in ,

சூப்பையன் (சிறுகதை) – முகில் தினகரன், கோயமுத்தூர்.

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

 

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

வீட்டுத் திண்ணையில் அமர்ந்து போவோர் வருவோரையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் சூப்பையன்.

சூப்பையன் என்பது அவனது இயற்பெயர் அல்ல. நாரையின் கால் போல்… ஒல்லியாய்… குச்சி போல் சூம்பிக் கிடக்கும் வலது கால் அவனுக்குப் பெற்றுத் தந்த நாமகரணம்தான் “சூப்பையன்”. அவனுடைய உண்மைப் பெயர் ராஜா.  அவனே அதைச் சொல்லிக் கொள்ள வெட்கப்படுவான்.

சிலர் அதனை இளம்பிள்ளை வாதமென்றும், சிலர் அதனை செய்வினை என்றும், வேறு சிலர் சத்துக் குறைபாடு என்றும் தங்களுக்குத் தோன்றியபடியெல்லாம் சொல்லுவர்.  எது எப்படியோ?… அவனது பாலக வயது விளையாட்டு ஆசைகளை… துள்ளிக் குதிக்கும் கனவுகளை… மொத்தமாய் முடக்கிப் போட்டது அந்த சூப்பைக் கால்தான்.  சக மாணவர்களின் கிண்டலுக்கும், சில நேரத் தாக்குதல்களுக்கும் பயந்து கல்வியைத் துறந்தான்.  விளையாடச் சென்றாலும் மற்றவர்களோடு உடல் மற்றும் மன ரீதியாக ஒத்துக் போக முடியாமல், தாழ்வு மனப்பான்மையால் சிறுமைப்பட்டு, பதினேழு வயதிலும் ஏழு வயதுச் சிறுவனாய், பரிதாபமாய் திரிகின்றான்.

பட்டாம் பூச்சிகளைப் போல் சைக்கிளில் பறக்கும் பள்ளி மாணவ மாணவிகளைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டான்.  “ச்சே!… என்னோட இந்தக் கால் மட்டும் நல்லா இருந்திருந்தா… நானும் இவங்களை மாதிரி சைக்கிளில் பறந்திட்டிருப்பேன்!… இஸ்கூலுக்கெல்லாம் போவேன்… ப்ச்… ஏன் எனக்கு மட்டும் இப்படி ஆச்சு?” சோகத்தில் நெஞ்சு கனக்க, தடுமாறி எழுந்து, ஊன்றுகோலைக் கக்கத்தில் வைத்துக் கொண்டு, தெருவில் இறங்கினான்.

ஊன்றுகோலின் சுதிமாறாமல் “டொக்…டொக்” தாளலயத்தோடு நடந்து கொண்டிருந்தவன், பஞ்சாயத்து போர்டு தொலைக்காட்சி முன் மக்கள் கூட்டம் அதிகமாயிருக்க, ஒரு மாற்றத்திற்காக, தானும் சென்று, கூட்டத்தை விலக்கிக் கொண்டு, முன் வரிசையில் அமர்ந்தான்.

தொலைக்காட்சியில் செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது.

“அட ச்சை!… இந்தக் கருமம்தானா ஓடுது!… நான் கூட ஏதோ ரஜினி படம்தான் ஓடுதுன்னு நெனச்சு முன்னாடி வந்தேன்” வெறுத்துப் போய் எழுந்து போக நினைத்தவனை தொலைக்காட்சியில் அந்தப் பெண் சொன்ன செய்தி ஈர்க்க, கூர்ந்து பார்த்தான்.

 “ஊனம் எனக்குக் குறைபாடல்ல!… பெங்களூர் இளைஞனைன் சாதனைப் பேச்சு!… ஆம்… வலது காலை இழந்த இவர் நேற்று பெங்களூரில் “மெட்ரோபாலிடன் மோட்டோகிராஸ்” நடத்திய மாநில ஆளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் முதலாவதாக வந்து சாதனை படைத்தார்.  இது இவருக்குக் கிடைத்த ஐந்தாவது வெற்றியாகும்.  இதற்கு முன் மாவட்ட அளவிலான போட்டிகளில் நான்கு முறை முதல் பரிசு பெற்றுள்ள இவர் தன் வெற்றிக் குறிப்பிடும் போது…

“நான் ஊனம் என்பதே பல சமயங்கள்ல எனக்கு மறந்து போயிடுது!….அப்படியே ஞாபகம் வந்தாலும் அது ஒரு குறையாகவே எனக்குத் தெரியலை!.. கடைசியா ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன் “முயற்சி செய்பவனுக்கு சாத்தியமற்றது என்று எதுவும் இல்லை” என்று சிரித்த முகத்துடன் சொல்லி விட்டு, வெகு அனாயசமாக மோட்டார் சைக்கிளில் ஏறிப் பறந்தான் ஒரு கால் இழந்த இளைஞன் ஒருவன்.

தன்னையே மறந்து கை தட்டிய சூப்பையனை எல்லோரும் ஏளனமாய்ப் பார்க்க, எழுந்து, ஊன்றுகோலை இடுக்கிக் கொண்டு, கூட்டத்தை விட்டு வெளியேறி நடந்தான். மனத்திரையில் அந்த பெங்களூர் இளைஞனின் பேச்சும், செயலும் திரும்பத் திரும்ப வந்து போயின.

“எனக்காவது சூம்பிப் போன முழு கால் இருக்கு!… ஆனா அவனுக்கு தொடைக்குக் கீழே சுத்தமா ஒண்ணுமில்லை!… அவனே மோட்டாரு பைக் ஓட்டும் போது… ஒரு சைக்கிள் கூடவா ஓட்ட முடியாது நம்மாலே?”

அவனேயறியாமல் அவனைச் சுற்றிப் படர்ந்த நம்பிக்கை அதிர்வுகள், அவனை உசுப்ப “தங்கமணி சைக்கிள் கடை”யை நோக்கி நடந்தான்.

“அண்ணே எனக்கு ஓட்டிப் பழகறதுக்கு ஒரு சைக்கிள் வேணும்” என்றான் சைக்கிள் கடை தங்கமணியிடம்.

அதைக் கேட்டு, “ஹா…. ஹா…”வெனச் சிரித்த தங்கமணியிடம், “ஏன்?.. எதுக்கு சிரிக்கறீங்க?… என்னால ஓட்ட முடியாதுன்னு நெனச்சுத்தானே சிரிக்கறீங்க?.. இப்பத்தான் பஞ்சாயத்து போர்டு டி.வி.லே பார்த்திட்டு வந்தேன்… பெங்களூர்ல சுத்தமா ஒரு காலே இல்லாத ஒருத்தன்… மோட்டார் பைக் ரேஸ்ல மொதல் ஆளா வந்து பரிசி வாங்கியிருக்கான்”

 “சரி அதுக்கென்ன இப்ப?”

“அண்ணே… காலே இல்லாதவன் மோட்டார் பைக்ல பறக்கறான்… எனக்கென்ன காலா இல்லாமப் போச்சு!… இருக்கே?… என்ன…?… கொஞ்சம் லேசா சூம்பிப் போச்சு!… அவ்வளவுதானே?… என்னைய நம்பி ஒரு சைக்கிள் குடுங்க… நான் நல்ல ஓட்டிப் பழகி… கடைசிக்கு ஒரு சைக்கிள்: ரேஸிலாவது  பரிசு வாங்கிக் காட்டறேன்!…”

தங்கமணி அவன் காலையே பார்க்க, “என்னண்ணே… காலையே பார்க்கறீங்க?… அண்ணே இந்த சூப்பையெல்லாம் ஒரு ஊனமேயில்லைங்க அண்ணே!… “முயற்சி செய்பவனுக்கு சாத்தியமற்றது என்று எதுவும் இல்லை”ன்னு நான் சொல்லலை அந்த பெங்களூர் பைக்காரன் சொல்றான்” சொல்லி விட்டுத் தன் காலைத் தூக்கி ஆட்டியபடி சிரித்தான் சூப்பையன்.

அவன் கண்களில் தெரிந்த நம்பிக்கையும், அவன் வார்த்தைகளில் தெறித்த ஆர்வமும் தங்கமணியைச் சிலிர்க்க வைக்க, லேசாய்த் தலையைச் சிலுப்பிக் கொண்டு, ஓதும்டா பயலே போதும்!… எப்ப நீ உன்னோட ஊனத்தைக் குறைபாடில்லைன்னு நெனைச்சியோ… அப்போதிருந்தே நீ முன்னேற ஆரம்பிச்சிட்டேன்னு அர்த்தம்!… இனிமே உன்னை அந்த நம்பிக்கையே மேலே தூக்கி விட்டுடும்”

“அண்ணே… அதெல்லாம் சரி… ஒரு சைக்கிள்….?” இழுத்தான் சூப்பையன்.

தங்கமணி தானே சென்று ஒரு சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்து நிறுத்த,

பிரகாசமான முகத்தோடு தன் கக்கத்திலிருந்த ஊன்றுகோலைக் கீழே நழுவ விட்டுவிட்டு, சைக்கிளைப் பற்றிக் கொண்டு, “அப்ப…. நான் வர்றேண்ணே!…” சொல்லி விட்டு மெல்லத் தள்ளிக் கொண்டே சென்றான் சூப்பையன்.

சிறிது தூரம் சென்றபின் அவனாகவே குதித்து சைக்கிளின் மீதேறி அமர்ந்து ஆரம்பத்தில் மெல்லத் தடுமாறி, பின்னர் அப்படியே பேலன்ஸ் செய்து கொண்டு, ஒரு காலில் பெடலை அழுத்திக் கொண்டு நகர்ந்தான்

போகும் அவனையே வைத்த விழி வாங்காமல் பார்த்த தங்கமணி, “சந்தேகமேயில்லை… இனி இவன் சாதிப்பான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.

சரியாக ஆறு மாதத்திற்குப் பிறகு, தங்கமணி சைக்கிள் கடையில் வந்தமர்ந்த ரியல் எஸ்டேட் மாரிமுத்து, “என்ன தங்கமணி ஊர்ல மாரியம்மன் திருவிழா நடக்குது… நீ கடைக்கு லீவு விடாம இன்னிக்கும் திறந்து வெச்சுட்டு உட்கார்ந்திருக்கே?” கேட்க,

 “இருக்கட்டும்ண்ணே…. அது பாட்டுக்கு அது!… இது பாட்டுக்கு இது”

அப்போது சில பேர், கழுத்தில் மாலை அணிவிக்கப்பட்டிருந்த சூப்பையனைத் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டு, “ராஜா… ராஜா.” என்று கத்திக் கொண்டு தெருவில் செல்ல,

 “என்ன மாரிமுத்து… என்ன நடக்குது இங்கே?”

“எனக்கென்ன தெஇர்யும்… இரு கேட்டுட்டு வர்றேன்” சொல்லி விட்டு எழுந்து சென்ற மாரிமுத்து கூட்டத்தில் ஒருவனை நிறுத்தி விசாரிக்க, அவன் சூப்பையனைக் கைகாட்டி ஏதோ சொல்லி விட்டுச் சென்றான்.

திரும்பி வந்த மாரிமுத்து, “திருவிழாவுல நடந்த சைக்கிள் ரேஸ்ல இந்த நொண்டிப்பயல்தான் முதல்ல வந்து பரிசைத் தட்டியிருக்கானாம்!… அதுக்குத்தான் அவனோட சொந்தக்காரங்க அவனைத் தூக்கித் தலை மேலே வெச்சுக் கொண்டாடிட்டு இருக்காங்க” என்றான்.

தலையைத் தூக்கி, அந்த மாரிமுத்துவை முறைத்துப் பார்த்த தங்கமணி, “இனிமேல் அவனை “நொண்டிப்பயல்”ன்னு சொல்றதை விட்டுடு… காலிருக்கற பசங்களையெல்லாம் மண்ணைக் கவ்வ வெச்சிட்டு மொதல்ல வந்திருக்கான்!… பாராட்டு… பாராட்டிப் பழகு” என்றான் கோபமாக.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பிராயச்சித்தம் (சிறுகதை) – முகில் தினகரன்

    இரண்டாவது வசந்தம்!? (சிறுகதை) – இரஜகை நிலவன்