in ,

வாடகை வீடு (சிறுகதை) – ரேவதி பாலாஜி

 2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே வீட்டிற்குள் வினோத்.

எத்தனை நாள் ஆசை இது. தன் பழைய வீட்டை மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும் என்று!

வீட்டை காலி செய்து விட்டு வேறு வீட்டிற்கு வந்ததில் இருந்தே வினோத்திற்கு இந்த ஏக்கம் வந்துவிட்டது.

வினோதிற்கு பதினைந்து வயது இருக்கும். வீட்டை விற்கப் போவதாகக் கூறி வினோத்தின் குடும்பத்தைக் காலி செய்யச் சொன்னார் அவர்கள் குடியிருந்த வீட்டின் முதலாளி.

அவர்களும் காலி செய்து விட்டு வெளியூர் சென்று விட்டனர். அங்கேயே வினோத்தின் தந்தைக்கு தொழிலும் உருவானது. நல்ல நிலைக்கு வந்தார்.

ஏனோ அந்த பழைய வீட்டின் நினைவு வினோத்தை வருத்தியது.

வீட்டை ஒரு முறை பார்த்துவிட்டு வரலாம் என்று அடிக்கடி பெற்றோர்களிடம் அடம் பிடிப்பான். ஆனால் அவர்கள் அழைத்து சென்றதில்லை. அங்கிருந்து வந்தப் பின் எந்த உரிமையில் மீண்டும் செல்வது நமக்கு அந்த வாடகை வீட்டில் என்ன உரிமை இருக்கிறது வேண்டாம் என்பார் அவர் தந்தை.

ஆனால் வினோத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பதினைந்து வருடங்கள் எப்படியெல்லாம் இருந்த வீடு.  அந்த வீட்டை அவன் உயிராக நினைத்து வாழ்ந்து வந்தான். அங்கிருந்து வந்தது அவனைப் பெரிதும் பாதித்தது.

மெல்ல மெல்ல வினோத்தை தேற்றினர் அவன் பெற்றோர்கள். அதை விட நல்ல வசதியான வீட்டிற்குக் குடியேறினார்கள். ஆனாலும் வினோத்திற்கு அந்த ஏக்கம் குறையவில்லை.

பல நாள் இரவில் பழைய வீட்டில் வசிப்பது போன்ற கனவுகள் வரும். எழுந்து அமர்ந்து கனவு என்று தெரிந்தப் பின் நொந்து போவான்.

ஐந்து வருடம் கழித்து ஒரு நாள் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த வினோத் தன் பழைய வீடு நியாபகம் வர நண்பன் ஒருவனை கூட்டிக் கொண்டு பேருந்து ஏறி பழைய ஊருக்குச் சென்றான்.

வீட்டின் வாசலில் நின்று பார்த்தேன். நினைவுகள் எழுந்தது. சிறுவர்கள் சிலர் படிக்கட்டின் கீழ் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தனர். தன் சிறு வயதில் தானும் இப்படி விளையாடிய நியாபகம் வந்தது. மொட்டை மாடியில் தான் செடி வளர்த்த இடங்கள் சைக்கிள் ஒட்டிய இடங்கள் பாடம் படித்த இடங்களை நினைத்து நினைத்து உருகினான்.

அவனுக்கு உள்ளே செல்ல தைரியமில்லை. சில நிமிடங்கள் வெளியில் இருந்து பார்த்துவிட்டு கிளம்பி விட்டான்.

நாட்கள் சென்றதே தவிர அந்த வீட்டின் மேல் அவனுக்கு உள்ள ஏக்கம் அப்படியே தேங்கி நின்றது.

ஒரு நாள் தன்னோடு வேலையில் இருக்கும் நண்பன் ஒருவன் அவனுடைய திருமணத்திற்கு வினோத்தை அழைத்திருந்தான். அந்த மண்டபத்தின் முகவரி அவன் பழைய வீட்டுத் தெருவில் தான் இருந்தது. அவன் பழைய வீட்டைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் கல்யாணத்திற்குச் சென்றான்.

அதிர்ஷ்டவசமாய் அந்த கல்யாண மண்டபத்தில் அந்த வீட்டில் தற்போது குடியிருப்பவர்களை அவன் சந்தித்தான். மாப்பிளையின் வெளியூர் நண்பன் என்பதால் வீட்டிற்கு காபி சாப்பிட அழைத்தனர். வினோத்தும் அவனுடைய பழைய வீடு தான் இப்பொழுது இவர்கள் வசிப்பது என்றெல்லாம் சொல்லாமல் மாப்பிள்ளையின் நண்பன் என்ற உறவோடு மட்டும் சென்றான்.

வீட்டிற்குள் நுழையும் பொழுதே வினோத்திற்கு மெய் சிலிர்த்தது.

ஹாலில் அமர வைத்து காபி கொடுத்தனர்.

மகிழ்ச்சி பொங்க வீட்டைப் பார்க்க உள்ளே வந்த வினோத்திற்கு அப்படியே தலைகீழாய் வீட்டிற்குள் வந்ததும் அவனுடைய சந்தோசம் மெல்ல வடிந்தது.

ஹாலில் அமர்ந்து கொண்டே வீடெங்கும் பார்வையால் சுற்றிப் பார்த்தான்.

சிறு வயதில் வினோத்தின் வீடு இருந்ததற்கும் இப்பொழுது இருப்பதற்கும் பல வித்தியாசங்கள் இருந்தன.

தொலைக்காட்சி வைத்திருக்கும் இடம், கட்டில் இருந்த இடம், மேஜை இருந்த இடம், சுவரில் புகைப்படங்கள் இருந்த இடம், அம்மாவின் தையல் இயந்திரம் இருந்த இடம், அப்பாவின் சட்டை தொங்கும் இடம், அவனுடைய புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்த இடம், தாத்தாவின் பீரோ இருந்த இடம் என எதுவும் இப்பொழுது இல்லை.

பலகாரம் காபி சாப்பிட்டு விட்டு கை கழுவ சமையல் அறைக்குச் சென்றான். அங்கே அவன் அம்மா வைத்திருந்த விதத்தில் சமையல் அறை இல்லை. பூஜை அறை அப்பா பராமரிப்பது போல் இல்லை.

மேல் மாடிக்குச் சென்றான். செடிகள் வைத்திருந்த இடம் வெறிச்சோடி இருந்தது. தேவையற்ற பல பொருட்களை மேலே போட்டு வைத்திருந்ததில் அவன் ஓடி ஆடி விளையாடிய இடம் பாதி மறைந்து இருந்தது.

இப்பொழுது இருக்கும் இந்த உண்மையான வீடு வினோத்திற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. உயிர் இழந்து நிற்கும் கட்டிடமாய் அவனுக்குத் தோன்றியது.

இதை விட அவன் நியாபகத்தில் இருக்கும் பழைய வீடு இன்னும் உயிர்ப்போடு இருந்தது. அந்த காற்றின் வாசம் இன்னும் நாசியில் இருந்தது. அந்த தூசி இன்னும் நினைவில் அப்பியிருந்தது.

‘இங்கு வந்திருக்கக் கூடாது. அந்நிய உணர்வை தான் இந்த வீடு தருகிறது. இது எங்கள் பழைய வீடு இல்லை’ கவலையுற்றது வினோத்தின் மனம்.

அவர்களிடம் விடைபெற்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினான். வெளியில் காலணிகளை அணியும் பொழுது வாசல் கதவை பார்த்தான். அதில் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது வினோத் என்று தன் பெயரை பென்சிலில் எழுதி இருந்தது இன்னும் அழியாமல் அவனைப் பார்த்து சிரித்தது.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 23) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    விதியின் விளையாட்டு (சிறுகதை) – இரஜகை நிலவன்