in ,

முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 7) – கவிஞர் இரஜகை நிலவன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6

பத்மினி அத்தை வீட்டிற்கு போவதை அறிந்தால்…. எங்கே உன் காலில் நிற்கப் போவதாகச் சொல்லிவிட்டு அத்தையின் முந்தானையில் போய் முழந்தாள் போட்டுக் கொண்டிருக்கிறாய் என்று அப்பா கண்டிப்பாக கேலியாக கேட்பார்.

என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது போரிவிலி ரயில்நிலையம் தாண்டி யாதவ் டெய்ரி சென்டருக்கு வந்தான். கடை வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது.

யாதவின் தந்தை லால், கல்லாவிலிருந்து சிரித்துக் கொண்டே, “க்யா அரசு… க்யா சாஹியே?” என்று கேட்டார்.

”யாதவ் இல்லையா?” என்றான் அரசு.

“அவனுக்கு இன்றைக்கு பொண்ணு பார்க்க எல்லோருமாகச் சேர்ந்து பத்லாபூருக்குப் போயிருக்காங்க. ஏதாவது அவசரமென்றால் மொபைலிலே பேசு. நம்பர் இருக்குதா? இந்த மொபைலிலே டயல் பண்ணித் தரட்டுமா?” என்று கேட்டார்.

“சும்மா அவனைப் பார்த்துவிட்டுப் போகலாமென்று தான் வந்தேன்” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்

யாதவின் தந்தையின் மொபையில் சப்திக்க “யாதவ் உன் நண்பன் அரசு வந்திருக்கிறான். பேசுகிறாயா?” என்று கேட்டார்.

“ஹாய் அரசு. என்னைத் தேடி வந்தது எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது. உன் பணபலம் எங்கே…. காலேஜிலே திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாய். வசாயிலிருந்து போரிவிலிக்கு எப்படி வந்தாய் என்பதே எனக்கு ஜீரணிக்க கஷ்டமாக இருக்கிறது. சரி என்ன விஷயம் சொல்லுப்பா?” என்றான் எதிர்முனையில் யாதவ்.

“யாதவ் நீ ஒருமுறை யார் வேண்டுமனாலும் தொழில் ஆரம்பிக்கலாம் என்று சொன்னாயே நினைவிருக்கிறதா?”

“ஆமாம்…”

“அத்தோடு ஃபாஸ்ட் ஃபுட் தொழில் ஆரம்பிப்பது மிகவும் சுலபம். முத்லீடு மிகக் குறைவு கூட என்று கூறினாய். ஞாபகம் இருக்கிறதா?”

“ஆமாம், அதற்கென்ன?”

“நான் செய்யலாமென்றிருக்கிறேண்டா” என்று அரசு சொன்னதும், எதிர்முனையில் விழுந்து விழுந்து சிரிக்கும் சப்தம் கேட்டது.

“ஏன் சிரிக்கிறாய்?” முகம் சிவந்தவாறு கேட்டான் அரசு.

 “உனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?” என்றான் எதிர்முனையில் யாதவ்.

“ஏண்டா… ஒரு சிறிய வியாபாரம் ஆரம்பிக்கலாம் என்று சொன்னால் பைத்தியம் பிடித்து விட்டதா என்கிறாய்?”

“நீ கோடி கோடியாக பணம் போட்டு தொழில் செய்ய வேண்டியவன். இங்கே வந்து எங்கள் தொழிலிலே கை வைக்கப் பார்க்கிறாய்.”

“அரசு இன்றைக்கு ஜே.கே. இன்டஸ்டிரீஸ் ஒரு நாளைக்கு முழுக்க இயங்காமல் போனால் மும்பை மாநகராட்சிக்கு ஏறக்குறைய நாலரைக்கோடி நட்டம் ஏற்படும். அப்படிப்பட்ட கம்பெனியின் அதிபர் நீ…. இங்கே வந்து ஃபாஸ்ட் புட்  ஆரம்பிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு…போ… போ… போய் வேலையைப் பார். யாரிடமும் இப்படி பேசாதே. நாளைக்கே டைம்ஸ் ஆஃப் இந்தியா பேப்பரில் ஜே.கே.இண்டஸ்ட்ரீஸ் அதிபரின் மகன் தமிழரசுவிற்கு மூளைக் குழம்பி விட்டது என்று செய்தி போட்டு விடுவார்கள்.” என்றது எதிர்முனை.

அரசு அமைதியாகி விட, “நான் இங்கே பொண்ணு பார்க்க வந்திருக்கிற காரணமே அப்பாவினுடைய சம்பாத்தியத்தை நம்பித்தான். எல்லா அப்பாவும் பிள்ளைகளுக்காகத் தான்டா சம்பாதிக்கிறாங்க. போ, போய் உங்க அப்பாவோடு சேர்ந்து ஜப்பானில் ஏதோ ஒரு மின்காந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப் போறதா சொன்னாங்களே … அதை ஒழுங்காக கவனிக்கப் பாரு. கோடி கோடியா புரளும்.

“சும்மா அஞ்சிக்கும் பத்துக்கும் அடிச்சிக்கிற இந்த வியாபாரத்திற்கு ஏண்டா நீங்களெல்லாம் வரணும். சரி, நேரிலே பேசலாம். அப்ப நிறைய பேசலாம்.” என்று ஹிந்தியிலே சொன்ன எதிர்முனை “போனை அப்பவிடம் கொடு “ என்றது.

லால் பேசி முடித்து விட்டு “என்ன அரசு ஏதாவது சாப்பிடுகிறாயா? யேய் பாய்… சாப்கோ ஏக் சிக்கன் சூப் தோ” என்று ஆர்டர் கொடுத்தார்.

சாப்பிடலாம் போல வயிறு பசித்தது. இருந்தாலும் “ஒன்றும் வேண்டாம் லால் சாப். அப்புறமாக யாதவ் இருக்கும் சமயத்தில் வருகிறேன்.” என்று சொல்லி விட்டு வெளியே வந்து வாசுதேவனின் காரில் ஏறிக்கொண்டான்.

“எங்கே நேரே வீட்டுக்குத்தானே” என்று கேட்டான் வாசு.

ஏதோ எண்ணத்திலிருந்த அரசு “என்ன என்ன வாசு.. என்ன கேட்டாய்” என்று கேட்டான்.

“என்னடா பகல் கனவு காண்கிறாய்? நேரே வீட்டுக்குத்தானே போக வேண்டும்” என்று கேட்டான்.

“அது.. வந்து… இல்லை என்னை  வசாய் ரெயிவே ஸ்டேசனிலே இறக்கி விட்டுவிடு. ஒரு சின்ன வேலை இருக்கிறது” என்றான் தமிழரசு.

ஸ்டேசன் வந்ததும் அரசு இறங்கிக் கொள்ள கார் புறப்பட்டுச் சென்றது.

வயிறு பசியால் துடித்தது. எங்கே போவது என்று யோசித்தபோது “சாப்…” என்று ஒரு பிச்சைக்காரன் வந்து கைநீட்ட அவனை அறியாமல் சடைப்பையில் கையை விட ஒரு ரூபாய் நாணயம் தட்டுப்பட்டது. எடுத்துப் பிச்சைக்காரனிடம்  போட “நீ மகராசனா இருக்கணும்” என்று வாழ்த்தி விட்டுப் போக, தமிழரசுக்கு சிரிப்பு வந்தது.

ஒரு கணம் ’வீடு திரும்பி விடலாமா?’ என்று கூடத் தோன்றியது. ‘ம்கூம் ஒருமுறை கங்கணம் கட்டி தனியாக என் காலில் நின்று வென்று காட்டவேண்டுமென்று முடிவெடுத்தாகி விட்டது. முன் வைத்தக் காலை பின்னால் வைப்பது முறையாகாது. என்ன செய்யலாம்’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது

‘’என்ன அரசு யோசனை பலமாக இருக்கிறது?” என்று கேட்டான் தீபக் சிவ்டே.

(தொடரும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அத்தை மகனே போய் வரவா (சிறுகதை) – சுஶ்ரீ

    மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 6) – தி.வள்ளி, திருநெல்வேலி