in ,

பரிணாமம் (சிறுகதை) – தெய்வநாயகி அய்யாசாமி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

நேற்று

    ஃபில்டரில் வடிந்த டிகாஷனை ஊற்றி காஃபி கலந்து எடுத்து வந்த மதுரம் “லட்சுமி..!, சீக்கிரம் உன்னோட டம்ளர எடுத்துட்டு வா. அத்தை இந்தப் பக்கம் வர்றதுக்குள்ளே இந்தக் காஃபியை வாங்கிக் குடிச்சுக்கோ” என்றாள்.

    லட்சுமியும் வேகமாக வந்து அந்தக் காஃபியை அலுமனிய டம்ளரில் வாங்கிக் கொண்டாள். காஃபி மிகவும் சூடாக இருக்கவே மதுரத்திடம் ஒரு டபராவை வாங்கிக் கொண்டு அவசர அவசரமாக காபியைத் தூக்கி ஊத்தி ஆறவைக்கத் தொடங்கினாள்.

‘நமக்காக சின்னம்மா, மாமியாரிடம் ஏச்சு வாங்கிக்கூடாது’ என்ற எண்ணம் அவள் காட்டிய அவசரத்தில் தெரிந்தது. வெளியே வாசலில்  தரையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்தபடியே காஃபி டபராவிலே  சூடான பாதியளவு காஃபியை ஆறவைத்தபடி, டம்ளரில் இருக்கும் மீதியை வாயால்  ஊதி ஊதி அவசரமாக குடித்துக் கொண்டு இருந்தாள்.

    ஆனால் இவையனைத்தும் அங்கு வந்த மதுரத்தின் மாமியார் பார்வையில் பட்டுவிட, அவர் மிகவும் கோபமாக  சமையலறைக்குள் நுழைந்தார். “ஏ… மதுரம், லட்சுமிக்கு காஃபி கலக்கும் போது பில்டரிலே வடிஞ்சிருக்கும் காஃபி டிகாஷனை ஊத்தியெல்லாம்  கலந்து கொடுக்க வேண்டாம். தேக்குசாவில் தண்ணீர ஊத்தி அதிலே அரை ஸ்பூன்  காபித்தூளைப் போட்டு கொதிக்க வச்சு கொஞ்சமா பாலை ஊத்தி கரும்புச் சக்கரையப் போட்டுக் கொடு போதும்னு  உங்கிட்ட  எத்தனை தடவ நான் சொல்லி இருக்கேன்” என்றார் கொஞ்சம் அதட்டலாக..

   தான் செய்த காரியம் தெரிந்து விட்டதோ என்று மதுரம் உள்ளூர நடுங்கினாலும், “இல்ல அத்தை, நீங்க சொன்ன மாதிரியே தான், நானும் கலந்து கொடுத்தேன்” என்றாள் திடமாக.

     ” ஆங்… அப்புறம். நீயெதுக்கு  சில்வர் டபரா எல்லாம் எடுத்து அவளுக்குப் பொழங்கறதுக்கு கொடுக்கிறே? இங்கு அவளுக்குன்னு  அலுமனிய வட்டல், டம்ளருன்னு எல்லாம் தனியாக  எடுத்து  வச்சிருக்கில்லே. அதிலே ஊத்திக் கொடுத்தாப் போதாதா? என்ன அந்த மகாராணி, உங்கிட்ட டபராவும் வேணும்னு கேட்டாளாக்கும்”

      “அய்யோ இல்லே அத்தை. அவ கேட்கலே.  காஃபி ரொம்ப  சூடாக இருந்துச்சா. அதான் சும்மா ஆத்திக் குடிகட்டும்மேன்னு நெனச்சு  நான் தான் எடுத்துக் கொடுத்தேன். அது தப்புன்னா என்னை மன்னிச்சிடுங்க அத்தை” என்றாள் பணிவாக

      “சரி.. சரி.. இனிமேல் அந்த டபரா நமக்கு  வேண்டாம்.  இனி அதை தனியாக அவளுக்குன்னு   எடுத்து வச்சிரச் சொல்லு.  அதை எடுத்து ஒண்ணுமண்ணா பொழங்கிடாதே.. என்ன  நா சொல்றது உனக்கு புரிஞ்சுதா…???”

       “நல்லாவே புரிஞ்சுதுங்க அத்தை” என்று   மதுரம் பதில் சொன்னாலும், ‘பாவம் அவளும்  நம்மைப் போல ஒரு மனுஷி தானே’ என்று மனசு கிடந்து தவித்தது. ஆனால் இந்த விசயத்தில் தான் ஒன்றும் செய்ய முடியாது என்பது புரிய,  நீண்ட பெருமூச்சு மட்டும் அவளிடமிருந்து விடுபட்டது.

 இன்று

      “அம்மா,  புதுசா  நம்ம வீட்டு வேலை செய்வதற்கு  வந்திருக்கும் பாட்டிக்கு  காலைலே  ஏதாச்சும் சாப்பிடக் கொடுக்கணும் சொன்னீங்க இல்லையா.   அவங்ககிட்ட கேட்டேன், அவங்க எல்லா வேலைய முடிச்சிட்டு அப்புறமா சாப்பிடறாங்களாம்.  நான் அவங்களுக்கு இட்லியும் காபியும்   கொடுக்கவா?” எனக் கேட்டாள் மதுரத்தின் மருமகள் தேவி.

       அப்படியா சொன்னாங்க, சரி விடும்மா தேவி, அவங்க விருப்பம் போலவே சாப்பிடட்டும். ஆனா நீ  தினமும் சாப்பிடக் கொடுக்கும்  போது  நாம் சாப்பிடும் தட்டங்களில் ஏதாவது ஒன்றிலேயே வைத்து அவங்களுக்கும் சாப்பிடக்  கொடுத்துடு. அவங்களுக்கென தனியாகத் தட்டம், டம்ளர் எல்லாம் எடுத்து வைக்க வேண்டாம் என்றாள் மதுரம். சரிங்க மா, அப்படியே செய்கிறேன் என நகர்ந்தாள் தேவி.

     சிறிது நேரம் கழித்து உள்ளே சென்ற மதுரம்  தன் மருமகளிடம், ” பாட்டிக்கு காஃபி கலக்கும் போது, அப்படியே எனக்கும், அப்பாக்கும் சேர்த்து கலக்கிடுமா” என்று சொல்ல,  அங்கு தேவி கலக்கிய காஃபியின் அளவு தான் அதிகரித்ததே ஒழிய, அதில்  தரம் எதுவும் பிரிக்கப்படவில்லை.

 நாளை

    “அம்மா..!, அம்மா..!” குரல் கொடுத்தபடியே  ஓடி வந்தாள் ஆறு வயது பேத்தி ஷிவானி ,  “அம்மா பாட்டி.. ஏம்மா  இங்கே நம்ம வீட்டு  கிச்சன்லே சாப்பிடறாங்க” என்றாள் ஆச்சரியமாக.

       “ஆமாடா கண்ணா, பாட்டி  தினமும் காலைலே நம்ம வீட்டிலே தான் சாப்பிடுவாங்க . தினமும்  நீ ஸ்கூலுக்குப் போயிருவ இல்லையா. அதான்  உனக்குத் தெரியல. ஆனா இன்னைக்கு ஸ்கூல் லீவு பாரு. அதான் பாட்டி இங்கே சாப்பிடறது உனக்கு புதுசாகத் தெரியுது ” என்றாள்  தேவி விலாவாரியாக.

     “அதெல்லாம்  சரிம்மா..  ஆனா எப்போதும் டைனிங் ஹால்லே தான் சாப்பிடணும்னு  எங்களைச்  சொல்லுவீங்கல்ல.  ஆனா பாட்டி மட்டும் ஏன் கிச்சன்லேயே அதுவும் தரையில் உக்கார்ந்து சாப்பிடறாங்க” என்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தேவி திகைக்க,

     அதைக் கேட்டுக் கொண்டே அங்கு வந்த மதுரம், பேத்தியிடம், “அதுவும் சரிதான். அப்போ, நீயே பாட்டியைக்  கூப்பிட்டு டேபிள்லே உட்காரச் சொல்லேன்” என்றாள்.

         உடனே அந்தப் பாட்டி, “ஐயோ கண்ணு, அதெல்லாம்  எனக்கு வேண்டாஞ்சாமி. ரொம்ப கூச்சமா இருக்கு. நான் இப்படி இங்கேயே உக்கார்ந்து சாப்பிடறேன். இதான் எனக்கும் வசதி” என்று மறுக்க, முடிவாக அங்கே ஒரு சின்ன ஸ்டூலை மெதுவாக தன் கைகளால் இழுத்துக் கொண்டு வந்து போட்டாள் பேத்தி. அந்த அன்பை மறுக்க இயலாத  வேலை செய்யும் பாட்டியும் அதில் அமர்ந்து உண்ணத் தொடங்கினார்.

      உலகின் எல்லா மனிதரையும் சமமாக மதித்து வளரும் தன்னோட பரம்பரையின் பரிணாம வளர்ச்சி காணும் போது, இப்படி வருங்காலத்தில் இளம் பிஞ்சுகளின் மனதில் தோன்றி வரும் இவ்வகையான  ஏற்றமிகு மாற்றங்கள் மூலம் ஒரு ஒளிமயமான எதிர்காலம் உருவாகிக் கொண்டு வருவது அப்போதே மதுரத்தின் கண் முன்னே தெரிந்தது

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கோவில் கண்ணாடி (சிறுகதை) – ச.பூங்குழலி, வடசேரி, தஞ்சாவூர் மாவட்டம்.

    என்னை விட்டா வேற யாரு இருக்கா? (சிறுகதை) – முகில் தினகரன், கோவை