in , ,

பூங்குழலி (அத்தியாயம் 3) – பாலாஜி ராம்

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

பூமாரியும் அவளது கணவனும் தன் மகளுக்கு பிடித்த பணியாரத்தையும் இனிப்பு பண்டத்தையும் சமைத்துக் கொண்டு, மூன்று சவரன் நகையை மணி பர்ஷ்க்குள் வைத்து அதனை ஒரு  துணி பைக்குள் போட்டு பாதுகாப்பாக எடுத்து செல்கின்றனர். 

தன் மகளுக்கு ஒரு துணி, தன் மாப்பிள்ளைக்கு ஒரு துணி, சம்மந்திமார்களுக்கு  ஒரு துணி என்று அனைவருக்கும்  புது துணி எடுத்துக்கொண்டு பழங்கள், இனிப்பு, காரம் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு மகள் வீட்டிற்கு செல்கின்றனர் இருவரும். 

செல்லும்பொழுது பூமாரியின் கணவனின் காலனி அறுந்து விடுகிறது. 

“ஏயா…  உனக்கு செருப்பு போட்டுக்கிட்டு ஒழுங்காவே நடக்க தெரியாதா, மாப்பிள்ளை வீடு வரைக்கும் நீ வெறும் காலோட தான் நடந்து வரணும். இத மட்டும் மாப்பிள்ளை வீடு பார்த்தாங்க அவ்வளவுதான் செருப்பு போட கூட விதி இல்லாத குடும்பத்தில் தான் பொண்ணு எடுத்துக்குறோம்னு சொல்லி சொல்லி நம்ம பொண்ண  கஷ்டப்படுத்துவாங்க” என்று பூமாரி தன் கணவனை கடிந்தாள். 

பூமாரியின் கணவன் அறுந்து போன இடது கால் செருப்பையும், அறாமல் நல்லா உள்ள வலது கால் செருப்பையும் ஒரு பாலித்தின் நெகிழி பைக்குள் போட்டு தனது கையில் பிடித்துக் கொண்டு வெறும் காலோடு நடந்தார். 

பூமாரியும் அவளது கணவனும் தன் மகளின் வீட்டை அடைய 10 நிமிடங்கள் தான் இருக்கும், இந்த நேரத்தில் மிதிவண்டியில் ஒரு சிறுவன் இவர்களின் எதிரே வந்தான். 

“பாட்டி நீங்க செண்பகம் அக்காவுடைய அம்மா தானே?” என்று அந்த சிறுவன் கேட்டான். 

‘நீ யாருப்பா’ என்றாள் பூமாரி.

“நான் செண்பகம் அக்காவோட பக்கத்து வீட்டு பையன்”

“என்னை எப்படி உனக்கு தெரியும்?”

“நான் உங்கள செண்பகம் அக்கா வீட்டுல பார்த்திருக்கேன். நீங்க செண்பகம் அக்கா வீட்டுக்கா வரிங்க”

“ஆமாப்பா நாங்க செண்பகத்தை பார்க்க தான் வரோம்”

“அப்படினா, நீங்க செண்பகம் அக்காவ பாக்க வரிங்கன்னு அவகிட்ட போயி சொல்ற” என்று சொல்லி வேகமாக மிதிவண்டியை ஓட்டி சென்றான் அந்த சிறுவன். 

ஓட்டி வந்த மிதிவண்டியை செண்பகத்தின் வீட்டின் வாசலிலே நிறுத்திவிட்டு, “அக்கா.. அக்கா..” என்று கத்திக்கொண்டே வீட்டின் கதவை தட்டினான் சிறுவன். 

உள்பக்கம் தாழிடப்பட்ட கதவு, எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக உள்ளே வேலை நடந்து கொண்டிருக்கிறது. மூச்சு இல்லாத செண்பகத்தின் உடலை புடவையால் கையையும் காலையும் கட்டி வீட்டின் பின் புறமுள்ள வாழைத் தோட்டத்தில் மறைத்து வைப்பது தான் சுரேஷின் திட்டம். 

“இது ஒன்றும் சாதாரண விஷயம் இல்ல வெளியே தெரிந்தால் நமக்கு தான் பிரச்சனை இவள் உடம்பை யாருக்கும் தெரியாம வாழைத்தோட்டத்தில் புதைக்கணும்” என்று பயத்துடனும் பதற்றத்துடனும் தன் அப்பா அம்மாவிடம் சொன்னான் சுரேஷ். 

இதை எப்படி செய்யப் போகிறோம் என்று சுரேஷுக்கு மட்டுமல்ல அவனது அப்பா அம்மாவிற்கும் பயம் தான். சுரேஷின் நாடி துடிப்பு அதிகமானது உடம்பு எங்கும் வியர்வை சுரந்தது அவனுக்கு மட்டும் அல்ல அவனது அப்பா அம்மாவுக்கும் இதே நிலைதான். அவளது கையையும் காலையும் கட்டி அவளை தூக்கும் போது தான் கதவு தட்டும் சத்தம். 

செண்பகத்தின் உடலை அவரது கணவனும் மாமனாரும் தூக்கிக்கொண்டு பின் வாசல் கதவை தாண்டியதும் அவள் மாமியார் பின் கதவை அடைத்து உள் பக்கம் தாழிட்டு முன் வாசல் கதவை திறந்தாள்.  அந்த பக்கத்து வீட்டு சிறுவன் நின்று கொண்டிருந்தான். 

“என்னடா?”

“செண்பகம் அக்கா எங்க?” என்று அவன் கேட்டதுமே பயம் அதிகரித்த முகத்துடன்

“ஏண்டா கேக்குற? எதுக்கு இப்ப செண்பகம்?” என்று தடுமாறிய குரலுடன் கேட்டாள். 

“செண்பகம் அக்காவுடைய அம்மாவும் அப்பாவும் இங்க வந்திட்டு இருக்காங்க அதை சொல்லத்தான் செண்பகம் அக்காவ  பார்க்க வந்தேன்” 

“அது எப்படி உனக்கு தெரியும்? யார் சொன்னா?” என்று இன்னும் பயம் அதிகரித்த குரலுடன் கேட்டாள்.

“நான் தான் வழியில் பார்த்தேன். அதை சீக்கிரமா சொல்ல வேகமா சைக்கிள் ஓட்டிட்டு வந்தேன். செண்பகம் அக்கா எங்க இருக்காங்க சொல்லுங்க”  என்று வீட்டிற்குள் நுழைய முயன்றான் அந்த சிறுவன்.

இதை கவனித்தவள், “செண்பகத்துக்கிட்ட நான் சொல்லிக்கிறேன் நீ கிளம்பு” என்று அவனை அனுப்பி வேகமாக கதவை மூடி தாழிட்டு வேகமாக ஓடி தன் கணவனிடமும் மகனிடமும் சிறுவன் சொன்னதை சொன்னாள்.  

“அவங்க எந்த நேரம் ஆனாலும் வரலாம்,  இப்போ பள்ளம் நோண்டி புதைப்பது ஆகாத காரியம். அவங்க வருவதற்குள்ள இவள புதைக்க முடியாது. வாழைமரத் தோட்டத்திலே மறைத்து வைத்து விட்டு, அவர்கள் சென்றதும் மற்ற காரியத்தை பார்ப்போம்”  என்று சுரேஷ் தன் தாயிடமும் தந்தையிடமும் கூறினான்.

“அவங்க போனதும் புதைக்கிற வேலையை பார்க்கலாம் ஆனா அதுக்கு முன்னாடி அவங்க வந்து இவளை கேட்டா நம்ம என்ன பதில் சொல்றது” என்றாள் சுரேஷின் அம்மா. 

என்ன செய்வது என்று புரியாமல் சுரேஷ் யோசித்துக் கொண்டிருக்கும் போதே முன் கதவு சத்தமாக தட்டப்பட்டது.  இவர்கள் மூவரும் செண்பகத்தின் உடலை புடவையால் சுற்றி வாழைத்தோட்டத்தின் நடு மையத்தில் உள்ள மரத்தின் கீழ் மறைத்து வைத்து பின்வாசல் வழியாக வேகமாக வீட்டுக்குள் நுழைந்தார்கள். 

கதவு மீண்டும் தட்டப்பட்டது. “செண்பகம்.. செண்பகம்..” என்ற கனமான குரலுடன். 

“ஆமா, இதே குரல் தான், இது செண்பகத்தோட அப்பா குரல்” என்றான் சுரேஷ்

“ஐயோ இப்ப என்ன செய்வது? அவர்கள் கேட்டா என்ன பதில் சொல்வது?” என்ற பதட்டத்துடன் கேட்டாள் அவன் அம்மா. 

சுரேஷ் தன் மூளைக்கு வேலை கொடுத்தான். ஒரு குழப்பமான நிலையில் இருந்த அவன் முகம் திடீரென  ஏதோ யோசனை வந்தது போல் தெரிந்தது. 

“அம்மா நீங்க எதுக்குமே கவலைப்படாதீங்க, இதை எப்படி கையாளனும் என்று எனக்கு தெரியும் நான் பாத்துக்குறேன்” என்று சொல்லி தாழ்ப்பாளை திறக்க சென்றான் சுரேஷ். 

 இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அலமரல் (அச்சம்) – விடியல் மா.சக்தி

    பூங்குழலி (அத்தியாயம் 4) – பாலாஜி ராம்