எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அலமாரியைத் திறந்து பார்த்தபோது சட்டென்று ஏதோ ஒரு வித்தியாசம் பளிச்சென்று கண்ணில் பட்டது. என்ன இது! பரபரப்புடன் வேகமாக வெள்ளி விளக்குகள் சின்ன சின்னதாக குங்குமச்சிமிழ்கள் வைத்திருந்த அந்த பெரிய ரெக்ஸின் பையைத் தேடினாள்.
எங்கே போயிருக்கும் ! தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது மாதங்கிக்கு. மறுபடியும் ஆராய்ந்த போது நிறைய பொருட்கள் சின்னதும் பெரிதுமாக தங்க நாணயங்கள், ஏற்றிக் கொண்டிருந்த பெரிய வெள்ளி விளக்கு என்று பலவற்றைக் காணவில்லை.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. தோலிருக்க சுளையை முழுங்குவது என்பார்களே அது மாதிரி பூட்டியிருக்கும் வீட்டுக்குள் யார் வந்து இந்த வேலையை செய்திருக்க முடியும்!
அடிக்கடி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்வது மாதங்கி சிவநாதனின் வழக்கம். அந்த மாதிரி சமயத்தில் வாரம் ஒருமுறை வேலை செய்பவளை வந்து சுத்தம் செய்து விட்டுப் போகச் சொல்வது உண்டு. அதற்காக வீட்டுச் சாவியை எதிர்வீட்டில் கொடுத்து வைத்திருப்பார்கள். அவர்களிடம் போய் என்ன என்று கேட்பது!.
முதலில் ஆறு மாதமாக பூட்டியிருக்கும் வீட்டுக்குள் எப்போது நடந்தது என்று என்ன சொல்ல முடியும்! அவள் நிதானித்தாள். பொருள் போனதை விட அது போன விதம்தான் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஊருக்கு செல்வதற்கு முன் எல்லாவற்றையும் அடுக்கி அந்தப் பையில் போட்டு வைத்திருந்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது. சிவநாதன் முதலில் அவள் சொன்னதை நம்பவில்லை. மற்ற எல்லா இடங்களிலும் மறுபடி மறுபடி தேடிப் பார்த்தார். ‘உனக்கு நல்லா தெரியுமா?!’ என்று மீண்டும் மீண்டும் கேட்டார்.
ஆனால் அவர்கள் இருவருக்கும் ஒன்று நன்றாக புரிந்தது. லேசாக வெளியில் விஷயம் கசிந்தாலும் முதலில் மாட்டப் போவது அந்தப் பெண் சங்கீதா தான். அவள் தானே உள்ளே வந்து போகிறாள் .
சுலபமாக அவள் மேல் எல்லோரும் பழியைப் போட்டுவிடுவார்கள். ஆனால் அவர்கள் இருவருக்கும் அப்படி ஒரு எண்ணமே ஏற்படவில்லை. சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவள் என்பது மாதிரி இந்த சங்கீதா. வறுமையிலேயே பிறந்து வறுமையிலேயே வளர்ந்து இன்னும் அதன் பிடியிலேயே இருக்கும் அவளது செயல்கள் பேச்சு எல்லாமே வளமாக நேர்மையாக இருக்கும் . எத்தனையோ முறை அவளது செய்கைகளை பார்த்து உண்மையிலேயே மாதங்கி பிரமித்துப் போயிருக்கிறாள். உழைப்புக்கு அஞ்சாத அலுத்துக் கொள்ளாத ஒரு பெண்.
மனிதர்களில் பலர் உழைத்துத்தான் பிழைக்கிறார்கள். சிலர் உறிஞ்சியே பிழைக்கிறார்கள். பிக்பாக்கெட், களவு என்று எல்லா வகைகளிலும் சமுதாயத்தை சுரண்டிக் கொண்டிருக்கும் ஒரு வர்க்கம் .எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னலமே பெரிதென வாழும் மக்கள்.இதுதான் உலகம்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த சிவநாதன் கேட்டார் ‘இப்போ என்ன செய்றது? ‘
‘எனக்கும் அதுதான் புரியவில்லை. எப்போது எப்படி என்று எதுவுமே தெரியாமல் என்ன சொல்வது! ‘
‘ஆனா, ஒரு விஷயம்! எந்த ஒரு பொருளும் நம் கைக்கு திரும்பி வரப் போவதில்லை. தேவையில்லாமல் எல்லார் வாயிலும் மாட்டிக் கொண்டு விழிக்கப் போகிறோம்.’
அவளுக்கும் அது நன்றாகவே தெரிந்தது.
‘க்ரைம் நாவல் விவேக் வந்தால் கூட எப்படி போயிற்று என்று வேண்டுமானால் சொல்லக்கூடும். திருப்பி வாங்கித் தரமுடியாது.’
‘அதுக்காக சும்மாவே இருக்கிறதா? நம்ம என்ன கள்ளப் பணமா வச்சிருந்தோம் வெளியிலே சொல்லாம இருக்கிறதுக்கு.’
‘மடத்தனமா பேசாதே! சொன்னா எல்லாரும் தலைக்கு தலை கருத்து கந்தசாமியா அட்வைஸ் பண்ண வருவாங்க. வீட்டிலேயே இருங்க அப்படின்னு சொல்லுவாங்க. சாவியை வச்சுக்க முடியாதும்பாங்க.’
அவளுக்கு புரிந்தது. தனி வீடாக இருந்தால் காவலுக்கு ஆள் வைக்கலாம். இல்லையானால் முன் ரூமில் படுத்துக் கொள்ள சொல்லலாம். எதுவும் பயமில்லாது பாதுகாப்பாக இருந்தது போய் இப்போது பூட்டிய வீட்டுக்குள் ஒருவரால் நுழைய முடிகிறது என்றால் அவளால் சிந்திக்கவே முடியவில்லை. எப்படி கையாள்வது என்றும் தெரியவில்லை.
சங்கீதாவிடம் மெதுவாக விஷயத்தை சொல்லியபோது யாரிடமும் சொல்லக்கூடாது என்ற எச்சரிக்கையுடன்தான் அவள் வெகுவாக அதிர்ந்தாள். பேச்சே வராமல் திணறிப் போனாள்.
‘எனக்கு ஒண்ணும் புரியலையேம்மா! நான் வரும்போது என் கூடையை கூட வெளியே தான் வச்சுட்டு வருவேன். என்னை நம்பி ஒப்படைச்சிருக்கீங்க.’ அவள் கண்கள் கலங்கி விட்டன.
‘எங்களுக்கும் அதுதான் ஒண்ணுமே புரியலை.’
கொஞ்சம் நிதானித்தவள், ‘அம்மா அவங்க சாவியை ஃப்ரிட்ஜ் மேல்தான் வச்சிருப்பாங்க. நம்ம வீட்டு சாவியிலே வீட்டு நம்பர் போட்டிருக்குமே! ‘
அவள் முடிப்பதற்குள் ‘நீ என்ன சொல்ல வரே! ‘என்று பரபரப்புடன் கேட்டாள் மாதங்கி. அவளுக்கு எப்படி இது நடந்தது என்று தெரிந்தால் போதும் என்றிருந்தது. எப்படியெல்லாம் நூதனமாக திருடுகிறார்கள்? இந்த மூளையை ஆக்கப்பூர்வமாக உபயோகிக்கலாமே!
‘அதாம்மா! அவங்க வீட்டுக்கு வந்த யாரோ தான் இதை செய்திருக்கவேண்டும். ஆனால் எப்படி நிரூபிக்க முடியும்!’
அவள் குரலில் கவலையும் வேதனையும் தெரிந்தது. மாதம் முழுக்க கை வலிக்க பாத்திரம் தேய்த்து வீடு சுத்தம் செய்து அவள் வாங்கும் சம்பளத்தைப் போல நூறு மடங்கு அதிகமாக ஒருவனால் ஒருமணி நேரத்தில் களவாடி எடுத்துக் கொண்டு போக முடிகிறது.
நேர்மைக்கும் உழைப்புக்கும் மதிப்பு குறைந்துவிட்டது. வாய்ச்சவடாலுக்கும் களவாடலுக்கும் பயப்பட வேண்டியிருக்கிறது. ஓரத்தில் வண்டியை நிறுத்து என்று சொன்னால் உன் வீட்டு ரோடா என்று அகம்பாவமாக அலட்சியமாக கேட்பவர்களை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.
‘சரி ! பார்ப்போம்!’ என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் மாதங்கி.
மறுபடியும் பதினைந்து நாட்களில் மீண்டும் அவர்கள் புறப்பட வேண்டும்.எப்போதும் போல் இயல்பாக வேலைகளில் ஈடுபடமுடியாமல் மனதுக்குள் ஒரு நெருடல் இருந்துகொண்டே இருந்தது.
மாதங்கி ! எப்போ வந்தே! கேட்டுக்கொண்டே அருகில் வந்த நிர்மலாவைக் கண்டு புன்னகைக்க முயன்றாள். A to Z என்று ஸுப்பர்மார்க்கெட்டுகளில் விளம்பரம் பண்ணுவார்களே அது மாதிரி எல்லா விதமான வம்புகளும் அவளுக்குத் தெரியாமல் போகாது
.இன்றைக்கு எந்த வம்பை நம் காதில் போடப் போகிறாளோ என்று சலிப்புடன் நின்றவளுக்கு அவள் சொன்ன ‘ஜீவா புருஷன் மறுபடியும் ஓடிப் போயிட்டான் தெரியுமா?’ என்ற செய்தி திகைப்பைக் கொடுத்தது. அந்தப் பெண்ணின் திருமணத்துக்கு அத்தனை பேருமாக சென்று வந்தது இப்போது போல இருக்கிறது. அதற்குள் எத்தனை முறை சண்டைகள் சரிவுகள்!
“என்ன சொல்றே! எல்லோரும் கூடிப் பேசி சமாதானம் செய்துதானே மறுபடி சேர்ந்தார்கள்!” திகைப்புடன் கேட்டாள் அவள்.
“நீ வேற ! அவன் நல்லா நாடகம் போட்டு ஏமாத்தியிருக்கான். அசந்த நேரம் அவங்க அம்மா வீட்டு நகை வெள்ளி சாமான்களையும் தூக்கிக் கொண்டு ஓடி விட்டானாம்.”
அவளால் அந்த அதிர்ச்சியை தாங்க முடியவில்லை.
‘நிஜமாவா !’ ,என்று கேட்டவளைப் பார்த்து கேலியாக சிரித்தாள் நிர்மலா.
‘அதுமட்டுமில்லை .அந்தப் பொண்ணு தற்கொலைக்கு முயற்சி பண்ணி காப்பாற்றியிருக்கிறார்கள்’.
அவளால் அந்தப் பெண் ஜீவாவின் வேதனையை உணர முடிந்தது. தன்னுடைய அவலங்கள் சமுதாயத்தின் முன்னே கடை விரிக்கப்படும்போது தனி ஒரு மனுஷியாக அவள் எதிர்கொள்ளும் துயரங்களை யாரால் தீர்க்க முடியும்! காலையில் அவளை தற்செயலாக பார்த்ததுமே அவளுக்கு ஏதோ மனதில் தோன்றியது. நிர்மலா மேலே மேலே ஏதோ சொல்லிக் கொண்டே போனாள்.
“இப்ப எல்லாம் என்ன நடக்குது அப்படின்னே சொல்லமுடியாது.”
மேலும் மேலும் பேசிக் கொண்டே போனவளை எப்படியோ தவிர்த்துவிட்டு மெதுவாக வீடு வந்து சேர்ந்தாள் அவள்.
ஒரு கல்யாணம் பண்ண எவ்வளவு கஷ்டப்படுகிறோம்! அந்தத் தேன் கூட்டை கலைத்து வெளியேற எப்படி மனசு வருகிறது! அத்தோடு சொந்த வீட்டிலேயே திருடிக் கொண்டும் போயிருக்கிறான். நினைக்க நினைக்க அவளுக்கு மனது ஆறவில்லை.
சிவநாதனிடம் சொல்லிய போது அவரும் அதே மாதிரி தான் மனது கஷ்டப்பட்டார். நகைகளையும் திருடிக்கொண்டு போயிருக்கிறானாம் என்று சொன்ன போது அவர் சட்டென நிமிர்ந்தார்.
“அப்போ அவன்தான் நம் வீட்டிலும் தன் கைவரிசையை காட்டியிருக்கிறான் போலிருக்கிறது.”
அவளுக்கும் அப்போதுதான் அது உறைத்தது.. அட ! அப்படித்தான் இருக்கும் போல ! அன்னிக்கே சங்கீதா சொன்னாளே சாவி ஃபிரிட்ஜ் மேல் தான் இருக்கும்னு.
“அடப் பாவி! “
“இரு , இரு , இப்பவும் நம்மாலே இதை நிரூபிக்க முடியாது. “
“அதோட அவங்க வீட்டிலே ரொம்பவும் மனசு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்கன்னு இப்போதானே சொன்னே!”
“உண்மைதான். பகலிலே நோட்டம் பார்த்து வச்சுட்டு ராத்திரி வண்டிகளை கிளப்பிக்கிட்டு போயிடுவாங்க அப்படின்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா இப்படி பக்கத்து வீட்டை பார்த்து வச்சுகிட்டு திருடுறத இப்பத்தான் பார்க்கிறேன். “
பெருமூச்சு விட்ட சிவநாதன் “அதிலே நம்ம சாவியிலே வீட்டு நம்பரும் போட்டே கொடுத்திருக்கிறோம் பாரு.”
“தென்னமரத்திலே தேள் கொட்டினா பனை மரத்திலே நெறி கட்டும்னு சொல்லுவாங்க. நம்ம விஷயத்திலே அது நிஜமாயிடுச்சு பார்த்தீங்களா? “
இருவரும் ஒன்றுமே பேசத் தோன்றாது அப்படியே அமர்ந்திருந்தார்கள். பாதுகாப்புக்காக கொடுத்த சாவியே பாதகத்தை ஏற்படுத்த காரணமாகியிருக்கிறது.
சுதாரித்துக் கொண்ட சிவநாதன் , “மாதங்கி ,ஒரு விஷயம், இதை வேற யார்கிட்டேயும் போய் சொல்லிடாதே. முதலிலே நம்மால நிரூபிக்க முடியாது. இரண்டாவது அவங்க மனசை இன்னும் கொஞ்சம் காயப்படுத்தி பார்க்க வேண்டாமே!” என்றார்.
“சும்மாவே இருந்துடலாம்னு சொல்றீங்களா?”
“வேறென்ன செய்றது, அந்தப் பொண்ணுக்கு கொடுத்த கல்யாணப் பரிசு மாதிரி நினைச்சுப்போம்.”
வார்த்தைகளால் கூட யாரையும் காயப்படுத்த நினைக்காத அவர்களுக்கு வாழ்க்கை கொடுத்த பரிசு. மனதுக்குள் எண்ணமிட்டவளாக நிமிர்ந்து பார்த்த மாதங்கியின் கண்கள் கலங்கியிருந்தன.
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings