எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அண்ணாச்சி வணக்கம் , இங்கே எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா..?”.
“தம்பி நீ யாரு?, உன் பேர் என்ன? எங்கிருந்து வர்றே?, உனக்கு என்ன வேலை தெரியும்?”.
“அண்ணாச்சி என் பேரு ராஜசேகர். இந்த ஊரு தான். எந்த வேலை கொடுத்தாலும் செய்யறேன். காலையில் 4.00 மணியிலிருந்து 8.00 மணி வரைக்கும் அப்புறமா சாயங்காலம் 6.00 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரைக்கும் செய்யறேன்”.
“மத்த நேரத்தில் என்ன பண்ண போறே?”
“அண்ணாச்சி நான் இந்த வருஷம் பிளஸ் 1 வகுப்புக்கு போறேன். அப்பாவுக்கு வருமானம் கம்மி. பத்தாவது வரைக்கும் எங்கப்பா ரொம்ப கஷ்டப்பட்டு தான் படிக்க வச்சாங்க. எனக்கு பிளஸ் 1 பிளஸ் 2 ல நிறைய செலவாகும். தவிர டாக்டர் ஆகணும்ன்னு ஆசை. ஆனால் நீட் எக்ஸாம் கோச்சிங் கிளாஸ்ல படிக்க எங்ககிட்ட பண வசதி இல்லை. என் கிட்ட என் அக்காவுக்கு அரசாங்கம் இலவசமா கொடுத்த லேப்டாப் இருக்குது. அதுல நீட் தேர்வுக்கு தேவையான புத்தகங்களை டவுன்லோட் செய்து படிக்கப் போறேன். தவிர கடந்த வருடங்களில் கேட்கப்பட்ட கேள்விகள் அதற்குண்டான பதில்கள் இவற்றையெல்லாம் சேகரித்து அதை பிரிண்ட் எடுத்து வைத்து படிக்கணும். அதனால் என் படிப்பு செலவை நானே பார்த்துக் கொள்வதாக அப்பா கிட்ட சொல்லியிருக்கேன். ஆக பிளஸ் 1, பிளஸ் 2 , புத்தக செலவு, பள்ளிக்கூட கட்டணம், யூனிபார்ம், தேர்வு கட்டணம், நீட் தேர்வுக்கு கட்டணம் , போக்குவரத்து செலவுகள் மற்றும் அவசிய செலவுகள் அனைத்தையும் எங்கப்பாகிட்ட எதிர்பார்க்காம நானே உழைத்து சம்பாதித்து படிக்க போறேன். அதனால் தான் பள்ளி செல்லும் நேரம் போக மீதமுள்ள நேரத்தில் பகுதி நேர வேலை கேட்டேன்”.
“தம்பி நீ சொல்றது எல்லாம் சரிதான். பள்ளி நேரம் போக காலைல 4 மணி நேரம், சாயங்காலம் 4 மணி நேரம் இங்கே வேலைக்கு வந்துட்டா, எப்போ படிப்பே? பிளஸ் 1 , 2 பாஸ் ஆவே? எப்படி டாக்டர் ஆவே?”
“இல்ல அண்ணாச்சி , பிளஸ் 1 , பிளஸ் 2 க்கு பள்ளியில் படிக்கும் நேரமே போதும் அண்ணாச்சி . நீட் தேர்வுக்கு மட்டும் இரவு 10.00 மணிக்கு மேலே படிச்சிப்பேன். எனக்கு நம்பிக்கை இருக்கு அண்ணாச்சி. பத்தாவது படிக்கும் போது இது மாதிரி வேலை செய்துக் கொண்டே தான் படிச்சேன். 500க்கு 492 மதிப்பெண் வாங்கினேன். நம்ம மாவட்டத்தில் நான் தான் முதல் மதிப்பெண் பெற்றேன்”.
“அப்படியா…! படிக்கிற பையனுக்கு உதவுனும் என்ற எண்ணத்தில் தான் வேலை தர்றேன். ஒழுங்கா லீவு போடாம நேரத்துக்கு வேலைக்கு வரணும். என்ன சரியா? ஆமா உன் கிட்ட சைக்கிள் இருக்கா ?”
“இருக்குன்னே..”
அப்ப சரி, “நாளைக்கு காலைல 4.00 மணிக்கு கடைக்கு வந்திடு. ஒரு 100 வீட்டுக்கு பேப்பர் போடணும், கூட பால் பாக்கெட் போடணும். 8.00 மணிக்குள்ள வேலையை முடிச்சுடு. எனக்கு ஒரு ஓட்டல் இருக்கு அங்க சாயங்காலம் 6.00 மணியிலயிருந்து இரவு 10.00 மணி வரையிலும் கம்ப்யூட்டரல பில் போடணும். சில நேரங்களில் வெளி வேலை இருந்தால் அதையும் பாக்கணும் என்ன சரியா?”
“சரி அண்ணாச்சி..! ரொம்ப சந்தோஷம். நான் நாளைக்கே வேலைக்கு வந்திடறேன்”.
“தம்பி சம்பளம் எவ்வளவு எதிர்பார்க்கிறே?”
“அண்ணாச்சி என் வேலையை பார்த்து எனக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க நினைக்கிறீங்களோ அதையே கொடுங்க”.
“அப்படியா..? சரி நல்லா பேசறே, நல்ல படிக்கிற பையனா வேற இருக்கே..!, கவலைப்படாதே, உன் படிப்பு செலவுக்கு குறை வராம சம்பளம் தர்றேன். நாளைக்கு காலைல 4.00 மணிக்கு வந்திடு”.
“சரி அண்ணாச்சி”.
மிகவும் மகிழ்ச்சியுடன் அப்போதே மருத்துவபடிப்பு படிக்க போகும் தன் எண்ணம் நிறைவேறி விட்ட நம்பிக்கையுடன் அண்ணாச்சி கூறிய வேலையை ஒப்புக் கொண்டு வீட்டிற்கு வந்து தன் அப்பாவிடம் வேலை கிடைத்த விவரத்தை மகிழ்ச்சியாக கூறினான் ராஜசேகர்.. மகனின் முகத்தில் கண்ட மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையும் பார்த்து வாழ்த்து கூறினார் அவன் தந்தை
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings