in ,

உதய தாரகை! (நாடகம் – காட்சிகள் 3 to 5) -இரஜகை நிலவன்

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

காட்சி-3

இடம்-ரோடு

பாத்திரங்கள்: தேன்மலர், சில்வியா, மெர்லின்

சில்வியா : பார்த்தாயா மெர்லின் சகாயநாதன் வீட்டிலே அவர் வேலையில்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்ட போதிலும் வர்ற போற எல்லோருக்கும் வீட்டிற்கு வந்தால் சாப்பாடு போடாமல் அனுப்புவதில்லை.

மெர்லின் : உண்மையான விருந்தோம்பல் பண்பு அவர்களிடம் தான் இருக்கிறது. எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. எழிலரசியும் அவர் சொல்வதைக் கேட்டு வருகிறவர்க ளுக்கெல்லாம் உணவு கொடுத்து உபசரிக்கிறார்.

தேன்மலர் : உண்மையிலே கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம். எவ்வளவு தான் கடன் தொல்லைப்பட்டாலும் வீட்டிற்கு வருகிறவர்க்கெல்லாம் உணவு கொடுக்கும் விருந்தோம்பல் பண்பு எல்லோருக்கும் வருவதில்லை.

மெர்லின் : ஆமாம். தேன்மலர் உன் வீட்டுக்காரருக்கு நல்லபடியாக உடம்பு தேறிவிட்டதா?

தேன்மலர் : பரவாயில்லை. ஆங் அன்றைக்கு எழிலரசி வீட்டில் பார்த்தோமே…….ரோட்ரிக்ஸ். அவருக்கு மிகவும் உடல் பலவீனமடைந்து இப்போது ஆஸ்பத்திரியில் இருக்கிறாராம். அவரும் இப்படித் தான் சொல்லச் சொல்ல நிறுத்தாமல் குடித்துக் குடித்தே உடம்பைக் கெடுத்துக் கொண்டாராம். இப்போது கல்லீரலில் ஏதோ பிரச்சனையாகி விட்டதாம். (எழிலரசியும், சகாயநாதனும் அந்த வழியாக வர) என்ன எழிலரசி இந்தப் பக்கம்.

எழிலரசி : ரோட்ரிக்ஸை ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்து விட்டு வருகிறோம். பாவம் மனிதர் ரொம்ப கஷ்டப்படுகிறார்.

சகாய நாதன்: எப்படியும் தேறி விடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இந்த எமல்டா தான் மிகவும் வாட்டமாக இருக்கிறார். கணவருக்கு ஏதும் ஆகி விடுமோ என்று பயந்து எதுவும் சாப்பிடாமல் எடுக்காமல்…

மெர்லின் : என்ன செய்வது தேவன் விட்ட வழியென்று தாமே இருக்காமல் எமல்டாவை இறைவா என் கணவரை கண்டிப்பாக எனக்குக் கொடும் என்று ஆண்டவரை நோக்கி கெஞ்சி மன்றாட சொல்ல வேண்டியது தானே.

எழிலரசி : அவள் உருகி ஜெபிக்கிற மாதிரி யாராலும் ஜெபிக்க முடியாது. அவ்வளவு உருகி உருகி ஜெபிக்கிறாள். கண்டிப்பாக அவள் ஜெபங்கள் கேட்கப்படும். தேவன் அவள் ஜெபத்திற்கு கண்டிப்பாக செவி சாய்ப்பார்.

சகாய நாதன் : வாருங்களேன். வீட்டிற்கு போய்ச் சாப்பிட்டு விட்டுச் செல்லலாமே.

மெர்லின் : இல்லை. நாங்கள் சாப்பிட்டு விட்டுத் தான் கிளம்பினோம். இன்னொரு நாள் சந்திக்கலாம்.

தேன்மலர் : நாமும் ரோட்ரிக்ஸை ஆஸ்பத்திரியில் போய்ப் பார்க்க வேண்டாமா?

சில்வியா : நாளை மாலை முடிந்தால் போகலாம். 

 காட்சி-4

இடம்-ரோடு

பாத்திரங்கள்: எமல்டா, எழிலரசி

எழிலரசி : என்ன எமல்டா இவ்வளவு பரபரப்பாக இருக்கிறீர்கள்? இப்போது ரோட்ரிக்ஸ் எப்படி இருக்கிறார்.

எமல்டா : அவருக்கு உடல் நிலை மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த மருந்தை சிட்டியிலே போய் வாங்க வேண்டும். ஒரு ஆட்டோகாரனும் வர மாட்டேங்குறான். டாக்டர் ஒரு மணி நேரத்திற்குள் மருந்தை வாங்கி வரச் சொல்லியிருக்கிறார்.

எழிலரசி : கவலைப்படாதீர்கள்.நான் வாங்கி வருகிறேன் நீங்கள் போய் ரோட்ரிக்ஸை பார்த்துக் கொள்ளுங்கள்.

எமல்டா : எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது எழிலரசி. அவர் பிழைத்துக் கொள்வாரில்லையா?

எழிலரசி : கடவுளை நோக்கி நல்லா ஜெபம் பண்ணுங்கள். அவரால் ஆகாதது ஒன்றுமில்லை. இறந்தோரை உயிர்ப்பித்த அவர், இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்த நம் அன்பு தேவன் உங்கள் கணவருக்கு நல்ல சுகம் கொடுப்பார். விடாது ஜெபியுங்கள். கேளுங்கள் கொடுக்கப்படும். தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொன்னவர் இயேசு பிரான். உங்கள் குழந்தைகள் அப்பம் கொடுத்தால் கல்லையா கொடுப்பீர்கள் நீங்களே இவ்வளவு செய்யும் போது உங்களுக்கு பரலோக இராஜ்ஜியத்தில் வீற்றிருக்கும் தேவன் எதை வேண்டுமானாலும் கொடுப்பேன் என்று சொல்லியுள்ளாரே. மனமுருகி கேளுங்கள். கண்டிப்பாக ரோட்ரிக்ஸை தேவன் குணமாக்குவார்.

எமல்டா : உங்களுக்குத் தான் வீண் சிரமம் கொடுக்கிறேன்.

எழிலரசி : வேண்டிய நேரத்தில் உதவி செய்யவில்லை எனில் நாம் கிறிஸ்தவர்களாக இருப்பதில் கூட அர்த்தமில்லாமல் போய் விடும். நீங்கள் போய் மருத்துவமனையில் படுத்திருக்கும் ரோட்ரிக்ஸை கவனியுங்கள். நான் மருந்துடன் வருகிறேன்.

எமல்டா : இதோ பணம் எடுத்துக் கொள்ளுங்கள் (பர்ஸை திறக்கிறாள்)

எழிலரசி : அதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.

காட்சி-5

இடம்-தேவாலய வளாகம்

பாத்திரங்கள்: எழிலரசி, சகாய நாதன், மெர்லின், சில்வியா

எழிலரசி : என்ன மெர்லின் சபை திருவிழா ஏற்பாடுகளெல்லாம் நன்றாக நடக்கிறதா?

மெர்லின் : இந்த வருடம் வேண்டாமென்று முடிவெடுத்து விட்டோம்

எழிலரசி : ஏன்? என்னாச்சு? சுறுசுறுப்பாக எல்லா ஏற்பாடுகளையும் தடபுடலாக செய்து கொண்டிருந்தீர்களே….

சில்வியா : அது… வந்து.தேன்மலரின் கணவர் தவறிவிட்டார்.

சகாய நாதன் : என்னது குமார் இறந்து விட்டாரா. அவர் உடல்நலம் தேறி வருவதாகத் தானே சொன்னீர்கள்

மெர்லின்: நன்றாக தெம்பாக வீடு திரும்பியவர் டாக்டர் சொல்லியனுப்பிய பின்பும் குடிக்காமல் இருக்க முடியாது என்று குடிக்க ஆரம்பித்தார். பாவம் தேன்மலர் குடும்பம் இப்போது தெருவில் நிற்கிறது.

எழிலரசி : சே……குமாருக்கு இப்படி ஒரு முடிவு வந்திருக்க வேண்டாம். தேன்மலர் தான் பாவம் சகாயநாதனும் நானும் அவங்களைப் போய் பார்த்து விசாரித்து வர வேண்டும்.

எமல்டா : வேகமாக ஓடி வர

எழிலரசி : எமல்டா… என்ன ஆயிற்று ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள்.

எமல்டா : அவருக்கு மிகவும் சீரியஸாகி விட்டது. டாக்டர் கையை விரித்து விட்டார். இனி எல்லாம் அவன் கையில் தான் இருக்கிறது என்று மேலே பார்த்து கையை காட்டி விட்டார் எனக்கு பயமாக இருக்கிறது. அதனால் தான் தேவனிடம் ஜெபித்து மனமுருகி என் ரோட்ரிக்ஸை எனக்கு திரும்ப தர கேட்க வந்தேன்.

மெர்லின் : கவலைப்படாதீர்கள். வாருங்கள் எல்லோரும் போய் சேர்ந்து ஜெபிப்போம். கடவுள் எமல்டாவை கைவிட மாட்டார்.

எழிலரசி : (சகாய நாதனிடம்) நாமும் போய் ஜெபிக்கலாம். ரோட்ரிக்ஸ் உடல் நலம் தேறி கண்டிப்பாக எமல்டாவிடம் திரும்பி வர கடவுள் வரங்களைப் பொழிவார்.

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உதய தாரகை! (நாடகம்-காட்சிகள் 1 to 2) – இரஜகை நிலவன்

    வீடென்று எதைச் சொல்வீர்? (சிறுகதை) – இரஜகை நிலவன்