in

பல வலி (சிறுகதை) – ✍ கவிஞர் இரஜகை நிலவன், மும்பை 

பல வலி (சிறுகதை)

ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

டிசம்பர் குளிரில் ஆரம்பித்த என் பல் வலி, அலுவலக நிமித்தம் ஒவ்வொரு நாளும் பல் டாக்டரைப் பார்ப்பதில் தள்ளிப் போய் கொண்டிருந்தது.

குளிர் காலம் முடிந்து கோடை காலம் வந்து, மே மாத கடும் வெயிலில் எப்படியாவது பல் டாக்டரைப் பார்த்து விட வேண்டுமென்று தீர்மானித்து, மதியம் 12 மணிக்கு அலுவலகத்தில் ஒரு மணி நேரம் அனுமதி பெற்று, புனித ஜார்ஜ் அரசு பல் மருத்துவமனைக்கு கிளம்பினேன்.

அரசு மருத்துவமனை அதே மருந்து நெடியுடன் ஆங்காங்கே கொஞ்சம் அழுக்குகளுடன் பெருங்கூட்டமாக என்னை எதிர் கொண்டது.

ஒரு மருத்துவரை அணுகி, “நான் புதிதாக வந்துள்ளேன், இங்கே உள்ளே வர என்ன வழிமுறைகள்?” எனக் கேட்டேன்.

நீங்கள் தவறான வேளையில் மருத்துவமனைக்குள் நுழைந்துள்ளீர்கள். வெளியே பாதுகையில் நேரம் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது என சுத்த மராத்தியில் குறிப்பிட்டார்.

ஆம், காலை 8.30 முதல் மதியம் 12 மணி வரை, மற்றும் 01.30 முதல் 4.00 மணி வரை. பசி வயிற்றைக் கிள்ள வெளியே வந்து நடைப்பாதை கடையில் கொஞ்சம் வடாபாவ், பஜ்ஜி சாப்பிட்டு விட்டு ஒரு இளநீரும் (50 ரூபாய்) அருந்தி விட்டு, திரும்பவும் 1.30 மணி அளவில் மருத்துவமனைக்குள் நுழைந்தேன்.

400க்கும் மேற்பட்ட மனித வரிசையைப் பார்த்து கொஞ்சம் திகைத்து அவரிடம் கேட்ட போது, புதிதாக அனுமதி சீட்டு வாங்க வரிசையில் நின்று ரூபாய் 10 கொடுத்து பெயர், படிப்பு, முகவரி எல்லாம் சொல்லி அனுமதிச் சீட்டுப் பெற்றுக் கொண்டு, இனி என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன்.

எல்லாமே இந்தி மராத்தி தொடர்பு வார்த்தைகள் தான்.

“நீங்கள் 28ம் அறைக்குச் சென்று அங்கிருக்கும் ஓ.பி.டி. டாக்டரிடம் மருத்துவ அனுமதி சீட்டைக் கொடுங்கள்” என்றார், அனுமதிச் சீட்டு வழங்கிய மங்கை.

அறை எண் 28 வந்த போது அங்கும் ஒரு கூட்டம் அலை மோதியது. உள்ளே நூற்றுக்கணக்கான பல் மருத்துவ இருக்கைகள், உபகரணங்கள், வெண்ணாடை ஆண், பெண் பல் மருத்துவர்கள் நோயாளிகள்.

ஆனால் ஆச்சரியமான கொஞ்சம் கிசுகிசுக்கும் அமைதி. மருத்துவர் நான்சி என்றப் பெயர் பலகையை நெருங்கி அனுமதிச் சீட்டைக் காண்பித்தேன்.

மிக அலட்சியமாக வாங்கி எல்லாச் சீட்டுகளுக்கும் அடியில் வைத்து விட்டு, “போ பெயர் சொல்லி அழைப்போம்….. அடுத்து …” என்றாள்.

பொங்கி வந்த எரிச்சலுடன் வெளியே வந்து நின்றேன்.

அலுவலகத்தில் இருந்து கைபேசியில் அழைப்பு வர, இன்னும் ஒரு மணி நேரம் அனுமதிப் பெற்றுக் காத்திருந்தேன். 42 நிமிடங்கள் கழித்து என் பெயரை தொண்டை கிழிய ஒரு உதவியாளன் அழைக்க, உள்ளே சென்றேன்.

63ம் உபகரணத்தின் அருகில் அமர்ந்திருக்கும் மருத்துவர் ஜெய தீபாவைப் பார்க்கச் சொன்னார் நான்சி

“அமருங்கள்… எந்தப் பல்லில் பிரச்சினை” அமைதியாக ஆனால் பத்தோடு பதினொன்று என்னும் அலட்சியத்தோடு தலைமுடியை முன்னால் இழுத்துப் போட்டு கைபேசியில் பார்த்து சரி செய்து கொண்டு, மூக்குக் கண்ணாடியை துடைத்துக் கொண்டே கேட்டார்.

“மேல் நாடியில் இரண்டு பற்கள் நான்கைந்து மாதமாக தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது” என்றேன்.

எரிச்சலாக, “ஏய்யா, நீயெல்லாம் படிச்சவன் மாதிரி தெரியற. அரசாங்க ஆஸ்பத்திரிக்காவது உடனடியாக வந்திருக்கலாமில்ல” என்ற தமிழ், எனக்குள் மகிழ்ச்சியை வரவழைத்தது.

“அது வந்து நேரமில்லை டாக்டர்”

“இப்படியே வச்சிகிட்டு இருந்துட்டு, கடைசில பல்லு அழுகி விழும் போது தான் டாக்டர் என்னைக் காப்பாற்றுங்கள் என்று வருவிய..ம்.. வாயைத் தொற”

அந்த டாக்டரின் எரிச்சல் கண்டிப்பாக வலியைத் தரவில்லை.

வாயைத் திறந்தவுடன் முழுவதுமாக நல்ல முறையில் பரிசோதித்து பார்த்து விட்டு, அருகிலிருந்த மராத்தி ஆண் மருத்துவரிடம் ஆலோசனைகள் கேட்டு விட்டு, இன்னும் சில சந்தேகங்களை தள்ளியிருந்த மருத்துவர் ஹேமாவை அழைத்து திரும்பவும் வாயைத் திறந்து காட்டச் சொல்லி விட்டு, “ம்… போய் முதல் மாடி 101ம் அறையில் எக்ஸ்ரே  எடுக்க 25 ரூபாய் கட்டி ரசீது வாங்கிக் கொண்டு…” என்று அவள் சொல்லி முடிக்குமுன் “அதன் பின் என்ன செய்ய வேண்டும்” எனக் கேட்டேன்.

“அறை எண் 28ல் போய் எக்ஸ்ரே எடுங்கள்” என்றாள்.

முதல் மாடிக்குச் சென்றால் அங்கேயும் மனித வரிசை. சரியாக 27 நிமிடங்களுக்குப் பின் பணம் கொடுத்து ரசீது பெற்றுக் கொண்டேன்.

100 ரூபாய் கொடுத்தும் 70 ரூபாய் திரும்ப வாங்கிக் கொள்ளச் சொன்னார், அங்கே இருந்த காசாளர்.

“சரி” என்று திரும்ப அறை எண் 28க்குத் திரும்பிய போது, அங்கும் மனித வரிசை.

ஒரு மேலாளர் போல இருந்தவரிடம், “சார் நான் அலுவலகம் செல்ல வேண்டும். கொஞ்சம் சீக்கிரம் எக்ஸ்ரே எடுக்க அனுமதிக்க முடியுமா?” என்று கேட்ட போது, அவர் முகத்தில் ருத்ர தாண்டவம் பார்க்க வேண்டுமே. கொஞ்சம் பயந்து ஒதுங்கி நின்றேன்.

பெயர் எழுதப்பட்ட உறையோடு ஒரு எக்ஸ்ரே பிலிம் என் கையில் திணிக்கப்பட்டு, “போய் வரிசையில் நில்லு…” என்ற மராத்தி வார்த்தைகள் கொடூரமாக  ஒலிக்க, வாங்கிக் கொண்டு வரிசையில் நின்றேன்.

ஏறக்குறைய 45 நிமிடங்களுக்குப் பிறகு என்னை அழைத்து அந்த எக்ஸ்ரே உபகரணத்திற்கு முன் அமர வைத்து, ஒரு மருத்துவப் பெண் பிலிமை பல்லின் உள்புறம் வைத்துப் பிடித்துக் கொள்ளச் சொல்லி விட்டுப் போனவள், 10 நிமிடங்களாகியும் காணவில்லை.

எனக்குப் பின்னால் வரிசையில் நின்றவர்கள் சப்தமிட ஓடி வந்தவள், “போட்டோ எடுங்கள்” எனக் கத்த, உள்ளேய இருந்து “ஓகே” என்ற சப்தம் எழுந்து நான் வாயில் உமிழ்நீர் நிறைந்த வாயுடன் நெகடிவ் எக்ஸ்ரேயை வாயிலிருந்து வெளியே எடுக்க

அந்த மருத்துவ பெண் டாக்டர், “அந்த டப்பாவில் உங்கள் எக்ஸ்ரே பிலிமை போட்டு விட்டு வெளியே அமருங்கள் அழைகிறோம்” என்றாள்.

நானும் பிலிமை உறையிலிட்டு அந்த டப்பாவில் போட்டு விட்டு அமர்ந்தேன். 28 நிமிடங்கள் கழித்து, நீதிமன்றத்தில் அழைப்பது போல என் பெயர் அழைக்கப்பட்டு எழுந்து சென்றேன்.

“எக்ஸ்ரே டெவலப் பண்ணியாகி விட்டது. உங்கள் வாயைச் சுத்தம் செய்ய வேண்டும். இந்த எக்ஸ்ரேயை எடுத்துக் கொண்டு 104ல் முதல் மாடியிலிருக்கும் நீலச் சீருடை பெண்ணைப் போய் பாருங்கள்” என்றார்.

எக்ஸ்ரேயை வாங்கிக் கொண்டு 104ம் அறைக்குப் போன போது, உண்மையிலேயே எரிச்சல் அதிகரித்து விட்டது. அடக்கிக் கொண்டு அந்தச் சீருடை பெண் சொன்ன இருக்கையில் அமர்ந்து வயைத் திறந்தேன்.

இருவரும் ஏதேதோ மராத்தியில் (எனக்குப் புரிந்தது) பேசி முடித்து, “நீங்கள் போய் 104ம் அறையில் ரூ.200/- கட்டி விட்டு உங்களுக்கான தனிப்பட்ட முறையில் சொல்லப்படும் பல் மருத்துவமனையின் முனைவரைப் பாருங்கள்” என்றாள்.

கோபம் கொப்பளித்து விட, “இன்னும் எத்தனை இடங்களுக்குப் போக வேண்டும்?” என பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டேன்.

“இது அரசு மருத்துவமனை, இங்கே எந்த மாதிரி சொல்கிறார்களோ அதை நீங்கள் செய்துதான் ஆக வேண்டும்” என கண்டிப்பாக, உண்மையான சிரிப்பல்ல, அவள் பழித்துக் கொட்டிச் சிரித்தார்.

அமைதியாக 104ம் அறையில் வந்து ரூ.200/ கட்டி விட்டு (என் கையில் ஒரு பையில் வைக்கும் அளவிற்கு பேப்பர்கள் சேர்ந்து விட்டன) அவர்கள் சொன்ன அரை எண் 103க்குச் சென்றேன்.

அங்கே அமர்ந்திருந்த பெண் மருத்துவர், “என்ன விஷயம்?” என்றார்.

கையிலிருந்த பேப்பர் அத்தனையையும் காட்டி “மருத்துவரைப் பார்க்க வேண்டும்” என்றேன்.

“ஒரு நிமிடம் நில்லுங்கள்” என்று சொல்லி விட்டு, “டீயும், வடாப் பாவும் வந்து விட்டதா?” எனக் கேட்டார் உதவியாளரிடம்.

உதவியாளன் வந்து விட்டதெனச் சொல்ல, அங்கே வடா பாவும் சாயாவும் பரிமாறப்பட்டன.

எல்லா சிற்றுண்டியும் முடிந்த பிறகு வந்து கையிலிருந்த பேப்பரை வாங்கி, “நீங்கள் ஜூன் மாதம் 14ம் தேதி மாலை 3.30 மணிக்கு மருத்துவர் ஸ்நேகலதாவைப் பாருங்கள்” என தன் முன்னால் இருந்த பெரிய புத்தகத்தில் குறிப்பிட்டு எனக்குத் தந்த அனுமதிச் சீட்டில் எழுதித் தந்தார்.

“என்ன விளையாடுகிறீர்களா?” என வாழ்நாளிலே அந்த அளவிற்கு கத்தியிருப்பேனா என்று தோன்றவில்லை.

அப்போதும் எதுவும் நடக்காத மாதிரி, “நீங்கள் போய் டீனைப் பாருங்கள்” என்றார்கள்.

அந்த மேலதிகாரியைப் பார்க்கப் போன போது, “மருத்துவமனை 4 மணிக்கே முடிந்து விட்டது, நாளை வாருங்கள்” என்றான், நீலச் சீருடை உதவியாளன்

அவனைப் பிடித்துத் தள்ளி விட்டு உள்ளே போன போது, மேலதிகாரி சதானந்தன் எழுந்து “அமைதி என்ன விஷயம்” என்றார்.

நான் சொல்லி (கத்தி விட்டு) முடிக்கும்முன் பெண் மருத்துவர் ஸ்நேகலதா வர, “இவரைப் பார்த்து கொஞ்சம் பல் சிகிச்சை செய்து அனுப்புங்கள்” என்றார்.

“அப்படியானால் கத்தினால் தான் இங்கு காரியம் நடக்குமா?” என நான் கேட்க

“எனக்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறது, நீங்கள் மருத்துவருடன் சென்று உங்களைச் சிகிச்சை செய்து கொள்ளுங்கள்” என்றார் மேலதிகாரி.

 “சார் நேரம் முடிந்து விட்டது. உதவியாளர்கள் யாருமில்லை” என ஸ்நேகலதா முணுமுணுக்க, “வாசு” என்று கத்தினார் மேலதிகாரி.

உள்ளே ஓடி வந்த ஒரு உதவியாளனிடம், “இந்த மருத்துவருக்கு உதவி செய்” என்று சொல்ல, எனக்குப் வேகமாக சிகிச்சை அளிக்கப்பட்டு (என்னை அந்தப் பல் மருத்துவர் படுத்திய பாடு – செய்த அவசரச் சிகிச்சைக்கு இன்னொரு சிறுகதை அமையும்) வெளியே கொண்டு வந்து (தள்ளப்பட்டேன்) நிறுத்தப்பட்டேன்.

அப்போது என்னோடு வெளியே வந்த மருத்துவர் ஸ்நேகலதா, கையிலிருந்த பேப்பரை பிடுங்கி “ஜூன் 14-ம் தேதி 3.30 மணிக்கு வரவும்” என எழுதி என்னிடம் திணித்து விட்டுக் கிளம்பினாள்.

தலைவலி போய் திருகுவலி வந்த கதையாய், பல் வலிக்கு வைத்தியம் பார்க்க போன எனக்கு, பல வலி வந்தது தான் மிச்சம்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

                            

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காகித ஓடம் (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

    வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 3) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை