in

ஆமென இணங்கி (பாகம் 1) – ராஷி ராய் (தமிழில் பாண்டியன் இராமையா)

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

எச்சரிக்கை: 

இந்தப் புனைவு திருமண உறவின் துரோகத்தை உள்ளடக்கி எழுதப்பட்டது. அது தொடர்பான சிக்கல்களில் இருந்து மீண்டோரை இது துன்பப்படுத்தலாம், விருப்பமில்லாதவர்கள் தவிர்த்துவிடுவது நன்று. 18+

திருமணமாகி பதினான்கு ஆண்டுகள் ஆகின்றன. இந்த மணவாசத்தில் நான் தனித்தே விடப்பட்டவள் என்று நினைக்கிறேன்.  ஒரு உறவில் இணைந்தேன் என்பதைவிட, பொறுப்புகளின் குவியல்களில் திணித்துக் கொண்டேன் என்றே உணர்கிறேன். அப்பொழுது  இளையவளாக இருந்த நான் திருமணத்தை மறுத்து அதனைக் கடந்து செல்லும் அளவிற்கு முதிர்ச்சி பெற்றிருக்கவில்லை. எனக்கு என்ன வேண்டும் என யாரும் கேட்கவும் இல்லை, நடப்பதில் என்ன பிழை என எவரும் உணரவும் இல்லை, யாரும் என்னைப் பற்றி சிந்தித்ததாகவும் எனக்குத் தோன்றவில்லை.

எனது தந்தை திடீரென காலமான பிறகு, எனது தாயாரும் என் மூன்று சகோதரிகளும் நடுத்தெருவில் தனித்து விடப்பட்டோம். என் தந்தைக்கு நெருங்கிய நண்பர்கள் குழு உண்டு, அவர்களில் சிலர் எங்கள் குடும்ப அங்கத்தினர் போன்றவர்கள். அந்த நெருக்கடியான காலகட்டங்களில் அவர்களின் உதவிகள் எங்களுடைய வீழ்ச்சியின் வீரியத்தை சற்றே மட்டுப்படுத்தின.

சில மாதங்களுக்குப் பிறகு, அவரது நண்பர்களில் ஒருவரும் அவரது மனைவியும் மிளிரும் உடையணிந்து, கையில் இனிப்புப் பெட்டியுடன் எங்களைச் சந்தித்தனர். அனைவருக்கும் தேநீர் போட அம்மா என்னை சமையலறைக்கு அனுப்பினார். நான் திரும்பி வந்தபோது, அவர்களுடைய மூத்த மகன் சுதீருடன் எனது திருமணம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருந்தது. என் அம்மாவின் விழிகள் பனித்திருந்தன.  தன்னிடமிருந்து ஒரு பெரிய பொறுப்பை எடுத்துக் கொண்டமைக்கு அவர்களுக்கு நன்றி கூறினார். என் தந்தையின் மரணத்திற்குப் பிறகு, என் திருமணத்தைப் பற்றி மட்டுமே அவர் கவலைப்பட்டார். நான் அந்த முடிவில் மகிழ்ச்சியாக இருக்கிறேனா, இல்லையா என்று சற்றே நிதானித்து யோசிக்கவும் கூட அவருக்குத் தோன்றவில்லை.

என்னை விட பன்னிரெண்டு வயது மூத்தவரான சுதிர், நியூயார்க்குக்குப் புலம் பெயர்ந்திருந்தார். நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, நான் அவரை சுதிர் அண்ணா என்று அழைத்திருந்தேன், இப்போது திடீரென்று நான் அவரைத் திருமணம் செய்து கொள்ள எதிர்பார்க்கின்றனர். திருமணத்தை மறுத்தால் எனக்கோ, என் தங்கைகளுக்கோ திருமணம் நடக்காது என்பதால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும்படி என் அம்மா கெஞ்சினார். எனது படிப்பு நிறுத்தப்பட்டது.

ஒரு மாதத்தில், நான் அவருடன் நியூயார்க்கிற்குப் பயணித்தேன். பிறகுதான் தெரிந்தது, அவர் வேறு ஒரு அமெரிக்கப் பெண்ணுடன் உறவு வைத்திருப்பதாகவும், அந்த உறவை மறைக்கத் தான் இந்த திருமணம் என்றும்!

* * *

நான் பெரும்பாலான பகல், இரவுகளைத் தனியாகக் கழித்தேன், அவர் இரவு உணவிற்கு வீட்டிற்கு வருவார், சில நேரங்களில் தூங்குவதற்கு மட்டும், சில நேரங்களில் அதுவும் இல்லை. எங்களுக்குள் பேசுவதற்கு என எதுவும் இல்லை. பல நாட்கள் அலுவலக சுற்றுப்பயணமென வெளியேறிவிடுவார், என்ன ஏதென்று வினவ எனக்கு அனுமதியில்லை.

நான் அந்த வீட்டில், அவர் இருந்தும் தனித்திருந்தேன். குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு குடும்பத்தினர் எங்களை வற்புறுத்தியபோது, இரண்டு வருட இடைவெளியில் இரண்டு முறை தன் கடமையைச் செய்து, மீண்டும் ஒரு நல்ல மனிதனாக சமூகத்தில் வெளிவந்தார். நான் என்ன செய்தேன் அல்லது இவை அனைத்தையும் எப்படிச் சமாளித்தேன் என்பது குறித்து யாருக்கும் அக்கரை இல்லை.

நாள் முழுவதும் தனிமையில் இருப்பது, குழந்தைகளையும் வீட்டையும் கவனித்துக் கொள்வது, அவருடன் வார இறுதி பார்ட்டிகளில் கலந்து கொள்ள ஆடை அணிவது, அவருடைய நண்பர்களுடன் உரையாடுவது, அவர்களை எங்கள் வீட்டிற்கு அழைப்பது, அவர்களுக்குச் சமைப்பது, அவர்களுடன் அமர்ந்து புன்னகைப்பது,  என இந்த வாழ்க்கை முறைக்கு நான் பழகிவிட்டிருந்தேன்.

* * *

னக்கென்று நேரம் கிடைக்கும் போது ஓவியம் வரைவதில் ஈடுபட்டேன். நான் சில இணையவழி கலை வகுப்புகளிலும் கலந்து கொள்ளத் தொடங்கினேன். அத்தனை வருடங்களில் முதல் முறையாக நான் நேர்மறையாக உணர்ந்தேன்.

நான் என் நண்பர்களை உருவாக்கிக் கொண்டேன். சில நேரங்களில் நாங்கள் இணைய வகுப்பைத் தாண்டி நேரிலும் சந்திக்க திட்டமிட்டோம். நான் வகுப்புகளுக்குச் செல்வதை ஆழ்ந்து விரும்ப ஆரம்பித்தேன், நான் அவற்றை ஒருபோதும் தவறவிடக் கூடாது என்பதை உறுதியாக இருந்தேன். எங்களில் சிலர் நெருங்கிய நண்பர்களாகி, காபி மற்றும் ஷாப்பிங்கிற்காக அடிக்கடி சந்திக்கவும் தொடங்கினோம்.

ஒரு நாள் என் தோழி பிரியா, இந்தியாவிலிருந்து அவளைப் பார்க்க வந்திருந்த அவள் அண்ணன் சிவம் என்பவரை எனக்கு அறிமுகப்படுத்தினாள். நாங்கள் ஒன்றாக காபி சாப்பிட்டோம். என் ஓவியங்களை தனக்குப் பிடித்திருப்பதாக அவர் சொன்னார்; தனது கண்காட்சிக்காக எனது சில ஓவியங்களை ஒளிப்படம் எடுப்பதில் அவர் ஆர்வமாக இருந்தார்.

அடுத்த நாள் நான் அவர்களை என் வீட்டிற்கு அழைத்தேன். ஆனால் நான் வியக்கும் வகையில், அவர் தனியாக வந்தார். நான் முற்றிலும் பயந்து, அவரை உள்ளே அனுமதிக்கத் தயங்கினாலும், அவர் எனது வீட்டில் இருப்பதை நான் விரும்பி ஏற்றுக்கொள்வது போல உணர வைத்தார். அது தான் தொடக்கம்.

அவர் ஒரு மலைய மாருதம் போல என் வாழ்க்கையில் புகுந்தார். நான் அவரை உடனடியாக விரும்ப ஆரம்பித்தேன். அடுத்தடுத்த சில நாட்களில் தொடர்ந்து நாங்கள் சந்தித்தோம். ஒளிப்படக் கலைஞராக தொழில் செய்யும் அவர், இந்தியாவில் கண்காட்சி நடத்தத் திட்டமிட்டிருந்தார். எனது ஓவியங்களுடன் அவருக்கு போஸ் கொடுக்க அவர் சிரமமின்றி என்னை சம்மதிக்க வைத்தார்.

நான் இதற்கு முன்பு இதெல்லாம் செய்ததில்லை. ஆனால் அவருடன் இருக்கையில், எல்லாம் எளிதாக இருந்தது. அவர் எனது பணியையும் எனது ஆர்வத்தையும் பாராட்டினார், மேலும் நான் பாராட்டத்தக்க ஒன்றைச் செய்கிறேன் என்று நானே நம்பும் அளவிற்கு நம்பிக்கையை எனக்கு அளித்தார். இதுவரை யாரும் என்னிடம் இவ்வளவு நல்ல வார்த்தைகளைச் சொன்னதில்லை.

அவர் சில வாரங்களில் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டார், நான் இருந்த இடத்திலேயே என்னை மீண்டும் விட்டுவிட்டு – தனியாக! அதன் பிறகு, நான் தனியாக இருந்தாலும், உடன் உரையாட ஒருவர் இருந்தார். நாங்கள் பகல் முழுவதும் இணைய அரட்டையில் இணைந்தோம், இரவில் அனைவரும் உறங்கச் சென்ற பிறகு, இரவு முழுவதும் அவருடன் இணைய உரையாடலில் ஈடுபட கூடத்திற்குச் சென்றேன்.

எங்களுடைய தலைகீழ் நேர வித்தியாசத்தால் எங்களை ஒருவருக்கொருவர் உரையாடுவதைத் தடுக்க இயலவில்லை. அவரை மீண்டும் சந்திக்க ஒப்புக்கொள்ளும் அளவிற்கு அவருடைய அருகாமையை நான் விரும்பத் தொடங்கினேன். நான் இந்தியாவுக்குப் பயணம் செய்யும் ஆவலை வெளிப்படுத்தினேன். இந்த முறை என் குழந்தைகளுடன் மட்டுமே பயணிக்கும் நம்பிக்கை எனக்கு எப்படித் துளிர் விட்டது என்றே எனக்குத் தெரியவில்லை. சுதிர் தனது வணிகத் திட்டங்களின் பொறுட்டு பயணத்திலிருந்து விலகிக் கொண்டார்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

    இருள் மனங்கள் (சிறுகதை) – முகில் தினகரன்

    அரிய பொக்கிஷம் (சிறுகதை) – சியாமளா வெங்கட்ராமன்