in ,

எல்லாம் நன்மைக்கே (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

சாயங்காலம் மூன்று மணி இருக்கும். காலிங் பெல் அடித்தது. எழுந்து போய் கதவைத் திறந்தாள் கமலம். மூன்று பேர் நின்றிருந்தார்கள்.  வயதில் மூத்த ஒரு ஆண்பிள்ளை, ஒரு பெண்மணி, ஒரு இளைஞன்…  அந்த அம்மாள், பக்கத்து வீட்டைக் காட்டி, ‘ அந்த வீட்டுல யாரும் இல்லீங்களா… வீடு பூட்டிருக்கே… எங்கே போய்ட்டாங்க… ‘ என்றார்.

அங்கிருந்தே பக்கத்து வீட்டை பார்த்துவிட்டு, ‘ ஊர்ல ஒரு பெரிய காரியம்னு சொல்லிட்டிருந்தாங்க… மதுரைன்னு நினைக்கிறேன்… ஒரு மணி போல டாக்ஸி வந்து நின்னது… அங்கேதான் கிளம்பிட்டாங்க போல… ‘ என்றவள், ‘ ஆமா… நீங்க யாரு… எங்க இருந்து வர்றீங்க… ‘ என்றாள்.

அவர்களது முகம் கொஞ்சம் வாடியதைக் கவனித்தாள் கமலம். அவர்களும் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு அந்தம்மாவே சொன்னார், ‘ நாங்க தஞ்சாவூர்லர்ந்து வர்றோம்ங்க… இது எங்க பையன்… இன்னிக்கு அந்த வீட்டுல ஒரு பொண்ணு இருக்கே, அவங்களை பார்க்க வர்றதா சொல்லியிருந்தோம்… ஆனா… இப்போ… ’ அந்தம்மாவின் குரலில் பிசிறடித்தது.

கமலத்திற்கு அவர்களைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. உடனே முகத்தில் மலர்ச்சியைக் கொண்டுவந்து நிறுத்தி, ‘ வெயில்ல நின்னு பேசிட்டிருக்கிங்களே… உள்ளே வாங்க… ‘ என்றாள்.

அவர்கள் மறுபடியும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர். கமலமே மறுபடியும்,  ‘அவ்ளோ தூரத்துலேர்ந்து வந்திருக்கீங்க… இப்படியே வெளியே நின்னிட்டேவா பேசணும்… வாங்க உள்ளே… ‘ என்றாள்.

அவர்கள் யோசிப்பதைப் பார்த்துவிட்டு, ‘ சங்கோஜப்படாம வாங்க… பக்கத்து வீட்டுல பெண் எடுக்கப் போறீங்க… அப்புறம் நாம ஒன்னுக்குள்ள் ஒன்னாகிக்கறதில்லையா… ‘ என்றுவிட்டு கதவை முழுதாக திறந்து விட்டாள்.

தயங்கியபடி மூவரும் உள்ளே நுழைந்தார்கள்.  ஷோபாவைக் காட்டி உற்காரச் சொல்லிவிட்டு உள்ளே போனாள். அவர்கள் உட்கார்ந்தார்கள்.  உடனே கமலம் ‘  மோர் தரட்டுமா இல்லை…டீ தரட்டுமா… அவரும் வர்ற நேரம்தான்… டீதான் கொதிக்க வச்சிட்டிருந்தேன்… ‘ என்றாள்.

உடனே அந்தம்மாள் மறுத்தார். ‘ பரவால்லாங்க… நாங்க வர்ற வழீல டீ குடிச்சிட்டுடுத்தான் வந்தோம்… ‘

உடனே கமலம், ‘ வெயில்ல வந்திருக்கீங்க… மோரே கொண்டு வர்றேன்… ‘ என்றுவிட்டு மடமடவென உள்ளே போனவள் மூன்று டம்ளர்களில் தண்ணீர் கொண்டு வந்து அவர்களிடம் கொடுத்து, ‘ முதல்லே தண்ணீர் குடிங்க…’  என்றுவிட்டு டி.வி.யை போட்டு ஃபேன் வேகத்தையும் கூட்டிவிட்டு மறுபடி உள்ளே போனவள் மூன்று தம்ளர்களில் மோருடன் திரும்பி வந்தாள். அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.

ட்ரேயை நீட்டியபடியே, ‘ வீட்டுல யாரும் இல்லைனு பார்க்கிறீங்களோ ‘ என்றவள் சற்றே புன்னகைத்து, ‘ அவர் கடைக்குப் போயிருக்கார்… பொண்ணு மாடில ஒர்க் பண்ணிட்டு இருக்கா… ஒர்க் பிரம் ஹோம்… ‘ என்றாள் புன்னகையுடன்.

‘ ஐ.டி. கம்பெனி வேலையா…‘ என்றார் அந்தாம்மாவின் கணவர்.

‘ ஆமாங்க… ‘ என்றாள் கமலம்.

‘ சொந்த வீடா… ‘ என்றார் அந்தம்மாள்.

‘ஆமாங்க… பத்து வருஷம் ஆச்சு வீட்டைக்கட்டி… மாடிலயும் ரெண்டு ரூம் போட்டிருக்கோம்… பின்னால கல்யாணம் காட்சினு வரும்போது யூஸ் ஆகுமே… இப்போ பொண்ணு யூஸ் பண்ணிட்டிருக்கா…‘  என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வெளியே போயிருந்த அவளது கணவன் கந்தசாமி உள்ளே நுழைந்தார்.

அவர் முழிப்பதை கவனித்துவிட்டு விவரத்தைச் சொன்னாள் கமலம். உடனே சம்பிரதாயத்துக்கு அவர்களை கும்பிட்டுவிட்டு, தான் கொண்டுவந்திருந்த பையை அவளிடம் கொடுத்துவிட்டு, அடுத்த ஷோபாவில் உட்கார்ந்தார் அவர்.

கந்தசாமியைப் பார்த்து, ‘ பாருங்க… எங்களை வரச் சொல்லிட்டு, அவங்க திடீர்னு கிளம்பிப் போய்ட்டாங்க, பாருங்க ஸார்… ‘ என்றார் பையனின் அப்பா.

சமாளிக்கும் பொருட்டு, ‘ மறந்துட்டாங்களோ, என்னவோ… ‘ என்று இழுத்தார் கந்தசாமி.

கந்தசாமிக்கு ஒரு டீ கப்பை கொண்டு வந்து கொடுத்தாள் கமலம்.  மாடியைச் சுட்டிக்காட்டி, ‘ பாப்பாக்கு கொடுத்தியா… ‘ என்றார் அவர்.

‘ இன்னும் இல்லைங்க… ‘ என்றவள், ‘ இதோ கொண்டு போறேன்க… ‘ என்றும் சொன்னாள்.

 ‘ நீயேன் சிரமப் படறே… பெல் அடியேன்… ஒரு நிமிஷம் கீழே வந்து குடிச்சிட்டுப் போகட்டும்…‘ என்றார் கந்தசாமி. உடனே காலிங் பெல்லை அடித்தாள் கமலம். கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள் கவிதா.

‘ டீ வச்சிருக்கேன்மா… கீழே வா… ‘ என்றவள் வந்திருந்தவர்களைக் காட்டி, ‘ கெஸ்ட் வந்திருக்காங்க… ஜஸ்ட் வந்துட்டு போயேன்… ‘ என்றாள் கமலம் இங்கிருந்தபடியே.

வந்திருந்த மூவரும் மேலே நின்றிருந்த காவிதாவைப் பார்த்தார்கள். பிறகு தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டார்கள்.

பிறகு நிமிர்ந்து உட்கார்ந்த பெரியவர், தாங்கள் தஞ்சாவூரில் டாக்சி கம்பெனி வைத்திருப்பதாகவும் பதினைந்து டாக்சிகள் ஒடுவதாகவும், பையன் எம்.பி.ஏ. முடித்துவிட்டு அவர்களது கம்பெனியை நிர்வகித்து கொள்வதாகவும்,  தன் மனைவி ஒரு ஹைஸ்கூல் டீச்சர் என்றும் சொன்னார். ஒரே பையன்தான் என்றும் அந்தம்மாள் சொன்னார்.

தொடர்ந்து, பக்கத்து வீட்டுப் பெண்ணின் ஜாதகம் கிடைத்து அவர்களிடம் பேசிவிட்டுத் தான் பெண்பார்க்க வரும் நாள் குறித்ததாகவும், இதுதான் அவர்கள் பார்க்கும் முதல் பெண்… இதுவே இப்படி ஆகிவிட்டது என்றும்,  நாங்கள்தான் சகுனம் எதுவும் பார்க்கத் தவறிவிட்டோமோ… ‘ என்றும் வருத்தத்துடன் சொன்னார்கள்.

‘பரவாயில்லை விடுங்க… எல்லாம் நன்மைக்கேன்னு பாஸிடிவா எடுத்துக்கங்க…’ என்ற கந்தசாமி, உடனே, ‘ நானும் எங்களை பத்தி சொல்லிடறேன்… ‘ என்றுவிட்டு தான் எல்.ஐ.சி.யில் ஆஃபீசராக இருப்பதாகவும், மனைவி வீட்டைப் பார்த்துக் கொள்வதாகவும், மகள் பி.இ. முடித்துவிட்டு ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்வதாகவும் சொல்லி முடித்தார்.

கொசுறாக, தங்களது சொந்த ஊர் முசிறி பக்கம் என்றும் வேலை நிமித்தமாக சொந்த வீடு கட்டிக்கொண்டு கோவையிலேயே செட்டில் ஆகிவிட்டதாகவும்… தாங்களுக்கு ஒரே பெண் என்றும் சொல்லி நிறுத்தினார்.

அதற்குள் கவிதா கீழே வந்துவிட அவளுடன் அந்தம்மா பேச ஆரம்பித்தார், காலேஜ் பற்றியும், வேலை பற்றியும்…

உடனே நிமிர்ந்து உட்கார்ந்த அந்தம்மா, ‘வயசு இருபத்தஞ்சு ஆச்சே… எங்க வீட்டுப் பொண்ணா இருந்திருந்தா இந்நேரம் நாங்க கல்யாணம் செஞ்சு கொடுத்திருப்போம்… ‘ என்றார்.

‘ இன்னும் அதைப் பத்தி யோசிக்கலை… ‘ என்றாள் கமலம்.

உடனே, ‘ என்ன நட்சத்திரம்…’ என்று கேட்டார்கள் அந்த அம்மாள்.

முந்திக்கொண்டு, ‘ மிருக சீரிடம், ரிஷப ராசி… ‘  என்றாள் கமலம். கவிதாவும் அதைக் கேட்டு புன்னகைத்தாள்.

தங்களுக்குள் பார்த்துக் கொண்டபடி எழுந்து நின்ற அவர்கள், ‘அப்போ வர்றோம்ங்க… முன்னே பின்னே தெரியாதவங்களா இருந்தாலும் நல்லா பேசினீங்க… உபசரிச்சீங்க… நீங்க தஞ்சாவூர் வந்தா அவசியம் எங்க வீட்டுக்கு வரனும்… ‘ என்றுவிட்டு மகனைப் பார்த்து, ‘ தம்பி… உன் விசிட்டிங் கார்டு ஒன்னை அவங்க கிட்ட கொடேன்… ‘ என்றாள் அந்தம்மாள்.

அவன் ஒரு கார்டை எடுத்து கந்தசாமியின் கையில் கொடுத்தான். ‘ டைம்லி டாக்ஸி – சிஇஓ,‘ கலைஞானம் பீ.ஈ. எம்பிஏ ‘ என்று அதில் போட்டிருந்தது. அதை வாங்கிக்கொண்டு புன்னகைத்தார் கந்தசாமி.

அந்தப் பையன் கவிதாவை அடிக்கடி பார்த்து புன்னகைத்ததையும் அவர் பார்த்தார். கொஞ்சம் நடந்தவர்கள், நின்று, தங்களுக்குள் எதோ பேசிக்கொண்டார்கள். திகைத்தபடி, ‘என்ன எதையாவது விட்டுட்டீங்களா, என்ன… ‘ என்றுவிட்டு ஷோபாவைப் பார்த்தாள், கமலம்.

முந்திக்கொண்ட அந்தம்மாள், ‘இல்லீங்க… எதையும் விடலை… ‘ என்றுவிட்டு, தன் கணவரையும் பார்த்து, ‘ உட்காகார்ந்து பேசலாமே… ‘ என்று சொல்ல மூவரும் மறுபடியும் உட்கார்ந்தனர்.

அந்த அம்மாள் கமலத்தைப் பார்த்து, ‘ தப்பா எடுத்தக்காதீங்க… நிஜமாவே நெஞ்சு நிறைவோட சொல்றேன்… உங்கப்பொண்ணை எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு… ராசி நட்சத்திரம் கூட பொருத்தமானதுதான். கிளம்பும்போது பையன்தான் கேட்டுப் பாருங்களேன்னான்… எதாவது தப்பா நினைச்சுக்கிட்டாங்கன்னா எப்படின்னு நினைச்சிட்டு நகர்ந்தேன்… இவர்தான் தடுத்து கேட்டுத்தான்  பார்ப்போமேன்னார்.…அதான்… ‘ என்றபடி மடமடவென தாங்கள் கொண்டுவந்திருந்த  பழங்கள், பூச்சரம், இனிப்பு வகைகளை ஒரு அகலமான சில்வர் தட்டில் வைத்து எடுத்துகொண்டு எழுந்தார்கள்.

கமலமும் கந்தசாமியும் கூட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மகளையும் பார்த்தார்கள். அவள் வெட்கப்பட்டாள்.

எழுந்து நின்றபடி, ‘தப்பா எடுத்தக்காதீங்க, நாங்க பக்கத்து வீட்டுப்பொண்ணைத்தான் பார்க்க வந்தோம்… ஆனா அது ஏனோ தடங்கலாகிடுச்சு… ஆனா  உங்க பொண்ணை எங்களுக்கு பிடிச்சிருக்கு. உங்களுக்கும் ஒருவேளை அப்படி அபிப்பிராயம் இருந்தா சொல்லுங்க… எங்க கார்டு உங்ககிட்டே இருக்கு…‘ என்றபடி தாம்பாளத் தட்டை நீட்டினார்கள்.

பேச்சு வாக்கில், ‘எல்லாம் நன்மைக்கே ‘ என்று சொன்ன கந்தசாமியின் வாய்முகூர்த்தம் பலித்தது.

அடுத்த முகூர்த்தத்திலேயே கலைஞானத்திற்கும் கவிதாவுக்கும் கல்யாணமும் நடந்து முடிந்தது.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அவளும் நானும் (குறுநாவல் – பகுதி 2) – சுபாஷினி பாலகிருஷ்ணன்

    விலை கொடுத்து விபரீதம் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை