in ,

நிஜமான பொய்கள் – சிறுகதை (நாமக்கல் வேலு)

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

வித்ரா ஆன்ட்டி கார் கேட்டதாக அம்மா வந்து சொன்னபோது திக்கென்றது எனக்கு. பத்து நாட்களுக்கு முன்புதான் அவர்கள் அவசரமாக வெளியூர் போவதால், கார் வேண்டும் என்று சொல்லி வாங்கிக்கொண்டு போயிருந்தார்கள். ஊருக்குப் போய்விட்டு திரும்பி கொண்டுவந்து காரை விட்ட கொஞ்ச நேரத்தில் எனக்கு ஒரு அவசர வேலையாக வெளியே போகவேண்டி இருந்ததால், காரை எடுத்தேன்.

அப்போதுதான் தெரிந்தது, முன்பக்க சக்கரத்தில் காற்று இல்லை என்று.  காற்று இறங்கிவிட்டதா அல்லது பஞ்சராகிவிட்டது என்று புரியாமல் புலம்பியபடி மெக்கானிக்கிற்கு ஃபோன் போட்டுக் கூப்பிட அடுத்த ஒருமணி நேரத்திற்குள் அவன் வந்து டயரை கழற்றி எடுத்துக்கொண்டு போய் பார்த்துவிட்டு, ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான், ‘ சார் டயர் மாத்தணும்… ஐயாயிரத்துலேர்ந்து ஆறாயிரம் வரை ஆகும்… ’ என்று.

அத்தோடு டயரும் ட்யூபும் கிழிந்திருக்கிறது என்றும் ட்யூபை வேண்டுமானால் பஞ்சர் போட்டுவிடலாம், ஆனால் டயரை மாற்றியே ஆகவேண்டும் என்றும், இல்லாவிட்டால் கிழிசல் வழியாக ட்யூப் பிதுங்கிக்கொண்டு வெளியே வர சான்ஸ் இருக்கிறது என்றும், சமயங்களில் அது வெடித்தாலும் வெடிக்கலாம் என்றும் குண்டு மழை பொழிந்து கொண்டே போனான்.

அப்புறம் ஆறாயிரம் வரை செலவு செய்து டயரை மாற்றியது தனிக்கதை. ஓஸி கொடுத்துவிட்டு நம் கையை நாமே அறுத்துக் கொண்டேமே என்று வருத்தப்பட்டதும் உண்டு.

அதனால், அம்மாவிடம் சொன்னேன், ‘ ஏதோ ஒரு காரணம் சொல்லி தட்டிக்கழிம்மா ‘ என்று.  எப்படிச் சொல்லி தட்டிக்கழிப்பது என்று அம்மா தயங்கிக் கொண்டிருக்கவே, ‘ஹேன்ட் பிரேக் பிடிக்கலை… வண்டில வேலை இருக்குனு தம்பி சொல்லிக்கிட்டிருந்தான்னு சொல்லி பாரத்தை என் மேலே போட்டுடும்மா… ‘ என்று சொல்லிவிட்டு நான் ஆபீஸ் கிளம்பிவிட்டேன்.

சாயங்காலம் கோவிலுக்கு போகலாம் என்று அம்மா சொல்ல எல்லோரும் கிளம்பி காரில் ஏறி உட்கார்ந்தபோதுதான் தெரிந்தது, நிஜமாகவே ஹேண்டுபிரேக் பிடிக்கவில்லை என்று. அப்புறம், மெக்கானிக்கிற்கு ஃபோன் போட்டு, காரை எடுத்துக்கொண்டு போகச் சொல்லிவிட்டு கால் டாக்ஸி பிடித்துகொண்டு கோவிலுக்குப் போனதெல்லாம் தனிக்கதை.

xxxxxxx

போன வாரம் ஒரு நாள் அப்பாவுக்கு சில மெடிக்கல் டெஸ்ட்கள் எடுக்க வேண்டியிருந்தது. டாக்டர் எப்படியும் அரை நாளாகிவிடும் என்று சொல்லியிருந்தார். ஆபீசில் ஒரு மணிநேரமோ, அரைமணி நேரமோ பர்மிஷன் போடலாம். ஆனால், அரைநாளெல்லாம் போடமுடியாது, கேட்டாலும் நாகரீகமாக இருக்காது என்பதால், மேனேஜரிடம் ஒரு நாள் லீவு சொல்ல, அவர் லீவுக்கு காரணம் கேட்க, ‘எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது‘ என்று சொல்லி லீவு வாங்கிவிட்டேன்.

அப்புறம் ஆஸ்பத்திரிக்கு போய் சில பல டெஸ்ட்டுகள் எடுக்க, அதற்கே முக்கால் நாளாகிவிட, பிறகு அந்த ரிப்போர்ட்டுகளை எல்லாம் பார்த்துவிட்டு பயப்படும்படி ஒன்றுமில்லை மாத்திரையிலேயே சரி செய்துவிடலாம் என்று டாக்டர் சொன்னதும் வேறு கதை.

அன்றைக்கு ராத்திரி தூங்கிவிட்டு விடிந்து எழுந்தால் கண்களை முழிக்க முடியவில்லை. கண்களில் எரிச்சல், உடம்பும் கொதித்தது. எனக்கே பயம் வந்துவிட்டது, நிஜமாகவே காய்ச்சல் ஏதும் வந்துவிட்டதோ என்று.

அம்மா வந்து தொட்டுப் பார்த்துவிட்டு உடனே ஆஸ்பத்திரிக்கு கிளப்பிவிட்டார்கள். அங்கே போனால் இரண்டு மூன்று டெஸ்ட்களை எடுக்கச் சொல்லிவிட்டார் டாக்டர். டெஸ்ட்டுகளுக்கு கொடுத்துவிட்டு உட்கார்ந்திருந்து ரிப்போர்ட் வந்தபிறகு டாக்டரிடம் அவைகளைக் காட்ட, அதையெல்லாம் பார்த்துவிட்டு இது டைஃபாய்டின் ஆரம்பம் என்றும் பத்துநாள் மருந்து மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்றும் சொல்லிவிட்டார் டாக்டர்.

xxxxxxx

நேற்று ராத்திரி படுத்துக்கொண்டு யோசித்து யோசித்துப் பார்த்தேன். நாம் ஒவ்வொரு தடவையும் ஏதாவது பொய்யான காரணம் சொல்லி தப்பிக்கும்போதெல்லாம் அந்த பொய்யான காரணம் நிஜமாகவே நடந்து விடுகிறதே… இது எப்படி சாத்தியமாகிறது.

அப்படியென்றால், நாம் பொய் சொல்லக்கூடாதென்று கடவுள் நமக்கு மறைமுறமாக கட்டளை இடுகிறாரா…. அல்லது ஊரில் சொல்லுவார்களே, ‘நீ எதுவும் சொல்லாதடா… உன் நாக்கு கருநாக்கு… பளிச்சிடப் போகுது… ‘ என்று. அதைப்போல நமது நாக்கு கருநாக்கா… அப்படி ஒரு பவர் ஏதும் நமது காக்கிற்கு வந்துவிட்டதா என்று யோசனை ஓடிக்கொண்டிருந்தது. …

திடீரென்று எழுந்தோடிப்போய் கண்ணாடியில் நாக்கை நீட்டி பார்த்தேன். அப்படி ஒன்றும் கருப்பாய் இல்லை. நமது நாக்கு கருநாக்கில்லை என்றால், பிறகு ஒவ்வொரு தடவையும் நாம் சொல்லும் பொய்கள் நிஜமாவது எப்படிவது… அவைகள் பலிப்பது எப்படி… கடைசிவரை தலைமுடியை பிய்த்துக்கொண்டதுதான் மிச்சம். புரியவேயில்லை. தூக்கமே வராமல் அவஸ்தைப் பட்டு விடிகிறபோதுதான் நன்றாக தூங்கிப் போனேன்.

யாரோ கூப்பிடுவது போல இருந்தது. தூக்கத்திலிருந்தவன் திடுக்கிட்டு எழுந்தேன். அப்பா எதிரே நின்று கொண்டிருந்தார். ‘ஊர்லேருந்து ஃபோன் வந்துச்சுப்பா, ருக்குமணி பாட்டி (அம்மா வழி பாட்டி) பாத்ரூமில வழுக்கி விழுந்து விட்டாரங்களாம்… ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கிறாங்களாம்… ‘ என்று பரிதவிப்புடன் சொன்னார் அவர்.

‘அம்மா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிகிட்டிருக்கா, கிளம்பு போயிட்டு வரலாம்… ‘ என்று சொல்லிவிட்டு வேகமாய் போய்விட்டார். வெளியே அம்மா அழுதுகொண்டிருப்பது கேட்டது.

மேனேஜரிடம் சொல்லாமல் போகமுடியுமா… அதனால் உடனே மொபைலை எடுத்தேன். ‘சார்… ரொம்ப அவசரமா எல்லாரும் ஊருக்கு கிளம்பறோம்… இன்னிக்கு ஒரு நாள் லீவு வேணும் சார்… ‘ என்றேன்.

மேனேஜர் உடனே கேள்வி கேட்டார், ‘ ஏம்பா… நேத்திக்கு, ஒரு பாட்டி சீரியஸா இருக்கு… வர்ற சனிக்கிழமை நாலு லீவு வேணும்… ஊருக்குப் போகணும்னு கேட்டியே… அந்த பாட்டிக்கு ஏதும்….? ’

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி (சின்னுசாமி சந்திரசேகரன்)

    எமலோகத்தில் ஒரு சிறு குழப்பம் (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன்