in ,

ஏற்காட்டில் ஒரு சதி! (சிறுகதை) – இரஜகை நிலவன்

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ராமதாஸ் டி.வி பார்த்துக் கொண்டிருந்த போதுதான் இந்துவும் ராமுவும் உள்ளே வந்தார்கள்.

ராமதாஸ் மனதில் ஏற்பட்ட குழப்பம் கொஞ்சம் அதிகமாகவே தீவிரமடைந்தது. இருந்தாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல், ”என்ன இந்து! ராமு கூட இந்தப்பக்கம் வந்தாப்பல இருக்கு. நாம் லவ் பண்ணி மூன்று வருடங்களாகி விட்டன. எத்தனை முறை கூப்பிட்ட பிறகும் வந்ததே இல்லை!” என்றான்.

“அது… ராமு வந்து எங்கேயாவது பிகினிக் போகலாமா என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அம்மா தான் ஏற்காடு போனால் குறைந்த செலவு தான் ஆம். நல்ல சுற்றுலாத்தலம் என்று பெர்மிஷன் கேட்டார். அம்மாவும் ஓ.கே. சொன்னதால் கிளம்பி வந்தோம்” என்றாள்.

“ராமு உங்க வீட்டிற்கு வந்திருந்தான்”

“ஆமாம்”

“என்னிடம் கூட சொல்லலில்லையே”

“இல்லே ராமதாஸ் அந்தப் பக்கமாக போயிருந்தேன், அப்படியே இந்து வீட்டிற்கு போய்ப் பார்த்து விட்டு வரலாமே என்று நினைத்து பொய் விட்டு வந்தேன்”

“அது சரி நான் ஊருக்குப் போவதற்கு ரயில் டிககட் எடுக்க ஸ்டேடினுக்கு கூப்பிட்டபோது உனக்கு வருவதற்கு நேரமில்லை, இந்து வீட்டிற்கு போவதற்கு நேரமிருக்கிறது இல்லையா?” சிரித்தவாறு கேட்ட ராம்தாஸ்க்கு கோபம் மனதிற்குள் கொப்பளித்தது.

“அது வந்து… முதல்லே இன்றைக்கு கம்பெனியிலே ஜெனர் பாடி மீட்டிங் இருப்பதாக இருந்தது. அதனால் தான் நான் வர முடியாதுன்னு சொன்னேன். அப்புறம் மீட்டிங் கேன்சல் ஆதனால தான்…” என்று ராமு சொல்லி முடிப்பதற்குள்,

“இன்றைக்கு காலையிலேயே போன் பண்ணி அம்மாவிடம் இன்று சாயங்காலம் உங்கள் வீட்டிற்கு வருகிறேன் என்று சொன்னீர்கள்” என்று சொல்ல ராமுவின் முகம் வெளிறிப் போனது.

ராமதாஸின் மனதில் ஏற்பட்ட குழப்பம் அதிகமாகிப் போக, அவனுக்கு மெதுவாக ராமுவின் குள்ளநரித்தனம் புரிய ஆரம்பித்தது.

‘நான் இந்துவை இவனுக்கு அறிமுகப்படுத்தியிதிலிருந்து தான் இவ்வளவு மாறிப் போயிருக்கிறான். ஏறக்குறைய எட்டு வருட பழக்கத்தில் நான் எங்கு கூப்பிட்டாலும் உடனடியாக எந்த வேலையிருந்தாலும் அப்படியே போட்டு விட்டு வருபவன்… இப்போது நான் காதலிக்கிற இந்து மேல் கண்ணாக இருக்கிறான்.

ஒரு வேளை முதலிலே இவன் தன் ஆசையை வெளிப்படுத்தியிருந்தால் நான் இந்துவை அவனுக்கு தாரை வார்த்துக் கொடுத்திருப்பேன். ஆனால் நான் காதலிக்கிறேன் என்பது தெரிந்த பிறகும்… ஏறக்குறைய பிறன்மனை நோக்குதல் தானே இதுவும்… நான் நாளைக்கு மணந்து போகின்ற பெண்ணைத் தட்டிச் செல்லப் பார்க்கும் இவனுடைய ஈன குணத்தை என்ன என்று சொல்வது.

ராமதாஸ் யோசித்துக் கொண்டிருந்த போதே, “என்ன தாஸ் யோசனையில் ஆழ்ந்திட்டீங்க. நாம் ஏற்காடு போயிட்டு வரலாமா?” என்று இந்து கேட்டாள்.

“அது…அது..வந்து…எனக்குக் கொஞ்சம் வேலைகள் இருக்கிறது இந்து” என்றான் ராம்தாஸ்.

“பார்த்தாயா. நான் உங்கள் வீட்டில் வைத்தே சொன்னேனில்லையா, ராமதாஸ் ரொம்ப வேலையாக இருக்கிறான், நானும் நீயும் போகலாம் என்று சொன்னேன், என்ன ராம்தாஸ் உனக்கு ஆட்சேபனை இல்லையே?” என்று கேட்டான் ராமு.

‘அடப்பாவி! நானும் நீயும் காதலர்கள். இவனை ஏன் இடையில் இழுத்துக் கொண்டு…என்று நேரடியாக சொல்ல முடியாமல் தவித்தான். அதையும் இவனுக்கு சாதமாக்கிக் கொள்ளப் பார்க்கிறானே’ என்று மனதுக்குள் குமுரிய ராம்தாஸ்,

“இல்லை ராமு, நான் வரவில்லை என்றால் இந்து வரமாட்டாள். நாம் எப்போது போகலாம் என்பதை நீயே முடிவு பண்ணிச் சொல்’ என்றான் ராமதாஸ்.

அதைக் கேட்ட ராமுவிற்கு ஏமாற்றம் ஏற்பட அதை வெளிக்காட்டாமல், “அதுவும் சரி தான், இந்து உனக்கு எப்போது காலேஜ் ஸ்டார்ட் ஆகிறது” என்று கேட்டான்.

“ம்…அடுத்த திங்கள்கிழமையிலிருந்து” என்றாள் இந்து.

“ஸோ…ஞாயிற்றுகிழமை புறப்பட்டால் ஒரு வாரத்திற்கு தங்குகிற மாதிரி துணி மணிகளெல்லாம் எடுத்துக் கொண்டுக் கிளம்பலாம்னு நினைக்கிறேன். ராமதாஸ் உன் அபிப்பிராயம் எப்படி” என்று ராமு சாதாரணமாக கேட்க முயற்சித்தும் அவன் குரலில் ஏமாற்றம் யோடியது.

“அப்படியே செய்யலாம். நானும் ஆபிஸிற்கு ஒரு வாரம் லீவு எழுதிக் கொடுத்து விடுகிறேன்” என்றான் ராம்தாஸ்.

ஏற்காடு வரும் வரை சிந்தித்துக் கொண்டே வந்தான் ராமதாஸ். ராமுவும் இந்துவும் ஏதேதோ பேசிக் கொண்டே வந்தனர்.

ஒரு லாட்ஜில் இரண்டு ரூம் எடுத்து இந்துவிற்கு தனியறையும் இவர்கள் இருவருக்கும் ஒரு அறையில் தங்குவதாக ஏற்பாடானது.

அப்போது தான் ராமதாஸிற்கு ஒரு குரூர எண்ணம் எழுந்தது. ‘ஒன்று இவனை என் வாழ்க்கையிலிருந்து கழற்றி விட வேண்டும். இல்லை, இவனைத் தீர்த்துக்கட்டி விட வேண்டும்’ என்று எண்ணிக் கொண்டே சிகரெட் குடித்துக் கொண்டிருந்தவன் அடுத்த அறையில் இந்துவும் ராமுவும் பேசுவதைக் கூர்ந்து கவனித்தான்.

“ராமு, நான் ஏற்கனவே ராமதாஸை காதலிக்கிறேன். நீங்கள் இடையிலே வந்து என்னைக் கட்டிக் கொள் என்றால் எப்படி?” என்றாள் இந்து. அந்தக் குரலில் எந்தக் கோபமுமில்லாதது தாஸுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“நீ ஏன் கவலைப்படுகிறாய்? அவன் சம்பளம் என்ன? என் வருமானம் என்ன?. என்னைத் திருமணம் செய்து கொண்டால் மகாராணி மாதிரி வைத்துக் கொள்கிறேன்” என்றான் ராமு.

“அது சரி, இதை எப்படி தாஸிடம் சொல்லப் போகிறீர்கள்” என்று இந்து கேட்டதும் ராமதாஸ்க்கு தூக்கி வாரி போட்டது. இந்துவா இப்படி மாறிப் போனாள். பணம் காசைக் கண்டவுடன் இவ்வளவு எளிதில் காதல் கூட மாறிப் போய் விடுமா என்று நினைத்தான் ராமதாஸ்.

“அதைப் பற்றி நீ ஏன் கவலைப் படுகிறாய், நான் ராமதாஸிடம் சொல்லி அவனைத் திசைத் திருப்பி விடுகிறேன்” என்றான் ராமு.

ராமதாஸின் மனம் திகு திகுவென்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இவர்கள் என்னை எவ்வளவுச் சாதாரணமாக எடை போட்டு விட்டார்கள். இவர்களைச் சும்மா விடக் கூடாது” என்று மனதிற்குள் கருவிக் கொண்டே எழுந்து வந்தவன் “என்ன இந்து. இன்றைக்கு எங்கே போகலாம்” என்று கேட்ட போது இந்து ராமுவைப் பார்த்தாள்.

“ரொம்ப டயர்டாக இருக்கிறது. இன்று ஏதும் புரோக்ராம் வேண்டாமே தாஸ்” என்றான் ராமு.

“சே! சுற்றிப் பார்க்க வந்து விட்டு இப்படி இருந்தால் எப்படி. கமான் இன்றைக்கு போட்டிங் போகலாம். நான் படகுத் துறைக்கு போய் போட் எல்லாம் அரேன்ஜ் பண்ணுகிறேன். நீங்கள் புறப்பட்டு வாருங்கள்” என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

படகுத்துறைக்கு வந்து படகோட்டியிடம் பணம் கொடுத்து ஓட்டை விழுந்த ஒரு போட்டுக்கும் ஒரு நல்ல போட்டிற்கும் புக் பண்ணினான்.

ராமு இந்துவின் வருகைக்காக காத்திருந்தான், என்னை ஏமாற்றியவர்களே இன்று நீங்கள் படகில் போகும் போது மெதுவாக தண்ணீர் நுழைந்து படகு மூழ்கப் போகிறது. உங்களுக்கும் நீச்சல் தெரியாது. எனக்கே சதி செய்கிறீர்கள் என்று சிரித்தவாறு சிகரெட் குடித்தான்.

இந்துவும் ராமுவும் படகுத் துறைக்கு வர படகோட்டியிடம் சைகை காட்ட படகோட்டி தவறாக நல்ல படகில் ராமுவையும் இந்துவையும் ஏற்றி அனுப்பி விட்டு ஓட்டை விழுந்த போட்டியில் ராமதாஸை அனுப்பி விட்டு கையை காட்டினார், தவறுதல் புரியாமல் சிரித்துக் கொண்டே…

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மன உறுதி!! (சிறுகதை) – இரஜகை நிலவன்

    நேர்மை (சிறுகதை) – கோபாலன் நாகநாதன்