in ,

அமைதியும் மொழியாகும் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அந்த அதிகாலை நேரத்தில் திடுமென வந்து நின்ற அண்ணனைப் பார்த்ததும், ஆர்வமே இல்லாமல் முகச்சுளிப்புடன்,  “வா…ராகவா” என்றான் பிரபு.

“பிரபு அம்மாவுக்கு ரொம்ப உடம்புக்கு முடியல!… உடனே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு போகணும்!… சட்டுனு கிளம்பிக்  காரை  எடு… ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிடலாம்” பதட்டமாய்  சொன்னான் ராகவன்.

அதைக் கேட்ட தம்பியோ சிறிதும் அதிர்வில்லாதவனாய், படுசாதாரணமாய்,  “அது… வந்து…. ராகவா” என்று யோசித்து விட்டு, “கொஞ்சம் இரு!… என் சம்சாரத்தைக் கேட்டுட்டு சொல்றேன்” என்றபடி உள்அறையை நோக்கி நடந்தான்.

இரண்டே நிமிடத்தில் திரும்பி வந்தவன்,  “ராகவா…. அவ இன்னிக்கு லேடீஸ் கிளப்புக்கு… ஒரு ஃபங்சனுக்கு போறா!… நானும்  அவள்  கூட போறேன்!… அதனால கார்  எங்களுக்கு வேணும்… நீ வேணா ஒரு ஆட்டோவோ… கால் டாக்ஸியோ ஏற்பாடு பண்ணிக்கோயேன்” என்றான்.

‘அடப் பாவிப்பயலே!… பெத்த தாயை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறதை விட பொண்டாட்டியை லேடீஸ் கிளப்புக்கு கூட்டிட்டு போறதுதான் முக்கியமா போச்சாடா உனக்கு?’ என்று வாய் வரை வந்து விட்ட வார்த்தைகளை சிரமப்பட்டு விழுங்கிக் கொண்ட ராகவன்,

“பிரபு… ரொம்பவும் முடியாத சூழ்நிலையில்தான் நான் உன்கிட்ட வந்திருக்கேன்!… இந்த விடியல் காலை நேரத்திலே… ஆட்டோ…  டாக்ஸியெல்லாம் தேடிட்டு இருக்க முடியாதுப்பா!… கொஞ்சம் தயவு  பண்ணுப்பா!” கெஞ்சினான் ராகவன்.

மீண்டும் ஒரு முறை உள் அறையை நோக்கிப் படையெடுத்து விட்டுத் திரும்பிய பிரபு, அதே பதிலை ஆணித்தரமாய்ச் சொல்ல நொந்து போய் வெளியேறினான் ராகவன்.

‘குடும்பத்தில் மூத்தவனாய், அதிலும் வசதியில் சற்றுக் குறைந்தவனாய் பிறந்து வாழ்வதை விட பிறந்த  வினாடியிலேயே செத்துப்  போய் இருக்கலாம்’ என்றிருந்தது ராகவனுக்கு.

ஆனாலும் தம்பியை  விட்டுக் கொடுக்க  இஷ்டமில்லாத பாழும் மனசு, ‘அவன் நல்லவன்தான் அவனுக்கு வாய்ச்ச  சனியன்  அப்படி!… அதுதான் அவனை ஆட்டிப் படைக்குது… வாட்டி வதைக்குது!… அவன்  என்ன  செய்வான்  பாவம்?… அப்பாவி!’ என்றது.

பொழுது லேசாய் புலர ஆரம்பித்ததும், எப்படியோ ஒரு டாக்சியை ஏற்பாடு பண்ணி, தாயை அழைத்துக்  கொண்டு  மருத்துவமனை  நோக்கிப்  பறந்தான் ராகவன்.

வழக்கமான சம்பிரதாய சோதனைகள், ஸ்கேன்கள், மருந்து மாத்திரைகள், ஊசிகள், என மதியம் வரை பரபரப்பாய் ஓடியவன் மதியத்திற்கு மேல் சற்று ஓய்வாய் ஆஸ்பத்திரி வராண்டா பெஞ்சில்  அமர்ந்து  லேசாக  கண்ணயர்ந்தான்.

“இங்க யாருங்க ராகவன்… இங்க யாருங்க ராகவன்?” நர்ஸ் ஒருத்தி கத்தலாய்க் கேட்க, திடுக்கிட்டு  விழித்து  அவசரமாய்  எழுந்து,  அவளை  நோக்கி  ஓடினான் ராகவன்.

“நான்தான் ராகவன்”

“நீங்கதான் ராகவனா?”  மேலும் கீழுமாய் தலையாட்டினான்.

“அம்மாவுக்கு இப்ப பிரஷர் நார்மலுக்கு வந்துடுச்சு!… ஆனாலும் லேசாய் தலைச்சுற்றல் இருக்கு!… எதுக்கும் ஒரு ரெண்டு மணி நேரம் இங்கியே இருந்து ரெஸ்ட் எடுக்கட்டும்!… அதுக்கப்புறம் நீங்க கூட்டிட்டு போங்க… ஓகே?”

“சரிங்க”

மீண்டும் வராண்டா பெஞ்சில் வந்து அமர்ந்தவன் கண்களில் பரபரப்பாய் ஓடி வரும் பிரபு பட,  “பரவாயில்லையே!… இவன்கிட்ட இன்னும் தாய்ப் பாசம் மிச்சம் இருக்கு” என்று நினைத்துக் கொண்டே எழுந்தான்.

ஆனால் பிரபுவோ எதிரில் நின்ற இவனைச் சிறிதும் கண்டுகொள்ளாமல் அங்கிருந்த ஆஸ்பத்திரி சிப்பந்திகளிடம் ஏதையோ பதட்டமாய் சொல்ல, அவர்கள் அவசர அவசரமாய் ஒரு ஸ்ட்ரக்சரைத் தள்ளிக் கொண்டு வெளியே ஓடினார்கள்.

அடுத்த சில நிமிடங்களில் யாரோ ஒரு வயதான பெண்மணியை ஸ்ட்ரக்சரில் கிடத்தி, வேகவேகமாய் தள்ளிக் கொண்டு வந்தனர் ஆஸ்பத்திரி சிப்பந்திகள். பின்னால் பிரபுவும் அவன் மனைவியும் கலவர முகத்துடன் கைகளை பிசைந்தபடி நடந்து வந்தனர்.

எதுவும் புரியாத ராகவன் மீண்டும் வராண்டா பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்க்கத் துவங்கினான். காலையிலிருந்து தன் தாயின் சிகிச்சைக்காக சோதனை கூடத்திற்கும் டாக்டர் அறைக்கும், மருந்துக் கடைக்குமாய் ஓடித் தீர்த்த ராகவனின் செயல்பாடுகளை பிரபுவும் அவன் மனைவியும் இப்போது செய்து கொண்டிருந்தனர்.

“யார் அந்தப் பெண்மணி?… அவருக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?… எதற்காக இவர்கள் அந்த பெண்மணிக்கு இத்தனை பணிவிடைகள் செய்கிறார்கள்?” குழப்பத்தில் ஆழ்ந்தான் ராகவன்.

மாலை நெருங்கும் நேரத்தில் ராகவன் தன் தாயை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். அப்போது எங்கிருந்தோ ஓடி வந்தான் பிரபு.  “அம்மாவுக்கு இப்ப எப்படி இருக்கு?” கேட்டான்.

“பரவாயில்லைப்பா… பிரஷ்ஷர் நார்மலாயிடுச்சி… இதோ டிஸ்சார்ஜ் பண்ணிக் கூட்டிட்டுப் போறேன்” என்ற ராகவன், குரலைத் தாழ்த்திக் கொண்டு,  “ஆமாம்… பிரபு யார் அந்தப் பெண்மணி?… என்னாச்சு அவங்களுக்கு?” மெல்லக் கேட்டான்.

“அது வந்து நாங்க ரெண்டு பேரும் லேடிஸ் கிளப் ஃபங்க்ஷனுக்குப் போயிட்டு வந்திட்டிருந்தோம்!.. அவதான் காரை ஓட்டினா!… அப்ப ரோட்டோரமா போய்க் கொண்டிருந்த இந்த பெண் மேலே இடிச்சிட்டா!… அங்கிருந்த ஜனங்கள் எல்லாம் ஒரேயடியாய்க் கத்திக் களேபரம் பண்ணி… எங்களையே அந்த பெண்ணை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு போய் ட்ரீட்மென்ட் கொடுக்கச் சொல்லிட்டாங்க!… அதான் வேற வழி இல்லாம நாங்களே கூட்டிட்டு வந்தோம்!”.

ராகவனின் மனம் சட்டென்று ஆண்டவனை நினைத்தது. “ஆண்டவா நீ எல்லாத்தையும் பார்த்திட்டுத்தான் இருக்கியா?… நீ தூங்கிட்டே… அதான் இங்க எல்லாம் தாறுமாறா நடக்குதுன்னு நினைச்சேன்!”

“ராகவா நீயும் அம்மாவும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!… எல்லோருமே என் காரிலேயே போயிடலாம்!” என்றான் பிரபு.

“வேண்டாம் பிரபு!… வெளியே ஆட்டோ… டாக்ஸி எல்லாம் நிறைய நிக்குது!… நாங்க அதிலேயே போயிடறோம்!… நீ உன் சம்சாரத்தையும் அந்த பெண்மணியையும் கூட்டிக்கிட்டு மெதுவா வா” சொல்லியவாறே  நகர்ந்த ராகவனை வெறித்து  பார்த்தபடி  நின்றான்  பிரபு.

உள் மனம் பிராண்டியது.

“பெத்த தாய்க்கு செய்ய வேண்டிய  பணிவிடைகளை  செய்யாமல் தவிர்க்கப் பார்த்தேன்… ஆனா அதே பணிவிடையை இன்னொரு தாய்க்கு நான் செய்யும்படி ஆகிவிட்டதே  எனக்கு  இந்த  தண்டனை  தேவை தான்” தனக்குள் சொல்லிக் கொண்டான் பிரபு.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பாத்திரம் (சிறுகதை) – ஆர். பிருந்தா

    ரட்சகன் (குறுநாவல் – பகுதி 1) – சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை