in , ,

திருத்தெள்ளேணம் (நாவல் பகுதி 4) – பாலாஜி ராம்

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

வெளியே என்ன நடக்கின்றது என்பதை பார்க்க கதவில் சாவியை பொருத்தும் துவாரத்தின் வழியாக உற்று நோக்கினேன். வாசலில் நின்று கொண்டிருந்த காவலாளிகள் போட்ட சத்தத்தில் நுழைவு வாயில் இருந்த காவலாளி உள்ளே ஓடி வந்தார்.

சிறிது நேரத்திலேயே இரண்டு காவலாளிகளும் மயங்கி விடவே அவர்களை தூக்க சென்ற நுழைவு வாயில் காவலாளியும் மயங்கி விழுந்தார். இனி நம்மை தடுக்க யாரும் இல்லை என்ற தைரியத்தில் அங்கிருந்து புறப்படும் போது தான் கருடகொடியோன் நினைவுக்கு வந்தான்.

அவன் இங்குதான் உள்ளானா? அல்ல சென்றுவிட்டானா? என்று பரிசோதித்தேன். வீட்டிற்குள் எங்கேயும் அவன் இல்லை. பிறகு, அங்கிருந்து தப்பிக்க வீட்டின் கதவை திறந்த பொழுது ஒரு பெண் அழும் குரல் என் காதில் கேட்டது. அழுகுரல் கேட்கும் திசையை நோக்கி நடந்தேன். அதன் முடிவு அம்மன் சிலை இருக்கும் அறை தான்.  

நான் அறைக்குள் நுழைந்ததும் அழுகுரல் நின்று விட்டது. நாகதேவி சிலைக்கு முன் மல்லையன் மயக்க நிலையில் கிடந்தான். அவனைத் தாண்டி அம்மன் சிலை அருகே சென்று, அம்மன் முகத்தை உற்று நோக்கினேன்.

பொலிவிழந்து கலை இழந்த அந்த தெய்வம் என்னிடம் ஏதோ சொல்ல வருவதை உணர்ந்தேன். தெய்வத்தின் இக்கட்டான நிலையை புரிந்து கொண்டேன். திடிரென என் மனதில் தோன்றிய உத்வேகத்தால் அம்மனை பார்த்து, 

“தாயே பராசக்தி…. நாகதேவி அம்மா…. இந்த அமாவாசை தொடங்கி வரும் பௌர்ணமி தினத்திற்குள் கருடக்கொடியோன் போட்டிருக்கும் இந்த கருடமந்திர கட்டிலிருந்து உன்னை மீட்டு எடுப்பேன். இது சாதாரண வார்த்தை அல்ல என் சபதமாகும்” என்று உரக்க சொல்லி அம்மனின் பாதங்களில் விழுந்து வணங்கி அவ்விடம் விட்டு வெளியேறினேன். 

வெளியேறியதும் முதல் வேலையாக முகத்தில் கட்டிருந்த துணியை அவிழ்த்தேன். அந்த துணி எதற்கேனும் உதவியாக இருக்கும் என்று எண்ணி சட்டை பையிலே வைத்துக் கொண்டேன். பிறகு, நீங்கள் கரையை அடைவதற்கு முன் நான் இவ்விடம் வந்து சேர்ந்தேன். 

இவ்வாறு நடந்தவற்றை முழுவதும் சொல்லி முடித்தான் சலந்தாரி. 

கதை சொல்ல தொடங்கி முழுதும் முடிக்கும் வரை மூவரும் வேகமாக நடந்தனர். இருப்பினும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பாதி தொலைவை கூட அடையவில்லை.  

“இந்த வேகத்தை விட இன்னும் வேகமாக செல்ல வேண்டும். அப்பொழுதுதான், நாம் எண்ணிய நேரத்திற்குள் காரியத்தை கச்சிதமாக முடிக்க முடியும்” என்றான் சங்கபதுமன்.

இவன் சொன்னதை கேட்ட தூமவதியும் சலந்தாரியும் இன்னும் வேகமாக நடக்க தொடங்கினர். சிறிது நேர மௌன நடைபயணத்திற்கு பிறகு சங்கபதுமன் பேசலாயினான், அந்த கருடகொடியோனுக்கு மல்லையன் வீட்டில் என்ன வேலை இருக்கும்? இருவரும் என்ன பேசி கொண்டனர்? இவர்களால் நாம் செய்ய போகும் காரியத்தில் ஏதேனும் தடை வருமா? என்று  சலந்தாரியை பார்த்து கேள்விகளை  கேட்டான். 

“மல்லையனும், கருடகொடியோனும் ஒருவருக்கொருவர் பேசி  நான் பார்க்கவில்லை,  கருடகொடியோன் என்ன வேலைக்காக மல்லையின் வீட்டிற்கு வந்தான் என்று தெரியவில்லை. ஆனால், அவன் முகத்தில் எந்தவொரு பயமும் பதற்றமும் இல்லாமல் தெளிவாகவும் தைரியமாகவும் இருந்து. இதை வைத்து பார்க்கும் போது மல்லையனுக்கு  தெரிந்துதான் அவன் அங்கு இருக்கிறான் என்றும் மலையனுக்கும்  கருடகொடியோனுக்கும் இடையே நல்ல ஒரு பழக்கம் இருக்கின்றது என்றும் தெரிந்து கொண்டேன். இருப்பினும், என் மனதில் இரண்டு கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ள ஆர்வம் எழுகிறது. ஒன்று, கருடகொடியோனுக்கும் மல்லையனுக்கும் இடையே இருக்கும் தொடர்பு, மற்றொன்று, கொல்லிமலையிலிருந்த நாகதேவியை கருட மந்திரங்களால் கட்டி சிறை வைத்திருப்பதற்கான காரணம் என்ன?” என்று சலந்தாரி வினவிய மறுநொடியே  “இதற்கெல்லாம் விடை நீங்கள் தான் சொல்ல வேண்டும் அம்மா” என்று தூமவதியை நோக்கி சங்கபதுமன் கூறினான். 

மெல்ல புன்னகைத்த தூமாவதியோ இவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தாள். பேராசை,  கெட்டபுத்தி கொண்ட இருவரும் மாமன் மச்சான் உறவுமுறையை கொண்டவர்கள். என் தாத்தா தேவராசனை ஏமாற்றி எங்களுக்கு சேர வேண்டிய செல்வத்தை அபகரித்து பெரும் பணக்காரனாகினான் மல்லையன். அவன் அத்தோடு விடவில்லை என்று எதையோ சொல்ல வந்தவள், எச்சிலை விழுகுது போல் உள்ளே விழுங்கிக் கொண்டாள்.

தூமவதி சொல்ல வந்த விஷயம் ஏற்கனவே சங்கபதுமனுக்கும், சலந்தாரிக்கும் தெரிந்திருந்ததால் அவர்கள் ஏதும் கேட்கவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்த தூமாவதி சொல்ல தொடங்கினாள். தன் முன்னோர்களுக்கு நாக தேவியால் ஏற்பட்ட சாபம் தீர கருடக்கொடியோனுக்கு பெருஞ்செல்வம் தேவைப்பட்டது.   

அதனால், பெரும் செல்வந்தனாகிய மல்லையனுக்கு தன் தங்கை வெண்மதியை திருமணம் செய்து கொடுத்தான். இதற்கு, மல்லையன் எவ்வாறு சம்மதித்தான் என்று இடையில் கேள்வி எழுப்பினான் சலந்தாரி.   

எல்லாம் பணத்தின் மீதுள்ள ஆசைதான். தான் காளி தேவியின் உபாசகன் என்றும், காளிதேவி தன்னிடம் பேசுவாள் அவளிடம் உலகில் எங்கெங்கெல்லாம் புதையல் இருக்கின்றது, அதை எவ்வாறு எடுக்க வேண்டும் என்று கேட்டறிந்து நான் உனக்கு சொல்லுவேன். அதை நீ பயன்படுத்தி இன்னும் பெரும் செல்வந்தனாக ஆகலாம் என்று ஆசையை தூண்டினான்.

ஆசையில் மயங்கிய மலையனும் கருடக்கொடியனுடன் நெருங்கி பழகி அவன் நம்பிக்கைக்கு பாத்திரமானான். பின்னர், இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். பிறகென்ன தன் தங்கையை மல்லையனுக்கு திருமணம் செய்து வைப்பது இன்னும் சுலபமாகிவிட்டது. திருமணமும் நடந்தது இருவரும் மாமன் மச்சான் ஆனார்கள், என்று தூமவதி முதல் கேள்விக்கு பதில் கூறி முடித்தாள்.

“அம்மா.. நீங்கள் இரண்டாவது கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன்பு கருடகொடியோன் பரம்பரைக்கு நாகதேவி கொடுத்த சாபம் பற்றி சொல்ல வேண்டும்” என்றான் சலந்தாரி. 

சொல்கிறேன் என்று முப்பத்து வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வுகளை சொல்ல ஆரம்பித்தாள் தூமவதி. 

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    திருத்தெள்ளேணம் (நாவல் பகுதி 3) – பாலாஜி ராம்

    திருத்தெள்ளேணம் (நாவல் பகுதி 5) – பாலாஜி ராம்