in ,

மத்யமாவதி (பகுதி 7 – ரேவதி) – சாய்ரேணு சங்கர்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6

அதிர்ச்சி. உடனே தற்காப்பு உணர்வு தந்த பயம். சப்தம் கேட்டுக் கூடியவர்கள் எல்லோரும் மெதுவாக நகர ஆரம்பித்தார்கள்.

“போலீஸ் வருகிறவரை யாரும் இங்கிருந்து நகரக் கூடாது!” என்று பாண்டுரங்கன் நினைவாக உத்தரவிடாமல் இருந்திருந்தால், மொத்தப் பார்ட்டிக் கூட்டமும் ஐந்தே விநாடிகளில் மாயமாக மறைந்திருக்கும்.

திடீர் திடீரென்று அலாவுதீனின் அற்புத விளக்குப் பூதத்தைப் போலப் பலர் தோன்றிக் கொண்டிருந்தார்கள். இருந்தவர்கள் சிலையாக நின்றார்கள்.

டாக்டர். “ஹீ இஸ் டெட்.”

போலீஸ். “சுத்தி கார்டன் ரோப் போடுங்க. யாரும்கிட்ட வரக்கூடாது.”

கைரேகை சேகரிப்பவர்கள். சீன் ஆஃப் க்ரைம் பார்ப்பவர்கள். ஃபோட்டோகிராஃபர்கள். விருந்தினர்கள். பிரமித்த, ஆர்வமான. ஷீலா. அம்மா. கதறிக் கதறி அழுதுகொண்டு. ஜானவி. நீர் நிறைந்த கண்களுடன். ஷீலாவின் கணவன். வரவழைத்துக் கொண்ட சோகத்துடன். உண்மையான வருத்தத்துடன்.

சம்பத். பயம் உறைந்த பார்வையுடன். விஷ்ணுகுமார். மெலிதான சோகத்தை மிஞ்சிய குரூரத் திருப்தியுடன்.

அஞ்சனா. அழுகையில்லாத, வெறித்த விழிகளுடன். ஆம்புலன்ஸ். அழுகையை மிஞ்சிய அலறலுடன். ஜெயக்குமார். வெறும் சாக்கட்டிக் கோடு உருவமாய்.

===============

விடிந்து விட்டது. வெளியே வேடிக்கை பார்க்க நிறைந்துவிட்ட கூட்டத்தைத் தவிர விஷ்ணுகுமார் வீட்டில் பார்ட்டிக் கூட்டம் ஒரு திடீர் வெள்ளம்போல் போலீஸ் அனுமதித்தவுடனே வடிந்து விட்டது.

போலீஸ் விசாரணைக்காக முன்வாசலுக்கருகில் இருந்த அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்குள் சுந்தர் நுழையும்போது நேரம் மதியவேளை. நிறைய காக்கி. ஆண்கள். இரு பெண்கள்.

“மிஸ்டர் சுந்தர், இந்த விஷயத்தில் நீங்க எங்களுக்கு உதவிசெய்ய முடியும்னு நம்பறோம். அதான் உங்களை முதலிலே கூப்பிட்டோம்” என்றார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசரண்.

“சொல்லுங்க சார்” என்றான் சுந்தர்.

“நீங்க அந்த வீட்டோட மூத்த மாப்பிள்ளை. அதனால அங்கே நடக்கறது எல்லாமே உங்களுக்குத் தெரியும். மற்ற எல்லோரும் இப்போ இமோஷனலா இருப்பாங்க. நீங்க என்ன இருந்தாலும் ஒரு அவுட்சைடர்…”

சுந்தர் பெருமூச்சு விட்டான். “அவுட்சைடர். இதை நான் புரிஞ்சுக்க இத்தனை வருஷம் ஆகியிருக்கு, இன்ஸ்பெக்டர். ஷீலாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுக்கு நான் மாப்பிள்ளையா வந்தபோது, என் எதிர்காலம் பாதுகாப்பாகிட்டது, ஒரு நல்ல காரியர் எனக்கு உறுதியாகிட்டது, என் மாமனார் இறந்து போனதும் சொத்தில் பங்கு கிடைக்கும், இந்த மாதிரித்தான் என்னுடைய எண்ணங்கள் இருந்தது. இவையெல்லாம் தப்பும் இல்லை. உண்மையிலேயே நானும் ஷீலாவும் ரொம்ப சௌகரியமாகத்தான் இருக்கோம்.

“ஆனா, இது என் வீடு இல்ல, ஷீலாவோட வீடும் இல்ல! ஒரு அதிகார வெறிபிடித்த மனிதரோட வீடு! யாரும் யார் மீதும் அவர் அனுமதியின்றி அன்பு செலுத்த முடியாது, வெறுப்பும் காட்ட முடியாது! ஏன், என் வீட்டுக்கு என் குடும்பத்தினரைப் பார்க்க நான் அவர் அனுமதியில்லாமப் போக முடியாது! எல்லோரையும் அவர் இஷ்டப்படி நடக்கற அடிமைகளா, ஆட்டமேட்டன்களா மாற்றியிருந்தார். அவருடைய அடிமைகளா இருக்கற எல்லைக்குள் நாங்க சௌகரியமா, சந்தோஷமா இருக்க முடியும், அவ்வளவுதான்! இந்த வளையத்தைவிட்டு நாங்க போக முடியாது. ஏன், சிந்திக்கக்கூட முடியாது!

“இது எனக்குப் புரியல. இந்த வீட்டிலிருக்கும் யாருக்குமே புரியல! ஆனா ஜெயக்குமாரின் வருகை எங்களுக்கு அதையெல்லாம் புரிய வெச்சது. அவனுடைய வருகையை என் மாமனார் விரும்பாததற்குக் காரணம், அவன் மேலே ஏற்கெனவே உள்ள வெறுப்பு மட்டும் இல்ல, எங்களுக்கு எங்க சுயதரிசனம் பண்ணி வெச்சுடுவானோங்கற பயமும்தான் என்பது எனக்கு இப்போ புரிபட்டிருக்கு…”

“…ஜெயக்குமார் மீது, தன் சொந்த மகன் மீது, உங்க மாமனாருக்கு இவ்வளவு வெறுப்புத் தோன்ற என்ன காரணம், மிஸ்டர் சுந்தர்?” என்று அங்கே இருந்த இரு பெண்களில் ஒருத்தி கேட்டாள். சுந்தர் அவளை வியப்புடன் பார்த்தான்.

“சாரி, நான் இவங்களை இன்ட்ரொட்யூஸ் பண்ணலை. இவங்க தன்யா, தர்ஷினி. அவர் மிஸ்டர் தர்மா. இவங்க சென்னை வேளச்சேரில சதுரான்னு ஒரு டிடக்டிவ் ஏஜன்சி நடத்தறாங்க…”

“இவங்களை வரச் சொன்னது யாரு?” என்று சுந்தர் வேகமாகக் கேட்டான். அதில் ஆச்சரியத்துடன் துளிக் கோபமும் இருந்தது.

“யாரும் வரச் சொல்லலை, மிஸ்டர் சுந்தர். நாங்களாகத்தான் வந்தோம். ஜெயக்குமார் என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட். விஷயம் கேள்விப்பட்டதும் மிஸஸ் அஞ்சனாவுக்குப் போன் பண்ணினோம், அவங்க ரிப்ளை பண்ணல, அதனால நாங்களே வந்தோம்” என்றான் தர்மா.

“அவங்க மயக்கமாகிட்டாங்க, எங்க டாக்டர் பார்த்துக்கிட்டிருக்காங்க” என்றான் சுந்தர்.

“பாவம். ரொம்ப அந்நியோன்னியமா இருந்தவங்க. இதை எப்படித் தாங்கப் போறா அஞ்சனான்னு எனக்குத் தெரியல” என்றான் தர்மா உண்மையான வருத்தத்துடன்.

ஒரு சங்கடமான மௌனம். பிறகு இன்ஸ்பெக்டர் “இவங்களுக்கு இந்த ஊர் நிலவரம் எதுவும் தெரியாது. விஷ்ணுகுமாருக்கும் அவர் மகனுக்கும் உள்ள சண்டை பற்றியும் தெரியாது. அதை நான் சொல்றதைவிட நீங்க எக்ஸ்ப்ளெயின் பண்ணிடுங்க, ப்ளீஸ்” என்றார்.

சுந்தர் சற்றே யோசித்தான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனைப் போலத் தலையசைத்தான். ஜெயக்குமாரின் இளமைப் பருவம், அவனுடைய புரட்சிகரமான எண்ணங்கள், இசைமீது அவனுக்கிருந்த ஆர்வம், அவன் வீட்டைவிட்டு வெளியேறியது, இப்போது திரும்பி வந்தது எல்லாமே சொல்லி முடித்தான்.

“ஐ ஸீ” என்றாள் தன்யா யோசனையாக. அவள்தான் சுந்தரிடம் ஜெயக்குமாரின் தந்தையைப் பற்றிய கேள்வி கேட்டது. அப்பா-மகன் உறவு பற்றி மட்டுமல்ல, தெளிவாக, விளக்கமாகப் பேசிக் கொண்டிருந்த சுந்தர் பற்றியும் அவள் சிந்தனைகள் ஓடின.

“நல்லது. இனி ஜெயக்குமார் இங்கே தீபாவளிக்கு வந்ததிலிருந்து நடந்த விஷயங்களைச் சொல்லலாமா?” என்றார் இன்ஸ்பெக்டர் சிவசரண்.

சுந்தர் மீண்டும் சிந்தனை வயப்பட்டான். பிறகு பேச ஆரம்பித்தான். “ஆக்சுவல்லி, ஜெயக்குமாரைத் தீபாவளிக்கு இன்வைட் பண்ண அவன் அப்பாவுக்குத் துளியும் இஷ்டம் இருக்கல. பாண்டுரங்கன் அங்கிள் சொல்லித்தான் அவனை இன்வைட் பண்ணினார். ஜெயக்குமார் இங்கே வந்தவுடனே நடந்த விஷயங்களை எனக்கு ஜானவி சொன்னா… ஜானவி என் ஒய்ஃபோட தங்கச்சி. அதைவிட, என் ஸ்டூடண்ட். அவளுக்கு நான் க்ளாஸ் டீச்சரா இருந்திருக்கேன். மாத்ஸ் ட்யூஷன் எடுத்திருக்கேன். அப்புறம் ஐஐடி என்ட்ரன்ஸ்க்கும் கோச் பண்ணியிருக்கேன்.

“வெல்… ஆஸ் ஐ ஸெட்… ஜானவி சொல்லித்தான் அவன் வந்தபோது நடந்த விவரங்கள் எனக்குத் தெரியும். அதிலிருந்து பல விஷயங்கள் ஊகிச்சுக்கிட்டேன். ஜெயக்குமார் இங்கே வந்தபோது, மீண்டும் குடும்பத்தோடு ஒற்றுமையா இருக்கணும்ங்கற எண்ணத்தில்தான் வந்திருக்கான். கூடவே ‘நான் ஜெயிச்சுட்டேன்’ன்னு காட்டற லேசான குறும்புத்தனத்தோடையும்! ஆனா இங்கே… அவன் அப்பா இன்னும் மாறவேயில்லைன்னு புரிஞ்சுக்கிட்டான். அவன் மேல அவருக்கிருந்த வெறுப்பு அப்படியே இருந்தது, அது அஞ்சனா மீதான கேலி வார்த்தைகளா பரிணமிச்சது. அதுதானே அவனுக்கு ரொம்ப வலிக்கும்! அவன் சண்டை போட்டுக்கிட்டு வெளியே போயிடுவான், அப்புறம் இந்த வீடு பழைய வாழ்க்கைக்குத் திரும்பிடும்னு அவர் நினைச்சிருக்கலாம்.

“அவர் நினைச்சபடி எதுவும் நடக்கல. ஜெய் அவர் பையனாச்சே! அவருடைய சவாலுக்குச் சரியான பதிலடி கொடுத்தான். அவருடைய பேச்சுகளுக்கு நேரடியா எதிர்ப்பேச்சுப் பேசாம, எங்க எல்லாரையும் மெதுவா அவருக்கு எதிரா திருப்ப ஆரம்பிச்சான். இரண்டு நாட்களில் அவன் திரும்பிப் போயிடறதா இருந்தாலும், இந்த வீடு மீண்டும் பழைய நிலைக்கு வரவே முடியாதபடி பண்ணப் பார்த்தான். அவனுக்கு ஓரளவு வெற்றியும் கிடைச்சதுன்னுதான் சொல்லணும். சம்பத் கல்யாணத்துக்கப்புறம் தனிக்குடித்தனம் போகப் போறதா மிரட்டித் தனக்குப் பல சௌகரியங்களும் உரிமைகளும் வாங்கிக்க நினைச்சான். ஜானவி தனக்குப் பிரியமான மேல்படிப்புப் படிக்கணும்ங்கறதுல உறுதியானா. ஷீலா இந்த வீட்டைவிட்டு வெளியே போயிடணும்னு என்னை வற்புறுத்த ஆரம்பிச்சா…”

“நீங்க?” என்று கேட்டாள் தர்ஷினி.

“ஸாரி?” என்றான் சுந்தர் வியப்புடன்.

“நீங்க ஜெயக்குமாரோட திட்டங்களுக்கு எப்படி ரியாக்ட் பண்ணினீங்கன்னு சொல்லவேயில்லையே?”

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சந்தம் பாடும் சொந்தம் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    மகா மார்பிள்ஸ் (நாவல் – அத்தியாயம் 25) – தி.வள்ளி, திருநெல்வேலி