in ,

வானமடி நீ எனக்கு ❤ (பகுதி 2) – ராஜேஸ்வரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

Click the picture below for complete details of the contest

பகுதி 1

“அண்ணே… அண்ணி…” என்று கத்தியபடியே பண்ணையாரின் பங்களாவிற்குள் ஓட்டமும், நடையுமாக வந்தாள் ராக்கம்மா

“என்னாச்சு?” என பதறியபடி வந்த பண்ணையாரின் மனைவி தனலெட்சுமியிடம்

“இதுக்கு தான் நம்ம பவானிய காலேசுல சேக்க வேணாம் வெரசா பரிசம் போட்றலாம்னு நானும் ஆத்தாளும் கூப்பாடு போட்டோம். அண்ணே காதுல போட்டுக்கவே இல்ல…இப்ப ..என்னாச்சு? நா பயந்த மாதிரி நடந்திருச்சு” என்று அலறும் குரலில் அரற்றினாள்.

பூஜையறையில் கும்பிட்டுக் கொண்டிருந்த பண்ணையார் ராமலிங்கம் சத்தம் கேட்டு, “இவள் வந்தாளே வீட்டையே இரண்டாக்கி விடுவாள். இப்போ எதுக்கு வந்துருக்காளோ?” என்று முனுமுனுத்துக் கொண்டே வந்தார்.

“வாம்மா… என்னாச்சு ஏன் கூப்பாடு போடற?”

“உங்களுக்கு விசயமே தெரியாதாண்ணே? நம்ம பவானி பின்னாடி ஒரு பையன் சுத்தி சுத்தி வாராணாம். நம்ம முருகேசனுக்கு கோவம் வந்துருச்சாம், தான் கட்டிக்கப் போறவகிட்ட எவனாவது வாலாட்டினா சும்மா விடுவானா என்ன? அவன்கிட்ட மிரட்டியிருக்கான். அதுக்கு பவானி இவன திட்டி அனுப்பிச்சுட்டாளாம். எங்கிட்ட புலம்பி புலம்பி அழுவறான். நான் சொல்லிட்டேன், நம்ம பவானி தங்கம்டா… அதுக்கு கொழந்த மனசு… அவள சாக்கிரதையா பாத்துக்க வேண்டியது ஒன்னோட கடமைனுஎன்ன நாஞ் சொல்றது?” என்று அவர்களின் முகத்தை மாறி மாறி பார்த்தாள்.

“சரிமா….. இந்த சனிக்கிழமை நான் காலேஜுக்கு போலாம்னு இருக்கேன் போய் விசாரிக்கிறேன்” என்ற பண்ணையாரிடம்

“எம் மறுமவ வேற மூக்கு முழியுமா அழகா ஹீரோயின் மாதிரி இருக்கா…. பயலுக பின்னாடி சுத்த தான் செய்வாய்ங்க…. முதல்ல அவ படிப்பை நிறுத்திட்டு கூட்டிட்டு வந்துரு…. கல்யாணம் முடிச்சுட்டு அப்புறமா போய் படிக்கட்டும். அப்பத்தான் ஒரு பய.. பின்னால சுத்த மாட்டான்” என அழுத்தமாக சொன்னாள் ராக்கம்மா.

ராக்கம்மா…. பண்ணையாரின் தந்தைக்கு இளைய தாரத்து மகள். தன் இரண்டாவது மகனான முருகேசனை தன் அண்ணனின் ஒரே மகளுக்கு கட்டி வைத்து சொத்தும் சொந்தமும் விட்டுப் போகாமல் இருக்க, இந்த ஊருக்கே வீடு வாங்கி வந்து விட்டாள்.

அவளுக்கு வாய்த்த கணவன் அரசியல் கட்சிகளில் வேலை பார்ப்பவன். மாதம் ஒரு கட்சி மாறுவான். போராட்ட கூட்டங்கள் நடத்துவான். தன்னுடன் தன் மூத்த மகனையும் அதில் இழுத்து இணைத்துக் கொண்டான். பணத்துக்காக வேலை பார்ப்பவன். நியாயம் அந்நியாயம் பார்ப்பதில்லை.

மாப்பிள்ளை வீட்டார் வசதி படைத்தவர்கள் என்ற காரணம் மட்டுமன்றி, மாப்பிள்ளைக்கு அரசியலிலும் ஈடுபாடு உண்டு என்ற காரணமும், ராக்கம்மாவின் தந்தைக்கும் அரசியலில் ஈடுபாடு இருந்த காரணத்தால் ராக்கம்மாவை கட்டி கொடுத்து விட்டார்.

ராமலிங்கம் அப்போது விவசாய கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். ராமலிங்கத்தின் படிப்பில் பெற்ற அறிவாலும் கடின உழைப்பாலும் பண்ணையாராக உயர்ந்தார்.

ராக்கம்மாவிற்கு இன்னும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தன. பண்ணையார் ராமலிங்கத்திற்கு முதலில் பிறந்த ஆண் குழந்தை அப்போது நாடு முழுவதும் பரவியிருந்த தொற்று நோயால் பாதிப்படைந்து தன்னுடைய ஒரு வயதிலேயே இறந்தது. பிறகு நான்கு வருடங்கள் கழித்து பவானி பிறந்தாள். அதன் பிறகு பிள்ளை உண்டாகவில்லை தனலட்சுமிக்கு.

பவானியின் அழகும், துறுதுறுவென இருக்கும் குணமும், படிப்பில் இருந்த ஆர்வமும் பண்ணையாருக்கு மனநிறைவு தந்தது.

பவானி விரும்பும் வரை அவளை படிக்க வைத்து அவளுக்கேற்ற, படித்த பையனாக பார்த்து கட்டிக்கொடுக்க கனவு கொண்டிருந்தார். அவள் படிப்பில் உயர்ந்த நிலைக்கு வருவாள், கலெக்ட்டருக்கு வாக்கப்படுவாள் என்று குறி சொன்னதாக ஒருமுறை தனலெட்சுமி சொன்னது மனதில் நின்றுவிட்டது அவருக்கு.  தன் அண்ணனின் போக்கு ராக்கம்மாவிற்கு பயத்தை தந்தது.

அதனால், தன் மகன் முருகேசனிடம், “பவானி உனக்காகப் பிறந்தவள், அவளை நீ கல்யாணம் செய்து கொண்டால் நீ தான் அடுத்த பண்ணையார். அவளை கண்காணித்துக் கொண்டே இருக்கணும், அதுதான் உன்னோட தலையாய வேலை. உங்கப்பனை நம்பி ஒரு பிரயோசனுமுமில்ல. இருக்கற சொத்தை கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு கரைக்கறதுக்கு ரெடியா இருக்காரு. உன்னோட இரண்டு தங்கச்சிகளுக்கும் நீதான் பொறுப்பெடுத்து கட்டிக் கொடுக்கணும். உங்க அண்ணன், வீட்டுக்கே வர்றது இல்ல… மாசத்துக்கு ஒரு வாட்டி வந்தா அதிசயம். நீ மாமன் மனசு நோகாம நடந்துக்க…..பவானிக்கு பிடிச்ச மாதிரி மாறிக்க” என்று அவனை நச்சரித்துக் கொண்டே இருந்தாள்.

சில நேரம் முருகேசனுக்கு தாயின் பேச்சு எரிச்சலை தந்தது.

“நான் நீ சொல்ற படி ஒழுங்கா தான் நடந்துக்கிறேன்…. பவானி சிலநேரம் எங்கிட்ட எரிஞ்சு எரிஞ்சு விழுகுது …அதுக்கு என் மேல கொஞ்சம் கூட ஆசை கிடையாது…. நீ சொல்றேங்கிறதுக்காக தான் நான் பேசாம இருக்கேன்.”

“டேய்…. அதெல்லாம் கழுத்துல மூணு முடிச்சு விழுந்துருச்சுன்னா எல்லாம் அடங்கி போகும் டா ….அவ உன் கால்ல விழுந்து கிடப்பா. நான் சொல்றேன் பாரு. நீ தைரியமா இரு …பவானி உனக்குத்தான்… இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது நான் இருக்கேன் உனக்கு…நடத்தி காட்டுறேன் பாரு….” என்று சவாலாக பேசினாள் ராக்கம்மா.

முருகேசனுக்கு படிப்பை விட நடிப்பதிலும் சினிமா நடனம் ஆடுவதிலும் தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. பவானியை விட இரண்டு வயது மூத்தவன். படிப்பில் தேர்ச்சி பெறாத அவனை தன் கணவனிடம் சொல்லி அரசியல் கட்சியில் உள்ள ஆட்கள் மூலம் சிபாரிசு செய்து பவானி படிக்கும் காலேஜில் சேர்த்து விட்டாள் ராக்கம்மா. அவனுக்கும் பண்ணையார் தான் காலேஜ் பீஸ் கட்டுகிறார்.

“டே..பவா …இன்னும் தூங்கலயா?” என்று சவிதா கேட்டவுடன் தான் சுய நினைவுக்கு வந்தாள் பவானி.

“ம்…ஆமா..தூக்கம் வரல…” என்றபடி ஜன்னல் வழியே தெரிந்த நிலவிலிருந்து தன் பார்வையை அகற்றினாள்.

சவிதா பவானி அருகில் வந்து அமர்ந்துகொண்டாள்.

“ம்…என்ன?… நிலாவில உன் லவ்வர் முகம் தெரியுதா?”

“ஹஹஹஹ… அதெல்லாம் ஒண்ணுமில்ல…” என்றாள் பவானி வெட்கச் சிரிப்புடன்.

“ஆனா உன்னோட கண்ணுல இருக்கற கண்ணீர் காட்டிக்கொடுக்குதே” என்று  சவிதா சொன்னதும் வேகமாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“என்னதான் முடிவு பண்ணிருக்கீங்க? நீ கேட்டியா?” என்று சவிதா கிசுகிசுப்பான குரலில்  கேட்டாள், இன்னொரு ரூம் மேட் ரேச்சல் எழுந்து விடப் போகிறாளே என்று.

“ம்..கேட்டேன்…சரவணனுக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கு….தயங்கராரு….”

“அதான்….நீ …உன்னோட லவ்வ…சொல்லி… மெசேஜ் போட்டப்பவே ரொம்ப தயங்கினாரே…..அக்செப்ட் பண்ணிக்கறதுக்கே ஒரு மாசம் ஆயிருச்சே….இப்பல்லாம் முதல் நாள் மோதல் அடுத்த நாள் காதல்..அதற்கு அடுத்த நாள் கல்யாணம்னு ஃபாஸ்ட் டா போயிட்டிருக்கு….நீங்க என்னடான்னா?….இன்னும் இரண்டு வருஷமா யோசனையிலேயே இருக்கீங்க?” என்றாள் சவிதா.

“நாங்க கிராமத்துல பொறந்து வளந்தவங்க… எங்க ஊர்ல இப்பத்தான் பெண் பிள்ளைகளும் படிக்கணும்னு தூரத்துல அனுப்பறாங்க.. காதல் னா..தப்பானது இல்லைங்கறதே இப்பத்தான்எனக்கே புரியுது… இன்னும் நிறைய மாறவேண்டியிருக்கு….முக்கியமா சாதிப்பிரச்சனை….அவரு ….சரவணன்… தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவராம்.. அதனாலேயே ரொம்ப பயப்படறாரு….வீட்டுக்கு ஒரே மகன்…அம்மா அப்பாக்கு தலைகுனிவ ஏற்படுத்தக் கூடாது ..னு..தயங்கறாரு….” சொல்லிக்கொண்டே கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள் பவானி.

“காதல் அதெல்லாம் பாத்துகிட்டு வருமா என்ன? சரி…படுத்துக்கோ..எல்லாம் நல்லபடியா நடக்கும்… காலைல சீக்கரம் எழுந்துக்கணும்….இல்லைனா…கேன்டீன்..ல காஞ்சு போன இட்லி தான் கிடைக்கும்..” என சவிதா சிரித்துக்கொண்டே கூறினாள்.

சவிதா சென்றதும் மீண்டும் நிலவைப் பார்த்தாள் பவானி. சரவணனை முதன்முதலில் பார்த்த நாளை,… அவன்மேல் காதல் கொண்ட நொடிகளை அவள் மனம் அசை போட்டது.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வானமடி நீ எனக்கு ❤ (பகுதி 1) – ராஜேஸ்வரி

    இருபதாம் எலிகேசி ! (சிறுகதை-முற்பகுதி) – நாமக்கல் எம்.வேலு