in ,

தாரகை (சிறுகதை) – சாய்ரேணு சங்கர்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பேருந்திலிருந்து இறங்கி நடக்கலானாள் ரேவதி. மனதிற்குள் போக வேண்டிய கடைகள், வாங்க வேண்டிய பொருட்கள் என்று லிஸ்ட் போட்டுக் கொண்டாள்.

இதே தி.நகர் பகுதிக்கு மூன்று வருடங்களுக்கு முன்னால் தான் பேருந்தில் வந்து இறங்கியது மனதில் நிழலாடியது. அவளுக்கு முன்னே நின்றிருந்த அந்தப் பெண் – அவள் பெயரென்ன? மறந்து விட்டது. அவள் நெளிவும் விலகலும் கண்ணில் எட்டிப் பார்த்த கண்ணீருமாய் இருந்தது மட்டும் இன்னும் நினைவில் நிற்கிறது.

பாவம்… எங்கு போகிறவளோ? இங்கே பஸ் நின்றதும், அவசரமாக தப்பித்து ஓடுபவளைப் போன்று இறங்கி வெகுவேகமாக நடந்தாள். அவள் பின்னால் கேலிச்சிரிப்போடு தொடர்ந்தவனைப் பார்த்தபோது ரேவதிக்கு விஷயம் புரிந்தது.

சில விநாடிகளிலேயே அவளை எட்டிப் பிடித்து விட்டான் அவன். மீண்டும் அவன் சில்மிஷங்கள் தொடர்ந்தது. பாவம், அந்தப் பெண் அவனிடமிருந்து நகர அரும்பாடுபட்டாள். ஒரு கட்டத்தில் அவள் நகர்ந்து நடுச்சாலைக்கு வந்து விட்டதையும் பேருந்து ஒன்று உறுமிக் கொண்டு அருகில் வந்துவிட்டதையும் கண்ட ரேவதி திடுக்கிட்டாள். விநாடிக்கும் குறைவான நேரத்தில் அவளை இழுத்துக் காப்பாற்றினாள்.

இப்போது அவன் ரேவதியை வெறித்தான். அவசரமாக மார்க் போட்டுக் கொண்டிருந்தான் என்று புரிந்தது. ரேவதி அமைதியாக அவனைப் பார்த்தாள். கை மெதுவாகச் செருப்பைக் கழற்றியது.

அடுத்த விநாடி, அங்கே ஒரு போர் அரங்கேறியது. பெண்ணைத் தாயாக அல்ல, சகோதரியாக அல்ல, தோழியாக அல்ல, சகமனுஷியாகக் கூடப் பார்க்காத மிருகத்தின்மீது செருப்பு சடேர் சடேரென்று இறங்கியது. போலீஸ் வந்து அவனை இழுத்துப் போனார்கள்.

அன்று ரேவதி வீட்டுக்கு வந்தபோது அவளுக்காக ஒரு பெரியவரும் ஒரு அம்மாளும் காத்திருந்தார்கள். அவனைப் பெற்றவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

“அம்மா! என் மகளா நினைச்சு உன்னிடம் இந்த உதவியைக் கேட்கிறேன். இந்தக் கேஸை விட்டு விலகிடும்மா! தயவுசெய்து என் பையனுக்கு எதிராகச் சாட்சி சொல்லாதே. உனக்கு ஏதேனும் பணம் வேணும்னாலும் கொடுக்கறோம்…”

எரித்து விடுவதுபோல் அவர்களைப் பார்த்த ரேவதியின் உஷ்ணப் பார்வையைக் கண்டதும், பெரியவர் பேச்சை நிறுத்திக் கொண்டார்.

அந்த அம்மாள் பேச ஆரம்பித்தாள். “தாயே! என் மகன் பண்ணியது பெரிய தப்புத்தான். அதற்காக நாங்க உன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கறோம். இந்தக் கேஸை வாபஸ் வாங்கச் சொல்லி நாங்க கேட்கிறது அவனுக்காக இல்லைம்மா! என் மகளுக்கு அடுத்த வாரம் கல்யாணம். இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா அது நின்னுடும். பாதிக்கப்பட்ட பெண் தன் பெயர் வெளியே வரக்கூடாதுன்னு நினைக்கறா. நீ சாட்சி சொல்லலேன்னா கேஸ் ட்ராப் ஆகிடும். என் மகளும் உன் மாதிரி ஒரு பொண்ணுதான். அவ வாழ்க்கையைக் காப்பாற்றும்மா! அவளை நினைச்சுக்கிட்டு எனக்கு மடிப்பிச்சை போடு” என்றாள் அழுதவாறே.

ரேவதி இறுக்கமாக அவர்களைப் பார்த்தாள். “உங்க பொண்ணைப் பற்றி நான் நினைக்கறது இருக்கட்டும். அவளை ஒரு நிமிஷம் நினைச்சிருந்தா உங்க பையன் இன்னிக்கு லாக்கப்ல இருக்க மாட்டான். நீங்க மற்ற பெண்களை உங்க மகளா நினைச்சிருந்தா நீங்களும் இப்படி என் முன்னாடி உட்கார்ந்திருக்க மாட்டீங்க” என்று சொல்லிப் பேச்சைக் கத்தரித்து எழுந்து விட்டாள்.

அவர்கள் அழுது கொண்டே போனது, கோர்ட்டில் அவன் அவளை முறைத்துக் கொண்டேயிருந்தது, தீர்ப்பு வந்ததும் “வருவேண்டி! ஜெயில்லேர்ந்து திரும்பி வருவேன்! உன்னைப் பழி வாங்குவேன்!” என்று வெறிபிடித்த மாதிரி அவன் அலறியது எல்லாம் நினைவில் ஊர்வலம் போக, உடல் சிலிர்த்தது ரேவதிக்கு.

அப்போது யாரோ அவள் முடியைப் பிடித்து இழுத்து இறுக்கினார்கள். யாரது கையில் கத்தியோடு? ஐயோ, அவன்!

“ராட்சஸி! என் வாழ்க்கையை, என் தங்கச்சி வாழ்க்கையை எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டியே! பெரிய போலீசாடி நீ? எவன் எந்த பொம்பளையைப் பார்த்தா உனக்கென்னடி? உன்னைக் கதறக் கதறக் கத்தியால் குத்திக் கொல்லப் போறேன். உனக்காக எந்தப் பொம்பளை வரான்னு பார்க்கறேன்! எவளுக்குத் தடுக்கத் தில்லிருக்குன்னு பார்க்கறேன்!” ஆவேசமாய் அலறினான் அவன்.

“எனக்குத் தில்லிருக்கு. அவங்கமேல கையை வெச்சே, உன் கையை வெட்டிடுவேன்!” என்றவாறு அவர்கள் அருகில் வந்தாள் ஒரு பெண்.

அவன் அலட்சியமாக அவளை ஏறிட்டான். அடுத்த விநாடி அவன் கையிலிருந்த கத்தி கீழே நழுவியது.

“தங்கச்சீ!” என்று கத்தினான். “உன் வாழ்க்கையை அழிச்ச இந்தச் சனியன் பிடிச்சவளையா காப்பாற்றப் பார்க்கற?”

“இந்தா! இன்னொரு வார்த்தை அவங்களைப் பற்றி ஏதாவது பேசினே, நீ கொண்டுவந்த கத்தியாலேயே உன்னைக் கூறு போட்டுடுவேன்! என் வாழ்க்கையை அழிச்சது இவங்க இல்லடா, நீதான்! அவங்க சொன்னமாதிரி, ஒரு நிமிஷம் என்னை நினைச்சிருந்தா இந்த மாதிரிச் செஞ்சிருப்பியாடா? என் கல்யாணம் நின்னு போச்சாம்! உனக்கு என்ன தெரியும்? மூணு வருஷத்துக்கு முன்னாடி அவங்களுக்கும் கல்யாணம் நிச்சயமாகியிருந்தது. இந்தப் பிரச்சனையிலே அவங்க துணிஞ்சு தலையிட்டதால அவங்க கல்யாணமும் நின்னு போச்சு, தெரியுமாடா?

“இப்போ நீ வீட்டுக்குப் போனா, நம்ம அம்மா அம்மா உன்னைக் கைவிட மாட்டாங்க! நாலு வார்த்தை திட்டிட்டு, வீட்டோட சேர்த்துப்பாங்க! ஆனா உன்னை மாதிரிப் பாவியைத் தைரியமா எதிர்த்த இவங்களோட அம்மா, அப்பாவே அவங்களை வெறுத்து ஒதுக்கிட்டாங்க! மூணு வருஷமா பேச்சு வார்த்தை கிடையாது! பொம்பளைங்கள்ளாம் பாதுகாப்பா இருக்கணும், அவங்களோட வாழ்க்கையில் விளையாடற உன்னைப் போன்ற மிருகங்களுக்கு உன்னோட கதை ஒரு பாடமா அமையணும்னு இவ்வளவு பெரிய தியாகம் பண்ணின இவங்க, நம்ம குடும்பத்தையும் மறக்கல.

நீ ஜெயிலுக்குப் போயிட்டதால தவிச்சுக்கிட்டிருந்த நம்ம குடும்பத்தையும் அவங்க சம்பளத்தைக் கொண்டு பராமரிச்சுக்கிட்டிருக்காங்க. அரும்பாடுபட்டு எனக்கும் ஒரு வரன் பேசி முடிச்சிருக்காங்க. அதற்குப் புடவைகள், மற்ற சாமான்கள் வாங்கத்தான் இங்கே வந்திருக்காங்க. நான் ஆஃபீஸ் முடிஞ்சு அவங்களோட சேர்ந்துக்கறதா ஏற்பாடு. நல்லவேளை நான் சீக்கிரம் வந்தேன். இனி எந்தக் காலத்திலும் என் முகத்திலேயே முழிக்காதே! நீ எனக்கு அண்ணனுமில்ல, நான் உனக்குத் தங்கையுமில்ல. எந்த உறவும் கொண்டாடிக்கிட்டு என் கல்யாணத்துக்கு வந்துடாதே!”

பொரித்துக் கொட்டிவிட்டு “வாங்க ரேவதி” என்று சொல்லி நடந்தாள் அவன் தங்கை.

“என்னை மன்னிச்சுடுங்க ரேவதி” என்று நடுரோட்டில் அழுதவாறே காலில் விழுந்த அவனை இருவருமே லட்சியம் செய்யவில்லை.

ரேவதிக்குக் கண்ணில் நீர் துளிர்த்தது. துளிர்க்காமலே கருகிவிட்ட தன் வாழ்வை எண்ணியல்ல – தூர்த்தர்களால் துன்பத்திற்குத் தினம்தினம் ஆளாகித் தவிக்கும் பெண்களை நினைத்து. மனித மிருகங்களிடம் மாட்டிக் கொண்டு மானத்தையும் உயிரையும் இழக்கும் அப்பாவிகளை நினைத்து.

ரேவதிகள் – தியாக ஒளி வீசும் கடைசி நம்பிக்கை நட்சத்திரங்கள்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வானமடி நீ எனக்கு ❤ (பகுதி 9) – ராஜேஸ்வரி

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 1) – கவிஞர் இரஜகை நிலவன்