சும்மாதான் இருக்கின்றாள் என்றே சொல்லிச்
சுரண்டுகின்றார் பெண்கள்தம் உழைப்பை வீட்டில்
அம்மாவைப் பாருங்கள் விடியற் காலை
அவளெழுந்தால் இரவுமணி பத்தென் றாலும்
அம்மம்மா சிற்றுண்டி உணவு என்றும்
அழும்குழந்தைக் குணவூட்டிக் கணவ னுக்குத்
தும்மினாலும் மருந்தளித்துப் பணிகள் செய்தும்
துவளாமல் சுறுசுறுப்பாய் இயங்கு கின்றாள் !
நாள்முழுதும் உழைக்கின்ற அவளைப் பார்த்து
நாம்ஒருசொல் பாராட்டிச் சொன்ன துண்டா
தோள்மீது அக்காதான் தம்பி மாரைத்
தூக்கிவைத்து வளர்க்கின்றாள் அம்மை வைப்போல் !
தாள்ஊன்றி நடந்திட்ட காலம் தொட்டுத்
தன்குடும்ப சுமைதன்னை ஏற்றுக் கொண்டு
நீள்வாழ்வைக் கொடுக்கின்ற அண்ணன் மாரை
நினைத்தொருசொல் வாழ்த்தித்தான் உரைத்த துண்டா !
தன்சுகத்தைப் பார்க்காமல் குடும்பத் திற்காய்த்
தன்வாழ்வைக் கொடுக்கின்ற அப்பா மார்கள்
என்றைக்கும் இவர்களெல்லாம் என்னால் தானே
எல்லாமும் என்றொருசொல் சொன்ன துண்டா !
நன்றாக இவருழைப்பைச் சுரண்டு கின்றோம்
நாமென்று என்றேனும் நினைத்த துண்டா
பொன்னாக அவருழைப்பைப் போற்று வோமே
பொறுப்புடனே நடந்தவர்க்குப் பெருமை சேர்ப்போம் !
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings