in ,

கரணின் காதல் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

ரண் மெல்ல எழுந்தான். மாலினி அவனை ஜாடையாய் கவனித்தாள். ஏற்கனவே அதுபோல அவன் இரண்டு முறை எழுந்து உடனே உட்கார்ந்ததையும் கவனித்திருந்தாள். நம்மிடம் வரத்தான் இந்த பாடு படுகிறான் என்பது புரிந்துபோனது அவளுக்கு. ஏனென்றால் இதைப்போலத்தான் அவன் ஒவ்வொரு தடவையும் செய்கிறான்.

மூன்றாவது முறையாக எழுந்தவன் ஏதோ எதேச்சையாக பக்கத்து டபிள் பரந்தாமனிடம் பேசப் போவது போலவே போனான். பிறகு மாலினிக்கு பக்கத்து சீட் பத்மினியிடம் பேச வருவது போல வந்து நின்றான். அவளிடம் ஏதோ பேசினான். மாலினிக்குப் புரிந்தே விட்டது. அடுத்து நம்மிடம்தான் வரப் போகிறான் என்று. அவள் நினைத்தது போலவே வந்தும் விட்டான்..

மாலினி தன் கவனத்தை கம்ப்யூட்டரிலேயே புதைத்திருக்க முயன்றுகொண்டிருந்தாள். வந்தவன் எதிரே இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான். மாலினி இன்னும் நிமிரவே இல்லை. டேபிளில் இருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து  உருட்டினான். உருட்டிகொண்டே இருந்தான்.  இரண்டு மூன்று முறை அவளை பார்த்தான்.

அப்போதுதான்  மாலினி மெல்ல நிமிர்த்தாள். அவனது கண்களை ஊடுருவிப் பார்த்தாள். அவன் உடனே தலையை சாய்த்துக் கொண்டான். பிறகு மெல்ல நிமிர்ந்தான். ‘ மாலினி, நாம ஆபீஸ் விட்டுப் போகும்போது கணேஷ்பவன்ல காபி சாப்பிடலாம் வர்றீங்களா… ப்ளீஸ்… ‘ என்றான்.

இப்படித்தான் வருவான், ஏதாவது பேசிக்கொண்டே இருப்பான்.  ஆரம்பத்தில் அவளும் காது கொடுத்துத்தான் கேட்டாள். நாளடைவில் தெரிந்து போனது, அவள் அவளை கொக்கி போட முயற்சிக்கிறான் என்று.  பிறகு, ‘ உம்… ‘ மட்டும்தான் கொட்டுவாள். பிறகு அதையும் நிறுத்திக் கொண்டாள்.

மறுபடியும் அவனது கண்களை ஊடுருவிப் பார்த்தாள். மறுபடியும் அவன் தலையை சாய்த்துக்கொண்டான். அவள் சொன்னாள், ‘ ஸாரி… நான் காபியெல்லாம் குடிக்கறதில்லை… ‘  திடுக்கிட்ட அவன், ‘ ப்ளீஸ்… மாலினி… டீயாவது… ‘ என்றான். அவனுக்கு இவளுடன் எப்படியாவது தனிமையில்  பேசவேண்டும். இவளுக்கோ அவனை எப்படியாவது கழற்றி விட வேண்டும். யோசித்தாள்.

கரண் பொறுமையிழந்து காத்திருந்தான். அவனது கைக்குள் பேப்பர் வெயிட் மூச்சுத் திணறியது. ‘ சரி பார்ப்போம்..‘ என்று விட்டு மறுபடியும் கம்ப்யூட்டரில் கவனத்தைச் செலுத்தினாள் மாலினி.

மெல்ல எழுந்து கொண்டவன், ‘ தேங்க்ஸ் மாலினி… நான் உங்ககிட்டே நிறைய பேசணும்… எங்கே வரமாட்டீங்களோனு பயந்து போயிருந்தேன்… தேங்க்ஸ்… சான்ஸ் கொடுத்ததுக்கு மறுபடியும் தேங்க்ஸ்… ‘ என்று படபடப்புடன் பேசிவிட்டு கிளம்பிவிட்டான். நிம்மதி பெருமூச்சு விட்டாள் மாலினி.

இதை கடைசி டேபிளில் இருந்து கவனித்துக் கொண்டே இருந்த ராதிகா, மெல்ல எழுந்து வந்தாள். சிரித்தபடி கேட்டாள், ‘ என்ன… ஹீரோ இன்னிக்கும் அறுத்தானா… ‘  அவள் சொன்ன ஜோக்கை மாலினியால் ரசிக்க முடியவில்லை. ‘ அவனுக்கு முத்திடுச்சு… ‘ என்றவள், ‘ எதிர்த்த ஹோட்டல்ல காபி சாப்பிடலாம் வாங்கன்றான்… ‘ என்றாள் விரக்தியாய்.

‘ அவ்ளோதானே… ஓஸில ஒரு காபி குடிச்ச மாதிரி ஆச்சில்ல… போகவேண்டியதுதானே… ‘ என்றாள் ராதிகா.  ‘ அட நீ வேற… அவனுக்கு என்கிட்டே நிறைய பேசணுமாம்…’ என்றாள். அதிர்ச்சியுடன், ‘ அதுக்கு நீ என்ன சொன்னே ‘ என்றாள் ராதிகா.  ‘சரி பார்ப்போம்னேன்…. ‘ என்றவள் சற்றே எரிச்சலுடன்,  ‘ அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா… பேச சான்ஸ் குடுத்ததுக்கு தேங்க்ஸ்ங்கறான்… ‘  என்றாள். விழுந்து விழுந்து சிரித்தாள் ராதிகா.

‘ நான் முடிவு பண்ணிட்டேன்… ‘ என்றபடி நிமிர்ந்த மாலினியை புரியாமல் பார்த்தாள் ராதிகா. அவளை நெருங்கி வரச் சொல்லி அவளது காதில் ஏதோ கிசுகிசுத்தாள். அவள் சொன்னதைக் கேட்டு சிரித்துகொண்ட ராதிகா, ‘ சரி சரி… நான் சொல்லிடறேன்… ‘ என்றாள். தொடர்ந்து, ‘ அப்போ நாளைலேர்ந்து உன்னை திரும்பிக் கூட பார்க்கமாட்டான் உன் ஹீரோ… ‘ என்றாள். சிரித்தபடி, ‘ மறக்காம சொல்லிடுடி… அஞ்சரை மணி… ஒகே… ‘ என்று சொல்லி முடித்தாள், மாலினி.

xxxxxxxxx

பீஸ் வாசலில் பதட்டத்துடன் காத்திருந்த கரண், மாலினி வெளியே வந்ததும், மெல்ல நெருங்கியவன், ‘ போகலாங்களா… ‘ என்றான். ஒன்றும் பேசாமல் கொஞ்சம் தள்ளியே நடந்தாள் மாலினி.  ஹோட்டலுக்குள் நுழைந்ததும் எதிரில் இருந்த டேபிளில் உட்காரப் போனாள் மாலினி. பதற்றத்துடன், ‘ ப்ளீஸ், இங்கே வேணாம்ங்க… அதோ அந்த கார்னர் டேபிள்ல உட்காரலாமே … ப்ளீஸ்… ‘ என்று யாருமில்லாமல் இருந்த ஒரு கார்னர் டேபிளைக் காட்டினான் கரண்.

அங்கே போய் உட்கார்ந்ததும், ‘ ஏதாவது சாப்பிடலாமா… ‘ என்றான். ‘ ஸாரி… எனக்கு எதுவும் வேண்டாம்… ‘ என்றாள்.  ‘ இங்கே உளுந்துவடை ரொம்ப நல்லா இருக்கும்… ‘ என்றான். அவள் உதட்டை சிலுப்பிக்கொண்டாள். புரிந்து கொண்ட கரண் சர்வரிடம், ‘ அண்ணே, ரெண்டு காபிமட்டும்… கொஞ்சம் ஸ்ட்ராங்கா… ‘ என்றான். பின்பு அவளைப் பார்த்து புன்னகைத்தான். அவளோ உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.

கொஞ்சம் நிமிர்ந்தவன், ‘ நான் ஓபனா சொல்லிடறேன்ங்க மாலினி… நான் நிறைய தடவை உங்ககிட்ட சொல்ல வந்து… வந்து… சொல்லமுடியாம போயிருக்கேன்… ‘ என்றவன், ‘ நீங்க இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சுக் கூடப் பார்க்க முடியலை…மாலினி… அந்தளவுக்கு உங்களை என் நெஞ்சு புல்லா நிறைச்சு வைச்சிருக்கேன்… ‘ என்றான்.

உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் அவள். அந்த நேரம் பார்த்து ஹோட்டலுக்குள் ஒருவர் நுழைய, அவரை இங்கிருந்தே கையை உயர்த்தி… ‘ ஹாய்  ‘ என்றாள் மாலினி.  கரண் பதற்றத்துடன் திரும்பினான். டிப்டாப்பாக ஒருவன் வந்துகொண்டிருந்தான். அவனும், ‘ஹாய்… ‘  என்று சொல்லிக்கொண்டே அவர்களை நெருங்கினான்.

முகத்தில் மலர்ச்சியுடன், ‘ ஹாய்… சுந்தர்… வாங்க… நீங்க எங்கே இந்தப் பக்கம்… ‘ என்றாள் மாலினி.  ‘ பக்கத்துல ஒரு வேலை… சரி காபி சாப்பிடலாம்னு உள்ளே வந்தேன். இங்கே  வந்து பார்த்தா நீங்க… என்ன ஒரு சர்ப்ரைஸ்…’ என்றபடி ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு உட்கார்ந்தான். கரணோ கொஞ்சம் பதறிப்போய் நகர்ந்து உட்கார்தான்.

‘ இவன் இவ்வளவு சரளமாக பேசுகிறானே, ரொம்பவும் தெரிந்தவனோ… அல்லது உறவுக் காரனோ… உடனே போய்விடுவானா, இல்லை உட்கார்ந்து அறுப்பானா… நாம் இவளை எவ்வளவு கஷ்டப்பட்டு இழுத்துக்கொண்டு வந்திருக்கிறோம்… இன்றைக்கும் நம்மால் சொல்ல முடியாமல் போகுமா… இன்னொரு முறை கூப்பிட்டால் இவள்தான்  அவ்வளவு சுலபமாக வந்துவிடுவாளா… கடவுளே… இவனை எப்படியாவது வெளியேத்தி விடு… ‘  பொருமினான் கரண்.

கரண் பக்கம் திரும்பிய மாலினி, ‘ கரண்… இவர் பேரு சுந்தர்… பேருக்குத் தகுந்த மாதிரி அழகா இருக்கார் இல்லை… ‘ என்று சிரித்தாள். கரணால் ரசிக்க முடியவில்லை. தவித்தான். முழித்தான். அவளே தொடர்ந்து, ‘ பை தி பை… இவர் ஒரு டாக்டர்…  ‘ என்றாள்.

அதற்குள் சர்வர் காபி கொண்டு வர, அவரிடம், ‘ இன்னொன்னு…’ என்றாள். பொறுமை இழந்தான் கரண். ‘  யார் இவன், பூஜை அறைக்குள் கரடி புகுந்தது போல… ‘ கறுவிக்கொண்டான். நிமிர்ந்து உட்கார்ந்த மாலினி, கரணைக் காட்டி, ‘  சுந்தர்… இவர் பேரு கரண். எங்க ஆபீஸ் ஸ்டாஃப்…’ என்றாள்.

திடீரென்று எழுந்து, ‘ எக்ஸ்கியூஸ் மீ…  வாஷ்ரூம் போயிட்டு வந்திடறேன் ‘ என்றுவிட்டு சுந்தர் நகரந்ததும், இவன் அவசரமாய், ‘ மாலினி… நான் கொஞ்சம் பர்சனலா பேசணும்னு வந்தேன்… அதுக்குள்ளே… இவன்… ‘ என்றவன், ஒருமையில் சொல்லிவிட்டோமே என்று நாக்கை கடித்துக் கொண்டான்.

சிரித்தபடி, ‘ அதனால என்ன… அவரை போகச் சொல்லிடட்டுமா…’ என்றாள். அவன் எதுவும் பேசுவதற்குள், ‘ அதுக்கு முன்னால… அவர் யார்னு உங்களுக்கு தெரியுமா… என்னோட் உட்பி… ஐ மீன்… என்னைக் கட்டிக்கப் போறவர்…வருங்கால கணவர்… ‘ என்றாள் ஆடிப்போனான் கரண்.

அதற்குள் சர்வர் இன்னொரு ஒரு காபியையும் கொண்டுவந்து வைக்கவும் சுந்தர் அங்கே வந்து உட்காரவும் சரியாக இருந்தது. நிமிர்ந்து உட்கார்ந்த மாலினி கரணிடம், ‘ கரண்… ஏதோ சொல்ல வந்தீங்களே… ‘ என்றாள் தைரியமாய்.  அவனோ ‘ இல்லே…ங்க…மா..லி..னி… ‘ என்று தடுமாறி, பாதி ஆறிவிட்ட காபியை மடமடவென குடித்து முடித்துவிட்டு, ‘ நீங்க பேசிட்டிருங்க… வந்துடறேன்… ‘ என்றுவிட்டு ஓடியேேவிட்டான்.

காலையில் வந்து தன் சீட்டில் உட்கார்ந்தாள் மாலினி. எதிர் சீட்டில் கரணைக் காணவில்லை. திரும்பி கடைசி சீட்டைப் பார்த்தாள். அப்போதுதான் ராதிகா அந்த சீட்டில் வந்து உட்கார்ந்தாள். மாலினியை பார்த்துவிட்டு என்ன ஆச்சு என்பது போல சைகை செய்தாள். இவள் வெற்றி என்பது போல கட்டை விரலை உயர்த்திக் காட்டிவிட்டு எழுந்து அவளிடம் போனாள்.

‘ தம்பி சொன்னான்…’ என்று சிரித்தாள் ராதிகா.  ‘ ஆமா… நல்லவேலையா நான் சொல்லிவச்ச மாதிரி உன் தம்பி சரியான நேரத்துக்கு வர… அவன் வாஷ்ரூம் போன சமயம் பார்த்து அவர்தான் என்னோட வருங்கால கனவர்னு நம்ம ஹீரோக்கிட்ட ஒரு புருடா விட்டேன்… அவனோட முகத்தைப் பார்க்கணுமே… ‘ என்றுவிட்டு கடகடவென சிரித்தவள், ‘ மடமடனு காபியை குடிச்சிட்டு ஓடியே போய்ட்டான்… ‘ என்று சிரித்தாள்.

சட்டென ஜாடை காட்டி, ‘ ஹீரோ வந்துட்டார்… ‘ என்று கிசுகிசுத்த ராதிகா, ‘கவலைப் படாதே… இனிமே அவன் உன்பக்கம் வரவே மாட்டான்…’ என்று சொல்லிவிட்டு திரும்பிவிட்டாள் மாலினி.  ஜாடையாய் எதிர் சீட்டைக் கவனித்தாள். அவன் நிமிறவே இல்லை.

ஒருமணி நேரம் ஓடியிருக்கும். படபடப்புடன் ஓடி வந்தாள் ராதிகா.  ‘என்னாச்சு… ‘  என்பது போல பார்த்தாள் மாலினி. ‘ நான் என்னடி சொல்லுவேன்… ‘ என்று படபடத்தாள் ராதிகா… ‘ பழைய ஃபைல் எடுக்க மாடிக்குப் போனேன்.  ஹீரோ அங்கே வந்துட்டான். ‘ ராதிகா மேடம்… நான் உங்ககிட்டே பர்சனலா பேசணும்… ‘ னான். நானும் உன்னைப் பத்திதான் ஏதோ சொல்லப் போறானாக்கும்னு பார்த்தா… என் தலையில இடியைப் போட்டுட்டான்… ‘ என்றாள் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு.

‘ என்ன ஆச்சு…. சொல்லு… ‘ என்று துரிதப் படுத்தினாள் மாலினி.

‘ ராதிகா மேடம், உங்களை ரொம்பகாலமா லவ் பண்றேன்… உங்ககிட்டே நிறைய பேசணும்ங்கறான்… நான் தெறிச்சு ஓடிவந்துட்டேன்…’  என்றாள் ராதிகா.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பால் கடன் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    சேதுராமனும் சட்டமும் (சிறுகதை) – சுஶ்ரீ