in ,

பணமா பாசமா…? (சிறுகதை – முற்பகுதி) – பவானி உமாசங்கர்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

“அன்னம், இந்த மஞ்சப்புடவையும் சிவப்பு ஜாக்கெட்டும் உனக்கு அம்சமா இருக்குது, அப்படியே ரதிதேவி மாதிரி இருக்கற” அவளருகில் சற்று நெருக்கமாக வந்து கணவன் கூறியதும் துள்ளி விலகியவள்

“ஏங்க யாராவது பார்க்க போறாங்க” என்று சுற்று முற்றும் பார்த்தபடி கூறினாள் அன்னம்

“ஏய் யார் பார்த்தா எனக்கென்ன என் வீட்டில என் பொண்டாட்டியை நான் கொஞ்சறேன்” என்ற கணவனை முறைத்தபடி

“ஆங் பிள்ளையில்லாத வீட்டில கிழவன் துள்ளி விளையாடற மாதிரி, என்ன இது? மருமகளுங்க பார்த்தா” என்றாள் அன்னம் குறுநகையுடன்.

“அப்படி என்ன வயசாகுது எனக்கு என்னை கிழவன்னு சொல்லுற?” என்று கூறியபடி அவள் கன்னத்தில் முத்தமிட்ட கணவனை நினைத்த அன்னத்தின் கண்களில் கண்ணீர் வழிந்தது

“என்னை ராணி மாதிரி வைச்சிருந்தீங்க, ஆனா  இப்போ எல்லாத்தையும் என்கிட்ட ஒப்படைச்சுட்டு நீங்க என்னை விட்டு ஏன் போனீங்க. பழசு எதையும் நினைக்க கூடாதுன்னு அறிவு சொல்லுது, ஆனா மனசு முரண்டு பிடிக்குது. நான் என்ன செய்வேன், கடவுளே அல்லாடும் இந்த மனசை கொஞ்சம் அமைதிப் படுத்துப்பா” அன்னம் நீண்ட பெருமூச்சு எடுத்து தன்னை தானே சமாதானம் செய்து கொண்டாள்.

“குட் மார்னிங் அன்னம்மா காப்பி ரெடியா” என்று கேட்டபடி வந்தவள் ரஞ்சனி. அந்த வீட்டின் எஜமானி.

“இதோ பால் காஞ்சிடுச்சு கண்ணு கலந்து தரேன்” என்று கூறிய அன்னம்மாவின் முகத்தைப் பார்த்த ரஞ்சனி

“ஏன் டல்லா இருக்கீங்க உடம்புக்கு முடியலையா? “என்று கேட்டாள்.

” இல்லை கண்ணு இன்னைக்கு என் வீட்டுக்காரர் நினைவு நாள். பழைய நினைப்புல மனசும் உடம்பும் சுணங்குது” என்றாள் அன்னம்

“சமையல் செய்ய சிரமமாயிருந்தா வள்ளியை கொஞ்சம் துணைக்கு வைச்சுக்குங்க தனியா கஷ்டப்பட வேணாம்” என்ற ரஞ்சனியிடம்

“வள்ளியை நான் கூப்பிடவே வேணாம் அவளே வந்து உதவி செய்வா, நான் பார்த்துக்கறேன்” என்றாள் அன்னம் புன்னகையுடன்.

காப்பியை கையில் வாங்கிய ரஞ்சனி மனதில் அன்னம்மாவைப் பற்றிய யோசனை ஓடியது. அன்னம்மா வந்த பின் வீட்டில் மூன்று வேளையும் உணவைப் பற்றிய சிந்தனையே ரஞ்சனிக்கு வருவதில்லை. ஒவ்வொரு நேரமும் ஆரோக்கியமான உணவுகளை அந்தக் கால முறைப்படி சமைத்துக் கொடுக்கிறார்.

“உங்க சொந்தக்காரர் வெள்ளியங்கிரி அண்ணா தான் சொன்னார், நம்ம வீட்டில் சமையலுக்கு ஆள் தேவைன்னு” என்று போன வருடம் தான் இங்கு வந்தார் அன்னம்மா.

அவர் தோற்றம் அறுபது வயது மதிக்கத்தக்கதாக இருந்தது. சற்று வயதானவர் தான் ஆனால் குழந்தைகளை அன்பாக பார்த்துக் கொள்வார் என ரஞ்சனியும் அவள் மாமியாரும் நினைத்ததால் அன்னத்திற்கு அங்கு வேலை கிடைத்தது.

ரஞ்சனியின் வீடு அவள் கணவன், பிள்ளைகள் கணவனின் பெற்றோர், தம்பிகள் இருவர், தங்கை என்ற பெரிய கூட்டுக் குடும்பம் அவர்களின் அந்த பெரிய பங்களாவை பராமரிக்க தோட்டக்காரருடன் வீட்டு வேலை செய்யவும் நான்கு ஆட்கள் இருந்தனர். அங்கு அன்னம் சமையல் ஆளாக சேர்ந்தார்.

சுத்தமான உடையுடன் சற்று கம்பீரமாக இருந்த அன்னத்தை பார்த்து வாழ்ந்து கெட்டவள் இன்று வாழ வகையின்றி இந்த வேலைக்கு வந்து இருக்கிறாள் போலும் என்றே நினைத்தனர் ரஞ்சனி வீட்டார்.

அவள் குடும்பத்தைப் பற்றி கேட்ட போதும் “எனக்கு இரண்டு மகனுங்க  இருக்காங்க அவங்க தனித்தனி குடும்பமா இருக்காங்க” என்று அன்னம்மா கூறிய போதே பிள்ளைகள் அவளை சரிவர கவனிக்கவில்லை என புரிந்து கொண்டனர். அதற்கு மேல் அன்னமும் அவர்களிடம் தன் வீட்டாரைப் பற்றி எதுவும் கூறியதில்லை.

சமையல் வேலையை வள்ளியின் உதவியுடன் முடித்த அன்னம் ரஞ்சனியின் மாமியாரிடம் அனுமதி பெற்று பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்றாள். சுவாமி தரிசனம் முடித்து விட்டு வெளிப் பிரகாரத்தில் இருந்த மண்டபத்தில் அமர்ந்தவள் மனம் வெறுமையாக இருந்தது.

இரண்டு மகன்களைப் பெற்று வளர்த்து இப்போ இப்படி யாருமில்லாத அனாதை மாதிரி இந்த ஊரில இருக்கேன், ஏதோ கடவுள் கருணையால நல்லவங்க அறிமுகம் கிடைச்சது. அவங்களும் என்னை மரியாதையா நடத்துறாங்க, மனம் திரும்பவும் அந்த வட்டத்துக்குள்ளேயே சுழன்றது.

பேரப் புள்ளைங்களுக்கு என் மேல ஆசையும் பாசமும் அதிகம். மகன்களுக்கு மட்டும் இல்லையா என்ன, எல்லாம் பணம்படுத்தும் பாடு. பணத்துக்கு முன்னாடி பாசமாவது நேசமாவது, மனம் வெறுத்துப் போனது.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சமூக அக்கறை (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 4) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை