in ,

சிசுவின் குரல் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“எப்படி ஏமாந்தோம்?… ரொம்பவே ஜாக்கிரதையாய்த்தானே இருந்தோம்?” தன்னைத்தானே திட்டிக் கொண்டாள் திவ்யா.

“ஏய் திவ்யா… கல்யாணம் முடிஞ்சதும் அவசர அவசரமா மூணாவது மாசத்தில் கர்ப்பமாகி… பத்தாவது மாசத்தில் குழந்தையைப் பெத்துக்காதடி. அப்புறம் சின்ன வயசிலேயே இளமையைத் தொலைச்சிட்டு… கிழவி மாதிரி ஆயிடுவே. ஒரு மூணு… நாலு வருஷம் தள்ளிப் போடு!… ஜாலியா புருஷன் கூட ஊர் சுத்து… ஜாக்கிரதையா தாம்பத்தியத்தை அனுபவி. அப்புறமா… கொஞ்சம் வருஷம் கழிச்சு குழந்தையைப் பெத்துக்கோ!… என்ன?… அனுபவசாலி சொல்றேன்… கேட்டுக்கிறதும்… கேட்காததும்… உன் பிரியம் அம்மா!”

திருமணத்தன்று தோழி கல்பனா சொன்ன அந்த வார்த்தைகளை வேதவாக்காய் எடுத்துக் கொண்டு, சர்வ ஜாக்கிரதையாய் தாம்பத்தியத்தை கையாண்டு கொண்டிருந்த திவ்யாவைத தள்ளிப் போய் விட்ட  “அந்த” நாட்கள் எச்சரிக்கையூட்ட, பக்கத்து கிளினிக் லேடி டாக்டரிடம் ஓடினாள்.

“கங்கிராஜுலேசன் திவ்யா!… நீ உண்டாயிருக்கே!” சிரித்த முகத்துடன் அந்த லேடி டாக்டர் சொன்னதும், “குபீர்” என்றானது அவளுக்கு. “அடப்பாவமே…. ஏமாந்துட்டோமே?”

அன்று இரவு கணவனிடம் சொன்னாள்.  “சரி… அதனாலென்ன திவ்யா?… சந்தோஷமாய்ப் பெத்துக்க வேண்டியது தானே?”

முகமலர்ச்சியுடன் சொன்ன சுரேஷை எரித்து விடுவது போல் பார்த்தாள்.  நெஞ்சுக்கூடு கோபத்தில் விம்மி விம்மித் தணிந்தது.

“ஏன் திவ்யா?… எதுக்கு இப்ப இவ்வளவு டென்ஷன் ஆகறே?” அவள் விரல்களைப் பிடித்து சொடக்கு எடுத்தபடி கேட்டவனின் கைகளைத் தள்ளி விட்டாள் திவ்யா.

“ச்சே!… ரெண்டு மூணு வருஷம் ஜாலியா இருந்துட்டு… அப்புறம் பெத்துக்கலாம்னு இருந்தேன்… அதுக்குள்ளார இப்ப்டியாயிடுச்சு!” சோகமாய்ச் சொன்னாள்.

“சரி… எப்படியும் ரெண்டு மூணு வருஷம் கழிச்சுப் பெத்துக்கப் போறவ தானே?… அதை இப்பவே பெத்துக்கலாமே!” தன் வாரிசைக் காணும் ஆவல் அவன் பேச்சில் தெரிந்தது.

“க்கும்… இத்தனை சின்ன வயசுல குழந்தையைப் பெத்துக்கிட்டு… ரெண்டு வருஷம் அதை வளர்த்த சீரழிஞ்சிட்டு…. அப்புறமா மூன்றாவது வருஷமே இன்னொண்ணையும் வயித்துல வாங்கிக்கிட்டு… அதையும் பெத்துக்கிட்டு.. மறுபடியும் சீரழிஞ்சிட்டு… சீக்கிரத்திலேயே கிழவி ஆயிடச் சொல்றீங்களா?” விழிகளை பெரிதாக்கிக் கொண்டு கேட்டாள்.

“ஓ… ரெண்டு குழந்தை பெத்தாலே பெண்கள் கிழவி ஆயிடுவாங்களா?.. இது என்ன புது லாஜிக்?” நக்கலா கேட்டான்.

“பின்னே?…. இளமையெல்லாம் காணாமல் போயி முதிர்ச்சியான தோற்றம் வந்திடுதல்ல?” விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு சொன்னாள்.

“சரி… இப்ப என்னதான் சொல்ல வர்றே?”

“வந்து…வந்து… நான் நாளைக்கே டாக்டரைப் போய்ப் பார்த்து…. கருவை கலைச்சிடப் போறேன்” என்றாள் திவ்யா.

“தி….வ்….யா!…. என்ன சொல்றே?” கத்தலாய்க் கேட்டான் சுரேஷ்.

“ஏன்… ஏன்… இப்படிக் கத்தறீங்க?… நான் என்ன சொல்லிட்டேன்?… ஊர்ல…. உலகத்துல எங்கேயுமே நடக்காததையா சொல்லிட்டேன்?” தன் செயலை நியாயப்படுத்தும் விதமாய் அவள் பேச

“என்ன…. என்ன பேசுறே?… அங்கங்கே எத்தனையோ பேர் குழந்தை பாக்கியம் இல்லைன்னு கவலைப்பட்டுக்கிட்டு கோயில் கோயிலா ஏறி இறங்கிக்கிட்டிருக்காங்க!… அந்த  இறைவனாய்ப்  பார்த்து  நமக்குக் கொடுத்த இந்த வரத்தை…. அழிக்கிறேன்னு சொல்றியே?… இது நியாயமா திவ்யா?”.

“ஸாரிங்க…. இந்த விஷயத்துல நான் என்னோட முடிவை மாத்திக்கிறதா இல்லை!” ஆணித்தரமாய்ச் சொன்னாள் திவ்யா.

முடிவு ஒன்றை எடுத்து விட்டால்… அதிலிருந்து சிறிதும் பின் வாங்காத ஒரு பிடிவாதக் குணம் அவளுடையது என்பதை உணர்ந்திருந்தும் தொடர்ந்து விவாதித்தான் சுரேஷ்.

விவாதித்து என்ன பிரயோஜனம்?… தன் முடிவிலிருந்து இம்மியும் அசையாமல் இறுதிவரை இரும்புத்தனமாய் நின்றிருந்தாள் திவ்யா.

“ச்சே!… நீயெல்லாம் ஒரு பொம்பளையா?” வெறுப்பை உமிழ்ந்து விட்டு, அந்த இடத்தை விட்டு அகன்றான் சுரேஷ்.

காலை 9:30.க்கே மருத்துவமனைக்கு வந்து விட்ட திவ்யா புறநோயாளிகள் பிரிவிற்குச் சென்று டோக்கன் வாங்கிக் கொண்டு காத்திருந்தாள்.

தன்னைவிட வயதில் இளையவளான ஒரு பெண் தன் நிறைமாத வயிற்றைத் தூக்கிக் கொண்டு அசைந்து அசைந்து வருவதை பார்த்த திவ்யாவுக்கு அவள் மேல் கோபமாகவும், கொஞ்சம் பரிதாபமாகவும் இருந்தது.

“இந்தச் சின்ன வயசுல இதெல்லாம் இவளுக்குத் தேவையா?… பாவம்!.. படிக்காத பொண்ணு போலிருக்கு… அதான் விவரம் தெரியாம வயித்துல வாங்கிட்டு… அல்லாடிட்டிருக்கு”

எப்படியும் தன் முறை வருவதற்கு குறைந்தது அரைமணி நேரமாவது ஆகும், என்பதைப் புரிந்து கொண்ட திவ்யா, மெல்ல எழுந்து சற்றுத் தள்ளியிருந்த கேண்டீனை நோக்கி நடந்தாள்.

“என்னோட நெம்பர் வருவதற்குள் போய் ஒரு டீ சாப்பிட்டு விட்டு வந்திடலாம்!”

கேண்டீனுக்குப் போகும் வழியில் கும்பலாய் ஜனங்கள் நின்று எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

திவ்யாவை ஆர்வம் உந்த, அவளும் போய் எட்டிப் பார்த்தாள்.

ஒரு கோழி ரத்த வெள்ளத்தில் கிடந்தது.  அருகே கிட்டத்தட்ட ஐந்து அடி நீளமுள்ள ஒரு பாம்பும், ஏகப்பட்ட ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தது.

“வ்வேய்…” வாந்தி வந்து விடும் போலிருந்தது அவளுக்கு. “ச்சை!…என்ன ஜனங்க இதுங்க?… எதைத்தான் கும்பலாய் நின்னு வேடிக்கை பார்க்கிறதுன்னு ஒரு விவஸ்தை வேண்டாமா?…கருமம்… கருமம்!”  முனகியபடியே நடந்தாள்.

முன்னே சென்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் உரக்கப் பேசிக் கொண்டே சென்றது இவள் காதிலும் விழ, கூர்ந்து கவனித்தாள்.

“இதுதான் தாய்மைங்கறது சுசீலா!… பார்த்தியல்ல…. இந்த கோழியோட செயலை?… அந்தப் பாம்பு தன்னோட முட்டைகளைக் குடிக்கத்தான் வந்திருக்குன்னு… புரிஞ்சுகிட்டு…அந்தப் பாம்பு கூட சண்டை போட்டு… தன்னாலே ஜெயிக்க முடியாதுன்னு தெரிஞ்சிருந்தும் விடாம சண்டை போட்டு… தானும் நிறைய கொத்துக்களை வாங்கிக்கிட்டு பதிலுக்கு அந்தப் பாம்பையும் தன்னோட அலகால கொத்து கொத்துன்னு கொத்தி அதைச் சாகடிச்சிட்டு… தானும் செத்து… முட்டைகளைக் காப்பாதிடுச்சு!”.

“பின்னே?…. எந்தத் தாய்தான் தன்னோட கருவை அழிக்கிறதுக்கு சம்மதிப்பா?… பறவை இனமா இருந்தால் என்ன… அந்தக் கோழியும் ஒரு தாய்தானே?… அதான் உசுரைக் கொடுத்து கருவை காப்பாற்றியிருக்கு!”

“அப்படியும் சொல்ல முடியாதும்மா!… இதே ஆஸ்பத்திரில நானே பார்த்திருக்கிறேன்!… எத்தனையோ பொம்பளைங்க…. தங்களோட வயித்துல வளர்ற கருவை ஈவிரக்கம் இல்லாம வந்து… கலைச்சிட்டு போறதெல்லாம் காலக்கொடுமை!”

பொட்டிலடித்தாற் போலிருந்தது திவ்யாவிற்கு.

“ஒரு கோழிக்கு இருக்கிற தாய்மை உணர்வு கூட எனக்கு இல்லையே!… உசுரைக் கொடுத்து தன்னுடைய கருவை காப்பாற்றுது அது!… ஆனால் நான்…?”

கையிலிருந்த டோக்கனை பரபரவென்று கிழித்துப் போட்டு விட்டு ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தாள். அவளையுமறியாமல் அவள் கை அடிவயிற்றை தொட்டுப் பார்த்தது.

“அம்மா…. ரொம்ப நன்றிம்மா!” என்று உள்ளிருந்து ஒரு குரல் கேட்க கண்களில் ஓரத்தில் நீர்த்திவலை திரண்டு கன்னமேடுகளில் உருண்டது.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 8) – தி.வள்ளி, திருநெல்வேலி

மத்யமாவதி (பகுதி 1-ஹம்ஸத்வனி) – சாய்ரேணு சங்கர்