” என்றார் மிரட்டல் போல்

“ஐயோ நீங்களும் ஆரம்பிச்சுடாதீங்க மாமா, வந்தவுடனே இதுக்கு பயந்துட்டு தான் உங்க தங்கச்சிகிட்ட இருந்து எஸ்கேப் ஆகி வந்திருக்கேன்” என்றான் சலிப்பாய்

“பாவண்டா உங்கம்மா, நேத்து பேசினப்ப கூட பொலம்பினா. டேய், நான் சீரியசா கேக்கறேன், மனசுல யாரயாச்சும் நெனச்சுட்டு தான் இப்படி பிடி குடுக்காம இருக்கியா? எதுவா இருந்தாலும் சொல்லு, உங்கம்மாகிட்ட நான் பேசறேன்” என்றவரின் குரலில், உண்மையான கவலை எட்டிப் பார்த்தது

“என்ன மாமா நீங்க? அப்படியிருந்தா இதுக்குள்ள உங்ககிட்ட ஒளறி இருக்க மாட்டேனா? அதெல்லாம் இல்ல. கொஞ்ச நாள் ப்ரீயா இருக்கணும்னு தோணுது”

“அப்ப நாங்கெல்லாம் கல்யாணம் பண்ணிட்டு ஜெயில்ல இருக்கோமா?” என்றார் சந்திரசேகரன் கோபமாய்

“அதை நான் சொல்ல முடியாதே மாமா” என சிரித்தான் கெளதம்

சந்திரசேகரன் முறைக்க, “டென்ஷன் ஆகாதீங்க மாமா. இன்னும் ஆறே மாசம், அப்புறம் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கறேன் ஒகே வா. அயம் ஜஸ்ட் 27, பெருசா ஒண்ணும் வயசாகல” என்றான் சமாதான குரலில்

“என்னமோ சொல்ற, பாக்கலாம். அப்புறம், லஞ்சுக்கு நீ வீட்டுக்கு வரணும்னு உன் அத்தையோட ஆர்டர்” எனவும்

“ஓ… வாணி மேடம் ஆர்டரை எங்கள் தலைவரே மீறாத போது, நான் எப்படி மீறுவேன். தற்போது அலுவல் அழைப்பதால் நான் விடைபெறுகிறேன் தலைவா” என பணிவாய் குனிந்து சிரித்தபடி வெளியேறினான் கெளதம்

செல்போன் ஒலிக்க, கார் ரேடியோவின் சத்தத்தை குறைத்து, “சொல்லு பிரகாஷ்” என்றான் கெளதம்

“டேய் கெளதம், இன்னுமா நீ கெளம்பல? நான் உன்கிட்ட இன்னிக்கி வரச் சொல்றதுக்கு மறந்திருப்பேனு என் பொண்டாட்டி என்னை திட்டிட்டு இருக்கா” என்றான் பிரகாஷ் கோபமாய்

“ஹா ஹா ஹா… ஏதோ என்னால ஆன ஹெல்ப்” என சிரித்தான் கெளதம்

“ஏண்டா பேச மாட்ட, நீயும் சிக்குவல்ல அப்ப கவனிச்சுக்கறேன்” என்றான் பிரகாஷ்

“ரிலாக்ஸ்டா பிரகாஷ், சிட்டிக்குள்ள இருக்கற உங்க அபார்ட்மென்டுக்கு வர்றது, ஏழு கடல் ஏழு மலை தாண்டற மாதிரி இருக்கு போ. அதுவும் சண்டே வேறயா, செம டிராபிக். இப்ப கூட அஞ்சு நிமிசமா இங்க தான் நிக்கறேன். எனக்கு முன்னாடி பெரிய கியூவே நிக்குது” என்றபடி சற்று தலையை வெளியே நீட்டி பார்த்தவனின் கவனத்தை கவர்ந்தது ஒரு காட்சி

“சரி சீக்கரம் வந்து சேரு” என அழைப்பை துண்டித்தான் பிரகாஷ்

அந்த சாலையை ஒட்டியிருந்த ஒரு அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸை சேர்ந்த பூங்காவின் பெஞ்சில் அமர்ந்து, படித்துக் கொண்டிருந்தாள் அவள்

ஏதோ பள்ளி தேர்வுக்கு படிப்பது போல், புத்தகத்தில் இருந்து கண்ணெடுக்காமல், வாசிப்பில் மூழ்கி இருந்தாள்

அந்த பூங்காவின் அமைப்போ, அல்லது ஜனசந்தடி மிக்க அந்த இடத்திற்கு பொருந்தாத அவளின் அமைதியான தோற்றமோ, ஏனோ ஒரு தேர்ந்த ஓவியனின் மாடர்ன் ஆர்ட் போல், அந்த காட்சி கௌதமின் மனதில் பதிந்தது

“இந்த சத்தத்துல எப்படி படிக்க முடியுது இந்த பொண்ணுக்கு? அதுவும் இவ்ளோ இண்டரெஸ்ட்டா?” என தனக்குள் சிரித்துக் கொண்டான் கெளதம்

அவனுக்கு பின் நின்றிருந்த காரோட்டி எழுப்பிய ஹாரன் ஒலியில் மீண்டு, காரைக் கிளப்பினான் கெளதம்

“பாரின் ரிட்டன்னு பந்தாவா? சொன்ன நேரத்துக்கு வரமாட்டீங்களோ? அவ்ளோ பெரிய ஆளா நீ? ஒரு வருஷம் கழிச்சு வந்திருக்கானேனு, அதுவும் கன்சீவா இருக்கறவ உனக்காக சாப்பிடாம வெயிட் பண்ணிட்டு இருந்தேன் பாரு, என்னைச் சொல்லணும். உனக்கு இன்னிக்கி சாப்பாடு கிடையாது, பட்டினி கெட, அப்ப தான் புத்தி வரும்” என மூச்சு வாங்க திட்டிக் கொண்டிருந்தாள் தீபா

அவள் எதிரே இருந்த சோபாவில், இரண்டு கன்னத்திலும் கை தாங்கி அமர்ந்தபடி, பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தான் கெளதம்

தீபாவின் அருகே அமர்ந்து, கௌதமை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் அவள் கணவன் பிரகாஷ்

“என்ன சிரிப்பு? இல்ல என்ன சிரிப்புங்கறேன்?” என பிரகாஷை முறைத்தாள் தீபா

“இ…இல்ல தீபு, நான் அப்பவே இவன்கிட்ட சொன்னேன். என் தீபுவுக்கு லேட் பண்ணினா புடிக்காதுனு, நான் வர்ற நேரத்துக்கு தான் வருவேன்னு சொல்லிட்டான்” என அவள் கோபத்தை தூண்டிவிட்டான் பிரகாஷ்

“டேய்…” என முறைத்தான் கெளதம்

“அவர எதுக்கு மொறைக்கற? கல்யாணம் ஆகி ரெண்டே வருசத்துல அவர் என்னை எவ்ளோ புரிஞ்சு வெச்சுருக்கார். நீ என் கூட பத்து வருஷம் ஸ்கூல்ல ஒண்ணா படிச்சு, அதுக்கப்புறம் இத்தன வருசமா க்ளோஸ் பிரெண்டா இருந்தும், கொஞ்சமாச்சும் புரிஞ்சு வெச்சுருக்கியா?” என்றாள் கோபமாய்

“என்னைப் பாத்து… என்னைப் பாத்து… என்ன வார்த்த சொல்லிட்ட தீபா நீ… நான்…” என கெளதம் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ சொல்ல வர

“அடப்பாவி, என்னமோ டிராமா பிளான் பண்ணிட்டான் போலருக்கே” என யோசனையாய் பார்த்தான் பிரகாஷ்

தீபா கௌதமை சந்தேகமாய் பார்க்க, சுதாரித்த கெளதம்,”உனக்கு ஞாபகம் இருக்கானு தெரில தீபா. அப்போ உனக்கு ஏழு வயசு… எனக்கு அப்போ…”

“உனக்கும் அதே தாண்டா, அவளும் நீயும் ஒரே க்ளாஸ் தான” என்றான் பிரகாஷ் பல்லை கடித்தபடி

“இந்த பிரகாஷை நடுல நடுல பேச வேண்டாம்னு சொல்லு தீபா, ப்ளோ மிஸ் ஆகுதில்ல” என கெளதம் பிரகாஷை கோர்த்து விட, கணவனை முறைத்தாள் தீபா 

தான் எதிர்பாத்து போல் தீபாவின் கவனம் மாறியதில் மகிழ்வுடன் சிரித்தான் கெளதம்

“ஏய் அவன் சிரிக்கறான் பாரு” என பிரகாஷ் கௌதமை கை காட்ட

“கொஞ்ச நேரம் சும்மா இருங்க பிரகாஷ்” என அதட்டியவள், “நீ சொல்லு கெளதம்” என்றாள்

“என்னத்த சொல்லுவான், எதாச்சும் புதுசா ஒரு கதைய யோசிப்பான்” என முணுமுணுத்தான் பிரகாஷ்

“அன்னைக்கி நீ ரெட் கலர் ரிப்பன் வெச்சு ரெட்டை ஜடை போட்டிருந்த தீபா…” என கெளதம் சீலிங்கை பார்த்தபடி பிளாஷ்பேக்கை விவரிக்க ஆரம்பிக்க

“இப்ப காஸ்டியூம் விவரம் எல்லாம் அவசியமா? மேட்டர் என்னனு சொல்லு” என்றான் பிரகாஷ்

“பிரகாஷ்…” என தீபா முறைக்க

“மீ சைலண்ட், நீ பேசுடா நல்லவனே” என அமைதியானான் பிரகாஷ்

“அன்னைக்கி உனக்கு செம காய்ச்சல் தீபா. உன்னால நிக்க கூட முடியல. அவ்ளோ ஏன், நடக்கக் கூட முடியல” என கெளதம் உணர்ச்சிவயமாய் பேச

“நிக்காம எப்பட்றா நடக்க முடியும், ஐயோ கொல்றானே” என புலம்பினான் பிரகாஷ்

அதை கண்டு கொள்ளாமல், “ஒரே இருமல், கூடவே தலைவலி வேற” என்றான் கெளதம்

“நீ தான கூடவே இருந்த, ஓ அதான் தலைவலியா?” இது பிரகாஷின் மைண்ட்வாய்ஸ்

தீபா கன்னத்தில் கை வைத்தபடி கவனமாய் கேட்டுக் கொண்டிருக்க, தொடர்ந்தான் கெளதம் 

“உன் நெத்திய தொட்டு பாத்தா கொதிக்குது, நீ ஓ’னு அழுத. நான் அப்படியே உன்னை தூக்கிட்டு பக்கத்துல இருக்கற ஹாஸ்பிடலுக்கு போனேன். போற வழில, முள்ளு எல்லாம் குத்தி காலெல்லாம் ரத்தம், ஆனாலும் நிக்காம ஓடினேன்”

“ஏன்? உங்கூர்ல ஆட்டோ பஸ் ஒண்ணுமில்லையா?” என பிரகாஷ் முணுமுணுக்க

“டாக்டர்கிட்ட போய் சேர்ற வரைக்கும், என் கால்கள் நிக்கவே இல்ல. டாக்டர் பாத்துட்டு இது பெரிய காய்ச்சல்னு சொல்லிட்டாரு”

“எவ்ளோ பெருசு, ஒரு நூறு மீட்டர் இருக்குமா?” மீண்டும் பிரகாஷின் மைண்ட்வாய்ஸ் கேள்வி கேட்டது

“நிறைய செலவாகும் ஒண்ணும் பண்ண முடியாது போ’னு விரட்டினாரு அந்த மனசாட்சி இல்லாத டாக்டர்.  அன்னைக்கி நான் ஒரு சபதம் எடுத்தேன்

படிச்சு பெரிய டாக்டராகி, என் பிரெண்ட் தீபா மாதிரி கஷ்டப்படரவங்களுக்கு உதவி பண்ணுவேன்னு, இதோ டாக்டர் ஆய்ட்டேன் தீபா டாக்டர் ஆய்ட்டேன். ஆனா நீ, என்னைப் பாத்து… என்னைப் பாத்து… ஹ்ம்ம்…” என இல்லாத கண்ணீரை துடைத்தபடி கூறி முடித்தான் கெளதம்

“சாரி கெளதம், கோபத்துல ஏதோ பேசிட்டேன். சாப்பாடு எடுத்து வெக்கறேன் வா” என தன் நிஜ கண்ணீரை துடைத்துக் கொண்டு, எழுந்து சென்றாள் தீபா

“டேய் கெளதம், இதான் நீ டாக்டர் ஆனதின் பின்னணியா?  என்கிட்ட நீ சொன்னதே இல்லையே” என பிரகாஷ் ஆச்சர்யமாய் கேட்க

“எனக்கே இப்பத் தான தெரியும்” என கண்சிமிட்டி சிரித்தான் கெளதம்

“அடப்பாவி, எல்லாம் டூப்பா? நிறைய லாஜிக் மிஸ் ஆகுதேனு அப்பவே தோணுச்சு, ஆனா கடைசீல நான் கூட கொஞ்சம் நம்பிட்டேன்” என முறைத்தான் பிரகாஷ்

“அய்யாவோட பெர்பார்மென்ஸ் அப்படி” என காலரை தூக்கி விட்டுக் கொண்டான் கெளதம்

“இரு தீபாகிட்ட போட்டுத் தரேன்” என பிரகாஷ் மிரட்ட

“சொல்லு… நேத்து நீ அந்த ஐ.சி.யு நர்ஸ் தேவிகிட்ட சிரிச்சுச் சிரிச்சு பேசிட்டு இருந்தியே, அதை நானும் தீபாகிட்ட சொல்றேன்” என சிரித்தான்

“படுபாவி, நான் எங்கடா சிரிச்சுச் சிரிச்சு பேசினேன்? அந்த நர்ஸ் சரியான சிடுமூஞ்சினு ஹாஸ்பிடலுக்கே தெரியும்” என முறைத்தான் பிரகாஷ்

“அப்ப, அவ சிரிக்கலைனு நீ பீல் பண்றேன்னு சொல்லுவேன்… தீபா” என கெளதம் உள் நோக்கி குரல் கொடுக்க

“டேய்… உனக்குப் புண்ணியமா போகும், கொஞ்சம் சும்மா இரு. அவ மலை ஏறினா இன்னைக்கி ஏறக்க முடியாது. அதுவும் இப்ப இந்த மூணு மாசமா, ப்ரெக்னன்ட் ஆனதுல இருந்து இன்னும் கொடுமை. அழுவ ஆரம்பிச்சா நயாகரா பால்ஸ் எல்லாம் தோத்து போய்ரணும்” என புலம்பினான் பிரகாஷ்

“அந்த செண்டிமெண்டை டார்கெட் பண்ணி கவுக்கலாம்னு தான நானும் டூப் விட்டேன்” என சிரித்தான் கெளதம்

“உன்கிட்ட நான் ட்ரைனிங் எடுக்கணும் போல இருக்கு, ஒரு குடும்பஸ்தனா ஆகறதுக்கு ரெடியாயிட்டு வர்ற. அது சரி, உன் அவங்க எப்படி இருக்காங்க?” என பிரகாஷ் கேலியாய் விசாரிக்க

“என் அவங்களா? அது யாரு?” என புரியாமல் விழித்தான் கெளதம்

“டேய் ரெம்ப நடிக்காத. அதாண்டா ரஞ்சனி, உன் செக்ரட்டரி” என்ற பிரகாஷை முறைத்தான் கெளதம்

“ஏண்டா மொறைக்கற?”

“அந்த பொண்ணு தான் லூசு மாதிரி பீகேவ் பண்ணுதுன்னா, நீயும் ஏன் பிரகாஷ் இப்படிப் பேசற?” என்றான் கெளதம் கோபமாய்

“நீ கல்யாணம் பண்ணிக்காம இப்படியே இருக்க போறியா என்ன? அந்த பொண்ணுக்கு என்ன கொறச்சல். மூணு வருசமா நீ கண்டுக்காம இருந்தாலும் உன்னையே சுத்தித் சுத்தி வர்றா”

“கல்யாணம் பண்ணிக்காம இருக்கப் போறதில்ல, அதுக்காக யாரை வேணா பண்ணிக்க முடியாது. ரஞ்சனிக்கு எந்த கொறச்சலும் இல்ல ஒத்துக்கறேன், ஆனா என்னமோ என் மனசுல அவ மேல ஈடுபாடு வரல” என்றான் கெளதம்

“எப்படிப்பட்ட பொண்ணு தான் வேணுங்கற நீ?” எனக் கேட்டான் பிரகாஷ் புன்னகையுடன்

“இப்படி அப்படினு சொல்லி வாங்கறதுக்கு இது ஒண்ணும் போட்டுக்கற டிரஸ் இல்ல பிரகாஷ், பாத்ததும் ஒரு ஈர்ப்பு வரணும். நான் சினிமாத்தனமா பேசறதா உனக்கு தோணும், ஆனா நீயே தீபாவ பொண்ணு பாத்துட்டு வந்த அன்னைக்கி என்ன சொன்ன?

இவ தான் எனக்குனு மனசுல தோணுச்சுனு சொன்னயே, அப்ப அதுக்கு முன்னாடி தீபாவ விட நல்ல பொண்ணுகள நீ பாத்ததே இல்லைனு அர்த்தமா? இட்ஸ் நாட் தட் பிரகாஷ்”

“ஒகே ஒகே… தெரியாம கேட்டுட்டேன் சாமி, ஆளை விடு” என பிரகாஷ் சரண்டர் ஆனான்

அதே நேரம், “இன்னும் என்ன அரட்டை, சாப்பிட வாங்க ரெண்டு பேரும்” என தீபா அழைக்க, இருவரும் உள்ளே சென்றனர்

தீபாவும் கௌதமும் ஒன்றாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்றாய் படித்தவர்கள், அதன் பின்னும் இருவரின் நட்பு தொடர்ந்து வந்தது. நாளடைவில் இருவரின் பெற்றோரும் கூட நெருங்கிய நண்பர்கள் ஆயினர்

மூன்று வருடம் முன்பு, ‘வாணி மருத்துவமனை’யில் சேர்ந்த போது, அதற்கு சில மாதங்கள் முன்பிருந்து அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த பிரகாஷிடம், குறுகிய காலத்திலேயே நெருங்கிய நண்பனானான் கெளதம்

அடுத்த சில மாதங்களில், தீபாவின் பெற்றோர் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டிருந்தனர்

தரகர் மூலம் வந்த பிரகாஷின் ஜாதகம் தீபாவின் ஜாதகத்துடன் பொருந்தி வர, அதன் பின் விசாரித்து யார் எவரேன விவரம் அறிந்ததும், இரு தரப்பிலும் மிகவும் மகிழ்ந்தனர்

எல்லோரையும் விட மிகவும் மகிழ்ந்தது கெளதம் தான். தான் நட்பாய் நேசிக்கும் இருவர், வாழ்வில் இணையப் போவதை எண்ணி மிகவும் மகிழ்ந்தான்

அதற்கு பின், பிரகாஷ் கௌதமின் நட்பு மேலும் இறுகியது. திருமணமாகி தீபா கோவைக்கு வந்த பின், சமயம் நேரும் போதெல்லாம் அவர்கள் வீட்டிற்கு கெளதம் செல்வது வாடிக்கையானது

மதிய உணவுக்கு பின், சற்று நேரம் அரட்டையில் கழிய, பின் விடைபெற்று கிளம்பினான் கெளதம்

திரும்பும் வழியில், மதியம் கண்ட அந்த பார்க் அருகே வந்ததும், தன்னையும் அறியாமல் வண்டியின் வேகத்தை குறைத்தான் கெளதம்

வேகம் குறைத்து, அந்த பக்கம் பார்த்த கௌதமின் விழிகள், ஆச்சர்யத்தில் விரிந்தது

மதியம் சென்ற போது விட, இப்போது சாலையின் இந்த பக்கம் இருந்தவனுக்கு, மிக அருகில் இருந்தாள் அவள்

சத்தமாய் அழைத்தால் திரும்பி பார்க்கும் தொலைவில் இருந்தவளை, அழைத்துப் பார்ப்போமா என்று கூட நினைத்தான் கெளதம்

“ஓ மை காட், அஞ்சு மணி நேரமா இதே இடத்துலயா? இதென்ன பொண்ணா இல்ல சிலையா?” என வியந்தவனது பார்வை, அவளை ஆராய்ந்தது

காலை வெயிலை ஒத்த அவளின் இளம் மஞ்சள் நிறத்திற்கு ஏற்ப, கண்களை உறுத்தாத இளஞ்சிவப்பு வண்ண சுடிதார் பாந்தமாய் பொருந்தியிருந்தது

அளவெடுத்தது போல் அழகிய புருவங்கள், படிக்கும் ஆர்வத்தில் மேலேறியிருந்தது

புருவ மத்தியில் பிறை சந்திரனாய் ஒரு சந்தன கீற்றும் அதன் மேல் மெல்லிய திருநீற்றின் தீற்றலும், கோவிலுக்கு சென்று வந்த தோற்றத்தை கொடுத்தது அவளுக்கு

கருவிழிகள் இடமும் வலமும் துரிதமாய் அசைந்து, அவளின் வேகமான வாசிப்பை உணர்த்தியது. இருபதின் தொடக்கத்தில் தான் வயது இருக்குமென கணக்கிட்டான் கெளதம்

சுற்றிலும் உள்ள உலகிற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல், தான் வாசிக்கும் புத்தகமே உலகமாய் ஆழ்ந்திருந்தாள்

வண்டியின் ஹாரன் ஒலியில் சுயநினைவிற்கு வந்த கெளதம், ஆக்சிலேட்டரை அழுத்தி விரைந்தான்

வண்டி முன்னோக்கி செல்ல, மனம் பின்னோக்கி சென்றது

“ச்சே, யாரோ ஒரு பொண்ணு பார்க்குல உக்காந்து, லூசு மாதிரி மணி கணக்குல புக் படிச்சுட்டு இருந்தா, நான் ஏன் இவ்ளோ ஆராய்ச்சி பண்றேன்?” என நினைத்துக் கொண்டவன், FM ரேடியோவை உயிர்ப்பித்து கவனத்தை திசை திருப்ப முயன்றான்

“நீங்கள் கேட்டு கொண்டிருப்பது, ‘மனசுக்குள் மத்தாப்பு’ நிகழ்ச்சி. அதாவது, யாராவது ஒரு பொண்ணையோ இல்ல பையனையோ பாத்ததும், உங்க மனசுல மத்தாப்பு உருவான தருணங்களை நீங்க எங்ககிட்ட பகிர்ந்துக்கலாம். அவங்களுக்காக ஒரு பாட்டையும் நீங்க டெடிகேட் பண்ணலாம். இப்ப…..” என அந்த ரேடியோ யுவதி பேசிக் கொண்டே போக

“அடச்சே, வேற வேலை இல்ல” என சலிப்பாய் ரேடியோவை நிறுத்தினான் கெளதம்

ழைப்பு மணி சத்தம் கேட்டு தவைத் திறந்த வாணி, “என்னங்க… யாரோ உங்களுக்கு வேண்டியவங்க வந்திருக்காங்க” என்றபடி, வந்தவனிடம் எதுவும் பேசாமல் சோபாவில் சென்று அமர்ந்தார்

“யாரு வந்திருக்கா?” என்றபடி சந்திரசேகரன் முன்னறைக்கு வர

“மை ஸ்வீட் அத்தைக்கு இன்னும் கோபமா?” என சோபாவில் அமர்ந்து, வாணியின் தோளில் உரிமையாய் தலை சாய்த்தபடி கேட்டான் கெளதம்

“ஆரம்பிச்சுட்டீங்களா உங்க சண்டைய?” என சிரித்தபடி மனைவியின் மறுபுறம் அமர்ந்தார் சந்திரசேகரன்

“சனிக்கிழமை நம்ம அன்னை இல்லத்துக்கு வாடானு எவ்ளோ வாட்டி சொன்னேன் உங்கிட்ட, எனக்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கு பெரிய ஆள் ஆகிட்டயோ?” என்றார் வாணி, இன்னும் கோபம் விலகாமல்

“அச்சோ அப்படியில்ல அத்த, ஒரு கான்பரன்சுக்கு பேப்பர் சப்மிசன் இருந்தது. அதுல கொஞ்சம் பிஸியா இருந்தேன், இல்லேனா நீங்க சொல்லி வராம இருப்பனா?” என பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கெளதம் கூற

“இப்படி பேசியே கரைக்கறதெல்லாம் எங்கிட்ட வேணா நடக்கும், நாளைக்கி உன் வீட்டுக்காரி வந்து முதுகுல ரெண்டு போடுவா பாரு” என்றார் வாணி

“நீ என்னை போடற மாதிரியா வாணி?” என சந்திரசேகரன் கேலியாய் சிரிக்க, அடக்க மாட்டாமல் சத்தமாய் சிரித்தான் கெளதம்

“உங்களுக்கு எப்ப என்ன பேசறதுன்னே இல்ல” என வாணி கணவனை முறைக்க

“ஹா ஹா… பாவம் எங்க மாமா, நான் இருக்கும் போதாச்சும் கொஞ்சம் பேசட்டும் விடுங்க அத்த” என சிரித்தான் கெளதம்

“நேரம்டா, கல்யாணமானப்புறம் என்ன சொல்றேன்னு பாப்போம்” என முறைத்தார் வாணி

கௌதமுக்கு ஏனோ திடீரென மாலை பார்க்கில் பார்த்த அந்த பெண்ணின் முகம் கண் முன் வந்தது

‘ச்சே, இப்ப ஏன் அந்த ஊர் பேர் தெரியாதவ நெனப்பு வருது, ஆனாலும் ஓவர் படிப்ஸ் போலருக்கு’ என அவளின் நினைவில், கௌதமின் புன்னகை விரிந்தது

“என்ன கெளதம் முழிச்சுட்டே கனவு காண்ற? பொண்ணு பாத்துட்டியா என்ன?” என்ற அத்தையின் கேலியான குரலில் கலைந்தவன்

“டோண்ட் வொர்ரி அத்தை, பாத்தா மொதல்ல உங்ககிட்ட தான் கூட்டிட்டு வருவேன்” என்றான்

“எதுக்கு? கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி முதுகுல சாத்தறதுனு க்ளாஸ் எடுக்கவா?” என சமயம் பார்த்து சந்திரசேகரன் மனைவியை கேலி செய்ய, கோபம் காட்ட முயன்றும் கட்டுப்படுத்த முடியாமல் வாணியும் மற்ற இருவரோடு சேர்ந்து நகைத்தாள்

“அது சரி அத்த, நம்ம அன்னை இல்லத்துல என்ன நியூஸ்? அத சொல்லுங்க மொதல்ல, ரெம்ப நாளாச்சு அங்க வந்து” என கெளதம் ஆர்வமாய் கேட்க

“நீ லண்டன் போறதுக்கு முன்னாடி வந்தது, இல்லையா கெளதம்? இந்த ஒரு வருசத்துல நிறைய மாறிடுச்சு, புதுசா நிறைய குழந்தைகள் வந்திருக்காங்க. அதுல ஒரு கொழந்த வெறும் ஒரே வாரம் தான் ஆச்சு பொறந்து, எப்படி தான் பெத்தவளுக்கு மனசு வந்ததோ அப்படி போட்டுட்டு போக? பிள்ளை வரம் வேணும்னு கோவில் கோவிலா ஏறி இறங்கின எனக்குத் தான் தெரியும் அந்த வலி, ஹ்ம்ம்…” என பெருமூச்சுடன் வாணி நிறுத்த, ஆறுதலாய் மனைவியின் தோளில் கரம் பதித்தார் சந்திரசேகரன்

“ரிலாக்ஸ் அத்தை, நீங்க கடவுள்கிட்ட ஒரு பிள்ளை கேட்டீங்க. இப்ப பாருங்க நம்ம அன்னை இல்லத்துல நூத்துக்கணக்கான குழந்தைங்க உங்கள அம்மானு கூப்பிடறாங்க, இது வரம் இல்லையா?” என்றான் கெளதம் ஆறுதலாய்

“உண்மை தான் கெளதம்” என்றார் வாணி, கண்ணில் நீர் பனிக்க

“அது சரி, அந்த ரெண்டு வயசு குழந்தை நித்யாவை தத்து கேட்டுட்டு இருந்தாங்களே, அது என்னாச்சு அத்தை?” என பேச்சை மாற்றினான் கெளதம்

“நித்யாவை மட்டுமில்ல, அதுக்கப்புறம் இன்னும் அஞ்சு பிள்ளைங்களுக்கு கூட அம்மா அப்பா கிடைச்சுட்டாங்க கெளதம். என்ன தான் நாம எல்லா சௌகரியங்களும் செஞ்சு குடுத்தாலும், அம்மா அப்பானு குடும்ப அமைப்புல வாழுற பாக்கியம் பெருசு தானே. ஆனா என்ன, பிள்ளைங்க போனப்ப மனசுக்கு கஷ்டமா இருந்தது”

“அவங்க நல்லதுக்கு தானே அத்த. பட் யு ஆர் ரியல்லி கிரேட், இவ்ளோ பெரிய இல்லத்த நடத்தறது சாதாரண விஷயமில்ல” என்றான் கெளதம், மனமார்ந்த பாராட்டாய்

“நான் மட்டும் தனியா என்ன செய்ய முடியும் கெளதம்? முன்னைக்கு இப்ப நிறைய பேர் தொண்டு நோக்கத்தோட, தங்களோட நேரத்தை இல்லத்துக்காக செலவழிக்கறாங்க. டாக்டர் பிரகாஷோட வொய்ப், அதான் உன் பிரெண்ட் தீபா, வாரத்துல ரெண்டு நாள் ஈவினிங் ரெண்டு மணி நேரம் பசங்களுக்கு டிராயிங் கிராப்ட் கிளாஸ் எடுக்கறாங்க

அப்புறம் நம்ம ஹாஸ்பிடல்ல வேலை செய்யற இன்னொரு பொண்ணு, வாரத்துல ஒரு நாள் டான்ஸ் சொல்லி தர்றாங்க. இப்படி எல்லாரோட பங்களிப்பும் இருக்கு கெளதம். இந்த மாதிரி ஹெல்ப் இல்லாம அஞ்சு குழந்தைகள வெச்சு ஆரம்பிச்ச இல்லம், இப்ப மூந்நூறு பிள்ளைக அளவுக்கு வளந்திருக்க முடியாது” என்றார் வாணி பெருந்தன்மையுடன்

“செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்னு கேள்வி. ஆனா போற போக்கைப் பாத்தா இன்னைக்கு பேச்சுல தான் வயத்த நிறைச்சுக்கணும் போலருக்கு கெளதம்” என ஜாடையாய் மனைவியை பார்த்தபடி, சந்திரசேகரன் பாவமாய் கூற

“உங்கள…” என கணவனை முறைத்தவள் “சரி சரி பேசிட்டு இருங்க, நான் டிபன் ரெடி பண்றேன்” என எழுந்து உள்ளே சென்றார் வாணி….

இந்த நாவல் புத்தகமாக வெளியிடப்பட்டிருப்பதால், தளத்தில் இருந்து நீக்கப்படுகிறது.

190 பக்கங்கள் கொண்ட புத்தகத்தின் விலை Rs.180 மட்டுமே (தமிழ்நாட்டுக்குள் எங்கு என்றாலும் தபால் செலவு இலவசம்)

புத்தகத்தை வாங்க விரும்புவோர், 96294 63241 என்ற எண்ணுக்கு Google Pay மூலம் பணம் செலுத்தி, screenshot எடுத்து புத்தகம் அனுப்ப வேண்டிய உங்கள் முகவரியை சேர்த்து Whatsapp செய்யவும்
மேலும் விவரங்கள் வேண்டுவோர் srirenugapathippagam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் 
எங்கள் ‘ஸ்ரீ ரேணுகா பதிப்பகம்’ மூலம் புத்தகம் வெளியிட விரும்புவோர் 77082 93241 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நன்றி 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வரகு அரிசி தேன்குழல் (முறுக்கு) – (திருமதி. கீதா சாம்பசிவம்) – Deepawali Recipe Contest Entry 2

    யாதுமாகி நின்றாய் ❤ (உலக இல்லத்தரசிகள் தின சிறப்புச் சிறுகதை) – எழுதியவர் : சஹானா கோவிந்த்