in ,

சேதுராமனும் சட்டமும் (சிறுகதை) – சுஶ்ரீ

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

சேதுராமன் இருக்கானே அவன் கூட சேந்து எங்கயாவது போகணும்னாலே எனக்கு பயம்தான். வாயில நல்ல வார்த்தையே வராது. எல்லா வேலையும் முரண்பாடாதான் செய்வான். By principle லோகல் டிரெயின்ல, பஸ்ல அவன் டிக்கட் எடுத்ததில்லை. கடன் வாங்கினா கண்டிப்பா திரும்பத் தரமாட்டான்.சட்டம்னு ஒண்ணு இருந்தா அதை மீறணும், எல்லாரும் சட்டப்படி நடந்தா அதை பாதுகாக்கற போலிஸ், வக்கீல், கோர்ட்டு, நீதிபதிக்கு வேலையே இல்லாம சோம்பேறியா போயிடுவாங்கன்னுவான்.

ரோட் கிராஸ் பண்றப்ப கூட சிவப்பு போட்டவுடனேதான் வேணும்னு கையை காட்டி வேகமா வர வண்டிகளை திணற அடிச்சிண்டே கிராஸ் பண்ணுவான், என்னவோ அதுல ஒரு திரில் அவனுக்கு. இப்படித்தான் கிராஸ் பண்றப்ப எங்கேயோ அடி பட்டு ஹாஸ்பிடல்ல இருக்கான்.அவன் மனைவி ஃபோன் பண்ணினா, உங்க ஃபிரண்ட் ஆஸ்பத்திரில கிடக்கார் வந்து பாருங்கண்ணானு.எங்கே மாட்டி விடுவானோனு பயத்தோடதான் போனேன். இப்ப அவனே உங்க கூட பேசுவான், எதுலயும்           மாட்டிக்காம கேளுங்க.

நான் சேதுராமன், அன்னிக்கு ஆபீஸ்ல இருந்து வந்திண்டிருந்தேனா யாரோ ஒரு கம்மனாட்டி பைக்கை கொண்டு வந்து மேலே இடிச்சிட்டான். இன்னொரு கழிச்சல்ல போறவன் என்னை ஆட்டோ ரிக்‌ஷால ஏத்தி அந்த தூங்குமூஞ்சி ஹாஸ்பிடல்ல சேத்துட்டான்.அந்த வீணாப் போன டாக்டர் வந்து பாக்கறதுக்குள்ளே வலதுகால்ல சுண்டு விரல் கொஞ்சம் வீங்கிடுத்து.

அந்த கடங்காரன் வந்து பாத்துட்டு “ அடடா ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னால கொண்டு வந்திருந்தா காப்பாத்தி இருக்கலாமேனு” பங்கஜா கிட்ட சொல்றான்,அட்மிட் ஆயி 4 மணி நேரத்துக்கு அப்பறம்.

அவ ஐய்யோ அப்பானு கத்த ஆஸ்பத்திரில இருந்த அஞ்சு நர்சு, மூணு ஆயா எல்லாரும் ஓடி வரா, வாசல்ல பீடி குடிச்சிண்டிருந்த அந்த ‘அமரர் ஊர்தி’ வேன் டிரைவர் அவசரமா பீடியை ரெண்டு, மூணு இழுப்பு பக்பக்னு இழுத்து மனசில்லாம தூக்கி போட்டுட்டு வண்டி கதவை பார திறந்து வைக்கறான், டெட் பாடியை ஏத்த வசதியா.

அந்த டாக்டர் பாவம் சின்னப் பையன்தான், அவனே பயந்துட்டான். “என்னாச்சும்மா ஏன் அலறரீங்க”

“ நீங்கதானே சொன்னேள் காப்பாத்தறது கஷ்டம்னு, இந்த பாழாப் போன மனுஷன் இன்ஷ்யூரன்ஸ் வேற பண்ணிக்கலை,

வசந்த் அண்ட் கோ ல இருந்து எல்லாத்தையும் வாங்கி குவிச்சாச்சு இன்ஸ்டால்மென்ட் கட்டலேன்னா எல்லாத்தையும் தூக்கிண்டு போயிடுவா,TV ல “மனைவி மகாலட்சுமி” சீரியல் கிளைமாக்ஸ் இன்னும் வரலை TV ஐ தூக்கிண்டு போயிட்டா மாடி ஆத்துக்குன்னா போகணும், ஹவுசிங் லோன் வேற, ஈஸ்வரா என்ன பண்ணப் போறேனோ”

“டாக்டர் பையன் ஏம்மா கத்தி ஊரை கூட்டறீங்க, அவர் சுண்டு விரலை காப்பாத்தி இருக்கலாம்னு சொன்னேன். செப்டிக் ஆன மாதிரி இருக்கு தெரியலை எனக்கே இது ரெண்டாவது கேஸ் பயமுறுத்தறீங்களே.உயிருக்கு ஒரு ஆபத்துமில்லை, பாருங்க அவரே சாஞ்சு உக்காந்துண்டு ஆப்பிளை கடிச்சிண்டிருக்கார்.”

ஓடி வந்த நர்சுகள், ஆயாக்களுக்கு சப்னு ஆயிடுத்து,வாங்கடி வடை ஆறிப் போனா வரட் வரட்னு நாய்த் தோலாட்டாம் ஆயிடும்னு இது போற கேஸ் இல்லைனு உள்ளே டிபனை தொடர போயிட்டாங்க.

அந்த அமரர் ஊர்தி டிரைவர் உள்ளே வந்து, கண்ணம்மா பேட்டை ரூட்ல ஏக டிராபிக், கஸ்மாலம் , சுத்திணு போகணும் சீக்கிரம் பாடியை ஏத்துங்கன்றான்.இருக்கற ஒரே பேஷண்ட் நான் உக்காந்து ஆப்பிள் திங்கறதை பாத்துட்டு,” சே இன்னிக்கு நாளே சரியில்லை, பூட்ச்சுனு சந்தோஷப் பட்டா நட்டுக்கினு உக்காந்து அணிப்பிள்ளை மாரி பழத்தை கொறிக்குது” அலுத்துக் கொண்டே வெளியே போனான்.

அந்த டாக்டர் பையன், “ பக்கத்துலயே ஒரு ஆஸ்பத்திரி இருக்கு அங்கே இருந்து ஒரு நல்ல டாக்டரை கூப்படறேன் கவலைப் படாதீங்கனு,”போன்ல யார் கிட்டயோ பேசினான்., ஒரு அரை மணி நேரத்துல தொளதொளனு ஒரு புடவை, மூக்குல டாலடிக்கற வைர மூக்குத்தி, வெள்ளைக் கோட் சகிதம் ஒரு டாக்டர் வந்தாங்க.

என்னை என்னாச்சுன்னாங்க, “அது ஒண்ணுமில்லை மாவு மாதிரி இனிப்பே இல்லாத ஆப்பிள், பாக்கதான் அழகா இருக்கும், ஆப்பிள்னா கடிச்சா கச்சக்னு தேங்கா பத்தை மாதிரி இருக்கணும்னு சொல்லிட்டிருந்தேன்”

அட அதை கேக்கலப்பா உனக்கென்ன?

எனக்கென்ன மஸ்தா இருக்கேன், பங்கஜாவோட தங்கச்சியை கூட எனக்கே கட்டிக் கொடு மாமானு , மாமனாரை கேட்டிட்டிருக்கேன். அந்த குரங்குக்கு என்னவோ ஐஸ்வர்யா ராய்னு நினைப்பு. நானும் பாக்கறேன் எந்த அபிஷேக் பச்சன் வாரான்னு.

டாக்டர் தலைல கை வச்சிண்டார், “ ஏம்மா நீதான் இந்தாள் பொண்டாட்டியா? எப்படிம்மா குடும்பம் நடத்தறே? யாராவது சொல்லுங்களேன், ஏதோ ஆக்சிடண்ட்னு சொல்லி என்னை வரவழைச்சிட்டு அந்த கத்துக்குட்டி டாக்டரும் ஓடிட்டான். நர்சுகள் ரிசப்ஷன்லேயே உக்காந்து வடை திங்குதுக. என்னனு சொன்னாதானே நான் வைத்தியம் பாக்க முடியும்.”

“கைலியை கொஞ்சம் விலக்கிதான் பாரேன்”

“ சீ சீ அசிங்கம் பிடிச்ச ஆளு , படாத இடத்துல பட்டிருந்தா நான் யாராவது ஆண் டாக்டரை அனுப்பறேன்”

பங்கஜா,” இல்லை டாக்டர் இந்தாளு கட்டின நாள்ல இருந்து வக்கிரமாதான் பேசறாரு என்ன செய்ய என் தலையெழுத்து. இதுல என் தங்கச்சியை வேற கட்டிக்கறாராம். அவ பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கா.இவரு ஏழு தடவை எட்டாவது படிச்சிருக்காரு.” (அப்படியும் பாசாகலை)

அந்த டாக்டரம்மா அசந்து போய் அங்கே இருந்த ஸ்டூல்ல உக்காந்தாங்க.அவசரமா உள்ளே வந்த நர்ஸ் “ டாக்டர் அவர் கால்ல லேசா அடி பைக் சக்கரம் ஏறி இருக்கு அவ்வளவுதான்.”

“அப்ப கட்டு போட்டு டிஸ்சார்ஜ் பண்ணுங்கம்மா ஏன் அட்மிட் பண்ணி பெட்ல போட்டீங்க.”

“ ஐய்யோ டாக்டர், சற்று மெதுவான குரல்ல, யார் வந்தாலும் கட்டாயமா நாலு நாளாவது பெட்ல அட்மிட் பண்ணணும்னு மேனேசர் அய்யா சொல்லிருக்காரில்லை”

“எனக்கு தெரியாது என்ன ஃபீசோ பில் போட்டு இந்த ஆளை வீட்டுக்கு அனுப்புங்க”

என்னைப் பாத்து “ ஏய்யா மோதின வண்டி நம்பர் ஆளை தெரியுமா, அவனை பிடிச்சு உன் செலவு காம்பென்சேஷன் கிளைம் பண்ணிக்கோ”

“ அவனை எங்கே கேக்க அவன்தான் என்கால் மேல ஏறி தடுமாறி எதுக்க வந்த லாரிக்கடில போயிட்டானே, பச்சை சிக்னல் போட்டா வேகமா வரணுமா என்ன, என்னை மாதிரி எவனும் சிவப்புல கிராஸ் பண்ணுவான்னு உஷாரா இருக்க தாவலை?”

 சேதுராமன் என் ஃபிரண்டுனு சொல்லாம ஆஸ்பத்திரியை விட்டு நழுவிட்டேன்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கரணின் காதல் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    கவி கம்பர் (சிறுகதை) – விடியல் மா.சக்தி