in ,

பத்து ரூபாய் (சிறுகதை) – மலர்மைந்தன், கல்பாக்கம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

காலை கதிரவன் பொலிவுடன் வந்தும் “கதிரவன்” முகத்தில் சோகத்தின் சாயல் அப்பியிருந்தது.

வீட்டுக்கு முன்னிருந்த வேப்பமரத்தின் கீழ் நின்று வேப்பங்குச்சியில் பல்லு விளக்கிக் கொண்டிருந்தவனின் உள்ளத்தில், நேற்றிரவு அவன் மனைவி “பிரபாவதி” கேட்ட கேள்விகள் குடைந்துக் கொண்டிருந்தன.

“இந்தக் கிழிந்து போன ‘பத்து ரூபாய்’ நோட்டை எங்க வாங்கினீங்க?”

“தெரியல மா?”

“ஒரு பத்து ரூபாய் நோட்டை பார்த்து வாங்கி வர துப்பில்லை… நீயெல்லாம் ஒரு மனுஷன்”

“சரி விடு மா… மாத்திட்டா போச்சு …”

“அவ்வளவு இளிச்சவாயனா இருக்கீங்க…”

“எப்படியோ ஏமாந்துட்டேன் …”

“ஏமாந்தது நான் தான்… எங்க அப்பன் உன்ன கட்டி வச்சி என்னை ஏமாத்திட்டார்”

“இப்ப எதுக்கு அவரை இழுக்கிற…?”

“அவரும் இப்படித்தான் ஒரு துப்புக்கெட்ட மனுஷன், ஏதோ எங்க அம்மா திறமையா இருந்தாலா நாங்கெல்லாம் படிச்சி பெரியாளு ஆனோம்”

“சரி இதோட விடு”

“அதெப்படி…. பத்து ரூபான்னாலும் காசு தானே சொல்லு. பூக்காரி பல்ல காட்டி கொடுத்தாளா? நீயும் பல்ல இளிச்சிட்டு வாங்கிட்டு வந்துட்டியா?”

“ச்சே …நான் உன்கிட்ட தான் சிரிப்பேன் …வேறு யார்கிட்டயும் சிரிக்க மாட்டேன்”

“நம்பிட்டேன் …என் தங்கச்சி பார்த்தா தெரியுமே உன் லட்சணம் …”

“அவ கொழுந்தியா”

‘’உனக்கு ஊருல இருக்கிற எல்லாப் பொண்ணுங்களுமே கொழுந்தியா தான்… சிரிக்காத…. நாளைக்கு இந்த நோட்டை மாத்தி எடுத்துட்டு வர”

“ம் …”

வீட்டினுள் இருந்து சத்தம் வந்தது …என்னங்க இன்னும் பல்லுதேய்ச்சி முடியலையா…? பால் வாங்கிட்டு வாங்க”

கதிரவன் மனதில் சற்றென்று உதயம் தோன்றியது …பால் கடையில் பத்து ரூபாயை மாற்றிடலாம் என்று.

“இதோ போய் வாங்கிட்டு வாரேன்”

பால் கடையில், “ஒரு ஆவின் ப்ளூ கொடுங்க …”

‘’இந்தாங்க சார் …20 ரூபாய் கொடுங்க”

தன்னிடமிருந்த கிழிந்த 10 ரூபாயுடன் இன்னொரு 10 ரூபாய் சேர்த்து கொடுத்துவிட்டு விரைந்தவனை பால் கடைக்காரர், “சார் …கதிரவன் சார் …இந்த நோட்டு கிழிந்து இருக்கு… தெரியாம எடுத்து வந்துடீங்க போல …இந்தாங்க வேலைக்குப் போகும் போது வேறு கொடுத்துட்டு போங்க …”

“ஆமா நானும் பாக்கல” என்று வெகுளியாய் முகத்தை வைத்துக்கொண்டு … ‘நம் இராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே ! இன்னும் பயிற்சி வேண்டுமோ?’ என்று எண்ணியபடியே வீட்டிற்கு வந்தான் .

மனைவி சூடாக டீ போட்டுக் கொண்டுன்வந்து கொடுத்து … “நல்ல சூடா இருக்கு …குடிங்க அப்பவாது சூடு சொரணை வருதான்னு பாக்கலாம்”

“பத்து ரூபாய்க்கு இப்படிப் பாடா படுத்துறியே”

“இன்னிக்குச் சாயந்திரம் வரும்போது புது நோட்டுடன் வரணும்… அப்புறம் 100 ரூபாய் தரேன் …காய்கறி வாங்கிட்டு பில்லோட வரணும்”

“சரி …”

கிழிந்த ரூபாயுடன் பேருந்தில் ஏறினான் கதிரவன் ….கண்டக்டரிடம்… “கிண்டி ஒண்ணு கொடுங்க”

“23 ரூபாய் சில்றயா கொடுங்க …”

“இந்தாங்க”

“சார் …இந்த நோட்டுக் கிழிஞ்சியிருக்கு வேற நோட்டு தாங்க …”

“பஸ்சுல தான் சார் இந்த நோட்டு கொடுத்தாங்க ….”

“எல்லோரும் இதே பதில சொல்லுங்க …எந்த பஸ்சுல…எந்தக் கண்டக்டர் கொடுத்தாரோ அவர்கிட்டே கொடுங்க …வேறு யாரு டிக்கெட் எடுக்கணும் …வாங்கிக்கங்க …அடுத்த ஸ்டாப்ல செக்கிங் ஏறுவாங்க …டிக்கெட் இல்லன்னா 500 பைன் கட்டணும் …”

வேறு வழியில்லாமல் வேறு நோட்டு கொடுத்து டிக்கெட் எடுத்தான் கதிரவன்.

இது போல அன்று நாள் முழுதும் டீ கடை, கேன்டீன், எல்லா இடங்களிலும் முயற்சி பண்ணினாலும் அந்த நோட்டு அவனை விட்டு விலகவே இல்லை.

சோர்வுடன் மாலை வீடு திரும்பும் வேளை வழக்கமாகப் பூ வாங்கும் கடையில் முயற்சி பண்ணிப் பார்க்கலாம் என்று கதிரவன் நோட்டை நீட்ட… பூக்காரம்மா, “சார் …யாரோ உங்க காதுல பூ வச்சிட்டாங்க …இந்த நோட்டு கிழிஞ்சி இருக்கு …காசு வேணுன்னா அப்புறம் வாங்கிக்கிறான் ..”

“இல்ல வேற நோட்டு இருக்கு …இந்தாம்மா “

அடுத்த மனைவி வாங்கிவரச் சொன்ன காய்கறிகள் ….இந்த கடையில் முயற்சி செய்யலாமா … “வேண்டாம்  இன்னிக்கு எதுவும் சரியில்லை …”

மனைவி கொடுத்த லிஸ்ட் படி எல்லாம் காய்களையும் சரிபார்த்து வாங்கிக் கொண்டு, “அண்ணாச்சி …எவ்வளவு ஆச்சு …?!”

“90 ரூபாய் ஆச்சு …இந்தாங்க பில்லு …”

“அண்ணாச்சி ..ஒரு உதவி பண்ண முடியுமா …?!”

‘’சொல்லுங்க ….என்ன செய்யணும் ?”

“ஒண்ணுமில்ல ….இந்த கருணைக்கிழங்கு விலையில 5 ரூபாய் சேர்த்துக் கொஞ்சம் கருணை காட்டுங்க ….5 ரூபாய் வாழைக்காய் விலையில் சேர்த்து வாழ்க்கை கொடுங்க …”

“என்ன சார் சொல்லறீங்க …?!”

“அது உங்களுக்குப் புரியதுங்க…நீங்க பில்ல 100 ரூபாய்க்கு போட்டு ஒரு புது 10 ரூபாய் கொடுங்க”

புதுப் பத்துரூபாய் நோட்டை வாங்கிச் சட்டைப்பையில் வைத்துக் கொண்டு கம்பீரமாய் வீட்டிற்குத் திரும்பிய கதிரவன்…. தெருமுனையில் இருக்கும் பிள்ளையாரை வேண்டிவிட்டு உண்டியலில் காணிக்கையாக “10 ரூபாய்” செலுத்திவிட்டு கடவுள் மீது பாரத்தை இறக்கி வைத்துவிட்டு நிம்மதியாகப் போனான்.

(நிறைவு)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

கார்த்திக் WEDS கார்த்திகா (சிறுகதை) – முகில் தினகரன், கோயமுத்தூர்

மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 12) – தி.வள்ளி, திருநெல்வேலி